Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராய்ச்சி எண் 4—பைபிளும் அதன் அதிகாரப்பூர்வ பட்டியலும்

ஆராய்ச்சி எண் 4—பைபிளும் அதன் அதிகாரப்பூர்வ பட்டியலும்

ஆராய்ச்சி எண் 4—பைபிளும் அதன் அதிகாரப்பூர்வ பட்டியலும்

“பைபிள்” என்ற சொல் உருவான விதம்; தெய்வீக நூலகத்திற்குரிய உண்மையான புத்தகங்கள் எவை என தீர்மானித்தல்; தள்ளுபடி ஆகமத்தை விலக்குதல்.

கடவுளால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் பைபிள் என்றே அழைக்கப்படுகின்றன. ஆகவே “பைபிள்” என்ற சொல் எப்படி உருவானது, அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்வது நல்லது. பைபிள் என்ற சொல் பிப்ளையா (bi·bliʹa) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பிறந்தது. இதன் அர்த்தம் “சிறு புத்தகங்கள்” என்பதாகும். பிப்ளையா என்ற சொல்லோ பைப்ளாஸ் (biʹblos) என்ற சொல்லிலிருந்து வந்தது. இது, பூர்வ காலங்களில் “பேப்பர்” செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பப்பைரஸ் செடியின் உட்புற பாகத்தை குறிக்கும் சொல். (எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட பப்பைரஸ், ஃபெனீஷிய துறைமுகமாகிய கேபால் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது; ஆகவே அந்த நகரத்தை கிரேக்கர்கள் பைப்ளாஸ் என்று அழைத்தனர். யோசுவா 13:5-ன் [NW] அடிக்குறிப்பைக் காண்க.) பப்பைரஸில் எழுதப்பட்ட எவையும் பிப்ளையா என்று அறியப்படலாயின. ஆகவே பிப்ளையா என்ற வார்த்தை எழுத்துக்கள், சுருள்கள், புத்தகங்கள், ஆவணங்கள், வேத எழுத்துக்கள் அல்லது சிறு புத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பையுங்கூட விவரிக்க உபயோகிக்கப்பட்டது.

2ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ உள்ள பரிசுத்த வேதாகமத்தில் “பைபிள்” என்ற வார்த்தை இல்லாதது ஆச்சரியமே! எனினும், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குள் எபிரெய வேதாகமத்தின் ஏவப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு, டா பிப்ளியா என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டது. ‘தானியேலாகிய நான் . . . புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்’ என்று தீர்க்கதரிசி தானியேல் 9:​2-ல் எழுதினார். இங்கே செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் பைப்ளாய்ஸ் (biʹblois) என்றிருக்கிறது, இது பைப்ளாஸ் (biʹblos) என்பதன் பன்மை ஆகும். 2 தீமோத்தேயு 4:13-ல் பவுல், ‘சுருள்களையும் [கிரேக்கில், பிப்ளையா] நீ வரும்போது எடுத்துக்கொண்டு வா’ என்று எழுதினார். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், பிப்ளையான் (bi·bliʹon) மற்றும் பைப்ளாஸ் என்ற இந்தக் கிரேக்கச் சொற்களின் பல இலக்கண உருபுகள் 40 தடவைக்கும்மேல் இடம்பெற்றுள்ளன. இவை பொதுவாக “சுருள்[கள்]” அல்லது “புஸ்தகம்[ங்கள்]” என்று மொழிபெயர்க்கப்படுகின்றன. பிறகு பிப்ளையா என்ற இந்த கிரேக்க சொல் லத்தீன் மொழிக்கு சென்றது, ஆனால் ஒருமையில் பயன்படுத்தப்பட்டது. லத்தீனிலிருந்து “பைபிள்” என்ற சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.

3இது கடவுளுடைய வார்த்தை. தேவாவியால் ஏவப்பட்ட பைபிளை எழுதுவதற்கு பலர் பயன்படுத்தப்பட்டனர்; இதை மூல மொழிகளிலிருந்து எழுத்து வடிவம் கொண்ட இன்றைய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியில் அநேகர் பங்குகொண்டனர். இருந்தபோதிலும் பைபிள், முழுமையான கருத்தில் கடவுளுடைய வார்த்தையே, மனிதருக்கு அருளப்பட்ட அவருடைய வெளிப்படுத்துதலே. தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்களும் அவ்வாறே கருதினர். பின்வரும் சொற்றொடர்களை அவர்கள் பயன்படுத்தியதிலிருந்து இதை தெரிந்துகொள்ள முடிகிறது: “யெகோவாவின் வாயிலிருந்து பிறக்கிற . . . வார்த்தை” (உபா. 8:​3, தி.மொ.), ‘யெகோவா சொன்ன சகல வார்த்தைகள்’ (யோசு. 24:​27, தி.மொ.), ‘யெகோவா கொடுத்த கட்டளைகள்’ (எஸ்றா 7:​11, தி.மொ.), “யெகோவாவின் பிரமாணம்” (சங். 19:7, தி.மொ.), “யெகோவாவின் வார்த்தை” (ஏசா. 38:4, தி.மொ.), ‘யெகோவாவின் வசனிப்பு’ (மத். 4:​4, NW), “யெகோவாவின் வார்த்தை” (1 தெ. 4:​15, NW).

தெய்வீக நூலகம்

4இன்று மனிதன் அறிந்த பைபிள் என்ற புத்தகம், பூர்வகாலத்தில் கடவுளால் ஏவப்பட்ட பதிவுகளின் ஒரு தொகுப்பேயாகும். இவை 16 நூற்றாண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டன. ஒன்றுசேர்க்கப்பட்ட இந்தப் பதிவுகளின் தொகுப்பை பிப்ளியோத்தெக்கா டிவைனா என்று லத்தீனில் ஜெரோம் விவரித்தார்; இதன் பொருள் தெய்வீக நூலகம் என்பதாகும். இந்த நூலகத்திற்கு புத்தகப் பட்டியல் அல்லது பிரசுரங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் ஒன்று உள்ளது. அந்த நூலகத்தின் நோக்கத்தோடும் தனித்தன்மையோடும் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் அடங்கியுள்ளன. அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள் எதுவும் அதில் சேர்க்கப்படவில்லை. எந்தப் புத்தகங்கள் சேர்க்கப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் தராதரத்தை வைப்பவர் மிகப் பெரிய நூலகராகிய யெகோவா தேவனே. ஆகவே பைபிள், 66 புத்தகங்களடங்கிய நிலையான ஒரு புத்தகப்பட்டியலை உடையது. இந்தப் புத்தகங்கள் யாவும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் உருவாக்கப்பட்டவை.

5உண்மையானவையாக, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவையாக ஏற்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு அல்லது பட்டியலே பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல் (ஆங்கிலத்தில் கேனன் [canon]) என்று அழைக்கப்படுகிறது. அந்த காலங்களில், அளவுகோலாக உபயோகிக்க மரக்கட்டை இல்லாதபோது நாணற்புல்லை (எபிரெயு, கானே [qa·nehʹ]) உபயோகித்தனர். அப்போஸ்தலன் பவுல், கேனன் (ka·nonˈ) என்ற கிரேக்கச் சொல்லை ‘நடத்தைக்குரிய சட்டத்திற்கும்,’ அவருடைய ஊழியத்திற்காக ஒதுக்கப்பட்ட ‘பிராந்தியத்துக்கும்’ பொருத்தினார். (கலா. 6:​16, அடிக்குறிப்பு; 2 கொ. 10:​13; NW) ஆகவே அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்கள் உண்மையானவையாகவும் தேவாவியால் ஏவப்பட்டவையாகவும், அதோடு சரியான விசுவாசம், கோட்பாடு, நடத்தை ஆகியவற்றை தீர்மானிப்பதற்கு ஏற்ற துல்லியமான அளவுகோலாகவும் இருக்கின்றன. தூக்குநூல் (plumb line) போல “நேராக” இல்லாத புத்தகங்களை பயன்படுத்தினால் நம்முடைய “கட்டடம்” உண்மையானதாக இருக்காது, அது தலைமை ஆய்வாளர் சோதனையிடும்போது அழிந்துவிடும்.

