Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெளிநெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக்கொள்

வெளிநெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக்கொள்

அதிகாரம் 13

நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக்கொள்

லவோதிக்கேயா

1, 2. மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவிடமிருந்து ஒரு செய்தியைப் பெறக்கூடிய ஏழு சபைகளின் கடைசியானதின் இட அமைப்பு என்ன, மேலும் அந்த நகரத்தின் சில முக்கிய அம்சங்கள் யாவை?

 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவிடமிருந்து செய்தியை பெற்றுக்கொள்ளும் ஏழு சபைகளில் லவோதிக்கேயா கடைசியாகும். இது கண்ணைத் திறக்கக்கூடிய, உந்துவிக்கக்கூடிய என்னே ஒரு செய்தியை தெரிவிக்கிறது!

2 அலசிகிர்க்கு 88 கிலோமீட்டர் தென் கிழக்கே, டெனிஸ்லிக்கு அருகில் லலோதிக்கேயாவின் இடிபாடுகளை இன்று நீங்கள் காண்பீர்கள். முதல் நூற்றாண்டில், லவோதிக்கேயா ஒரு செல்வச்செழிப்பான நகரமாக இருந்தது. ஒரு பெரிய சாலை சந்திப்பில் இருந்தது, தொழில் நிதிக்கும் வர்த்தகத்திற்கும் இது ஒரு முக்கிய மையமாக இருந்தது. நன்றாக அறியப்பட்ட கண் மருந்தின் விற்பனை இதனுடைய செல்வத்தைக் கூட்டியது, மேலும் நல்ல கறுப்பு கம்பளியிலிருந்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அதனுடைய உயர்ந்த தரமுள்ள ஆடைகளுக்கும் இது புகழ்பெற்றதாக இருந்தது. நகரத்தின் பெரிய பிரச்சினையாக இருந்த தண்ணீர் பற்றாக்குறை, சிறிது தூரத்திற்கு அப்பால் இருந்த வெப்பமான நீரூற்றிலிருந்து தண்ணீரை கால்வாய்ப்படுத்துவதன் மூலமாக தீர்க்கப்பட்டிருந்தது. அதனால், நகரத்தை தண்ணீர் சென்றடையும்போது வெதுவெதுப்பாகத்தான் இருக்கும்.

3. லவோதிக்கேயாவிலுள்ள சபைக்கு இயேசு எவ்வாறு அவருடைய செய்தியை ஆரம்பிக்கிறார்?

3 லவோதிக்கேயா கொலோசெவுக்கு அருகில் இருந்தது. கொலோசெயர்களுக்கு எழுதுகையில், அப்போஸ்தலன் பவுல் தான் லவோதிக்கேயர்களுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதத்தை குறிப்பிடுகிறார். (கொலோசெயர் 4:15, 16) அந்தக் கடிதத்தில் பவுல் என்ன எழுதினார் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் இப்பொழுது இயேசு லவோதிக்கேயர்களுக்கு அனுப்புகிற செய்தியானது, அவர்கள் வருந்தத்தக்க ஆவிக்குரிய நிலைக்குள் வீழ்ந்துவிட்டிருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. வழக்கம்போல, இயேசு முதலாவதாக தம்முடைய சொந்த அறிமுக ஆதாரச் சான்றுகளை குறிப்பிடும்பொழுது, இவ்வாறு சொல்கிறார்: “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்; உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது.”—வெளிப்படுத்துதல் 3:14.

4. இயேசு எவ்வாறு “ஆமென்” என்பவராக இருக்கிறார்?

4 இயேசு தம்மை ஏன் “ஆமென்” என்பதாக அழைத்துக்கொள்கிறார்? இந்தப் பட்டப்பெயர் அவருடைய செய்திக்கு நீதி சார்ந்த முக்கியத்துவத்தைக் கூட்டுகிறது, “ஆமென்” என்பது, எபிரெய வார்த்தையின் எழுத்துப் பெயர்ப்பாக இருக்கிறது, அதனுடைய அர்த்தம் “நிச்சயமாக,” “அப்படியே ஆகட்டும்,” மேலும் ஜெபங்களின் இறுதியில், அங்கே வெளிக்காட்டப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 14:16) இயேசு “ஆமென்” என்பவராக இருக்கிறார், ஏனெனில் அவருடைய பழுதற்ற உத்தமத்தன்மையும் தியாக மரணமும் யெகோவாவின் மதிப்புமிக்க எல்லா வாக்குத்தத்தங்களும் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் உத்தரவாதமளிப்பதாகவும் இருக்கின்றன. (2 கொரிந்தியர் 1:20) அந்தச் சமயத்திலிருந்து, எல்லா ஜெபங்களும் இயேசு மூலமாக சரியாகவே யெகோவாவிடம் ஏறெடுக்கப்படுகிறது.—யோவான் 15:16; 16:23, 24.

5. என்ன வழியில் இயேசு ‘உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியாக’ இருக்கிறார்?

5 இயேசு, ‘உண்மையும் சத்தியமுமான சாட்சியாகவும்’ இருக்கிறார். அவர் யெகோவா தேவனின் ஓர் ஊழியராக முழுவதுமாக நம்பத்தக்கவராக இருப்பதால், தீர்க்கதரிசனத்தில் விசுவாசம், சத்தியம், நீதி ஆகியவற்றுடன் அவர் அடிக்கடி தொடர்புபடுத்தப்படுகிறார். (சங்கீதம் 45:4; ஏசாயா 11:4, 5; வெளிப்படுத்துதல் 1:5; 19:11) அவர் யெகோவாவுக்கு மிகப் பெரிய சாட்சியாக இருக்கிறார். உண்மையில், ‘தேவனுடைய படைப்பின் ஆதியாக’ தொடக்கத்திலிருந்தே தேவனுடைய மகிமையை இயேசு அறிவித்து வந்திருக்கிறார். (நீதிமொழிகள் 8:22-30) பூமியின் மீது ஒரு மனிதராக, அவர் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தார். (யோவான் 18:36, 37; 1 தீமோத்தேயு 6:13) அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவருடைய சீஷர்களுக்குப் பரிசுத்த ஆவியை வாக்குக்கொடுத்து, அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்.” பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவிலிருந்து, ‘வானத்தின் கீழேயுள்ள எல்லா படைப்புகளுக்கும்’ நற்செய்தியை பிரசங்கிப்பதில் இந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை இயேசு வழிநடத்தினார். (அப்போஸ்தலர் 1:6-8; கொலோசெயர் 1:23, NW) உண்மையாகவே, உண்மையும் சத்தியமுமான சாட்சி என்றழைக்கப்படுவதற்கு இயேசு தகுதியுடையவராயிருக்கிறார். லவோதிக்கேயாவிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அவருடைய வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் பயனடைய முடியும்.

