Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் தரும் நித்திய நன்மைகள்

பைபிள் தரும் நித்திய நன்மைகள்

பைபிள் தரும் நித்திய நன்மைகள்

‘கடவுளால் ஏவப்பட்ட . . . வேதாகமம் முழுவதையும்’ நாம் மறுபார்வை செய்ததானது, யெகோவாவின் ஈடற்ற அரசாதிகாரத்தையும் அவருடைய ராஜ்ய நோக்கத்தையும் பற்றிய மகிமையான ஒரு காட்சியை நம்முடைய கண்களுக்கு முன்பாக திறந்திருக்கிறது. ஒரே புத்தகமாக பைபிள், வல்லமைவாய்ந்த ஒரே பொருளைக் கொண்டுள்ளது என்பதை நாம் கவனித்தோம். அதாவது, யெகோவாவின் ஈடற்ற அரசாதிகாரத்தை நியாயம் நிரூபிப்பதும், வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய கிறிஸ்துவின் பொறுப்பிலுள்ள ராஜ்யத்தின் மூலமாக பூமிக்குரிய அவருடைய நோக்கத்தை முடிவாக நிறைவேற்றுவதுமே இதன் பொருளாகும். பைபிளின் முதல் பக்கங்களிலிருந்தே இந்த ஒரே பொருள் விவரிக்கப்பட்டு, முடிவு பக்கங்கள் வரையாக படிப்படியாக விரிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு, அதன் முடிவான அதிகாரங்களில் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாக அவருடைய மகத்தான நோக்கத்தின் மகிமையான உண்மை நிறைவேறும் என்பது தெளிவாக்கப்படுகிறது. பைபிள் எத்தகைய தனிச் சிறப்பான புத்தகம்! வானங்களும், பூமியும் படைக்கப்பட்டதை விவரித்து, அதன்பின் உயிரினங்கள் படைக்கப்பட்ட வியப்பூட்டும் விவரங்களோடு தொடங்குகிறது. அதிலிருந்து நம்முடைய காலம் வரை மனிதகுலத்தோடு கடவுளின் செயல்தொடர்புகளைப் பற்றி தேவாவியால் ஏவப்பட்ட நம்பகமான ஒரே விவரத்தை நமக்கு அளிக்கிறது. மேலும் “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” பற்றிய யெகோவாவின் மகிமையான படைப்பின் பூரண நிறைவேற்றத்தையும் நமக்கு விளக்குகிறது. (வெளி. 21:1) வித்தினுடைய ராஜ்யத்தின் மூலமாக அவருடைய மகத்தான நோக்கம் முழுமையாக நிறைவேற்றமடைவதோடு, ஒற்றுமைப்பட்ட மகிழ்ச்சியுள்ள மனித குடும்பத்திற்கு யெகோவா தேவன் அன்பார்ந்த தகப்பனுக்குரிய உறவில் இருப்பதாக விவரிக்கப்படுகிறார். இந்தக் குடும்பம் யெகோவாவை துதிப்பதிலும் அவருடைய பரிசுத்தமான பெயரை புனிதப்படுத்துவதிலும் பரலோகச் சேனைகள் முழுவதோடும் சேர்ந்துகொள்கிறது.