6அதிகாரப்பூர்வ பட்டியல் எது என்பதைத் தீர்மானித்தல். பைபிளின் 66 புத்தகங்களும் அதிகாரப்பூர்வ பட்டியலில் இருப்பதை தீர்மானிக்கும் தெய்வீக அத்தாட்சிகளில் சில யாவை? முதலாவதாக, அந்தப் பதிவுகள் பூமியில் யெகோவாவின் விவகாரங்களைப் பற்றி கூறுபவையாக இருக்க வேண்டும். அதேபோல மனிதரை அவருடைய வணக்கத்தின் பக்கமாக திருப்பி, அவருடைய பெயருக்கும் பூமியில் அவருடைய வேலைக்கும் நோக்கங்களுக்கும் ஆழ்ந்த மதிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அவை தேவாவியால் ஏவப்பட்டிருப்பதற்கு அத்தாட்சி அளிக்க வேண்டும். அதாவது, அவை பரிசுத்த ஆவியால் உருவாகி இருக்க வேண்டும். (2 பே. 1:21) மூடநம்பிக்கைக்கு அல்லது படைப்பை வணங்குவதற்கு இடமளிக்கக் கூடாது. மாறாக, கடவுளை நேசிக்கவும் சேவிக்கவும் கவர்ந்திழுக்க வேண்டும். பைபிள் புத்தகங்கள் அனைத்திலும் காணப்படும் ஒத்திசைவோடு முரண்படும் எதுவும் எந்தப் புத்தகத்திலும் இருக்கக் கூடாது. அதற்கு பதில் ஒவ்வொரு புத்தகமும், மற்ற புத்தகங்களுடன் ஒத்திசைந்து யெகோவா தேவனே ஒரே நூலாசிரியர் என்பதை ஆதரிக்க வேண்டும். மேலும் இந்தப் புத்தகங்கள் மிகச் சிறிய விஷயங்களிலும்கூட திருத்தமாக இருப்பதற்கான அத்தாட்சியை அளிக்க வேண்டும். இந்த அடிப்படை விஷயங்களோடுகூட தேவாவியால் ஏவப்பட்டவை என்பதையும் இதனால் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தவை என்பதையும் காட்டுவதற்கு தெளிவான மற்ற அத்தாட்சிகளும் உள்ளன. இவை ஒவ்வொரு புத்தகத்தின் பொருளடக்கத்திற்கு ஏற்றவாறு அமைகின்றன. இந்தப் புத்தகத்தில், பைபிள் புத்தகங்களை பற்றி ஆராய்கையில் ஒவ்வொன்றின் அறிமுகப் பகுதியிலும் இந்த விவரங்கள் அலசி ஆராயப்படுகின்றன. பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை தீர்மானிப்பதற்கு உதவிசெய்யும் தனித்தன்மை வாய்ந்த மற்ற சூழ்நிலைகளும் இருக்கின்றன. இவற்றில் சில எபிரெய வேதாகமத்திற்கும் மற்றவை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திற்கும் பொருந்துகின்றன.

எபிரெய வேதாகமம்

7பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதிகாரப்பூர்வ பட்டியல் முடிவுக்கு வந்தது; ஆனால் இதற்கு முன்னதாகவே, தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேதவாக்கியங்கள் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தவை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட மோசேயின் எழுத்துக்களை தேவாவியால் ஏவப்பட்டவையாக இஸ்ரவேலர் ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொண்டனர்; அவற்றிற்கு நூலாசிரியர் தேவனே என்பதை அங்கீகரித்தனர். அவை எழுதி முடிக்கப்பட்டபோது, அந்த ஐந்தாகமங்கள் அந்தச் சமயம் வரையில் இருந்த அதிகாரப்பூர்வ பட்டியலாக அமைந்தன. யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி தேவ ஆவியின் ஏவுதலால் மனிதருக்கு அளிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்கள் நியாயப்படி இதை பின்தொடர வேண்டும்; அவை ஐந்தாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள உண்மையான வணக்கத்தை பற்றிய அடிப்படை நியமங்களுக்கு ஒத்திசைந்தும் இருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு பைபிள் புத்தகத்தையும் ஆராய்ந்தபோது இது உண்மைதான் என்பதை கண்டறிந்தோம். முக்கியமாக, அந்தப் புத்தகங்கள் பைபிளின் மகத்தான மையப்பொருளோடு நேரடியாக தொடர்புள்ளதாய் இருக்கையில் அவ்வாறு இருப்பதை கவனித்தோம். யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதும், அவருடைய வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய கிறிஸ்துவின் அதிகாரத்திலுள்ள ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் ஈடற்ற அரசதிகாரம் நியாய நிரூபணம் செய்யப்படுவதுமே பைபிளின் மையப்பொருளாகும்.

8எபிரெய வேதாகமத்தில் ஏராளமான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. ஒரு தீர்க்கதரிசனம் உண்மையில் கடவுளிடமிருந்து வந்ததா இல்லையா என்று உறுதியாக தீர்மானிப்பதற்கான ஆதாரத்தை யெகோவாவே மோசேயின் மூலம் அளித்தார். இது, ஒரு தீர்க்கதரிசன புத்தகம் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. (உபா. 13:​1-3; 18:​20-22) எபிரெய வேதாகமத்தின் தீர்க்கதரிசன புத்தகங்கள் ஒவ்வொன்றையும் முழு பைபிளோடும் உலகப்பிரகாரமான சரித்திரத்தோடும் ஆராய்ந்து பார்க்கையில், அந்த தீர்க்கதரிசிகள் பேசிய “வார்த்தை” யெகோவாவின் பெயரில் பேசப்பட்டது என்பது தெளிவாகிறது. அதோடு, அது எதிர்காலம் சம்பந்தப்பட்டதாக இருந்தபோது, முழுமையாக அல்லது சிறிய அளவில் அல்லது பகுதியாக ‘நிறைவேறியது’ என்பதையும், ஆட்களை அது யெகோவாவிடம் வழிநடத்தியது என்பதையும் சந்தேகத்துக்கிடமில்லாமல் உறுதிசெய்ய முடிகிறது. இந்தத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததால் அந்தத் தீர்க்கதரிசனத்தை உண்மையானது என்றும் தேவாவியால் ஏவப்பட்டது என்றும் உறுதியாக சொல்ல முடிகிறது.

9எபிரெய வேதாகம புத்தகங்கள் அதிகாரப்பூர்வமானவை என்பதை உறுதிசெய்ய இன்னொரு நேரடியான அத்தாட்சி இருக்கிறது; இயேசுவும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்களும் அவற்றை மேற்கோள்கள் காட்டுவதுதான் அது. ஆனால் இந்த முறை எல்லா புத்தகங்களுக்கும் பொருந்தாது. உதாரணம் எஸ்தர் மற்றும் பிரசங்கி புத்தகங்கள். அதிகாரப்பூர்வமானதா என்பதைப் பற்றி சிந்திக்கையில் வேறு ஒரு முக்கிய காரியத்தையும் மனதில் வைக்க வேண்டும். அது முழு பைபிளின் அதிகாரப்பூர்வ தன்மைக்கும் பொருந்தும். யெகோவா தெய்வீக செய்திகளை எழுதிவைக்கும்படி மனிதரை ஏவினார்; அவை அவர்களுக்கு போதனையாகவும், பலப்படுத்துவதாகவும், அவரை வணங்குவதற்கும் சேவிப்பதற்கும் ஊக்கமூட்டுவதாகவும் இருக்கின்றன. எனவே, தேவாவியால் எழுதப்பட்ட எழுத்துக்களை சரியாக தொகுத்து பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்கள் இவைதான் என்று உறுதிப்படுத்துவதிலும் அவர் வழிநடத்துவார் என்று நியாயமாகவே எதிர்பார்க்கலாம். தம்முடைய சத்திய வார்த்தை அடங்கியவை எவை என்பதைக் குறித்தும், உண்மையான வணக்கத்தின் சரியான தராதரத்தை எது நிர்ணயிக்கும் என்பதை குறித்தும் எவ்வித சந்தேகமும் இராதபடி செய்வார். இந்த அடிப்படையில் மட்டுமே பூமியிலுள்ள சிருஷ்டிகள் ‘கடவுளுடைய வார்த்தையின் மூலம் ஒரு புதிய பிறப்பை’ அடைந்து ‘யெகோவாவின் வார்த்தைகள் என்றென்றும் நிலைத்திருக்கின்றன’ என்று சாட்சியளிக்க முடியும்.​—1 பே. 1:​23, 25, NW.

10அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள எபிரெய புத்தகங்களை உறுதிப்படுத்துதல். எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்களை வரிசைப்படுத்தி தொகுக்கத் தொடங்கியவர் எஸ்றா என்றும் இது நெகேமியாவால் முடிக்கப்பட்டது என்றும் யூத பாரம்பரியம் குறிப்பிடுகிறது. எஸ்றா தேவாவியால் ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர்களில் ஒருவர்; அவர் ஆசாரியராகவும், கல்விமானாகவும், பரிசுத்த எழுத்துக்களை நகல் எடுப்பதற்கு அதிகாரம் பெற்றவராகவும் இருந்ததால் அந்த வேலையை செய்வதற்கு தகுதிபெற்றிருந்தார். (எஸ்றா 7:​1-11) எனவே, பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவுக்குள் எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்கள் உறுதிசெய்யப்பட்டன என்று கூறும் பாரம்பரியக் கருத்தைச் சந்தேகிக்க வேண்டியதில்லை.

11இன்று எபிரெய வேதாகமத்தில் 39 புத்தகங்கள் உள்ளன; யூத பாரம்பரியத்தின்படி அதிகாரப்பூர்வ பட்டியலில் இதே புத்தகங்கள்தான் இருக்கின்றன என்றாலும், அவற்றை 24 என்று கணக்கிடுகின்றனர். ரூத்தை நியாயாதிபதிகளுடனும், புலம்பலை எரேமியாவுடனும் சேர்த்து 22 புத்தகங்கள் என்று மற்ற சிலர் கணக்கிட்ட போதிலும், அதே அதிகாரப்பூர்வ பட்டியலைத்தான் கொண்டிருந்தனர். a இது, தேவாவியால் ஏவப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையை எபிரெய மொழியிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக்குகிறது. யூத பாரம்பரியத்தின்படி அதிகாரப்பூர்வமான 24 புத்தகங்களின் பட்டியல் பின்வருமாறு:

நியாயப்பிரமாணம் (ஐந்தாகமங்கள்) எழுத்துக்கள் (ஹாகியோக்ராஃபா)

1. ஆதியாகமம்

2. யாத்திராகமம்

3. லேவியராகமம்

4. எண்ணாகமம்

5. உபாகமம்

தீர்க்கதரிசிகள்

6. யோசுவா

7. நியாயாதிபதிகள்

8. சாமுவேல் (முதலாவதும் இரண்டாவதும் ஒன்றுசேர்ந்து ஒரே புத்தகமாக)

9. இராஜாக்கள் (முதலாவதும் இரண்டாவதும் ஒன்றுசேர்ந்து ஒரே புத்தகமாக)

10. ஏசாயா

11. எரேமியா

12. எசேக்கியேல்

13. பன்னிரண்டு தீர்க்கதரிசிகள் (ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா மற்றும் மல்கியா, ஒரே புத்தகமாக)

14. சங்கீதங்கள்

15. நீதிமொழிகள்

16. யோபு

17. சாலொமோனின் உன்னதப்பாட்டு

18. ரூத்

19. புலம்பல்

20. பிரசங்கி

21. எஸ்தர்

22. தானியேல்

23. எஸ்றா (நெகேமியா எஸ்றாவுடன் சேர்க்கப்பட்டிருந்தது)

24. நாளாகமங்கள் (முதலாவதும் இரண்டாவதும் இரண்டாவதும் ஒன்றுசேர்ந்து ஒரே புத்தகமாக)

12இதுவே, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியமென கிறிஸ்து இயேசுவும் பூர்வ கிறிஸ்தவ சபையும் ஏற்றிருந்த புத்தகப் பெயர்ப்பட்டியல் அல்லது அதிகாரப்பூர்வ பட்டியல் ஆகும். இந்த எழுத்துக்களிலிருந்துதான் தேவாவியால் ஏவப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் மேற்கோள்கள் காட்டினர்; மேலும், “என்று எழுதியிருக்கிறது” போன்ற சொற்களோடு முடிப்பதால் இவை கடவுளுடைய வார்த்தை என்பதையும் உறுதிசெய்தனர். (ரோ. 15:9) இயேசு தம்முடைய ஊழியக் காலம் வரையில் எழுதப்பட்டிருந்த தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் முழுவதையும் குறித்து, “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும்” பதிவுசெய்யப்பட்டிருந்த விஷயங்கள் என்று சொன்னார். (லூக். 24:44) இங்கே ‘சங்கீதங்கள்,’ ஹாகியோக்ராஃபாவின் முதல் புத்தகமாக இருப்பதால் இந்த முழு பிரிவையும் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எபிரெய புத்தகங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் கடைசியாக சேர்க்கப்பட்ட சரித்திர புத்தகம் நெகேமியா. இது கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் உருவானது என்பதற்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது; “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல்” மேசியா வரும் வரையில் 69 தீர்க்கதரிசன வாரங்கள் ஆகும் என்று தானியேல் தீர்க்கதரிசனம் கூறினார். இந்த அருமையான தீர்க்கதரிசனத்தின் ஆரம்பத்தை கணக்கிடுவதற்கு நெகேமியா புத்தகம் மட்டுமே அத்தாட்சி அளிக்கிறது. (தானி. 9:25; நெ. 2:​1-8; 6:15) நெகேமியாவின் புத்தகம், கடைசி தீர்க்கதரிசன புத்தகமாகிய மல்கியாவுக்கு சரித்திரப்பூர்வ சூழமைவையும் அளிக்கிறது. மல்கியா, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்ததுதான் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது; ஏனெனில் கடவுளுடைய குமாரனாகிய இயேசுவுங்கூட பலமுறை அதிலிருந்து மேற்கோள் காட்டினார். (மத். 11:​10, 14) இதைப்போன்ற அநேக மேற்கோள்கள் நெகேமியாவுக்கும் மல்கியாவுக்கும் முன்னால் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள எபிரெய புத்தகங்களிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டன. ஆனால் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள், நெகேமியாவுக்கும் மல்கியாவுக்கும் பின்பு கிறிஸ்துவின் காலத்திற்கு முன்பு வரையாக எழுதப்பட்ட புத்தகங்களிலிருந்து அதாவது தேவாவியால் ஏவப்பட்ட எழுத்துக்கள் என்பதாக உரிமைபாராட்டும் எந்த புத்தகங்களிலிருந்தும் எந்த மேற்கோளையும் காட்டவில்லை. நெகேமியாவும் மல்கியாவும் எழுதப்பட்டதோடு எபிரெய வேதாகம அதிகாரப்பூர்வ பட்டியல் முடிவடைந்தது என்ற யூதரின் பாரம்பரிய கருத்தையும், பொ.ச. முதல் நூற்றாண்டின் கிறிஸ்தவ சபையினுடைய நம்பிக்கையையும் இது உறுதிசெய்கிறது.