6. (அ) லவோதிக்கேயாவிலுள்ள சபையின் ஆவிக்குரிய நிலைமையை இயேசு எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இயேசுவின் என்ன நல்ல முன்மாதிரியை லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் பின்பற்ற தவறியிருக்கின்றனர்?

6 லவோதிக்கேயர்களுக்கு இயேசு என்ன செய்தியைக் கொண்டிருக்கிறார்? போற்றுதலுக்கான வார்த்தையை அவர் கொண்டில்லை. வெளிப்படையாகவே அவர்களுக்கு இவ்வாறு அவர் சொல்கிறார்: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன்.” (வெளிப்படுத்துதல் 3:15, 16) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து வரக்கூடிய அப்படிப்பட்ட ஒரு செய்திக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? விழித்தெழுந்து உங்களை நீங்களே சோதித்துப் பார்க்க மாட்டீர்களா? உண்மையாகவே, அந்த லவோதிக்கேயர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக சோம்பலாயிருந்து, வெளிப்படையாகவே அதிக சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டால், தங்களையே ஊக்குவிக்கவேண்டிய தேவை இருக்கிறது. (2 கொரிந்தியர் 6:1-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்தவர்களாக, யெகோவாவுக்கும் அவருடைய சேவைக்கும் எல்லா சமயங்களிலும் கொழுந்துவிட்டு எரியக்கூடிய வைராக்கியத்தைக் காண்பித்த இயேசுவை, அவர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். (யோவான் 2:17) மேலுமாக, புழுக்கமிக்க ஒரு வெப்பமான நாளில் ஒரு குவளை குளிர்ந்த தண்ணீரானது புத்துயிரளிப்பது போல, அவர் எல்லா சமயங்களிலும் தயவும் கனிவுமுடையவராக இருப்பதை சாந்தமுள்ளவர்கள் கண்டிருக்கின்றனர். (மத்தேயு 11:28, 29) ஆனால் லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அனலுமில்லை, குளிருமில்லை. அவர்களுடைய நகரத்திற்குள் பாய்ந்து வந்த தண்ணீரைப் போன்று, அவர்கள் சற்றே சூடாக, வெதுவெதுப்பாக ஆகியிருந்தனர். இயேசுவினால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு, ‘அவருடைய வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போடப்படுவதற்கு’ தகுதியானவர்களாக அவர்கள் இருந்தார்கள்! இயேசு செய்ததைப் போன்று, மற்றவர்களுக்கு ஆவிக்குரிய புத்துயிரளிப்பதற்கு, நாம் எப்போதும் நம்முடைய பாகத்தில் வைராக்கியத்துடன் முயற்சி செய்வோமாக.—மத்தேயு 9:35-38.

‘நீ நான் ஐசுவரியவானென்று சொல்லுகிறாய்’

7. (அ) லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுடைய பிரச்சினையின் அடிப்படையை இயேசு எவ்வாறு அடையாளங்காட்டுகிறார்? (ஆ) லவோதிக்கேய கிறிஸ்தவர்கள் ‘குருடரும், நிர்வாணிகளும்’ என்று இயேசு ஏன் சொல்கிறார்?

7 லவோதிக்கேயர்களின் பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே எது அடிப்படையாக இருந்தது? இயேசுவின் அடுத்த வார்த்தைகளிலிருந்து நாம் ஒரு நல்ல கருத்தைப் பெறுகிறோம்: “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்பட்டத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நாம் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறையுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்.” (வெளிப்படுத்துதல் 3:17; லூக்கா 12:16-21-ஐ ஒப்பிடுக.) ஒரு செல்வந்த நகரத்தில் வாழ்ந்துகொண்டு, அவர்களுடைய ஐசுவரியத்தினால் தன்னம்பிக்கையுடையவர்களாய் உணர்ந்தனர். பெரும்பாலும் அவர்களுடைய வாழ்க்கைமுறையானது, விளையாட்டரங்கம், நாடக அரங்கம், மேலும் உடற்பயிற்சிக் கூடம் இவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது, அதனால் அவர்கள் “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்” ஆகியிருந்தனர். a (2 தீமோத்தேயு 3:4) ஆனால் பொருள் சம்பந்தமாக ஐசுவரியவான்களாயிருந்த லவோதிக்கேயர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக வறுமையிலிருக்கிறார்கள். அப்படி ஏதாவது இருந்தாலும், குறைவாகவே ‘பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கின்றனர்.’ (மத்தேயு 6:19-21) கடவுளுடைய ராஜ்யத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து, அவர்களுடைய கண்களைத் தெளிவாக அவர்கள் வைத்துக்கொண்டில்லை. அவர்கள் உண்மையாகவே இருட்டில் குருடர்களாக, ஆவிக்குரிய பார்வையற்றவர்களாயிருக்கின்றனர். (மத்தேயு 6:22, 23, 33) மேலுமாக, அவர்களுடைய பொருளாதார செல்வந்தநிலை சிறந்த வஸ்திரங்களை வாங்கச் செய்திருந்தபோதிலும், இயேசுவின் பார்வையில் அவர்கள் நிர்வாணிகளாயிருக்கின்றனர். அவர்களைக் கிறிஸ்தவர்களாக அடையாளம் காட்டப்படுவதற்கு ஆவிக்குரிய வஸ்திரங்களைக் கொண்டில்லை.—வெளிப்படுத்துதல் 16:15-ஐ ஒப்பிடுக.

8. (அ) லவோதிக்கேயாவிலுள்ளது போன்ற நிலைமை இன்றும்கூட என்ன வழியில் காணப்படுகிறது? (ஆ) இந்தப் பேராசையான உலகத்தில் சில கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்களையே வஞ்சித்துக்கொண்டிருக்கின்றனர்?