2வித்தை உட்படுத்தும் இந்தப் பொருள் வேதவாக்கியங்கள் முழுவதிலும் எவ்வளவு அருமையாக படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது! தேவாவியால் ஏவப்பட்ட முதல் தீர்க்கதரிசனத்தை கூறுகையில், ‘ஸ்திரீயின் வித்தானவர்’ சர்ப்பத்தை தலையில் நசுக்குவார் என்று கடவுள் வாக்குக் கொடுக்கிறார். (ஆதி. 3:15) அதற்குபின் 2,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்து செல்கின்றன, உண்மையுள்ள ஆபிரகாமுக்குக் கடவுள் இவ்வாறு சொல்கிறார்: ‘பூமியிலுள்ள சகல ஜாதியாரும் உன் வித்தைக் கொண்டு தங்களை நிச்சயமாய் ஆசீர்வதித்துக்கொள்வார்கள்.’ இந்த வாக்கு கொடுக்கப்பட்டு 800 ஆண்டுகளுக்குப் பின், ஆபிரகாமின் சந்ததியாரில் ஒருவராகிய உண்மையுள்ள அரசன் தாவீதுக்கு, யெகோவா இதைப்போன்ற ஒரு வாக்குறுதி அளித்து அந்த வித்து ஒரு அரசராக இருப்பார் என்பதாக காட்டுகிறார். காலம் கடந்து செல்கையில், யெகோவாவின் தீர்க்கதரிசிகள் அந்த ராஜ்ய ஆட்சியின் மகிமைகளை உற்சாகமாக முன்னறிவிக்கின்றனர். (ஆதி. 22:​18, NW; 2 சா. 7:​12, 16; ஏசா. 9:​6, 7; தானி. 2:44; 7:​13, 14) ஏதேனில் அந்த முதல் வாக்கு கொடுக்கப்பட்டு 4,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு வித்து தோன்றுகிறார். ‘ஆபிரகாமின் வித்தாயுமிருக்கிற’ இவரே ‘மகா உன்னதமானவருடைய குமாரனாகிய’ இயேசு கிறிஸ்து, இவருக்கே ‘அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை’ யெகோவா அளிக்கிறார்.​—கலா. 3:16; லூக். 1:​31-33.

3கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட அரசராகிய இந்த வித்து, சர்ப்பத்தின் பூமிக்குரிய வித்தால் மரணமடைகிறார். இவ்வாறு அவருக்கு ஒரு காயம் ஏற்படுகிறது; இருந்தபோதிலும், கடவுள் அவரை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பி தம்முடைய வலதுபாரிசத்துக்கு அவரை உயர்த்துகிறார். அங்கே அவர், ‘சாத்தானின் தலையை நசுக்குவதற்குரிய’ கடவுளுடைய காலம் வரும் வரை காத்திருக்கிறார். (ஆதி. 3:15; எபி. 10:13; ரோ. 16:20) பின்பு வெளிப்படுத்துதல், இந்த முழு காட்சியையும் அதன் மகிமையான உச்சக்கட்டத்துக்குக் கொண்டுவருகிறது. கிறிஸ்து ராஜ்ய அதிகாரத்தை ஏற்று, ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பை’ வானத்திலிருந்து கீழே பூமிக்குத் தள்ளுகிறார். கொஞ்சக் காலத்திற்கு, பிசாசானவன் பூமிக்குத் துன்பத்தைக் கொண்டுவந்து, ‘கடவுளுடைய ஸ்திரீயின் வித்தின் மீதியாக இருப்பவர்களோடு’ போரிடுகிறான். ஆனால் கிறிஸ்து, ‘ராஜாதி ராஜாவாக’ தேசங்களை முறியடிக்கிறார். அந்தப் பழைய பாம்பாகிய சாத்தான், அபிஸ்ஸுக்குள் தள்ளப்படுகிறான், பின்பு முடிவில் என்றென்றுமாக இல்லாதபடிக்கு அழிக்கப்படபோகிறான். இதற்கிடையில் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியாகிய புதிய எருசலேமின் மூலமாக, கிறிஸ்துவினுடைய பலியின் நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இந்த நன்மைகள் பூமியின் எல்லா குடும்பங்களுக்கும் ஆசீர்வாதமுண்டாக மனித இனத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு, தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் சிறப்பான பொருள் கிளர்ச்சியூட்டும் மகத்துவத்துடன் நமக்கு முன்பாகப் படிப்படியாக வெளிப்படுகிறது!​—வெளி. 11:15; 12:​1-12, 17; 19:​11-16; 20:​1-3, 7-10; 21:​1-5, 9; 22:​3-5.