எபிரெய வேதாகமத்தின் தள்ளுபடி ஆகமங்கள்

13இந்தத் தள்ளுபடி ஆகமங்கள் (Apocryphal books) யாவை? சில பைபிள்களில் இந்த புத்தகங்களை சிலர் சேர்த்துள்ளனர். ஆனால், கடவுளால் ஏவப்பட்டதற்கான அத்தாட்சி இல்லாததால் இவற்றை மற்றவர்கள் தள்ளிவிட்டனர். அப்போக்ரிஃபாஸ் (a·poʹkry·phos) என்ற கிரேக்கச் சொல்லுக்கு “கவனமாய் மறைக்கப்பட்ட” என்பது பொருள். (மாற். 4:22; லூக். 8:17; கொலோ. 2:3, NW) இந்தப் பதம், சந்தேகத்துக்குரிய புத்தகங்களுக்கு அல்லது ஏவப்பட்டதற்கு அத்தாட்சி இல்லாத ஆனால் தனிப்பட்ட முறையில் வாசித்தால் பயனிருப்பதாக கருதப்படும் புத்தகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய புத்தகங்கள் தனியே ஒதுக்கி வைக்கப்பட்டன, ஜனங்களுக்கு முன்பாக வாசிக்கப்படவில்லை; ஆகவே அவற்றைக் குறிக்க “மறைக்கப்பட்ட” (concealed) என்ற சொல் உபயோகிக்கப்பட்டது. பொ.ச. 397-ல் கார்த்தேஜ் ஆலோசனை குழுவில், எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்களோடு தள்ளுபடி ஆகமத்தைச் சேர்ந்த 7 புத்தகங்களை சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதில், அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்களான எஸ்தர் மற்றும் தானியேலோடு சில சேர்க்கைகளும் இருந்தன. எனினும், 1546-ல் கூட்டப்பட்ட டிரென்ட் ஆலோசனை குழுவில்தான், ரோமன் கத்தோலிக் சர்ச் இந்தக் கூடுதலான புத்தகங்களை பைபிள் புத்தகங்களின் பட்டியலோடு சேர்த்துக்கொள்ளலாம் என்ற அங்கீகாரத்தை உறுதிசெய்தது. இவ்வாறு சேர்க்கப்பட்ட புத்தகங்கள்: தொபியாசு, யூதித், எஸ்தர் புத்தகத்தோடு சேர்க்கப்பட்டவை, ஞான ஆகமம், சீராக், பாரூக், தானியேலுடன் சேர்க்கப்பட்ட மூன்று கதைகள், முதலாம் மக்கபே, இரண்டாம் மக்கபே.

14தேவாவியால் ஏவப்பட்டதாக முதலாம் மக்கபே புத்தகத்தை கருதவே முடியாது. ஆனாலும் அதில் அக்கறைக்குரிய சரித்திர தகவல் அடங்கியுள்ளது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் மக்கபேயர்களின் ஆசாரிய குடும்பத்தின் தலைமையில் யூதர்கள் சுதந்திரத்துக்காகப் போராடிய விவரத்தை இது அளிக்கிறது. இந்தத் தள்ளுபடி ஆகமங்களின் மற்ற புத்தகங்களில் புராணக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் உள்ளன. அதோடு ஏராளமான பிழைகளும் நிறைந்திருக்கின்றன. இயேசுவோ கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற எழுத்தாளர்களோ அவற்றைக் குறித்து பேசவுமில்லை, ஒருபோதும் மேற்கோள் காட்டவுமில்லை.

15பொ.ச. முதல் நூற்றாண்டின் யூத சரித்திராசிரியராகிய ஃப்ளேவியஸ் ஜொஸிஃபஸ் ஏப்பியனுக்கு எதிராக (1, 38-41 [8]) என்ற ஆங்கில புத்தகத்தை எழுதினார்; எபிரெயர்கள் பரிசுத்தமானதாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட எல்லா புத்தகங்களையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் பின்வருமாறு எழுதினார்: “ஒன்றோடொன்று முரண்படும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எங்களிடம் இல்லை. நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எங்கள் புத்தகங்கள் இருபத்திரண்டே, [பாரா 11-ல் காட்டியிருக்கிறபடி, இன்று நம்மிடம் இருக்கும் 39-க்குச் சமம்], அவற்றில் எல்லா காலத்தின் பதிவும் அடங்கியுள்ளன. இவற்றில் ஐந்து மோசேயின் புத்தகங்கள்; நியாயப்பிரமாணங்களும் மனிதனின் பிறப்பிலிருந்து நியாயப்பிரமாணத்தை அளித்தவரின் மரணம் வரையான சரித்திரம் இவற்றில் அடங்கியுள்ளன. . . . மோசேயின் மரணத்துக்குப் பின் அவரைத் தொடர்ந்து வந்த தீர்க்கதரிசிகள் அவரவர் காலங்களுடைய நிகழ்ச்சிகளின் சரித்திரத்தைப் பதிமூன்று புத்தகங்களில் எழுதிவைத்தனர்; இது, பெர்சியாவின் ராஜாவான சஷ்டாவுக்குப் பின் வந்த அர்தசஷ்டா வரை நீடித்தது. மீதி நான்கு புத்தகங்களில் கடவுளுக்குத் துதிப்பாடல்களும் மனித நடத்தை சம்பந்தப்பட்ட நீதிபோதனைகளும் இருக்கின்றன.” இதன் மூலம், எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியல் பொ.ச. முதல் நூற்றாண்டுக்கு வெகுகாலத்திற்கு முன்பே உறுதிசெய்யப்பட்டது என்று ஜொஸிஃபஸ் காட்டுகிறார்.

16பைபிள் கல்விமானாகிய ஜெரோம், ஏறக்குறைய பொ.ச. 405-ல் லத்தீன் வல்கேட் பைபிள் மொழிபெயர்ப்பை செய்து முடித்தார்; அவர் தள்ளுபடி ஆகமங்களைக் குறித்து தெளிவான கருத்துடையவராக இருந்தார். ஜொஸிஃபஸைப் போலவே ஏவப்பட்ட புத்தகங்களை அவர் வரிசையாக பட்டியலிட்டார்; அவரைப் போலவே அதே எண்ணிக்கையைப் பயன்படுத்தி, தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தின் 39 புத்தகங்களை 22 ஆக கணக்கிட்டார். வல்கேட் மொழிபெயர்ப்பில் சாமுவேல் மற்றும் இராஜாக்கள் புத்தகங்களுக்கு அவர் அளித்த முன்னுரையில் பின்வருமாறு எழுதினார்: “இவ்வாறு இருபத்திரண்டு புத்தகங்கள் உள்ளன . . . நாங்கள் எபிரெயுவிலிருந்து லத்தீனுக்கு மொழிபெயர்க்கும் எல்லா புத்தகங்களுக்கும் இந்த முன்னுரை பாதுகாப்பான அணுகு முறையாக உதவக்கூடும்; இவற்றிற்கு அப்பாற்பட்ட எதையும் தள்ளுபடி ஆகமங்களில் வைக்க வேண்டும் என்பதே இதிலிருந்து நாங்கள் தெரிந்துகொள்வது.”

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம்

17பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் எந்தப் புத்தகங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு தனக்குத்தான் உரிமை இருப்பதாக ரோமன் கத்தோலிக்க சர்ச் சொல்கிறது; இதற்கு அத்தாட்சியாக கார்த்தேஜ் ஆலோசனைக் குழுவை (பொ.ச. 397) காட்டுகிறது. அங்கே ஒரு புத்தகப் பட்டியல் தொகுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் சொன்னாலும், உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை உண்டுபண்ணும் பட்டியல் உட்பட பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டிருந்தது. அது எந்த ஆலோசனை குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலும் அல்ல, அதற்கு மாறாக கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எடுக்கப்பட்ட முடிவே. அந்தப் புத்தகங்களை எழுதுவதற்கு ஏவிய அதே ஆவியே அவற்றை தொகுக்கவும் உதவியது. பிற்காலத்தில் தேவாவியால் ஏவப்படாத பட்டியல் தொகுப்பாளர்களின் சாட்சியம், பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்​—அதாவது, கடவுளுடைய ஆவியால் அதிகாரப்பூர்வமான பட்டியல்​—உண்மை என்பதற்குத்தான் அத்தாட்சியாக இருக்கிறது.

