Skip to content

ராஜ்ய செய்தி 34

ராஜ்ய செய்தி 34

ராஜ்ய செய்தி 34

வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

தொல்லையற்ற ஒரு பரதீஸ் சாத்தியமா?

நெருக்கடியான பிரச்சினைகள் படுமோசமாகின்றன—ஏன்?

மக்களுக்கு எப்போதும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. நவீன தொழில்நுட்பம் அவற்றைத் தீர்த்துவைக்கும் என்று அநேகர் நினைத்தபோதிலும், நெருக்கடியான பிரச்சினைகள் படுமோசமாகின்றன.

குற்றச்செயல்: தெருக்களில் நடப்பதையோ தங்களுடைய சொந்த வீட்டில் உட்கார்ந்திருப்பதையோ பெரும்பான்மையர் பாதுகாப்பாக உணருவதில்லை. ஓர் ஐரோப்பிய நாட்டில், சமீப வருடத்தில், 3 பேரில் கிட்டத்தட்ட ஒரு நபர் குற்றச்செயலுக்குப் பலியாகியிருந்தார்.

சுற்றுச்சூழல்: காற்று, நிலம், தண்ணீர் தூய்மைக்கேடு அதிகமதிகமாகப் பரவியிருக்கிறது. வளர்முக நாடுகளில், கால்வாசி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

ஏழ்மை: எப்போதுமில்லாமல் ஏழ்மையான, பசியால் வாடும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். சில நாடுகளில் 90 சதவீதத்துக்கும் மேலானோர் ஏழ்மையில் இருக்கிறார்கள்; சுமார் 80 கோடி பேர் அடங்கிய 30 சதவீதமான தொழிலாளிகள், உலகில் வேலை இல்லாதவர்களாக அல்லது குறைவான வேலை உள்ளவர்களாக இருக்கிறார்கள்—எண்ணிக்கைகளும் அதிகரிக்கின்றன.

பசி: சாப்பிடுவதற்கு உங்களுக்குப் போதுமானதிருந்தாலும், பெருகிவரும் லட்சக்கணக்கானோருக்கு உணவில்லை. வளர்ச்சி குன்றிய நாடுகளில், வருடாவருடம் குறைந்தபட்சம் 1.3 கோடி மக்கள், பெரும்பான்மையர் பிள்ளைகள், பசியின் பாதிப்புகளால் மரிக்கிறார்கள்.

போர்: சமீபத்திய இன சம்பந்தப்பட்ட வன்முறையால் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்த 20-ம் நூற்றாண்டில், போர்கள் பத்து கோடி மக்களுக்கும் அதிமேற்பட்ட ஆட்களைப் பலிவாங்கியிருக்கின்றன.

இதர  பிரச்சினைகள்:  மேலே சொல்லப்பட்ட காரியங்களோடு, சீரழிந்துவரும் குடும்ப சீர்குலைவு, அதிகமாகும் விவாகமாகா தாய்மார், வீடில்லாமை அதிகரிப்பு, பரவலாக இருக்கும் போதைப்பொருள் துர்ப்பழக்கம், மிதமிஞ்சிய ஒழுக்கக்கேடு ஆகியவையும் சேர்கின்றன. சரியாகவே, முன்னாள் ஐ.மா. ஆலோசனைக்குழு அங்கத்தினர் ஒருவர் சொன்னார்: “நாகரிகம் . . . அழுகியதற்கு, மட்டுமீறிய அறிகுறிகள் இருக்கின்றன.” சமீபத்திய 30-வருட காலப்பகுதியில், ஐ.மா. மக்கள்தொகை 41 சதவீதமாக உயர்ந்தது, ஆனால் வன்முறை சார்ந்த குற்றச்செயல் 560 சதவீதமாகவும் முறைகேடான பிறப்புக்கள் 400 சதவீதமாகவும் மணவிலக்குகள் 300 சதவீதமாகவும் பருவவயதினரின் தற்கொலை வீதம் 200 சதவீதத்திற்கு மேலாகவும் உயர்ந்தன. பிற நாடுகளிலும் நிலைமை இவ்வாறாகவே இருக்கிறது.

பிரச்சினைகள் ஏன் படுமோசமாகியிருக்கின்றன?

