Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிருஷ்டிப்பு

சிருஷ்டிப்பு

சிருஷ்டிப்பு

சொற்பொருள் விளக்கம்: சிருஷ்டிப்பு, பைபிளில் விவரித்துள்ளபடி, சர்வவல்லமையுள்ள கடவுள், மற்ற ஆவி ஆட்கள் மற்றும் இந்தப் பூமியின்மீது மூல உயிர்வகைகளெல்லாமும் உட்பட, இந்தச் சர்வலோகத்தைத் திட்டமிட்டு உண்டாயிருக்கச் செய்ததைக் குறிக்கிறது.

இந்த நவீன, விஞ்ஞான உலகத்தில், சிருஷ்டிப்பில் நம்புவது பகுத்தறிவுக்கு ஒத்ததாயிருக்கிறதா?

“சர்வலோகத்தின் இயற்கைச் சட்டங்கள் அவ்வளவு துல்லியமாக இருப்பதால், சந்திரனுக்குப் பறந்துசெல்வதற்கு ஒரு விண்வெளி கலத்தைக் கட்டியமைக்க நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, மேலும் அந்தப் பறக்கும் நேரத்தை ஒரு வினாடி பின்னமளவு துல்லியமாகக் கணக்கிடவும் முடியும். இந்தச் சட்டங்கள் யாரோ ஒருவரால் அமைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.”—உவெர்னர் வான் பிராட்டின் என்பவர் சொன்னதிலிருந்து எடுத்துக் குறிப்பிடப்பட்டது, இவர் அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு அனுப்புவதில் பெரும் பங்கெடுத்தவர்.

சடப்பொருள் சர்வலோகம்: துல்லியமாக நேரத்தைக் காட்டும் ஒரு கடிகாரத்தை நீங்கள் காண்பீர்களானால், இது தூசிப் பொடிகள் தற்செயலாய்க் காற்றிலடித்துவந்து ஒன்றுசேர்ந்ததால் உண்டானதென முடிவுசெய்வீர்களா? தெளிவாகவே, அறிவுநுட்பமுள்ள ஒருவன் அதைச் செய்தான். அதைப் பார்க்கிலும் மிக அற்புதமான ஒரு “கடிகாரம்” இருக்கிறது. நம்முடைய சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களும் சர்வலோகம் முழுவதிலுமுள்ள நட்சத்திரங்களும், மனிதரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பெரும்பான்மையான கடிகாரங்களைப் பார்க்கிலும் அதிகத் துல்லியமான வீதத்தில் இயங்குகின்றன. நம்முடைய சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வீதி மண்டலத்தில் 10,000 கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன, மேலும் சர்வலோகத்திலும் அத்தகைய பால்வீதிமண்டலங்கள் 10,000 கோடி இருப்பதாக வான் கணிப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஒரு கடிகாரம் அறிவுநுட்பமுள்ள திட்ட அமைப்பின் அத்தாட்சியாயிருக்குமானால், அதைப் பார்க்கிலும் அவ்வளவு மிகப் பரந்த மற்றும் சிக்கலான சர்வலோகம் எவ்வளவு அதிகமாய் அவ்வாறு இருக்கும்! இதைத் திட்டமிட்டமைத்தவரை, “வானங்களைச் சிருஷ்டித்து அவைகளை விரித்தவ[ர்] . . . யெகோவாவாகிய [உண்மையான, NW] கடவுள்,” என பைபிள் விவரிக்கிறது.—ஏசா. 42:5, தி.மொ.; 40:26; சங். 19:1.

