Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆதாமும் ஏவாளும்

ஆதாமும் ஏவாளும்

ஆதாமும் ஏவாளும்

சொற்பொருள் விளக்கம்: ஆதாம்தான் முதல் மனித சிருஷ்டி. எபிரெய பதமாகிய ஏதாம் (’a.dham’) பொருத்தமாகவே “மனிதன்,” “மண்ணுக்குரிய மனிதன்,” மற்றும் “மனிதவர்க்கம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அந்த முதல் மனுஷியாகிய ஏவாள், ஆதாமின் மனைவி.

ஆதாமும் ஏவாளும் வெறுமென கற்பனைப் பாத்திரங்களா?

ஒரே முதல் பெற்றோரிடமிருந்து நாமெல்லாரும் வந்தோம் என்பது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதா?

“பெரும்பான்மையான பெரிய மதங்கள் எதை வெகுகாலம் பிரசங்கித்து வந்திருக்கிறதோ அதை விஞ்ஞானம் இப்போது உறுதிசெய்கிறது: எல்லா இனத்தின் மனிதர்களும் . . . ஒரே மனிதனிலிருந்து உண்டாயிருக்கிறார்கள்.”—மனிதரில் பரம்பரைக் குணம் (பிலடெல்ஃபியா மற்றும் நியு யார்க், 1972), அம்ராம் ஷீன்ஃபெல்ட், பக். 238.

“பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே மனித இனத்தின் தகப்பனும் தாயுமாகிய ஆதாம், ஏவாள் பற்றிய பைபிள் கதை சொன்ன அதே உண்மையை விஞ்ஞானம் இன்றைக்கு வெளிப்படுத்தியிருக்கிறது: அதாவது, பூமியின் எல்லா மக்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுவான ஆரம்பத்தை உடையவர்கள்.”—மனிதவர்க்க மரபுகள் (நியு யார்க், 1978), ரூத் பெனிடிக்ட் மற்றும் ஜீனி வெல்ட்ஃபிஷ், பக். 3.

அப். 17:26: “மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும், அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே [மனுஷனாலே, NW] தோன்றப்பண்ணி, பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்”தார்.

ஆரம்பகால மனிதவர்க்கம் முழுவதையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கற்பனைப்பாத்திரமாக ஆதாமை பைபிள் அறிமுகம் செய்கிறதா?

யூதா 14: “ஆதாமுக்கு ஏழாந் தலைமுறையான ஏனோக்கு . . . முன்னறிவித்தான்.” (ஏனோக்கு பூர்வ மனிதவர்க்கம் முழுவதுக்கும் ஏழாம் தலைமுறையானவன் அல்ல.)

லூக்கா 3:23-38: “இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் . . . தாவீதின் குமாரன்; . . . ஆபிரகாமின் குமாரன்; . . . ஆதாமின் குமாரன்.” (தாவீதும் ஆபிரகாமும் நன்கு அறியப்பட்ட வரலாற்று ஆட்கள். ஆகவே ஆதாம் ஓர் உண்மையான ஆள் என்ற முடிவுக்கு வருவது நியாயமல்லவா?)

ஆதி. 5:3: “ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.” (எல்லாப் பூர்வ ஆட்களாலும் சேத் பிறப்பிக்கப்படவுமில்லை, அல்லது எல்லாப் பூர்வ ஆட்களும் 130 வயதாகும்போது குமாரரைப் பெறவுமில்லை.)

ஒரு சர்ப்பம் ஏவாளிடத்தில் பேசியது என்ற கூற்று, இந்த விவரம் ஓர் உருவகக் கதையாகவே இருக்கவேண்டுமெனக் குறிக்கிறதா?

ஆதி. 3:1-4: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா] உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: . . . தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை, . . . என்றது.”

யோவான் 8:44: “[இயேசு சொன்னார்:] பிசாசு . . . பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.” (ஆகவே பிசாசுதான் ஏதேன் தோட்டத்தில் பேசப்பட்ட முதல் பொய்க்கு மூலகாரணன். அவன் சர்ப்பத்தை ஒரு காணக்கூடிய பேசும் கருவியாகப் பயன்படுத்தினான். ஒரு பாடத்தைக் கற்பிக்க ஆதியாகமம் கற்பனை சிருஷ்டிகளை உபயோகிக்கிறதில்லை. மேலும் வெளிப்படுத்துதல் 12:9-ஐப் பாருங்கள்.)