தேவாவியால் ஏவப்பட்ட இந்தப் பதிவிலிருந்து பயனடைதல்

4பரிசுத்த வேதவாக்கியங்களிலிருந்து மிக அதிக பயனை நாம் எவ்வாறு அடையலாம்? நம் வாழ்க்கையில் பைபிள் செயல்படும்படி அனுமதிப்பதன் மூலமே. தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களை நாள்தோறும் படித்து அவற்றைப் பொருத்துவதன்மூலம் கடவுளிடமிருந்து வழிநடத்துதலை நாம் பெறலாம். “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது,” நம்முடைய வாழ்க்கையில் இது நீதிக்குரிய அதிசயமான வல்லமையாக இருக்கக்கூடும். (எபி. 4:12) கடவுளுடைய வார்த்தையை நாம் தொடர்ந்து படித்து அதன் வழிநடத்துதல்களைப் பின்பற்றினால், “மெய்யான நீதியிலும் பக்தியிலும் கடவுளுக்கிசையச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்”பவராவோம். நம்முடைய மனதை ஏவும் ஆவியில் புதிதாக்கப்பட்டு, “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று” நமக்கு நிரூபித்துக்கொள்ளும்படி நம்முடைய மனம் புதிதாவதால் மாற்றப்படுவோம்.​—எபே. 4:​23, 24, தி.மொ.; ரோ. 12:2.

5கடவுளின் உண்மையுள்ள மற்ற ஊழியர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதன்பேரில் தியானித்ததிலிருந்து எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதைக் கவனிப்பதன்மூலம் நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்த’ மோசே, மற்றவர்களால் கற்பிக்கத்தக்கவராகவும் கற்றுக்கொள்ள மனமுள்ளவராகவும் இருந்தார். (எண். 12:3) யெகோவாவின் ஈடற்ற அரசுரிமையின்பேரில் அவருக்கிருந்த அதே ஜெபசிந்தையான போற்றுதலை நாமும் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். மோசே பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரே [“யெகோவாவே,” NW], தலைமுறை தலைமுறையாக எங்கள் வாசஸ்தலம் நீரே. மலைகள் தோன்றுமுன்னும் பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும் ஆதியந்தமில்லாத சதாகாலங்களிலும் நீரே கடவுள்.” பைபிளின் முதல் புத்தகங்களை எழுதுவதற்கு யெகோவா மோசேயைப் பயன்படுத்தியதால், அவர் கடவுளுடைய ஞானத்தோடு முழுமையாகப் பழக்கப்பட்டிருந்தார். ஆகவே, தினந்தோறும் யெகோவாவிடமிருந்து ஞானத்தைத் தேடுவதன் முக்கியத்துவத்தை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் கடவுளிடம் இவ்வாறு ஜெபித்தார்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” ‘நமது ஆயுசுநாட்கள்’ குறைந்தவையாக, வெறும் 70 ஆண்டுகளாக, அல்லது “பலத்தின் மிகுதியால்” 80 ஆக இருந்தாலும், அவருடைய வார்த்தையை தினந்தோறும் விருந்தாகக் கருதுவோமானால் ஞானமுள்ளோராயிருப்போம். அப்போது ‘நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் இனிமை,’ அவருடைய உண்மையுள்ள ஊழியராகிய மோசேயின்மீது இருந்ததுபோல், ‘நம்மீது இருப்பதாக நிரூபணமாகும்.’​—சங். 90:​1, 2, 10, 12, தி.மொ., 17, NW.

6கடவுளுடைய வார்த்தையை பற்றி தினந்தோறும் ஆழ்ந்து தியானம் செய்வது எவ்வளவு அவசியமாக இருக்கிறது! மோசேக்குப் பிறகு பொறுப்பேற்ற யோசுவாவிடம் யெகோவா இதைத் தெளிவாக சொன்னார்: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை, யோசுவா தொடர்ந்து வாசித்தார். இதனால் அவருடைய ‘வழி வெற்றிகரமாக இருந்ததா?’ கானானில் அவருடைய தைரியமான போர் நடவடிக்கையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததே இக்கேள்விக்கு பதில் அளிக்கிறது.​—யோசு. 1:​7, 8; 12:​7-24.