கிரகமாகிய பூமி: வறண்ட ஒரு பாலைவனத்தைக் கடந்து செல்கையில், எவ்வகையிலும் தேவைப்பட்ட எல்லாம் அமைத்து, உணவு சேமித்து வைக்கப்பட்ட ஓர் அழகிய வீட்டைக் காண்பீர்களாகில், அது ஏதோ தற்செயலாயுண்டான திடீர் வெடியால் அங்கே தோன்றிவிட்டதென நீங்கள் நம்புவீர்களா? இல்லை; போதியளவு ஞானமுள்ள ஒருவன் அதைக் கட்டியிருப்பானென நீங்கள் உணர்வீர்கள். நம்முடைய சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களில், பூமியைத் தவிர வேறு எதிலும் உயிரை விஞ்ஞானிகள் இன்னும் காணவில்லை; மற்றக் கிரகங்கள் வெறுமையாயிருக்கின்றனவென கிடைக்கக்கூடிய அத்தாட்சி காட்டுகிறது. பூமி என்ற புத்தகத்தில் சொல்லியுள்ளபடி, “இந்தக் கிரகம் “சர்வலோகத்தின் அதிசயம், தனித்தன்மை வாய்ந்த ஒரு கோம்.” (நியு யார்க், 1963, ஆர்த்தர் பீசெர், பக். 10) மனித உயிர்வாழ்க்கைக்கு ஏதுவாக அது சூரியனிலிருந்து நுட்பமாய்ச் சரியான தூரத்தில் இருக்கிறது, சுற்றுப்பாதையில் நிலைத்திருப்பதற்குச் சரியான வேகத்தில் அது நகர்கிறது. பூமியைச் சூழ்ந்து மட்டுமே காணப்படுகிற வகையான வாயு மண்டலம், உயிர்வாழ்க்கைத் தொர்ந்து நிலைத்திருக்கச் செய்வதற்கு நுட்பமாய்ச் சரியான அளவு பொருத்தமான வாயுக்களமைந்ததாயுள்ளது. அதிசயமாய், சூரியனிலிருந்து ஒளியும், காற்றிலிருந்து கரியமில வாயும், வளமான மண்ணிலிருந்து தண்ணீரும் தாதுப்பொருட்களும் பூமியில் வாழ்வோருக்கு உணவு விளைவிக்க ஒன்றிணைகின்றன. இவையாவும், வானவெளியில் ஏற்பட்ட கட்டுப்படுத்தப்படாத ஏதோ வெடியின் பலனாக உண்டாயினவா? விஞ்ஞானச் செய்தி பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “அத்தகைய நுணுக்கவிவரமான மற்றும் துல்லியமான நிலைமைகள் தற்செயலாய் எழும்பியிருக்க முடியாதெனத் தோன்றுகிறது.” (ஆகஸ்ட் 24 மற்றும் 31, 1974, பக். 124) பைபிள் பின்வருமாறு சொல்கையில் அதன் முடிவு நியாயமானதாயிருக்கிறது: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”—எபி. 3:4.

மனித மூளை: நவீன கம்ப்யூட்டர்கள் தீவிர ஆராய்ச்சி மற்றும் கவனமான தொழில் நுட்பத்தின் கண்டுபிடிப்பாக இருக்கின்றன. அவை “தற்செயலாகத் தோன்றிவிடவில்லை.” மனித மூளையைப் பற்றியதென்ன? எந்த மிருகத்தின் மூளையையும்போலல்லாமல், ஒரு குழந்தையின் மூளை அதன் முதலாவது ஆண்டின்போது பருமனில் மூன்று மடங்காகிறது. அது எவ்வாறு செயல்படுகிறதென்பது விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு பெரிய புதிராக இருக்கிறது. சிக்கலான மொழிகளைக் கற்பதற்கும், அழகை மதித்துணருவதற்கும், இசை அமைப்பதற்கும், வாழ்க்கையின் தொக்கத்தையும் உட்பொருளையும் ஆழ்ந்து சிந்திப்பதற்கும் தங்களுக்குள்தானே அமைக்கப்பட்டுள்ள திறமை மனிதரில் இருக்கிறது. மூளை அறுவைச் சிகிச்சை நிபுணர் ராபர்ட் ஒயிட் சொன்னதாவது: “புரிந்துகொள்ள மனிதனின் திறமைக்கு மிக அப்பாற்பட்ட ஒன்றாகிய—விசித்திரமான மூளை-மனம் உறவின் திட்டத்துக்கும் வளர்ச்சிக்கும் பொறுப்புடைய உன்னத அறிவுக்கூர்மையுடையவர் ஒருவர் இருப்பதை ஒப்புக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு தெரிவு விடப்படவில்லை.” (தி ரீடர்ஸ் டைஜஸ்ட், செப்டம்பர் 1978, பக். 99) இந்த அதிசயத்தின் வளர்ச்சி கருப்பையில் கருத்தரித்த மிகச் சின்னஞ்சிறிய ஓர் உயிரணுவிலிருந்து தொங்குகிறது. குறிப்பிடத்தக்க நுண்ணறிவுத்திறமையுடன், பைபிள் எழுத்தாளன் தாவீது யெகோவாவிடம் பின்வருமாறு கூறினான்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”—சங். 139:14.