8 என்னே ஓர் அதிர்ச்சியூட்டும் நிலைமை! ஆனால் அதே வகையான ஒரு நிலைமையைத் தற்போதைய நாட்களில் நாம் அடிக்கடிப் பார்க்கவில்லையா? அடிப்படைக் காரணம் என்ன? இது பொருளுடைமை மற்றும் மனித வள ஆதாரங்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையிலிருந்து வருகிற தன்னம்பிக்கை மனநிலையாக இருக்கிறது. கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுக்குப் போகின்றவர்களைப் போன்று, யெகோவாவின் மக்களில் சிலர், எப்பொழுதாவது கூட்டங்களில் வெறுமனே ஆஜராயிருப்பதன் மூலம் தேவனைத் திருப்திப்படுத்திவிட முடியும் என்று நினைத்துக்கொண்டு தங்களையே வஞ்சித்துக்கொண்டிருக்கின்றனர். வெறுமனே அடையாளமாக “வசனத்தின்படி செய்கிறவர்களாக” அவர்கள் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். (யாக்கோபு 1:22) யோவான் வகுப்பாரிடமிருந்து திரும்பத் திரும்ப எச்சரிக்கைகள் வந்துகொண்டிருந்தபோதிலும், அவர்கள் தங்களுடைய இருதயங்களை நவீன பாணியான உடைகள், கார்கள், வீடுகள் ஆகியவற்றில் மேல் வைத்து பொழுதுபோக்கு மற்றும் இன்பங்களை மையமாகக்கொண்டு அதைச் சுற்றி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர். (1 தீமோத்தேயு 6:9, 10; 1 யோவான் 2:15-17) இவை எல்லாம் ஆவிக்குரிய புலனுணர்வுகளின் மந்தமான நிலையில் விளைவடைகின்றன. (எபிரெயர் 5:11, 12) மந்தமான வெதுவெதுப்பானவர்களாக இருப்பதற்கு மாறாக “ஆவியின் நெருப்பை” மீண்டும் தூண்டிவிட்டு, வசனத்தைப் பிரசங்கிப்பதற்கு புத்துணர்வு பெற்ற ஆர்வத்தை காண்பிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 5:19; 2 தீமோத்தேயு 4:2, 5.

9. (அ) வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களை இயேசுவின் என்ன வார்த்தைகள் அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும், ஏன்? (ஆ) பிரிந்திருக்கிற ‘செம்மறியாடு’ எவ்வாறு சபையினரால் உதவப்படலாம்?

9 வெதுவெதுப்பான கிறிஸ்தவர்களை இயேசு எவ்வாறு கருதுகிறார்? அவருடைய தெளிவான வார்த்தைகள் அவர்களை அதிர்ச்சியடையச் செய்யவேண்டும்: “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல்” இருக்கிறாய். அவர்களுடைய திகைக்க வைக்கும் நிலையை உணர்ந்துகூட பார்க்காத அளவிற்கு மனச்சாட்சிகள் மரத்துப் போயிருக்கின்றன. (ஒப்பிடவும்: நீதிமொழிகள் 16:2; 21:2.) சபையிலுள்ள இந்த ஆபத்தான நிலையை ஒருபக்கம் சுலபமாக தள்ளிவிட முடியாது. மூப்பர்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட மற்றவர்களும் வைராக்கியத்தின் சிறந்த முன்மாதிரியை ஏற்படுத்துவதின் மூலமும், அன்புடன் மேய்க்கும் வேலையை செய்வதன் மூலமும் இந்தப் பிரிந்திருக்கிற ‘செம்மறியாடுகளை’ அவர்களுடைய பழைய மகிழ்ச்சியாகிய முழு இருதயப்பூர்வமான சேவைக்கு கொண்டு வருவதில் விழிப்புள்ளவர்களாக இருக்கக்கூடும்.—லூக்கா 15:3-7, NW.

‘ஐசுவரியவனாகும்படிக்கான’ ஆலோசனை

10. அவரிடமிருந்து வாங்கும்படி லவோதிக்கேயா கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொல்லுகிற “பொன்” என்ன?

10 லவோதிக்கேயாவிலுள்ள பரிதாபகரமான நிலைமைக்கு ஒரு பரிகாரம் இருக்கிறதா? ஆம், அந்தக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அறிவுரையை பின்பற்றுவார்களேயானால்: “நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை . . . என்னிடத்திலிருந்து வாங்கிக்கொள்ள . . . உனக்கு ஆலோசனைச் சொல்லுகிறேன்.” (வெளிப்படுத்துதல் 3:18அ) நெருப்பினால் புடமிடப்பட்டு கலப்படங்களெல்லாம் நீக்கப்பட்ட மெய்க் கிறிஸ்தவமாகிய “பொன்,” “தேவனிடமாக ஐசுவரியவான்களாக” அவர்களை ஆக்கும். (லூக்கா 12:21) அப்படிப்பட்ட பொன்னை அவர்கள் எங்கே வாங்க முடியும்? உள்ளூர் வர்த்தகர்களிடமிருந்து அல்ல, ஆனால் இயேசுவிடமிருந்து! “நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும்” செல்வந்தரான கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடும்படி தீமோத்தேயுக்கு அவர் சொன்னபோது அந்தப் பொன் என்ன என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார். இந்த வழியில் தங்களையே அர்ப்பணிப்பதால் மட்டுமே அவர்கள் ‘உண்மையாக ஜீவனை உறுதியாகப் பற்றிக்கொள்ள’ முடியும். (1 தீமோத்தேயு 6:17-19) பொருளாதார வகையில் செல்வந்தர்களான லவோதிக்கேயர்கள் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றி, அதனால் ஆவிக்குரிய ஐசுவரியவான்களாகி இருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 3:13-18-ஐயும் காண்க.

11. ‘நெருப்பினால் புடமிடப்பட்ட பொன்னை’ வாங்கக்கூடியவர்களின் என்ன நவீனநாளைய உதாரணங்களை நாம் கொண்டிருக்கிறோம்?