18பூர்வ பட்டியல்களின் அத்தாட்சி. மேலே குறிப்பிட்ட ஆலோசனை குழுவுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த கிறிஸ்தவ வேதவாக்கியங்களின் நான்காம் நூற்றாண்டு பட்டியல்கள் சில இருக்கின்றன. அப்பட்டியல்கள் தற்போது அதிகாரப்பூர்வ பட்டியலுடன் முற்றிலும் ஒத்திருக்கின்றன. அவற்றில் சில வெளிப்படுத்துதலை மாத்திரம் விட்டுவிடுகின்றன. இதை புரிந்து கொள்வதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணைக்கு கவனம் செலுத்துங்கள். இரண்டாம் நூற்றாண்டின் முடிவிற்குள் நான்கு சுவிசேஷங்களும், அப்போஸ்தலர் நடபடிகளும், அப்போஸ்தலனாகிய பவுலின் 12 நிருபங்களும் அனைவராலும் ஏற்கப்பட்டிருந்தன. சில சிறிய புத்தகங்கள் மட்டுமே சில ஆட்களால் சந்தேகிக்கப்பட்டன. அத்தகைய புத்தகங்கள் ஏதோ சில காரணங்களால் தொடக்கத்தில் பரவலாக வலம்வரவில்லை; ஆகவே, அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தவையாக ஏற்கப்படுவதற்கு அதிக காலம் எடுத்திருக்கலாம்.

19இத்தாலியின் மிலானிலுள்ள அம்ப்ரோசியன் நூலகத்தில் எல். எ. மியூரட்டோரி என்பவர் கவனத்துக்குரிய பூர்வ புத்தகப் பட்டியல்களில் ஒன்றை கண்டுபிடித்து, 1740-ல் அதை பிரசுரித்தார். அதன் ஆரம்பம் காணப்படவில்லை என்றாலும் லூக்காவை மூன்றாம் சுவிசேஷமாக அது குறிப்பிடுகிறது; இதிலிருந்து மத்தேயுவையும் மாற்குவையும் முதலில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. லத்தீனிலுள்ள இந்த மியூரட்டோரியன் சுருள்களின் பாகங்கள், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவை. அவை அதிக கவனத்திற்குரிய ஒன்று என்பதை மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து தெரிந்துகொள்ளலாம்: “சுவிசேஷத்தின் மூன்றாவது புத்தகத்தை லூக்கா எழுதினார். அதை பிரபலமாக அறியப்பட்ட மருத்துவனாகிய லூக்கா தன் பெயரில் எழுதினார் . . . சுவிசேஷத்தின் நான்காவது புத்தகம் சீஷரில் ஒருவரான யோவான் எழுதியது. . . . ஆகவே, வெவ்வேறு சுவிசேஷங்களிலிருந்து வெவ்வேறு விஷயங்களை எடுத்துக்காட்டினாலும், விசுவாசிகளின் விசுவாசம் முரண்படுவதில்லை. ஏனெனில் இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றிலும் சொல்லப்பட்டுள்ள அவருடைய பிறப்பு, துன்பங்கள், உயிர்த்தெழுதல், சீஷருடன் உரையாடல், அவருடைய இரண்டு வருகை, முதலாவது தாழ்மையில் வந்ததால் ஏற்பட்ட இகழ்ச்சி, இது ஏற்கெனவே நடந்தேறிவிட்டது, இரண்டாவது அரச வல்லமையில் வருவது, இது இனி வரவிருக்கிறது ஆகிய யாவும் ஒரே ஆவியால் வழிநடத்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் பல விஷயங்களை யோவான் தன் நிருபங்களில் அவ்வளவு ஒத்திசைவாக குறிப்பிட முடிகிறது; இதில் எந்த அதிசயமும் இல்லை, ஏனெனில்: ‘நாங்கள் எங்கள் கண்களால் கண்டதும், எங்கள் காதுகளால் கேட்டதும், எங்கள் கைகள் கையாண்டதுமான காரியங்களை எழுதினோம்’ என்று சொல்கிறார். இதைக் குறிப்பிடுவதன் மூலம் அவர் கண்ணால் கண்ட சாட்சியாக மட்டுமன்றி, அவற்றை கேட்டவராகவும் கர்த்தரின் அதிசயமான காரியங்கள் எல்லாவற்றையும் கிரமமாக எடுத்துரைப்பவராகவும் இருப்பதாக கூறுகிறார். அப்போஸ்தலரின் நடபடிகள் எல்லாம் ஒரே புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. லூக்கா அவற்றை மகா கனம்பொருந்திய தேயோப்பிலுக்காக தொகுத்தார். . . . அடுத்ததாக பவுலின் நிருபங்கள். அவை எப்படிப்பட்டவை, எங்கே அல்லது என்ன காரணத்துக்காக அனுப்பப்பட்டன என்பதை அக்கடிதங்களே விளக்குகின்றன. முதலாவதாக, பிரிவினை இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டு கொரிந்தியருக்கு நீண்ட நிருபம் எழுதினார்; பின்பு விருத்தசேதனத்துக்கு [எதிராக] கலாத்தியருக்கு எழுதினார், பின்பு வேதவாக்கியங்களின் கட்டளைகளைக் குறித்தும், அவற்றில் கிறிஸ்துவே முக்கியமான பொருள் என்று தெரிவித்தும் ரோமருக்கு எழுதினார். இவை ஒவ்வொன்றும் நாம் கலந்தாராய்வதற்கு அவசியமானவை. ஏனெனில் ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலன் பவுல், யோவானின் முன்மாதிரியைப் பின்பற்றி குறைந்தது ஏழு சபைகளுக்கு எழுதினார்: கொரிந்தியருக்கு (முதலாவது), எபேசியருக்கு (இரண்டாவது), பிலிப்பியருக்கு (மூன்றாவது), கொலோசெயருக்கு (நான்காவது), கலாத்தியருக்கு (ஐந்தாவது), தெசலோனிக்கேயருக்கு (ஆறாவது), ரோமருக்கு (ஏழாவது). கொரிந்தியரையும் தெசலோனிக்கேயரையும் திருத்துவதற்காக அவர்களுக்கு இருமுறை எழுதுகிறபோதிலும், ஒரே சர்ச்சே பூமி முழுவதிலும் பரவலாக இருப்பது தெரிகிறது [?அதாவது, இந்த ஏழுமடங்கான நிருபங்களால்]; யோவானும் அப்பாக்கலிப்ஸில் ஏழு சபைகளுக்கு எழுதுகிறபோதிலும் எல்லாருக்காகவும் எழுதுகிறார். இவற்றோடு, பாசத்தினாலும் அன்பினாலும் பிலேமோனுக்கு ஒன்றும், தீத்துவுக்கு ஒன்றும், தீமோத்தேயுவுக்கு இரண்டும் [பவுல் எழுதினார்]; [இவை] சர்ச்சில் மதிப்புக்குரியவை, பரிசுத்தமானவை என்று கருதப்பட்டன. . . . மேலும், யூதாவின் நிருபம் ஒன்றும் யோவானின் பெயர் தாங்கிய இரண்டும் ஏற்கப்பட்டன . . . யோவான் மற்றும் பேதுருவின் அப்பாக்கலிப்ஸுகளை மாத்திரம் பெற்றுக்கொள்கிறோம், [இரண்டாவதாக குறிப்பிட்டது] சர்ச்சில் வாசிக்கப்படுவதை நம்மில் சிலர் விரும்புகிறதில்லை.”​—மத அறிவுக்குரிய புதிய ஸ்காஃப்-ஹெர்ஜாகின் கலைக்களஞ்சியம், (ஆங்கிலம்) 1956, தொ. VIII, பக்கம் 56.