உயிரணு: ஒரு தனி உயிரணு ஓர் “எளிய” உயிர் வகையென சில சமயங்களில் குறிக்கப்படுகிறது. ஆனால் ஒரே-உயிரணுவாலாகிய உயிரினம், இரையைப் பிடிக்கவும், அதை ஜீரணிக்கவும், கழிவுகளை அகற்றவும். தனக்கு ஒரு வீட்டைக் கட்டவும் பாலுறவு நடவடிக்கையில் ஈடுபடவும் முடியும். மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரு மதிலமைக்கப்பட்ட நகரத்துக்கு ஒப்பிடப்பட்டு, ஒழுங்கைக் காத்துவருவதற்கு ஒரு மத்திப அரசாங்கத்துடனும், சக்தியை உண்டாக்குவதற்கு ஓர் ஆற்றல் உற்பத்திநிலையத்துடனும், புரதப் பொருளை உற்பத்தி செய்வதற்குத் தொழிற்சாலைகளுடனும், சிக்கலான போக்குவரத்து ஒழுங்குமுறையுடனும் உட்செல்ல எதை அனுமதிப்பதென்பதைக் கட்டுப்படுத்த காவலர்களுடனும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு தனி மனித உடல் கோடிகோடி அளவான உயிரணுக்களாலாகியது. சங்கீதம் 104:24-ன் (தி.மொ.) வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாயுள்ளன: “யெகோவா, உமது செயல்கள் எவ்வளவு திரளானவை! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்!”

பல்வேறு வகை உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்குக் கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தினாரென்ற எண்ணத்துக்கு பைபிள் இடமளிக்கிறதா?

புல்லும் மரங்களும் ஒவ்வொன்றும் “தங்கள் தங்கள் ஜாதியின்படியே [“அதனதன் வகைப்படி”],” இனத்தைத் தோற்றுவிப்பதற்கு உண்டாக்கப்பட்டனவென்று ஆதியாகமம் 1:11, 12-ல் சொல்லியிருக்கிறது. வசனங்கள் 21, 24, 25-ல், கடவுள் சமுத்திரத்தில் வாழும் உயிரினங்களையும், பறக்கும் உயிரினங்களையும் நிலத்தில் வாழும் மிருகங்களையும் ஒவ்வொன்றையும் “தங்கள் தங்கள் ஜாதியின்படியே” சிருஷ்டித்தார் என்று மேலும் சொல்லியிருக்கிறது. ஓர் அடிப்படையான இனம் மற்றொரு இனமாகப் பரிணாம வளர்ச்சியுறுவதற்கு அல்லது மாறுவதற்கு இங்கே இடமளித்தில்லை.

மனிதனைக் குறித்து கடவுள் பின்வருமாறு சொன்னாரென்று ஆதியாகமம் 1:26-ல் அறிவித்திருக்கிறது: “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.” ஆகையால் அவன், மிருகத் தன்மைகளிலிருந்து வெறுமென வளர்ச்சியடைந்து முன்னேறின தன்மைகளையல்ல, கடவுளுடையதைப்போன்ற பண்புகளை உடையவனாக இருக்கவேண்டும். ஆதியாகமம் 2:7-ல் மேலும் சொல்லியிருப்பதாவது: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, தி.மொ.] மனுஷனைப் [ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருந்த ஓர் உயிரினத்திலிருந்து அல்ல] பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” இங்கே பரிணாமத்தைப் பற்றிய எந்தச் சாடைக்குறிப்பும் இல்லை, மாறாக ஒரு புதிய சிருஷ்டிப்பைப் பற்றிய விவரமே காணப்படுகிறது.