நம்முடைய படைப்பாளர் இதற்குப் பதிலளிக்கிறார். பிரச்சினை நிறைந்த இந்தக் காலத்தை ‘கடைசிநாட்கள்’ என்றழைக்கிறது அவருடைய வார்த்தை; “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்” இருக்கும் காலப்பகுதியாகும். (2 தீமோத்தேயு 3:1, NW) எதற்கான கடைசிநாட்கள்? பைபிள் “உலகத்தின் முடிவு” குறித்துப் பேசுகிறது.—மத்தேயு 24:3, ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.

அதிகரித்துவரும் இன்றைய பிரச்சினைகள், பொல்லாப்புக்கும் அதற்கு உத்தரவாதமுள்ளவர்களுக்குமான முடிவு உட்பட, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவிட்டது என்பதற்குத் தெளிவான சான்று பகருகின்றன. (மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 12:7-12) விரைவில் கடவுள் தலையிட்டு, இன்றைய பிரச்சினைகள் யாவற்றையுமே முற்றிலும் தீர்த்துவைப்பார்.—எரேமியா 25:31-33; வெளிப்படுத்துதல் 19:11-21.

இவ்வுலக மதங்கள் தோல்வியுற்றிருக்கின்றன

இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்கு மாறாக, இவ்வுலக மத அமைப்புகள் அவற்றை அதிகரிக்கின்றன. போர்களின்போது, லட்சக்கணக்கில் கத்தோலிக்கர் கத்தோலிக்கரையும் புராட்டஸ்டன்டினர் புராட்டஸ்டன்டினரையும் கொலை செய்கிறார்கள். பெரும்பான்மையான கத்தோலிக்கர் வாழும் ருவாண்டாவில் கொஞ்ச காலத்திற்கு முன்பாக மக்கள் ஒருவரையொருவர் லட்சக்கணக்கில் கொலைசெய்தனர்! (இடப்பக்கப் படத்தைக் காண்க.)

இயேசு தம்முடைய சீஷர்கள் வேற்றுநாட்டவர் என்பதால் துப்பாக்கியோடும் வாளோடும் போருக்குப் போய் அவர்களைக் கொலைசெய்வாரா? இல்லவே இல்லை! ‘தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டும்,’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:20, 21) இவ்வுலக மதங்கள் அதைச் செய்வதில் தோல்வியுற்றிருக்கின்றன. “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.”—தீத்து 1:16.

கூடுதலாக, பைபிளின் ஒழுக்கநெறி தராதரங்களை உண்மையில் கடைப்பிடிக்காமல், பூமி முழுவதும் நிறைந்திருக்கும் திடுக்கிடத்தக்க ஒழுக்கநெறி குலைவுக்கு உலக மதங்கள் பங்களித்திருக்கின்றன.

நீங்கள் ‘அதன் கனிகளினாலே,’ அதன் அங்கத்தினர்கள் செய்கிற காரியங்களினாலே, மெய் மதத்திலிருந்து பொய் மதத்தை வித்தியாசப்படுத்த முடியும் என்று இயேசு கூறினார். அவர் மேலும், “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்,” என்று கூறினார். (மத்தேயு 7:15-20) கெட்ட கனி தருவதால், அழிவை எதிர்ப்படும் மதத்தைவிட்டு ஓடும்படி கடவுளுடைய வார்த்தை நம்மைத் துரிதப்படுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 18:4.

மெய் மதம் தோல்வியுறவில்லை

மெய் மதம் ‘நல்ல கனியை,’ விசேஷமாக அன்பைக் ‘கொடுக்கிறது.’ (மத்தேயு 7:17; யோவான் 13:34, 35) கிறிஸ்தவர்களடங்கிய எந்த ஒருமைப்பட்ட, சர்வதேச சகோதரத்துவம் அத்தகைய அன்பை நடைமுறையில் காட்டுகிறது? தங்கள் சொந்த மதத்தினரையும் மற்ற எவரையும் கொல்ல மறுப்பவர்கள் யார்?—1 யோவான் 3:10-12.