7யெகோவாவிடமிருந்து வரும் ஞானத்தை ஆழ்ந்த மதிப்புடன் பாராட்டிய அன்பான தாவீதையும் கவனியுங்கள். யெகோவாவின் “பிரமாணம்,” “சாட்சியம்,” “கட்டளைகள்,” “கற்பனை,” “நியாயத்தீர்ப்புகள்,” ஆகியவற்றிற்கு எத்தகைய இருதயப்பூர்வ மதித்துணர்வை அவர் காட்டினார்! தாவீது சொன்னபடி: “அவை பொன்னிலும் மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவை, தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவை.” (சங். 19:​7-10, தி.மொ.) இந்த மகிழ்ச்சியுள்ள பொருள் மற்றொரு சங்கீதக்காரனால் 119-வது சங்கீதம் முழுவதிலும் மனதைத்தொடும் அழகுடன் விரிவாக திரும்பக் கூறப்படுகிறது. கடவுளுடைய வார்த்தையை நாம் தினந்தோறும் படித்து, அதன் ஞானமான அறிவுரையின்படி நடக்கும்போது, யெகோவாவிடம் நாம் இவ்வாறு சொல்லமுடியும்: “உமது வார்த்தை என் கால்களுக்குத் தீபம்; அது என் பாதைக்கு வெளிச்சம்.” “உம்முடைய நினைப்பூட்டுதல்கள் அதிசயமானவை. அதனிமித்தமே என் ஆத்துமா அவற்றைக் கைக்கொண்டிருக்கிறது.”​—சங். 119:​105, தி.மொ., 129, NW.

8தாவீதின் குமாரனாகிய சாலொமோன் உண்மையுள்ளவராக நிலைத்திருந்த நாட்களில் கடவுளுடைய வார்த்தையின்படி நடந்தார். அவருடைய சொற்களில் மதித்துணர்வை வெளிப்படுத்தும் வார்த்தைகளை நாம் காணலாம்; அவற்றை நமக்கு சொந்தமாக்கி கொள்வது நல்லது. பைபிளை நாள்தோறும் வாசித்து பொருத்திப் பயன்படுத்தி வருவதன்மூலம், சாலொமோனின் வார்த்தைகளின் ஆழமான அர்த்தத்தை நாம் முழுமையாக புரிந்துகொள்வோம்: “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள் [“மகிழ்ச்சியுள்ளவர்கள்,” NW]. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவ விருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான் [“மகிழ்ச்சியுள்ளவன்,” NW].” (நீதி. 3:​13, 16-18) கடவுளுடைய வார்த்தையை நாள்தோறும் படித்து அதற்குக் கீழ்ப்படிவது அதிக மகிழ்ச்சியளிக்கும்; அதோடு ‘தீர்க்காயுசை’ பெற்றுக்கொள்வதற்கும் யெகோவாவின் புதிய உலகத்தில் நித்திய ஜீவனுக்கும் வழிநடத்துகிறது.

9தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களை மனதார வாஞ்சித்து கீழ்ப்படிந்த அநேகரில், கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசிகளை கவனியாமல் விடக்கூடாது. உதாரணமாக, எரேமியா மிகக் கடினமான ஒரு ஊழிய நியமிப்பை பெற்றிருந்தார். (எரே. 6:28) அவர் சொன்னார்: “யெகோவாவினால் வந்த வார்த்தை எனக்கே நிந்தையாயிற்று, நாளெல்லாம் பரிகாசமுமாயிற்று.” ஆனால் கடவுளுடைய வார்த்தையை நன்றாக படித்திருந்ததால் அவர் உறுதியாக இருந்தார். தேவாவியால் ஏவப்பட்ட நான்கு புத்தகங்களை​—முதலாம், இரண்டாம் இராஜாக்கள், எரேமியா, புலம்பல் ஆகியவற்றை​—எழுதுவதற்கு அவர் பயன்படுத்தப்பட்டார். ஆனால், பிரச்சினைகள் நெருக்கியதால் அவர் மிகவும் சோர்ந்துபோய் ‘யெகோவாவால் வந்த வார்த்தையைப்’ பிரசங்கிப்பதை நிறுத்திவிடலாம் என்பதாக நினைத்தபோது என்ன நடந்தது? இதற்கு எரேமியாவே பதிலளிக்கட்டும்: அது “என் எலும்புகளில் அடைப்பட்ட அக்கினியாய் என் இருதயத்திலே எரிந்தது; அதைப் பொறுத்துப் பொறுத்து இளைத்தேன், என்னால் சகிக்க முடியாமற்போயிற்று.” யெகோவாவின் வார்த்தைகளை பேசும்படி அவர் வற்புறுத்தப்பட்டார். அவ்வாறு செய்தபோது, யெகோவா “வல்லமை மிகுந்த பராக்கிரமசாலி”யைப் போல் தன்னுடன் இருந்ததை அவர் கண்டார். கடவுளுடைய வார்த்தை எரேமியாவுக்கு இருந்ததுபோல் நம்மில் ஒரு பாகமாகும்படி அதை தொடர்ந்து படித்து வந்தால், அப்போது யெகோவாவின் வெல்லமுடியாத வல்லமை எரேமியாவிடம் இருந்ததைப் போலவே நம்மிடமும் இருக்கும். அவருடைய மகிமையான ராஜ்ய நோக்கத்தைத் தொடர்ந்து பேசுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ள ஒவ்வொரு இடையூறையும் நாம் வெற்றிகரமாக மேற்கொள்வோம்.​—எரே. 20:​8, 9, 11, தி.மொ.

10இப்போது, நம்முடைய மிகப் பெரிய முன்மாதிரியாக இருக்கும் “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவைப்” பற்றி என்ன சொல்லலாம்? அவருக்கு முன்னிருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் உண்மையுள்ள மற்ற மனிதர்களையும்போல தேவாவியால் ஏவப்பட்ட வேதவார்த்தைகளை நன்றாக அறிந்திருந்தாரா? நிச்சயமாகவே அறிந்திருந்தார், அவர் குறிப்பிட்ட மேற்கோள்களும் வேதவார்த்தைகளுக்கு ஒத்திசைவான அவருடைய வாழ்க்கைப்போக்கும் அதைத்தான் தெளிவாக காட்டுகின்றன. இந்தப் பூமியில், தமது பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கு முன்வந்து தன்னையே அளித்ததற்கு காரணம், கடவுளுடைய வார்த்தை அவருடைய மனதில் இருந்ததே: “இதோ வருகிறேன், புஸ்தகச் சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே. என் கடவுளே, உமது சித்தத்தைச் செய்வதே என் பிரியம், உமது பிரமாணம் என் உள்ளத்தில் இருக்கிறது.” (எபி. 12:​2; சங். 40:​7, 8, தி.மொ.; எபி. 10:​5-7) இயேசுவை யெகோவா பரிசுத்தப்படுத்துவதற்கும் அல்லது அவரைத் தம்முடைய ஊழியத்திற்காக தனியாக பிரித்து வைப்பதற்கும் இருந்த பல முக்கியமான காரணங்களுள் கடவுளுடைய வார்த்தையும் ஒன்று. தம்மைப் பின்பற்றுவோரும் அவ்வாறே பரிசுத்தப்படுத்தப்பட வேண்டுமென்று இயேசு ஜெபித்தார். “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.”​—யோவா. 17:​17-19.