இன்று பூமியிலிருக்கும் பல்வேறுபட்ட இலட்சக்கணக்கான உயிரினங்கள் எல்லாவற்றையுமே கடவுள் சிருஷ்டித்தாரா?

கடவுள் ஒவ்வொன்றையும் “தங்கள் தங்கள் ஜாதிகளின்படியே” படைத்தார் என்று ஆதியாகமம் 1-ம் அதிகாரம் சொல்கிறது. (ஆதி. 1:12, 21, 24, 25) நோவாவின் நாளில் பூகோள ஜலப்பிரளயத்துக்கு ஆயத்தம் செய்கையில், நிலத்தில் வாழும் மிருகங்களிலும் பறக்கும் உயிரினங்களிலும் ஒவ்வொரு “வகை”யையும் பிரதிநிதித்துவம் செய்யும் உயிரினங்கள் பேழைக்குள் கொண்டுசெல்லப்படவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். (ஆதி. 7:2, 3, 14) ஒவ்வொரு “ஜாதி”யும் அதே இனத்தில் பல வேறுபாட்டு பண்புகளுள்ளவற்றைப் பிறப்பிக்கும் பிறப்புமூலப் பண்பியல் சார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 400-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாய் வகைகளும் மற்றும் 250-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகை மற்றும் மாதிரிகளான குதிரைகளும் இருக்கின்றனவென அறிவிக்கப்படுகிறது. ஒரு மிருகத்தின் கலப்பு இன வகைகள் எல்லாம் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெறும் ஒரு “ஜாதி”யாக மட்டுமே இருக்கின்றன. அவ்வாறே பல்வேறு வகையினரான எல்லா மானிடரும்—கிழக்கத்தியரும், ஆப்பிரிக்கரும், காகேசியரும், சுடானிலுள்ள ஏழு அடி உயரமுள்ள டின்க்காவினரைப் போன்றவர்களும், நான்கு அடி நான்கு அங்குலம் குட்டையாயுள்ள பிக்மீக்களைப் போன்றவர்களும்—அந்த ஒரே முதல் ஜோடியாகிய ஆதாம், ஏவாளிலிருந்தே தோன்றினார்கள்.—ஆதி. 1:27, 28; 3:20.

உயிரினங்களின் உடலமைப்பில் அடிப்படையாய் ஒத்துள்ள தன்மைகளுக்குக் காரணமென்ன?

“எல்வாவற்றையும் சிருஷ்டித்த தேவன்.” (எபே. 3:11) இவ்வாறு அந்த ஒரே பெரிய திட்டமிடுபவரே எல்லாவற்றையும் திட்டமிட்டமைத்தார்.

“சகலமும் அவர் [கடவுளுடைய ஒரே பேறான குமாரன், பூமியிலிருக்கையில் இயேசு கிறிஸ்துவானவர்] மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” (யோவான் 1:3) இவ்வாறு கைதேர்ந்த ஒரே வேலையாளன் மூலமாய் யெகோவா தம்முடைய சிருஷ்டிப்பு வேலைகளை நடப்பித்தார்.—நீதி. 8:22, 30, 31, NW.

சர்வலோகம் உண்டாக்கப்பட்ட மூலப்பொருளின் தொடக்கம் என்ன?