20இந்த மியூரட்டோரியன் சுருள்களின் முடிவு பாகத்தில், யோவானின் இரண்டு நிருபங்கள் மாத்திரமே குறிப்பிடப்படுகிறது. எனினும், இந்தக் குறிப்பைப் பற்றி மேற்குறிப்பிட்ட கலைக்களஞ்சியம், 55-ம் பக்கத்தில் இவ்விதம் சொல்கிறது: யோவானின் இரண்டு நிருபங்கள் என்று சொல்வது, “இரண்டாவது, மூன்றாவது நிருபங்களாகவே இருக்க வேண்டும், இவற்றின் எழுத்தாளர் தன்னை ‘மூப்பர்’ என்று மாத்திரமே குறிப்பிடுகிறார். முதலாவது நிருபத்தை, நான்காவது சுவிசேஷத்தோடு தற்செயலாக இணைத்து குறிப்பிட்டுவிட்டு, அது யோவானால் எழுதப்பட்டதென்ற சந்தேகமற்ற தன் நம்பிக்கையை அதில் நூலாசிரியர் அறிவித்திருக்கிறார். ஆகவே, இங்கே இந்த இரண்டு சிறிய நிருபங்களை மட்டுமே குறிப்பிட்டாலும் போதுமானது என நினைத்திருக்கிறார்.” பேதுருவின் முதல் நிருபத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என அது இவ்வாறு கூறுகிறது: “ஒன்று பேதுருவும் யோவானின் அப்பாக்கலிப்ஸும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை குறிக்கும் சில சொற்கள், ஒருவேளை ஒரு வரி விடுபட்டிருக்கலாம் என்பது மிக சாத்தியமாக இருக்கும் ஒரு விளக்கமாகும்.” ஆகவே, இந்த மியூரட்டோரியன் சுருள்களின் பாகங்களின் நோக்குநிலையை கருத்தில் வைத்து, இந்தக் கலைக்களஞ்சியம் 56-ம் பக்கத்தில் இவ்வாறு முடிக்கிறது: “புதிய ஏற்பாட்டில் பின்வரும் புத்தகங்கள் இருக்கின்றன என்று கருதப்படுகிறது; நான்கு சுவிசேஷங்களும், அப்போஸ்தலர் நடபடிகளும், பவுலின் பதிமூன்று நிருபங்களும், யோவானின் திருவெளிப்பாடும், அவருடைய மூன்று நிருபங்களும், யூதாவும், பெரும்பாலும் 1 பேதுருவும். அப்போது பேதுருவின் இன்னொரு நிருபத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு இன்னும் முடியவில்லை.”

21எபிரெயர் மற்றும் யாக்கோபு புத்தகங்களைத் தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் பகுதி என்பதாக ஏறக்குறைய பொ.ச. 230-ல் ஆரிகென் ஏற்றுக்கொண்டார்; இவை இரண்டும் மியூரட்டோரியன் சுருள்களின் பாகங்களில் இல்லை. இவை அதிகாரப்பூர்வமானவையா என சிலர் சந்தேகித்தனரென்று அவர் குறிப்பிடுகிறார்; இருந்தாலும் அந்தச் சமயத்துக்குள் பெரும்பான்மையான கிரேக்க வேதாகமப் புத்தகங்கள் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தவையாக ஏற்கப்பட்டன. நன்றாக அறியப்படாத சில நிருபங்களை சிலர் மாத்திரமே சந்தேகித்தனர். பிற்காலங்களில் அதனேஸியஸும், ஜெரோமும், அகஸ்டீனும், முந்தைய பட்டியல்களின் முடிவுகளை ஏற்று, நம்மிடமுள்ள இதே 27 புத்தகங்களை அதிகாரப்பூர்வ பட்டியலாக உறுதிசெய்தனர். b

22எந்தப் புத்தகங்கள் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தவை என்பதைக் காட்டும் திருத்தமான பட்டியல்களை அட்டவணையிலுள்ள பெரும்பான்மையான புத்தகப் பட்டியல்கள் குறிப்பிடுகின்றன. ஐரீனியஸ், அலெக்சாண்டிரியாவின் கிளெமென்ட், டெர்ட்டுல்லியன் மற்றும் ஆரிகென் போன்றவர்களின் மேற்கோள்களிலிருந்து பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன; இதிலிருந்து குறிப்பிடப்பட்ட புத்தகங்களை அவர்கள் எவ்வாறு கருதினார்கள் என்பது தெரிகிறது. மேலும், பூர்வ சரித்திராசிரியர் யூஸிபியஸின் விவரப் பதிவுகளிலிருந்து இவை நிறைவு செய்யப்படுகின்றன. எனினும், இந்த எழுத்தாளர்கள் அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்கள் சிலவற்றை குறிப்பிடவில்லை என்பதால் அவை அதிகாரப்பூர்வமானவையா என சந்தேகிக்க வேண்டுமா? இல்லை. அவர்களுடைய புத்தகங்களில் உள்ள பொருளின் காரணமாகவோ அல்லது வேண்டுமென்றோ அவர்கள் அவற்றை குறிப்பிடவில்லை. ஆனால், மியூரட்டோரியன் சுருள்களுக்கு முற்பட்ட காலத்து பட்டியல்களை நம்மால் ஏன் காண முடியவில்லை?

23எந்தப் புத்தகங்களைக் கிறிஸ்தவர்கள் ஏற்கவேண்டும் என்ற பிரச்சினை, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்தில் மார்க்கியன் போன்ற குறைகாண்போர் வரும்வரையில் எழும்பவில்லை. தன்னுடைய கோட்பாடுகளுக்கு இசைவாய் அமைவதற்காக மார்க்கியன் ஒரு புத்தகத் தொகுப்பை உண்டாக்கிக்கொண்டார்; அதில் அப்போஸ்தலன் பவுலின் நிருபங்களில் சிலவற்றையும் லூக்கா சுவிசேஷத்தில் குறிப்பாக தேர்ந்தெடுத்த சில பகுதிகளையும் மட்டும் உபயோகித்தார். இதுவும், இதைப்போல பல புத்தகங்களும் அக்காலத்தில் உலகமுழுவதும் பரவிக்கொண்டிருந்ததால் புத்தகப்பட்டியல் தயாரித்தவர்கள் எந்தப் புத்தகங்களைத் தாங்கள் அதிகாரப்பூர்வ பட்டியலாக ஏற்றுக்கொண்டனர் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

24தள்ளுபடி ஆகமங்கள். தேவாவியால் ஏவப்பட்ட கிறிஸ்தவ எழுத்துக்களுக்கும் போலியான அல்லது தேவாவியால் ஏவப்படாத புத்தகங்களுக்கும் இடையே உள்ள தெளிவான வேற்றுமையை அப்புத்தகங்களிலுள்ள அத்தாட்சியே உறுதிசெய்கிறது. தள்ளுபடி ஆகமங்கள் தரம் குறைந்தவையாகவும் கற்பனையாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கின்றன. அவற்றில் அநேக பிழைகள் இருக்கின்றன. c இந்த அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள புத்தகங்களைப் பற்றி கல்விமான்களின் பின்வரும் கருத்துக்களை கவனியுங்கள்:

“இவற்றை புதிய ஏற்பாட்டிலிருந்து யாரோ விலக்கிவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது, அந்தப் புத்தகங்களே தங்களை அவ்விதம் விலக்கிக்கொண்டன.”​—எம். ஆர். ஜேம்ஸ், தள்ளுபடி ஆகமப் புதிய ஏற்பாடு, (ஆங்கிலம்) பக்கங்கள் xi, xii.

“நம்முடைய புதிய ஏற்பாட்டு புத்தகங்களுக்கும் அந்தப் புத்தகங்களுக்கும் இடையே இருக்கும் பிளவு எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்; அதற்கு புதிய ஏற்பாட்டு புத்தகங்களை இப்படிப்பட்ட புத்தகங்களுடன் முழுமையாக ஒத்துப்பார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ பட்டியல் எது என்பதை தெளிவாக புரிந்துகொள்வதற்கு இந்த அங்கீகரிக்கப்படாத சுவிசேஷங்களே சிறந்த அத்தாட்சிகளாக இருக்கின்றன.”​—ஜி. மில்லிகன், புதிய ஏற்பாட்டு படிவங்கள், (ஆங்கிலம்) பக்கம் 228.