11“சத்தியத்தினாலே” பரிசுத்தமாக்கப்பட்டு இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஆவியால் பிறப்பிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், உண்மையில் அவருடைய சீஷராயிருப்பதற்கு ‘அவருடைய வார்த்தையில் நிலைகொண்டிருக்க’ வேண்டும். (யோவா. 8:​31, தி.மொ.) “விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு” பேதுரு எழுதும்போது, கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து படித்து, அதற்குக் கவனம் செலுத்துவதற்கான அவசியத்தை இவ்வாறு அறிவுறுத்தினார்: “இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.” (2 பே. 1:​1, 12) கடவுளுடைய வார்த்தையை நாள்தோறும் வாசிப்பதாலும் படிப்பதாலும் கிடைக்கும் நினைப்பூட்டுதல்கள், ‘திரள் கூட்டத்தாரைச்’ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதாக விரும்பும் அனைவருக்கும் முக்கியமானது. ஆவிக்குரிய இஸ்ரவேல் கோத்திரத்தாரைச் சேர்ந்த முத்திரையிடப்பட்ட 1,44,000 பேரை யோவான் தரிசனத்தில் கண்டு விவரித்தப்பின் இவர்களை கண்டார். இந்தத் திரள்கூட்டத்தார், சத்தியமாகிய ஜீவத்தண்ணீரைத் தொடர்ந்து அருந்திவந்தால் மட்டுமே அறிவாற்றலுடன் ‘மகா சத்தமிட்டு இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரிக்க’ முடியும்.​—வெளி. 7:​9, 10; 22:17.

12இதை நாம் தவிர்க்க முடியாது! தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்திலிருந்து அதிக பயனைக் கண்டடைவதற்கான வழி அதை தினமும் படித்து, அதன்படி வாழ்வதே. அவ்வாறு படிப்பதன் மூலம் நித்திய ஜீவனை பெறுவதற்கான இரட்சிப்பின் வழியை கண்டடைய முடியும். சங்கீதக்காரன் பின்வருமாறு வெளிப்படுத்திக் கூறும் அதே போற்றுதலுக்குரிய ஜெபசிந்தையோடு கடவுளுடைய வார்த்தையை நாம் இடைவிடாமல் தியானிக்க வேண்டும்: “யெகோவாவின் செயல்களை நினைவுக்குக் கொண்டுவருவேன், பூர்வகாலத்தில் நீர் செய்த அதிசயங்களை நினைப்பேன். உமது கிரியைகளையெல்லாம் தியானிப்பேன்.” (சங். 77:​11, 12, தி.மொ.) யெகோவாவின் ‘அதிசயமான செயல்களையும் நடவடிக்கைகளையும்’ தியானிப்பதால் நித்திய ஜீவன் என்ற நோக்குடன், நல்ல செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்கு நாம் தூண்டப்படுவோம். ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ என்ற இந்தப் புத்தகத்திற்கு ஒரு நோக்கமிருக்கிறது. நீதியை நேசிக்கும் ஒவ்வொருவரும் கடவுளுடைய வார்த்தையை தொடர்ந்து படித்து பொருத்துவதால் நித்தியமான, திருப்திதரும் நன்மைகளில் பங்குகொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்துவதே அந்த நோக்கம்.

‘கொடிய காலங்களில்’

13இந்த நவீன சகாப்தம் மனித சரித்திரத்தில் மிகவும் கொடிய காலமாக உள்ளது. திகிலூட்டும் காரியங்கள் நடப்பதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. மனித குலம் உயிர் பிழைப்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படியென்றால், அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகள் பொருத்தமாகவே இருக்கின்றன: “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிந்துகொள். மனுஷர் தற்பிரியரும் பணப்பிரியரும் வீம்புக்காரரும் அகந்தையுள்ளவர்களும் தூஷிக்கிறவர்களும் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களும் நன்றியறியாதவர்களும் பக்தியில்லாதவர்களும் சுபாவ அன்பில்லாதவர்களும் இணங்காதவர்களும் அவதூறு பண்ணுகிறவர்களும் அடக்கமில்லாதவர்களும் கொடுமையுள்ளவர்களும் நன்மையை ஆசியாதவர்களும் துரோகிகளும் துணிகரமுள்ளவர்களும் இறுமாப்புள்ளவர்களும் கடவுளைப்பார்க்கிலும் சுகபோகத்தை அதிகமாய் நேசிக்கிறவர்களும் தெய்வபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் வல்லமையையோ மறுதலிக்கிறவர்களுமாயிருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை விட்டுவிலகு.”​—2 தீ. 3:​1-5, தி.மொ.