11 ‘நெருப்பினால் புடமிடப்பட்ட பொன்னை’ வாங்குகிறவர்களின் நவீன நாளைய உதாரணங்கள் இருக்கின்றனவா? ஆம், இருக்கின்றன! கர்த்தருடைய நாள் நெருங்கிக்கொண்டிருக்கும்போதுகூட, பைபிள் மாணாக்கர்களின் ஒரு சிறிய தொகுதி, கிறிஸ்தவமண்டலத்தின் பொய்களான அநேக பாபிலோனிய போதகங்களாகிய திரித்துவம், ஆத்துமா அழியாமை, எரிநரக வாதனை, குழந்தை ஞானஸ்நானம், மேலும் உருவ வழிபாடு (சிலுவை மற்றும் மரியாள் வணக்கம் உட்பட) போன்றவற்றிற்கு விழிப்புள்ளதாயிருந்தது. பைபிள் சத்தியத்தில் முன்னோடிகளாக இருந்து, இந்தக் கிறிஸ்தவர்கள் யெகோவாவின் ராஜ்யம் மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாகவும், இயேசுவின் மீட்கும் பலி இரட்சிப்பின் அடிப்படை என்பதாகவும் அறிவித்தனர். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பே, 1914-ஐ பைபிள் தீர்க்கதரிசனத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக, புறஜாதிகளினுடைய காலங்களின் முடிவாக திகைக்க வைக்கும் சம்பவங்கள் பூமியின் மீது சம்பவிக்கும் என்பதை அவர்கள் குறிப்பிட்டனர்.—வெளிப்படுத்துதல் 1:10.

12. முன்நின்று வழிநடத்தக்கூடிய விழிப்புள்ள கிறிஸ்தவர்களில் ஒருவராக இருந்தது யார், மேலும் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதில் அவர் எவ்வாறு மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்துள்ளார்?

12 இந்த விழிப்புள்ள கிறிஸ்தவர்களில் முன்நின்று வழிநடத்தியவர் சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவர், அவர் 1870-களின் ஆரம்பத்தில் அலிகேனி (இப்பொழுது பிட்ஸ்பர்க்கின் பாகமாயிருப்பது) பென்சில்வேனியா, அ.ஐ.மா., என்ற இடத்தில் ஒரு பைபிள் படிப்பு வகுப்பை ஏற்படுத்தினார். சத்தியத்திற்கான தன்னுடைய ஆய்வை அவர் தொடங்கியபோது, ரஸல் தன்னுடைய தந்தையுடன் பங்குதாரராயிருந்து ஒரு கோடீசுவரராவதற்கான வழியிலிருந்தார். ஆனால், பல இடங்களிலுள்ள அவருடைய வியாபார நிறுவனங்களை விற்றுவிட்டு, பூமி முழுவதும் கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பு நிதிக்கு உதவி செய்வதில் அவருடைய செல்வத்தை செலவழித்தார். 1884-ல் ரஸல், இப்பொழுது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி, பென்சில்வேனியா என்று அறியப்படுகிற கார்ப்பரேஷனுக்கு முதல் பிரெஸிடென்ட்டாக ஆனார். 1916-ல் மேற்கத்திய ஐக்கிய மாகாணங்களுக்கான அவருடைய இறுதியான பிரசங்க பிரயாணத்தில் ஆற்றல் இழந்து, நியூ யார்க்கிற்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது டெக்ஸஸ் என்னுமிடத்தில் பாம்பாவிற்கு அருகில் ஒரு ரயிலில் இறந்து போனார். அவர், ஆவிக்குரிய பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வைப்பதற்கான மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார், அந்த முன்மாதிரி லட்சக்கணக்கான சுய-தியாக பயனியர் ஊழியர்களால் இன்றும் பின்பற்றப்படுகிறது.—எபிரெயர் 13:7; லூக்கா 12:33, 34; ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 9:16; 11:1.

ஆவிக்குரிய கண்மருந்தை பூசுதல்

13. (அ) லவோதிக்கேயரின் நிலையை ஆவிக்குரிய கண் மருந்து எவ்வாறு மேம்படுத்தும்? (ஆ) என்ன வகையான வஸ்திரத்தை இயேசு சிபாரிசு செய்கிறார், ஏன்?

13 இயேசு அந்த லவோதிக்கேயர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையையும் கொடுக்கிறார்: “உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் . . . நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டும்.” (வெளிப்படுத்துதல் 3:18ஆ) அவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய குருட்டுத் தன்மைக்கு கண் மருந்தை, உள்ளூர் குணப்படுத்துபவர்களுடையதல்ல, ஆனால் இயேசுவினால் மட்டும் கொடுக்கப்படக்கூடிய அந்த வகையானதை வாங்குவதன் மூலம் குணப்படுத்தலைத் தேட முடியும். இது அவர்களுக்கு ஆவிக்குரிய பகுத்துணர்வைப் பெறுவதற்கு உதவி செய்யும், அவர்கள் “நீதிமான்களுடைய பாதை”யில் நடந்து அவர்களுடைய ஒளிவிடுகிற கண்கள் கடவுளின் சித்தம் செய்வதின் மீது ஒருமுகப்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கே உதவி செய்யும். (நீதிமொழிகள் 4:18, 25-27) அதனால், லவோதிக்கேயாவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த வஸ்திரங்களாகிய கறுப்பு கம்பளியை அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக அவர்களுடைய சிலாக்கிய அடையாளத்தை அறிவிக்கிற அந்த “வெண்வஸ்திரத்தை” அவர்கள் தொடர்ந்து அணிந்திருக்கக்கூடும்.—ஒப்பிடுக: 1 தீமோத்தேயு 2:9, 10; 1 பேதுரு 3:3-5.

14. (அ) என்ன ஆவிக்குரிய கண் மருந்து 879-லிருந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய பொருளாதார பின்னணியின் இறுதியான ஊற்றுமூலம் என்னவாக இருந்திருக்கிறது? (இ) நன்கொடைகளைப் பயன்படுத்துவதில், யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகின்றனர்?