உதாரணம்: ஓரிடத்தில் இருந்துகொண்டு வேறொரு இடத்திலிருந்து மற்றொருவர் பேசும் தொனிபோல் சப்தம் தோன்றச் செய்யும் கலை நிபுணர்களுக்கு இது அசாதரணமான காரியம் அல்ல. எண்ணாகமம் 22:26-31-ல் யெகோவா பிலேயாமின் பெண் கழுதையைப் பேசச் செய்த விவரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள்.

“முந்தின ஆதாம்” வெறும் ஒரு கற்பனைப்பாத்திரம் என்றால் “பிந்தின ஆதாமாகிய” இயேசு கிறிஸ்துவைப்பற்றி என்ன?

1 கொரி. 15:45, 47: “அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த”வர். (ஆகவே, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்த உண்மையான மனிதன் ஆதாம் என்பதை மறுப்பது, இயேசுவை அடையாளங் கண்டுகொள்வதைச் சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. அத்தகைய மறுப்பு மனிதவர்க்கத்துக்கு இயேசு தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்குத் தேவைப்பட்டதன் காரணத்தை மறுதலிப்பதற்கு வழிநடத்துகிறது. அதை மறுப்பது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிப்பதைக் குறிக்கிறது.)

இயேசுதாமே ஆதியாகம விவரப் பதிவை எவ்வாறு கருதினார்?

மத். 19:4, 5: “அவர் [இயேசு] பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை [ஆதாம், ஏவாளை] உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் நீங்கள் [ஆதியாகமம் 1:27; 2:24-ல்] வாசிக்கவில்லையா?” (இயேசு ஆதியாகமப் பதிவை உண்மையானது என்று நம்பினார். நாமும் அதை நம்பவேண்டுமல்லவா?)

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘ஆதாமின் பாவம், கடவுளுடைய சித்தமாயிருந்தது, கடவுளுடைய திட்டமாயிருந்தது.’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘பலர் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் விரும்பியதை நான் செய்யும்போது நீங்கள் அதற்காக என்னைக் கண்டனத்தீர்ப்புக்குள்ளாக்குவீர்களா? . . . அதுபோல், ஆதாமின் பாவம் கடவுளுடைய சித்தம் என்றால், ஏன் ஆதாம் ஒரு பாவியாக ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டான்? (ஆதி. 3:17-19, 23, 24)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘அது ஓர் அக்கறையூட்டும் குறிப்பு. அதற்கான விடை, கடவுள் எத்தகைய ஆள் என்பதை உட்படுத்துகிறது. ஒருவர் செய்யும்படி நீங்கள்தாமே அவருக்காகத் திட்டமிட்ட காரியத்தை அவர் செய்ததனால் அவரைக் கண்டனத் தீர்ப்புக்குட்படுத்துவது நியாயமாக அல்லது அன்பாக இருக்குமா?’ பின்பு மேலும் சொல்லலாம்:  (1) ‘யெகோவா அன்புள்ள கடவுள். (1 யோவான் 4:8) அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை. (சங். 37:28; உபா. 32:4) ஆதாம் பாவம் செய்வது கடவுளுடைய சித்தமாயிருக்கவில்லை; அவர் அதற்கு எதிராக ஆதாமை எச்சரித்தார். (ஆதி. 2:17)’ (2) ‘நமக்குச் செய்திருப்பதுபோல் அவன் தான் செய்யப்போவதைத் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தைக் கடவுள் ஆதாமுக்கு அனுமதித்தார். தன் விருப்பப்படி கீழ்ப்படியாமற்போவதன் சுயாதீனத்தைப் பிரயோகிப்பதைப் பரிபூரணம் தடுத்து நிறுத்தவில்லை. கீழ்ப்படியாமையின் விளைவு மரணம் என எச்சரிக்கப்பட்டும் ஆதாம் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்வதைத் தெரிந்துகொண்டான்.’ (பக்கம் 142-ஐயும் பாருங்கள்.)