14ஏன் அப்படிப்பட்டவர்களை விட்டுவிலக வேண்டும்? ஏனெனில் கடவுள் பயமற்ற அவர்களுடைய வாழ்க்கை பாணி சீக்கிரத்தில் அழியப்போகிறது! மாறாக, நாம் நேர்மையான இருதயமுள்ளவர்களோடு தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களின் ஆரோக்கியமான போதகத்திற்குத் திரும்புவோமாக; அதனால் இந்த வேதவாக்கியங்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அஸ்திவாரமாக ஆக்குவோமாக. இளைஞனாகிய தீமோத்தேயுவிற்கு பவுல் கூறிய இவ்வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுப்போமாக: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.” (2 தீ. 3:14) ஆம், அவற்றில் “நிலைத்திரு” என்று பவுல் சொல்கிறார். அவ்வாறு செய்வதன்மூலம், வேதவாக்கியங்கள் நமக்குக் கற்பிக்கும்படியும், நம்மை கடிந்துகொள்ளும்படியும், நம்மை சீர்திருத்தும்படியும், நம்மை நீதியில் பயிற்றுவிக்கும்படியும் நாம் மனத்தாழ்மையுடன் அனுமதிக்க வேண்டும். நமக்கு என்ன தேவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். ஏனெனில் அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகளைப் பார்க்கிலும் மிகவும் உயர்ந்தவை. வேதவாக்கியங்களின் மூலம் நமக்கு எது பயனளிக்கும் என்பதை கடவுள் தெரிவித்திருக்கிறார்; அதனால் அவருடைய பெயருக்கும் ராஜ்யத்துக்கும் சாட்சிகொடுக்கும் நல்ல ஊழியத்திற்கு நாம் முழுமையாக தகுதியாக்கப்பட்டு தேறினவர்களாக இருக்க முடியும். பவுல், “கடைசிநாட்களில்” வரும் ‘கொடிய காலங்களை’ விளக்கும்போது, முக்கியமான இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்: ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, கடவுளுடைய மனிதன் எல்லா நல்ல செயலுக்கும் முற்றிலும் தேறினவனாகவும், முழுமையாக தகுதிபெற்றவனாகவும் இருப்பதற்காக, கற்பிப்பதற்கும் கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சீர்திருத்துவதற்கும், நீதியில் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.’ தேவாவியால் ஏவப்பட்ட இந்த அறிவுரைக்குச் செவிகொடுப்பதன் மூலம் நாம் எல்லாரும் இந்தக் கொடியக் காலங்களைத் தப்பிப்பிழைப்போமாக!​—2 தீ. 3:16, 17, NW; ஏசா. 55:​8-11.

15தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்திற்கு கீழ்ப்படிவதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். யெகோவாவின் வார்த்தைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படியாததன் விளைவாகத்தான் முதல் மனிதன் பாவஞ்செய்து மரணமடைந்தான், “மரணம் எல்லாருக்கும் பரவினது.” ஆகவே ஏதேனில் தனக்கு கிடைத்திருக்க வேண்டிய ஒரு நல்ல வாய்ப்பை மனிதன் இழந்தான்; ‘தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியைப் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிருக்கும்’ அந்த வாய்ப்பைத்தான் அவன் இழந்தான். (ரோ. 5:12; ஆதி. 2:17; 3:​6, 22-24) ஆனால், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் மூலமும் இந்த “தேவ ஆட்டுக்குட்டி”யின் பலியின் அடிப்படையிலும் யெகோவா ஒரு ஏற்பாட்டை செய்யவிருக்கிறார்; “பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி,” கீழ்ப்படிதலுடன் தங்களைத் தமக்கு ஒப்புவிக்கும் மனிதகுலத்திலுள்ள யாவரின் நன்மைக்காகவும் பாய்ந்தோடும்படி செய்வார். அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டபடி: ‘நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சங்கள் இருந்தன, அவை மாதந்தோறும் தங்கள் கனிகளைக் கொடுக்கும்; அந்த விருட்சங்களின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவானவைகள்.’​—யோவா. 1:29; வெளி. 22:​1, 2; ரோ. 5:​18, 19.