14 நவீன காலங்களில் ஆவிக்குரிய கண் மருந்து கிடைக்கிறதா? உறுதியாக அது கிடைக்கிறது! 1879-ல் பாஸ்டர் ரஸல், அன்பினால் அவ்வாறு அழைக்கப்பட்டவர், இன்று உலக முழுவதும் அறியப்பட்டிருக்கிற காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்ற பத்திரிகையைச் சத்தியத்தின் சார்பில் பிரசுரிக்கத் தொடங்கினார். அதனுடைய இரண்டாவது வெளியீட்டில், அவர் அறிவித்தார்: “[இந்தப் பத்திரிகை] யெகோவாவை இதனுடைய ஆதரவாளராக கொண்டிருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம், இது இவ்வாறு இருக்கிறபடியால் மனிதர்களின் ஆதரவுக்காக இது ஒருபோதும் மன்றாடவோ மனுசெய்யவோ மாட்டாது. ‘மலைகளிலுள்ள பொன் மற்றும் வெள்ளி எல்லாம் என்னுடையது’ என்று சொல்லியவரே தேவையான பொருளுதவிகளைக் கொடுக்கத் தவறும்போது, வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான காலம் என்பதை நாங்கள் புரிந்துகொள்வோம்.” சில தொலைக்காட்சி போதகர்கள் பெருந்திரளான மிகுந்த செல்வத்தைக் கொண்டவர்களாகவும் வெட்கங்கெட்ட உயர் இன்ப வாழ்க்கை (மேலும் சில சமயங்களில் ஒழுக்கக்கேடான வாழ்க்கை) வாழ்ந்துமிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 18:3) மாறாக, பைபிள் மாணாக்கர்கள், இன்று யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகிறவர்கள், யெகோவாவின் வந்துகொண்டிருக்கிற ராஜ்யத்தின் உலகளாவிய பிரசங்கித்தலை ஏற்பாடு செய்யவும் முன்னேற்றுவிக்கவும் கேட்காமல் பெற்றுக்கொண்ட எல்லா நன்கொடைகளையும் பயன்படுத்தியுள்ளனர். இந்நாள் வரையாக யோவான் வகுப்பார் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் பிரசுரிப்பை வழிநடத்துகின்றனர், அந்தப் பத்திரிகைகள் ஒன்றுசேர்ந்து 2006-ல் 5 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமான விநியோகத்தைக் கொண்டிருந்தன. காவற்கோபுரம் சுமார் 150 மொழிகளில் கிடைக்கிறது. இது அறுபது லட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களுடைய சபையின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையாக இருக்கிறது, அவர்கள் இப்படிப்பட்ட ஆவிக்குரிய கண் மருந்தை தங்களுடைய கண்கள் பொய் மதத்திற்கு திறக்கப்படுவதற்கும், எல்லா தேசங்களிலும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதன் அவசரத் தன்மைக்கும் பயன்படுத்தி இருக்கின்றனர்.—மாற்கு 13:10.

கடிந்துகொள்ளுதல் மற்றும் சிட்சையிலிருந்து நன்மையடைதல்

15. லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு ஏன் பலமான அறிவுரையைக் கொடுக்கிறார், மேலும் அதற்கு சபை எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

15 லவோதிக்கேயர்களிடத்திற்கு நாம் திரும்புவோமாக. இயேசுவிடமிருந்து வருகிற பலமான அறிவுரைக்கு அவர்கள் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? தம்மை பின்பற்றுகிறவர்களாக அவர்களை இயேசு இனிமேலும் விரும்பவில்லையென்று அவர்கள் உணர்ந்து, சோர்வடைந்துவிட வேண்டுமா? இல்லை, அதுபோன்று ஒன்றுமில்லை. செய்தி தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகிறது: “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.” (வெளிப்படுத்துதல் 3:19) யெகோவாவிடமிருந்து வருகிற சிட்சையைப் போன்று, இயேசுவின் சிட்சையானது அவருடைய அன்பின் ஓர் அடையாளமாயிருக்கிறது. (எபிரெயர் 12:4-7) லவோதிக்கேய சபை அவருடைய அன்பான கரிசனையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு அவருடைய அறிவுரைகளைப் பொருத்த வேண்டும். அவர்கள் மனந்திரும்பி, அவர்களுடைய வெதுவெதுப்பான தன்மை பாவத்திற்குச் சமமாயிருக்கிறது என்பதை உணர வேண்டும். (எபிரெயர் 3:12, 13; யாக்கோபு 4:17) அவர்களுடைய மூப்பர்கள் பொருள்சார்ந்த வழிகளை அவர்களுக்கு பின்னாக வைத்து கடவுளிடமிருந்து பெற்ற வெகுமதியை ‘நெருப்பைப் போல் தூண்டுவிக்க வேண்டும்.’ ஆவிக்குரிய கண் மருந்துடன் பலன்பெற்று, குளிர்ந்த ஊற்றுநீரின் குளிர்ந்த பண்பைப்போன்று சபையில் உள்ள அனைவரும் புத்துயிர் பெற வேண்டும்.—2 தீமோத்தேயு 1:6; நீதிமொழிகள் 3:5-8; லூக்கா 21:34.

16. (அ) இயேசுவின் அன்பும் பாசமும் இன்று எவ்வாறு காண்பிக்கப்படுகின்றன? (ஆ) நாம் பலமான அறிவுரையைப் பெறுவோமானால், நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

16 இன்று நம்மைப் பற்றியதென்ன? இயேசு தொடர்ந்து ‘இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைக்கிறார்.’ இதை அவர் “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுரையாக எல்லா நாட்களிலும்” செய்வார். (யோவான் 13:1; மத்தேயு 28:20, NW) அவருடைய அன்பும் பாசமும் நவீன நாளைய யோவான் வகுப்பார், கிறிஸ்தவ சபையிலுள்ள நட்சத்திரங்கள் அல்லது மூப்பர்கள் மூலமாக வெளிக்காட்டப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 1:20) இந்த மிகவும் சோதனையான காலங்களில், சுதந்திர மனப்பான்மை, பொருளாதார பேராசை, மேலும் உலகத்தின் ஒழுக்கமற்ற அசுத்தம் இவற்றை எதிர்த்து நின்று, தேவாட்சிக்குட்பட்ட எல்லைகளுக்குள்ளாகத் தங்களை வைத்துக் கொள்வதற்காக முதியோரும் இளைஞருமாகிய நம் அனைவருக்கும் உதவி செய்வதில் மூப்பர்கள் ஆழ்ந்த அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர். பலமான அறிவுரையையோ சிட்சையையோ சில சமயங்களில் நாம் பெறும்போது, “சிட்சையின் கடிந்துகொள்ளுதல்களோ ஜீவனின் வழி” என்பதை நினைவுகூர வேண்டும். (நீதிமொழிகள் 6:23, NW) நாம் எல்லாரும் அபூரணராயிருக்கிறபடியால் தேவைப்படும்போது மனந்திரும்புவதற்கு வைராக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும், அதனால் திரும்ப சரிப்படுத்திக்கொண்டு தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கக்கூடும்.—2 கொரிந்தியர் 13:11.