“புதிய ஏற்பாட்டு புத்தகங்களைத் தவிர, சர்ச்சின் தொடக்கக் காலத்திலிருந்து பாதுகாத்து வைக்கப்பட்ட எந்த ஒரு தனி புத்தகத்தையும் அதிகாரப்பூர்வ பட்டியலுடன் இன்று சேர்க்கவே முடியாது.”​—கே. அலந்த், புதிய ஏற்பாட்டு அதிகாரப்பூர்வ பட்டியலின் பிரச்சினை, (ஆங்கிலம்) பக்கம் 24.

25தேவாவியால் ஏவப்பட்ட எழுத்தாளர்கள். பின்வரும் குறிப்பும் அக்கறைக்குரியது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையிலாவது கிறிஸ்தவ சபையின் ஆரம்பகால ஆளும் குழுவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். அந்த ஆளும் குழுவில் இயேசு நேரடியாக தேர்ந்தெடுத்த அப்போஸ்தலரும் அடங்குவர். தொடக்கத்திலிருந்த 12 அப்போஸ்தலருக்குள் மத்தேயுவும் யோவானும் பேதுருவும் இருந்தனர்; பவுல் ஓர் அப்போஸ்தலனாக பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பன்னிருவரில் ஒருவராக எண்ணப்படவில்லை. d பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது பவுல் அந்த இடத்தில் இல்லையென்றாலும் மத்தேயுவும், யோவானும், பேதுருவும், யாக்கோபும், யூதாவும் ஒருவேளை மாற்குங்கூட அங்கிருந்தனர். (அப். 1:14) பவுலின் நிருபங்களை ‘மற்ற வேதவாக்கியங்களின்’ பாகமாகவே பேதுரு தெளிவாக குறிப்பிடுகிறார். (2 பே. 3:​15, 16) மாற்கும் லூக்காவும், பவுலுக்கும் பேதுருவுக்கும் நெருங்கிய தோழர்களாகவும் பயணக் கூட்டாளிகளாகவும் இருந்தனர். (அப். 12:25; 1 பே. 5:13; கொலோ. 4:14; 2 தீ. 4:11) பரிசுத்த ஆவியால் அற்புதத் திறமைகளை இந்த எழுத்தாளர்கள் யாவரும் பெற்றிருந்தனர்; அது பெந்தெகொஸ்தே சமயத்தில் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதைப் போல் அல்லது பவுல் மதம் மாறியபோது சம்பவித்ததுபோல, பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதம் தெளிவாக தெரிந்தது. (அப். 9:​17, 18) அல்லது, சந்தேகமில்லாமல் லூக்காவின் காரியத்தில் இருந்ததுபோல், அப்போஸ்தலர் கைகளை வைத்ததால் இந்த பாக்கியத்தை பெற்றனர். (அப். 8:​14-17) ஆவியின் தனிப்பட்ட வரங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தின்போதே கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதும் எழுதி முடிக்கப்பட்டது.

26தம்முடைய வார்த்தையை எழுதுவதற்கு ஏவியவரும் அதை பாதுகாப்பவருமான சர்வ வல்லமையுள்ள கடவுள் மீதுள்ள விசுவாசம், அந்த வார்த்தைகளின் பல்வேறு பாகங்களை ஒன்றாக கூட்டிச் சேர்ப்பதில் வழிநடத்தியவரும் அவரே என்ற நம்பிக்கை அளிக்கிறது. ஆகவே, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 27 புத்தகங்களையும், எபிரெய வேதாகமத்தின் 39 புத்தகங்களையும் ஒரே பைபிள் என்றும் இவற்றின் ஒரே நூலாசிரியர் யெகோவா தேவன் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். 66 புத்தகங்கள் அடங்கிய அவருடைய வார்த்தைதான் நம் வழிகாட்டி. இதன் முழு ஒத்திசைவும் சமநிலையும் இதன் பூரணத் தன்மைக்குச் சாட்சியளிக்கின்றன. ஒப்பற்ற இந்தப் புத்தகத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கே எல்லா துதியும் உண்டாவதாக! இது நம்மை முழுமையான விதத்தில் தயார்படுத்தி ஜீவனுக்குச் செல்லும் பாதையில் வழிநடத்தும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் இதை ஞானமாக பயன்படுத்துவோமாக.

[அடிக்குறிப்புகள்]

a என்ஸைக்ளோப்பீடியா ஜுடேய்க்கா, 1973, தொ. 4, பத்திகள் 826, 827.

b புத்தகங்களும் தோல் கையெழுத்தேடுகளும், (ஆங்கிலம்) 1963, எஃப். எஃப். புரூஸ், பக்கம் 112.

c வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 122-5.

d வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கங்கள் 129-30.

[கேள்விகள்]

1, 2. (அ) பிப்ளையா என்ற கிரேக்கச் சொல்லின் பொதுவான அர்த்தம் என்ன? (ஆ) இதுவும் இதோடு சம்பந்தப்பட்ட சொற்களும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? (இ) “பைபிள்” என்ற சொல் எவ்வாறு ஆங்கில மொழியில் வந்தது?

3. பைபிள் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை என்பதற்கு பைபிள் எழுத்தாளர்கள் எவ்வாறு சாட்சியளித்தனர்?

4. பைபிளில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன, இதைத் தீர்மானித்தவர் யார்?

5. பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல் என்பது எது, அந்தப் பெயர் எவ்வாறு தோன்றியது?

6. ஒரு புத்தகம் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

7. அதிகாரப்பூர்வ பட்டியல் எப்படி படிப்படியாக பூர்த்திசெய்யப்பட்டது, எதோடு புதிய பகுதி ஒத்திசைந்திருக்க வேண்டும்?

8. பைபிளின் தீர்க்கதரிசன புத்தகங்கள் அதிகாரப்பூர்வமானவை என்பதை எது உறுதிசெய்கிறது?

9. பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைப் பற்றிய கேள்வியை ஒருவர் சிந்திக்கையில் என்ன முக்கியமான காரியத்தை மனதில் வைக்க வேண்டும்?

10. எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியல் எந்தக் காலத்திற்குள் முடிக்கப்பட்டது?

11. யூத பாரம்பரியம், அதிகாரப்பூர்வமான எபிரெய வேதாகமத்தை எவ்வாறு வரிசைப்படுத்துகிறது?

12. எபிரெய புத்தகங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை கூடுதலாக உறுதிப்படுத்துவது எது, அது எந்தப் புத்தகத்தோடு முடிவடைகிறது?

13. (அ) தள்ளுபடி ஆகமங்கள் யாவை? (ஆ) இவை ரோமன் கத்தோலிக்க அதிகாரப்பூர்வ பட்டியலில் ஏற்கப்பட்டது எவ்வாறு?

14. (அ) முதலாம் மக்கபே புத்தகம் எவ்வகையில் கவனத்திற்குரியது? (ஆ) தள்ளுபடி ஆகமங்களை யார் ஒருபோதும் குறிப்பிடவில்லை, ஏன்?

15, 16. எந்தப் புத்தகங்கள் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தவை என்பதை ஜொஸிஃபஸும் ஜெரோமும் எவ்வாறு காட்டினார்கள்?

17. ரோமன் கத்தோலிக்கச் சர்ச் தனக்கு என்ன பொறுப்பு இருப்பதாக உரிமைபாராட்டுகிறது, எனினும் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை உண்டுபண்ணும் புத்தகங்கள் எவை என்பதை உண்மையில் தீர்மானித்தது யார்?

18. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பூர்வ பட்டியல்களைக் காட்டும் அட்டவணையிலிருந்து என்ன முக்கியமான முடிவுகளுக்கு வரலாம்?

19. (அ) இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆவணம் என்ன, அது எந்தக் காலத்தைச் சேர்ந்தது? (ஆ) அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகத் தொகுப்பை இது எவ்வாறு விளக்குகிறது?