16நித்திய ஜீவனுக்குச் செல்லும் வழி, மறுபடியும் மனிதகுலத்துக்குத் திறக்கப்படுகிறது. அப்படியென்றால் தேவாவியால் ஏவப்பட்ட இந்த வசனத்துக்குச் செவிகொடுப்பவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்: “நீயும் உன் சந்ததியும் பிழைப்பதற்கு நீ ஜீவனைத் தெரிந்துகொள். . . . உன் கடவுளாகிய யெகோவாவில் அன்புகூர்ந்து அவர் சப்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பற்றிக்கொள்; அப்படிச் செய்வதே [“அவரே,” NW] உனக்கு ஜீவன், தீர்க்காயுசு.” (உபா. 30:​19, 20, தி.மொ.) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. அவர் தம் குமாரனுடைய பலியின் மூலமும் தம் நித்திய ராஜ்யத்தைக் கொண்டும் ஜீவனுக்கான இந்த மகத்தான ஏற்பாட்டை செய்கிறார். மதிப்புமிகுந்த இந்தச் சத்தியங்களை நாம் திரும்பத்திரும்ப வாசிக்கவும், திரும்பத்திரும்பப் படித்து ஆராயவும், தியானிக்கவும், வாய்ப்பு கிடைத்திருப்பதற்காக எவ்வளவு சந்தோஷமும் நன்றி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், மெய்யாகவே ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது,’ இது, பரலோகத்தில் அல்லது பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. (யோவா. 17:3; எபே. 1:​9-11) அப்போது எல்லாம் ‘யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்.’​—சக. 14:20; வெளி. 4:8.

[கேள்விகள்]

1. “வேதவாக்கியம் முழுவதையும்” நாம் மறுபார்வையிட்டதால் என்ன மகிமையான காட்சி நம் கண்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டிருக்கிறது?

2, 3. வித்தை உட்படுத்தும் இந்தப் பொருள் எவ்வாறு வேதாகமம் முழுவதும் படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது?

4. பரிசுத்த வேதவாக்கியங்களிலிருந்து மிக அதிக பயனை நாம் எவ்வாறு அடையலாம், ஏன்?

5. மோசேயின் மனப்பான்மையிலிருந்தும் முன்மாதிரியிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6. யோசுவாவைப்போல் நாம் எவ்வாறு நம் வழியை வெற்றிகரமாக்கலாம்?

7. கடவுளிடமிருந்து வரும் ஞானத்திற்கு தாவீது எவ்வாறு தனது போற்றுதலை வெளிப்படுத்தினார், இதே போற்றுதல் சங்கீதம் 119-ல் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது?

8. சாலொமோனின் எந்தக் கூற்றுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்?

9. எரேமியாவின் முன்மாதிரியிலிருந்து என்ன உற்சாகத்தை நாம் பெறலாம்?

10. வேதவாக்கியங்கள் இயேசுவின் வாழ்க்கையில் என்ன பாகத்தை வகித்தன, தம்முடைய சீஷர்களுக்காக அவர் என்ன ஜெபம் செய்தார்?

11. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தையைக் குறித்து பேதுரு எதை அறிவுறுத்தினார்? (ஆ) பைபிளைப் படிப்பது திரள்கூட்டத்தாருக்கும் ஏன் முக்கியமானது?

12. நாம் ஏன் கடவுளுடைய வார்த்தையை இடைவிடாமல் தியானிக்க வேண்டும்?

13. எந்தக் ‘கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம்?

14. காலங்களைப் பார்க்கையில், பவுலின் என்ன அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்?

15. (அ) கீழ்ப்படியாமையின் விளைவு என்ன? (ஆ) கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் மூலம் என்ன மேன்மையான வாய்ப்பு திறக்கப்பட்டிருக்கிறது?

16. தேவாவியால் ஏவப்பட்ட வேதவாக்கியங்கள் என்ன நித்திய பயனுள்ளவை?