17. செல்வம் எவ்வாறு நமக்கு ஆவிக்குரிய ஆபத்தாக இருக்க முடியும்?

17 நாம் பொருளாசை, ஐசுவரியங்கள் அல்லது ஐசுவரியக் குறைவு நம்மை வெதுவெதுப்பாக்க கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. செல்வமானது புதிய ஊழிய சாத்தியங்களுக்கு வழியைத் திறக்கலாம். ஆனால் ஆபத்தாகவும்கூட இருக்க முடியும். (மத்தேயு 19:24) ஒரு செல்வச் செழிப்பான நபர் பெரிய அளவான நன்கொடைகளை அவ்வப்போது கொடுப்பதனால் பிரசங்க வேலையில் மற்றவர்களைப் போல் வைராக்கிமாக இருக்க வேண்டியதில்லை என்று உணரக்கூடும். அல்லது செல்வந்தனாயிருப்பது அவருக்கு சலுகை காட்டப்படுவதற்கு தகுதியளித்துவிடுகிறது என்று அவர் உணரக்கூடும். கூடுதலாக, மற்றவர்களுக்கு வாய்ப்பில்லாத அநேக இன்பங்களும் பொழுதுபோக்குகளும் செல்வந்தரானவருக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கவனச்சிதறல்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு கிறிஸ்தவ ஊழியத்திலிருந்து விழிப்பற்றத்தன்மைக்கு எடுத்துச் சென்று, அதனால் விவேகமற்ற ஒருவரை வெதுவெதுப்பாக ஆக்குகிறது. அப்படிப்பட்ட எல்லா கண்ணிகளையும் நாம் தவிர்த்து, நித்திய ஜீவனை நோக்கமாகக் கொண்டு, முழு இருதயத்தோடு தொடர்ந்து “கடினமாக உழைத்து பிரயாசப்படு”வோமாக.—1 தீமோத்தேயு 4:8-10; 6:9-12.

‘மாலை உணவை போஜனம் பண்ணுதல்’

18. லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு முன்பாக இயேசு என்ன சந்தர்ப்பத்தை வைத்திருந்தார்?

18 இயேசு தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகிறார்: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே [மாலை, NW] போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.” (வெளிப்படுத்துதல் 3:20) லவோதிக்கேய கிறிஸ்தவர்கள் இயேசுவை அவர்களுடைய சபைக்கு வரவேற்றால் மட்டுமே, அவர்களுடைய வெதுவெதுப்பான தன்மையை மேற்கொள்வதற்கு அவர் உதவுவார்!—மத்தேயு 18:20.

19. லவோதிக்கேயாவிலுள்ள சபையுடன் மாலை போஜனம் பண்ணுவதற்கான அவருடைய வாக்குறுதிகளில் இயேசு எதைக் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறார்?

19 மாலை போஜனத்தைப் பற்றிய இயேசுவின் குறிப்பு, அவர் தம்முடைய சீஷர்களுடன் உட்கொண்ட போஜனங்களை லவோதிக்கேயர்களுக்குச் சந்தேகமில்லாமல் நினைவுபடுத்துகிறது. (யோவான் 12:1-8) அதுபோன்ற சந்தர்ப்பங்கள் பங்குபெற்றவர்களுக்கு எப்பொழுதுமே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தன. அதேபோன்று, இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பு, அவருடைய சீஷர்களுடன் ஒரு போஜனத்தின்பொழுது அவர் இருந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பங்களும் இருந்தன, அந்தச் சந்தர்ப்பங்கள் அவர்களைப் பெரிதும் பலப்படுத்தின. (லூக்கா 24:28-32; யோவான் 21:9-19) ஆகவே, லவோதிக்கேய சபைக்கு வந்து, அவர்களுடன் மாலை போஜனம் பண்ணுவதற்கான இயேசுவின் வாக்குறுதி அவர்களுக்கு அதிகமான ஆவிக்குரிய நன்மைகளைக் கொண்டு வருவதற்கான வாக்குறுதியாக இருக்கிறது, அது அவரை அவர்கள் வரவேற்றால் மட்டுமே.

20. (அ) கர்த்தருடைய நாளின் தொடக்கத்தின்போது, கிறிஸ்தவமண்டலத்தின் வெதுவெதுப்பான தன்மையிலிருந்து என்ன விளைவடைந்தது? (ஆ) இயேசுவின் நியாயத்தீர்ப்பு கிறிஸ்தவமண்டலத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது?

20 லவோதிக்கேயர்களுக்கான இயேசுவின் அன்பான அறிவுரையானது இன்றுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானவர்களுக்கு அதிக உட்கருத்தை உடையதாயிருக்கிறது. அவர்களில் சிலர் கர்த்தருடைய நாள் ஆரம்பித்தபோது, கிறிஸ்தவமண்டல மதவாதிகள் திகைக்க வைக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருந்தனர் என்பதை நினைவுகூருகின்றனர். கர்த்தரின் திரும்பி வருதலை 1914-ல் வரவேற்பதற்குப் பதிலாக, போராடிய 28 தேசங்களில் கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிய 24 தேசங்கள், அவளுடைய குருவர்க்கத்தினர், முதல் உலக யுத்தத்தில் படுகொலையின் சச்சரவில் சிக்கியிருந்தனர். அவர்களுடைய இரத்தப்பழி எவ்வளவு பெரியதானது! இரண்டாவது உலக யுத்தத்தின்போது, கிறிஸ்தவமண்டலத்தினர் இதிலுங்கூட அதிகமாக போரிலீடுபட்டிருந்தனர். மீண்டுமாக பொய் மதத்தின் பாவங்கள் “வானபரியந்தம் எட்டினது.” (வெளிப்படுத்துதல் 18:5) மேலுமாக, மனிதவர்க்கத்தின் பிரச்சினைகள் எதையும் தீர்க்கமுடியாத சர்வதேச சங்கம், ஐக்கிய நாட்டுச் சங்கம் மேலும் தேசியவாதம், புரட்சி இயக்கங்கள் ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலமாக குருவர்க்கம் யெகோவாவின் வந்துகொண்டிருக்கிற ராஜ்யத்திற்குத் தங்கள் முதுகைக் காட்டியிருக்கின்றனர். ஒரு மீனவன் அவனுடைய மீன்பிடிக்கும் வலையில் பிடிக்கப்பட்ட தேவையற்ற மீன்களை எறிந்துவிடுவதுபோல, குருவர்க்கத்தை நீண்ட நாட்களாக வெறுத்துத் தள்ளிவிட்டு, அவர்களைப் பாதகமாக நியாயந்தீர்த்து, வெளியே தூக்கி எறிந்துவிட்டிருக்கிறார். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் இன்றைய வருந்தத்தக்க நிலை அவளுடைய அந்த நியாயத்தீர்ப்பை உறுதிசெய்கிறது. அவளுடைய முன்குறிக்கப்பட்ட முடிவு நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும்!—மத்தேயு 13:47-50.