20. (அ) யோவானின் நிருபங்களில் ஒன்றும் பேதுருவின் நிருபங்களில் ஒன்றும் விடப்பட்டிருப்பது எவ்வாறு விளக்கப்படுகிறது? (ஆ) அப்படியானால், இந்தப் புத்தகப் பட்டியல், நம் நாளின் புத்தகப் பட்டியலோடு எந்தளவு நெருக்கமாக ஒத்திருக்கிறது?

21. (அ) தேவாவியால் ஏவப்பட்ட எழுத்துக்களைப் பற்றிய ஆரிகெனின் குறிப்புகள் ஏன் கவனத்துக்குரியவை? (ஆ) பிற்கால எழுத்தாளர்கள் எதை அதிகாரப்பூர்வமானதாய் ஏற்றுக்கொண்டனர்?

22, 23. (அ) அட்டவணையிலுள்ள புத்தகப் பட்டியல்களின் வரிசைகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன? (ஆ) மியூரட்டோரியன் சுருள்களுக்கு முன்னால் அத்தகைய பட்டியல்கள் ஏன் இல்லையென தோன்றுகிறது?

24. (அ) தள்ளுபடி ஆகமப் “புதிய ஏற்பாட்டு” புத்தகம் எத்தன்மை வாய்ந்தது? (ஆ) இவற்றைப் பற்றி கல்விமான்கள் என்ன சொல்கின்றனர்?

25. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்களைப் பற்றிய என்ன உண்மைகள் இந்த புத்தகங்கள் தேவாவியால் ஏவப்பட்டவை என்பதற்கு சான்றளிக்கின்றன?

26. (அ) எதை நாம் கடவுளுடைய வார்த்தையாக ஏற்கிறோம், ஏன்? (ஆ) பைபிளுக்கு நாம் எவ்வாறு போற்றுதலை காண்பிக்க வேண்டும்?

[பக்கம் 303-ன் அட்டவணை]

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முக்கியமான பூர்வ பட்டியல்கள்

A -வேதப்பூர்வமானதும் அதிகாரப்பூர்வ பட்டியலுக்குரியதுமாக சந்தேகமின்றி ஏற்கப்பட்டது

D -சில இடங்களில் சந்தேகிக்கப்பட்டது

DA -சில இடங்களில் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் பட்டியல் தொகுப்பவர் வேதப்பூர்வமானதாகவும்

அதிகாரப்பூர்வ பட்டியலுக்குரியதாகவும் ஏற்றனர்

? -இந்த மூலவாக்கிய வாசிப்பைக் குறித்து அல்லது குறிப்பிட்ட புத்தகம் கருதப்பட்டதைக் குறித்து

அறிஞர் நிச்சயமாயில்லை

-வெற்றிடம், அந்தப் புத்தகம் அந்த அதிகாரத்துவத்தால் பயன்படுத்தப்படவில்லை அல்லது

குறிப்பிடப்படவில்லையென காட்டுகிறது

பெயரும் இடமும்

மியூரட்டோரியன் ஐரீனியஸ், கிளெமென்ட் டெர்ட்டுல்லியன்,

சுருள்களின் பாகங்கள், ஆசியா மைனர் அலெக்சாண்டிரியாவின் வ. ஆப்பிரிக்கா

இத்தாலி

ஏறக்குறைய

தேதி பொ.ச. 170 180 190 207

மத்தேயு A A A A

மாற்கு A A A A

லூக்கா A A A A

யோவான் A A A A

அப்போஸ்தலர் A A A A

ரோமர் A A A A

1 கொரிந்தியர் A A A A

2 கொரிந்தியர் A A A A

கலாத்தியர் A A A A

எபேசியர் A A A A

பிலிப்பியர் A A A A

கொலோசெயர் A A A A

1 தெசலோனிக்கேயர் A A A A

2 தெசலோனிக்கேயர் A A A A

1 தீமோத்தேயு A A A A

2 தீமோத்தேயு A A A A

தீத்து A A A A

பிலேமோன் A A

எபிரெயர் D DA DA

யாக்கோபு ?

1 பேதுரு A? A A A

2 பேதுரு D? A

1 யோவான் A A DA A

2 யோவான் A A DA

3 யோவான் A?

யூதா A DA A

வெளிப்படுத்துதல் A A A A

பெயரும் இடமும்

ஆரிகென், யூஸிபியஸ், சிரில் செல்ட்டென்ஹாம்

அலெக்சாண்டிரியா பலஸ்தீனா எருசலேமின் பட்டியல்,

வ. ஆப்பிரிக்கா

ஏறக்குறைய

தேதி பொ.ச. 230 320 348 365

மத்தேயு A A A A

மாற்கு A A A A

லூக்கா A A A A

லூக்கா A A A A

அப்போஸ்தலர் A A A A

ரோமர் A A A A

1 கொரிந்தியர் A A A A

2 கொரிந்தியர் A A A A

கலாத்தியர் A A A A

எபேசியர் A A A A

பிலிப்பியர் A A A A

கொலோசெயர் A A A A

1 தெசலோனிக்கேயர் A A A A

2 தெசலோனிக்கேயர் A A A A

1 தீமோத்தேயு A A A A

2 தீமோத்தேயு A A A A

தீத்து A A A A

பிலேமோன் A A A A

எபிரெயர் DA DA A

யாக்கோபு DA DA A

1 பேதுரு A A A A

2 பேதுரு DA DA A D

1 யோவான் A A A A

2 யோவான் DA DA A D

3 யோவான் DA DA A D

யூதா DA DA A

வெளிப்படுத்துதல் A DA A

பெயரும் இடமும்

அதனேஸியஸ், எப்பிஃபானியஸ், க்ரெகரி அம்ஃபிலோசியஸ்,

அலெக்ஸாந்திரியா பலஸ்தீனா நாஜியன்ஜஸ், ஆசியா மைனர்

ஆசியா மைனர்

ஏறக்குறைய

தேதி பொ.ச. 367 368 370 370

மத்தேயு A A A A

மாற்கு A A A A

லூக்கா A A A A

யோவான் A A A A

அப்போஸ்தலர் A A A A

ரோமர் A A A A

1 கொரிந்தியர் A A A A

2 கொரிந்தியர் A A A A

கலாத்தியர் A A A A

எபேசியர் A A A A

பிலிப்பியர் A A A A

கொலோசெயர் A A A A

1 தெசலோனிக்கேயர் A A A A

2 தெசலோனிக்கேயர் A A A A

1 தீமோத்தேயு A A A A

2 தீமோத்தேயு A A A A

தீத்து A A A A

பிலேமோன் A A A A

எபிரெயர் A A A DA

யாக்கோபு A A A A

1 பேதுரு A A A A

2 பேதுரு A A A D

1 யோவான் A A A A

2 யோவான் A A A D

3 யோவான் A A A D

யூதா A A A D

வெளிப்படுத்துதல் A DA D

பெயரும் இடமும்

ஃபிலாஸ்டெர், ஜெரோம், அகஸ்டீன், மூன்றாவது

இத்தாலி இத்தாலி வ. ஆப்பிரிக்கா கார்த்தேஜின் ஆலோசனைக்குழு,

வ. ஆப்பிரிக்கா

ஏறக்குறைய

தேதி பொ.ச. 383 394 397 397

மத்தேயு A A A A

மாற்கு A A A A

லூக்கா A A A A

யோவான் A A A A

அப்போஸ்தலர் A A A A

ரோமர் A A A A

1 கொரிந்தியர் A A A A

2 கொரிந்தியர் A A A A

கலாத்தியர் A A A A

எபேசியர் A A A A

பிலிப்பியர் A A A A

கொலோசெயர் A A A A

1 தெசலோனிக்கேயர் A A A A

2 தெசலோனிக்கேயர் A A A A

1 தீமோத்தேயு A A A A

2 தீமோத்தேயு A A A A

தீத்து A A A A

பிலேமோன் A A A A

எபிரெயர் DA DA A A

யாக்கோபு A DA A A

1 பேதுரு A A A A

2 பேதுரு A DA A A

1 யோவான் A A A A

2 யோவான் A DA A A

3 யோவான் A DA A A

யூதா A DA A A

வெளிப்படுத்துதல் DA DA A A