சடப்பொருள் என்பது ஆற்றலின் அடர்த்தியான ஒரு நிலையென விஞ்ஞானிகள் ஆய்ந்தறிந்திருக்கிறார்கள். இது அணுசக்தி போயுதங்களின் வெடியைக்கொண்டு மெய்ப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது. வான நூல் பெளதீக நிபுணர் ஜோசிப் கிளெக்ஜெக் பின்வருமாறு கூறுகிறார்: “பெரும்பான்மையான மற்றும் இயலுமளவில் எல்லா மூலப்பொருள் அணுக்கூறுகளையும் ஆற்றலைப் பருப்பொருளாக்குவதனால் உண்டாக்கக்கூடும்.”—சர்வலோகம் (பாஸ்டன், 1976), புத். 11, பக். 17.

இத்தகைய ஆற்றல் எங்கிருந்து வரக்கூடும்? “அவைகளைச் [நட்சத்திரங்களையும் கிரகங்களையும்] சிருஷ்டித்தவர் யார்?” என்று கேட்ட பின்பு, யெகோவா தேவனைக் குறித்து பைபிளில் சொல்லியிருப்பதாவது: “அவருடைய மகா பெலத்தினாலும் [ஆற்றலினாலும், NW], அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசா. 40:26) ஆகையால் இந்தச் சர்வலோகத்தைச் சிருஷ்டிப்பதற்குத் தேவைப்பட்ட அந்த எல்லா “மகா ஆற்றலுக்கும்” கடவுள்தாமே மூலகாரணராயிருக்கிறார்.

சடப்பொருள் சிருஷ்டிப்பு முழுவதும் ஆறுநாட்களில்தானே கடந்த 6,000-த்திலிருந்து 10,000 ஆண்டுகளுக்குள் ஏதோவொரு சமயத்தில் நிறைவேற்றப்பட்டதா?

உண்மைகள் இத்தகைய முடிவுக்கு ஒத்ததாக இல்லை: (1) வானம் தெளிவாயுள்ள இரவின்போது வட கோர்த்தத்தில் அன்ட்ரோமீடா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து ஒளியைக் காணமுடியும். அந்த ஒளி பூமிக்கு வந்தசேர சுமார் 20,00,000 ஆண்டுகள் எடுக்கிறது, இது இந்தச் சர்வலோகம் உண்டாக்கப்பட்டு குறைந்தது பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டுமென குறிப்பாகத் தெரிவிக்கிறது. (2) சில கற்பாறைப் படிவங்கள் நூறுகோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒழுங்கு கலைக்கப்படாமல் இருந்திருக்கின்றனவென்று பூமியிலுள்ள கற்பாறைகளில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவின் முடிவான விளைப்பொருட்கள் நிரூபிக்கின்றன.

ஆதியாகமம் 1:3-31, சடப்பொருள் அல்லது வானொளிக் கோங்களின் சிருஷ்டிப்பு-தொக்கத்தைப்பற்றி விவரிக்கிறதில்லை. ஏற்கெனவே இருந்துகொண்டிருந்த பூமியை மனித குடியிருப்புக்காக ஆயத்தஞ்செய்வதையே அது விவரிக்கிறது. இது தாவரம், கடல்வாழ் ஜீவன்கள், பறக்கும் உயிரினங்கள், நிலத்தில் வாழும் மிருகங்கள், மற்றும் முதல் மனித ஜோடி ஆகியோரின் அடிப்படை வகைகளின் சிருஷ்டிப்பை உட்படுத்தியது. இவையாவும் ஆறு “நாட்கள்” காலப்பகுதிக்குள் செய்துமுடித்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும், “நாள்” என மொழிபெயர்த்துள்ள எபிரெயச் சொல், ‘நெடுங்காலம்; ஓர் அசாதாரண சம்பவத்தை உள்ளடக்கும் காலம் ஆகியவை உட்பட பல்வேறு அர்த்தங்களையுடையது.’ (பழைய ஏற்பாட்டுச் சொல்லாராய்ச்சிகள், கிரான்ட் ராப்பிட்ஸ், மிச்.; 1978, W. உவில்சன், பக். 109) பயன்படுத்தப்பட்டுள்ள இந்தச் சொல் ஒவ்வொரு “நாளும்” ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்ததாயிருந்திருக்க முடியுமென்ற கருத்துக்கு இடமளிக்கிறது.