21. உண்மையான சபையிலுள்ள கிறிஸ்தவர்கள் 1919-லிருந்து லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கான இயேசுவின் வார்த்தைகளுக்கு எவ்வாறு பிரதிபலித்துள்ளனர்?

21 உண்மையான கிறிஸ்தவ சபையின் உள்ளேயும்கூட, உந்துவிக்கிற வெப்பமும் இல்லாத புத்துயிரளிக்கும் குளிர்ச்சியும் இல்லாத பானத்தைப் போன்று வெதுவெதுப்பான தனிப்பட்ட நபர்கள் இருக்கின்றனர். ஆனால் இயேசு இன்னும் அவருடைய சபையை கனிவாக நேசிக்கிறார். மாலை போஜனத்திற்கென்றே இருந்தது போன்று, உபசரிப்புடன் பிரதிபலித்து, அவரை வரவேற்றிருக்கிற கிறிஸ்தவர்களுக்கு அவர் தம்மைத் தாமேயும் கிடைக்கக்கூடியவராக ஆக்கியிருக்கிறார். அதன் விளைவாக, 1919 முதற்கொண்டு, பைபிள் தீர்க்கதரிசனங்களின் அர்த்தத்திற்கு அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பெரிய அறிவொளியின் ஒரு காலத்தை மகிழ்வுடன் அனுபவித்திருக்கின்றனர்.—சங்கீதம் 97:11; 2 பேதுரு 1:19.

22. என்ன எதிர்கால மாலை போஜனத்தை இயேசு மனதில் கொண்டிருந்திருக்க வேண்டும், அதில் யார் பங்குபெறுவர்?

22 லவோதிக்கேயர்களுக்கு எழுதுகையில், இயேசு வேறொரு மாலை போஜனத்தையும்கூட மனதில் கொண்டிருந்திருக்கக்கூடும். வெளிப்படுத்துதலில் பின்னர் நாம் வாசிக்கிறோம்: “ஆட்டுக்குட்டியானவரின் கலியாண [மாலை, NW] விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்.” அவர் பொய் மதத்தின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றிய பின்பு யெகோவாவைத் துதிப்பதில் கம்பீரமான வெற்றிப் பெருவிருந்தாக—பரலோகத்தில் இயேசுவும் அவருடைய முழுமையாக்கப்பட்ட மணவாட்டியாகிய 1,44,000 பேரும் பங்கெடுக்கும் ஒரு பெருவிருந்தாக—இது இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:1-9) ஆம், அந்த லவோதிக்கேய சபையின் பொறுப்புள்ள அங்கத்தினர்களும், கிறிஸ்து இயேசுவின் இன்றுள்ள உண்மை சகோதரர்களும், மெய்யான அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக அடையாளத்தின் சுத்தமான வஸ்திரங்களை அணிந்துள்ளவர்கள்—எல்லாரும் மாலை போஜனத்தில் அவர்களுடைய மணவாளனுடன் விருந்துண்ணுவர். (மத்தேயு 22:2-13) வைராக்கியமுள்ளவர்களாய் இருந்து மனந்திரும்புவதற்கு என்னே ஒரு வலிமைமிக்க தூண்டுதல்!

ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு ஒரு சிங்காசனம்

23, 24. (அ) என்ன மேலுமான வெகுமதியைப் பற்றி இயேசு பேசுகிறார்? (ஆ) அவருடைய மேசியானிய சிங்காசனத்தில் இயேசு எப்பொழுது உட்கார்ந்தார், மேலும் கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டியவர்களின் நியாயத்தீர்ப்பை எப்பொழுது தொடங்கினார்? (இ) அவருடைய மரண நினைவு ஆசரிப்பை அவர் தொடங்கி வைத்தபோது அவருடைய சீஷர்களுக்கு இயேசு என்ன வியக்கத்தக்க வாக்குறுதியைக் கொடுத்தார்?

23 இயேசு மேலுமான வெகுமதியைப் பற்றிப் பேசுபவராக சொல்கிறார்: “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடே கூட உட்கார்ந்தது போல ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.” (வெளிப்படுத்துதல் 3:21) சங்கீதம் 110:1, 2-ல் உள்ள தாவீதுடைய வார்த்தைகளின் நிறைவேற்றமாக, உத்தமத்தைக் காத்துக்கொண்டிருக்கிற இயேசு, உலகத்தை ஜெயித்தவராக, பொ.ச. 33-ல் உயிர்த்தெழுப்பப்பட்டு, அவருடைய பிதாவுடன் பரலோக சிங்காசனத்தில் அமருவதற்காக உயர்த்தப்பட்டிருக்கிறார். (அப்போஸ்தலர் 2:32, 33) வேறொரு மிக முக்கிமான வருடத்தில், 1914-ல், அரசராகவும் நீதிபதியாகவும் அவருடைய சொந்த மேசியானிய சிங்காசனத்தில் அமருவதற்காக இயேசு வந்தார். நியாயத்தீர்ப்பானது 1918-ல் கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டியவர்களுடன் ஆரம்பமானதாகத் தெரிகிறது. அந்தச் சமயத்திற்கு முன்பாக மரித்த அபிஷேகஞ்செய்யப்பட்ட ஜெயங்கொள்ளுகிறவர்கள் பின்னர் உயிர்த்தெழுப்பப்பட்டு அவருடைய ராஜ்யத்தில் இயேசுவுடன் சேர்ந்துகொள்கின்றனர். (1 பேதுரு 4:17) அவருடைய மரண நினைவு ஆசரிப்பைத் தொடங்கி வைத்தபோது இவ்விதமாக வாக்களித்து, அவருடைய சீஷர்களிடத்தில் சொல்கிறார்: “என் பிதா ராஜ்யத்திற்காக என்னுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தியது போல நானும் உங்களுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்துகிறேன், நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள்.”—லூக்கா 22:28-30, NW.