அந்த ‘நல்ல கனிகளை’ கொடுப்பதில் யெகோவாவின் சாட்சிகள் பெயர்பெற்றிருக்கிறார்கள். 230 நாடுகளுக்கும் மேலாக, உலகம் முழுவதிலும், ‘அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருக்கிறார்கள்.’ (ஏசாயா 2:4) உலக முழுவதும், கடவுளுடைய ராஜ்ய “நற்செய்தி” பிரசங்கிக்கப்பட வேண்டுமென்ற கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் மக்களுக்கான அவர்களுடைய அன்பு காட்டப்படுகிறது. (மத்தேயு 24:14) மேலும் பைபிளில் போதிக்கப்பட்டுள்ள உயர்ந்த ஒழுக்கநெறிகளை அவர்கள் நடைமுறையில் அப்பியாசித்து ஆதரித்துப் பேசுகிறார்கள்.—1 கொரிந்தியர் 6:9-11.

மெய் மதம் தோல்வியுறவில்லை. மனிதவர்க்க பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறமைபடைத்த நபரிடமே அது மக்களை வழிநடத்துகிறது. விரைவில் அவரே முற்றிலும் புதிதான ஒரு உலகை உருவாக்குவார். அந்த நபர் யார்? (தயவுசெய்து பின்பக்கத்தைக் காண்க.)

தொல்லையற்ற ஒரு பரதீஸ் உறுதி

உங்களால் முடிந்தால், மனிதவர்க்கத்தை அல்லற்படுத்தும் சகல பிரச்சினைகளையும் நீங்கள் தீர்க்கமாட்டீர்களா? கட்டாயமாகத் தீர்த்து வைப்பீர்கள்! மனிதவர்க்க பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நம்முடைய அன்பான படைப்பாளர் மாத்திரமே வல்லமையும் ஞானமும் பெற்றவராயிருப்பதால், அவர் அதைவிட குறைவாகச் செய்வார் என்று நாம் நினைக்க வேண்டுமா?

இயேசு கிறிஸ்துவின் கைகளிலிருக்கும் பரலோக ராஜ்யத்தின் மூலம் மனித விவகாரங்களில் கடவுள் தலையிடுவார் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. பூமியிலுள்ள ஊழல்மிக்க அரசாங்கங்களை அது “நொறுக்கி” போடும். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) ஏன்? கடவுளைக் குறிப்பிட்டு, சங்கீதக்காரன் பதிலளிக்கிறார்: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரு”வதற்காகவே.—சங்கீதம் 83:17.

இவ்வுலகம் முடிவடைகையில், தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்களா? ‘உலகம் ஒழிந்துபோகிறது; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 2:17) தப்பிப்பிழைக்கிற இந்த ஆட்கள் எங்கு என்றைக்கும் வாழ்வர்? “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” என்று பைபிள் பதிலளிக்கிறது.—சங்கீதம் 37:9-11, 29; நீதிமொழிகள் 2:21, 22.

கடவுளுடைய புதிய உலகிலே, “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (வெளிப்படுத்துதல் 21:4) குற்றச்செயலோ ஏழ்மையோ பசியோ நோயோ துயரமோ மரணமோ இனியும் இருக்காது! ஏன், மரித்தவர்களுங்கூட திரும்பவும் உயிர் வாழ்வார்கள்! ‘மரித்தோரின் உயிர்த்தெழுதல் உண்டு.’ (அப்போஸ்தலர் 24:15) மேலும் பூமிதானே சொல்லர்த்தமான பரதீஸாக மாற்றப்படும்.—ஏசாயா 35:1, 2; லூக்கா 23:43.

கடவுளுடைய புதிய உலகில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) உலகெங்கும், லட்சக்கணக்கான நேர்மை இதயமுள்ள ஆட்கள் அந்த அறிவை அடைந்து வருகிறார்கள். இது அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் பலவற்றை இப்போது சமாளிக்க உதவிசெய்கிறது; ஆனால் மிக முக்கியமாக, தீர்க்க முடியாத, அவர்களுடைய திறமைக்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளை, கடவுளுடைய புதிய உலகம் முற்றிலும் தீர்க்கும் என்பதன்பேரில் முழு நம்பிக்கையை அளிக்கிறது.

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

WHO photo by P. Almasy

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Jerden Bouman/Sipa Press