24 “மறுசிருஷ்டிப்”பின்போது ஆளுகை செய்யும் அரசருடன் அமர்ந்திருந்து, அவருடைய பரிபூரண பலியின் அடிப்படையில் கீழ்ப்படிதலான மனிதவர்க்க உலகத்தை ஏதேனிய பரிபூரணத்திற்கு உயர்த்துவதில் பங்குபெறுவது என்னே ஒரு வியக்கத்தக்க நியமனம்! (மத்தேயு 19:28, NW; 20:28) யோவான் நமக்குத் தெரிவிக்கிற பிரகாரமாக, இயேசு ஜெயங்கொள்ளுகிறவர்களை “அவருடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக” யெகோவாவின் சிறப்புவாய்ந்த சொந்த பரலோக சிங்காசனத்தைச் சூழ சிங்காசனங்களில் உட்காரும்படி செய்கிறார். (வெளிப்படுத்துதல் 1:6; 4:4) நாம் எல்லாரும்—அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது பரதீஸை திரும்ப நிலைநாட்டுவதில் பங்குபெறுவதற்கான நம்பிக்கையுடைய புதிய உலக சமுதாயத்தினராக இருந்தாலும் சரி—லவோதிக்கேயர்களுக்கான இயேசுவின் வார்த்தைகளை இருதயத்தில் எடுத்துக்கொள்வோமாக!—2 பேதுரு 3:13; அப்போஸ்தலர் 3:19-21.

25. (அ) முந்தைய செய்தியைப் போன்று, லவோதிக்கேயாவிற்கான அவருடைய செய்தியை இயேசு எவ்வாறு முடிக்கிறார்? (ஆ) லவோதிக்கேயாவிலுள்ள சபைக்கான இயேசுவின் வார்த்தைகளுக்கு இன்றுள்ள தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

25 முந்தைய செய்திகளைப் போன்று, இயேசு இந்த ஒன்றையும் அறிவுரையான வார்த்தைகளுடன் முடிக்கிறார்: “ஆவியானவர் [ஆவி, NW] சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 3:22) நாம் முடிவு காலத்தின் முடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்பைப் பொறுத்த வரையில் கிறிஸ்தவமண்டலம் குளிர்ந்துவிட்டிருக்கிறது என்பதற்கு நம்மைச் சுற்றியுள்ள எல்லாம் ஆதாரமாயிருக்கிறது. மாறாக, நாம் உண்மைக் கிறிஸ்தவர்களாக லவோதிக்கேயாவிலுள்ள சபைக்கான இயேசுவின் செய்திக்கு, ஆம், சபைகளுக்கான நம்முடைய கர்த்தரின் எல்லா ஏழு செய்திகளுக்கும் ஆர்வத்துடன் பிரதிபலிக்கக்கூடும். இதை நாம் நம்முடைய நாளுக்கான இயேசுவின் பெரிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் அதிக சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருப்பதன் மூலமாகச் செய்ய முடியும்: “இந்த ராஜ்யத்தினுடைய நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதும் எல்லா ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:12-14, NW.

26. யோவானிடம் நேரடியாக இயேசு மீண்டும் எப்பொழுது பேசுகிறார், ஆனால் அவர் எதில் பங்கெடுக்கிறார்?

26 ஏழு சபைகளுக்கான இயேசுவின் அறிவுரை முடிந்திருக்கிறது. வெளிப்படுத்துதலில் கடைசி அதிகாரத்திற்கு முன்பாக மீண்டும் யோவானிடம் அவர் பேசவில்லை; ஆனால் அவர் அநேக தரிசனங்களில் பங்கெடுக்கிறார், உதாரணமாக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் பங்கெடுக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட இரண்டாவது குறிப்பிடத்தக்க தரிசனத்தை ஆராய்வதில் நாம் யோவான் வகுப்பாருடன் சேர்ந்துகொள்வோமாக.

[அடிக்குறிப்பு]

a லவோதிக்கேயாவின் பகுதியில் இந்த இடங்கள் புதைபொருள் தோண்டுதல்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

[கேள்விகள்]

[பக்கம் 73-ன் பெட்டி]

பொருளாசைக்கு எதிராக ஞானம்

1956-ல் ஒரு பத்திரிகை செய்தியாளர் எழுதினார்: “ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக சராசரி மனிதனின் விருப்பங்கள் 72-ஆக இருந்தது, அதில் 16 தேவைகளாக மதிப்பிடப்பட்டன. இன்று சராசரி மனிதன் 474 விருப்பங்கள் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறான். அதில் 94 தேவைகளாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக 200 பொருட்கள் விற்பனைத் திறமையினால் சராசரி மனிதன் மேல் திணிக்கப்பட்டன. ஆனால் இன்று 32,000 பொருட்களுக்கு, விற்பனை எதிர்ப்பு தேவையாக இருக்கிறது. மனிதனின் தேவைகளோ குறைவு—அவனுடைய விருப்பங்கள் முடிவில்லாதது.” இன்று, பொருளாதார செல்வங்களும், உடைமைகளும் வாழ்க்கையில் முதலாவதான காரியம் என்ற எண்ணத்தினால் மக்கள் தீவிரமாக தாக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், அநேகர் பிரசங்கி 7:12-ன் (NW) ஞானமான ஆலோசனையை தள்ளிவிட்டிருக்கின்றனர்: “திரவியம் கேடகமாயிருப்பது போல் ஞானமும் கேடகம்; ஆனால் ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.”

[பக்கம் 67-ன் படம்]

லவோதிக்கேயாவை வந்தடைந்த தண்ணீரானது வெறுப்புண்டாக்கும் விதத்தில் வெதுவெதுப்பாக இருக்கும். லவோதிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் மனநிறைவளிக்காத ஒரு வெதுவெதுப்பான ஆவியைக் கொண்டிருந்தார்கள்