Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 30—ஆமோஸ்

பைபிள் புத்தக எண் 30—ஆமோஸ்

பைபிள் புத்தக எண் 30—ஆமோஸ்

எழுத்தாளர்: ஆமோஸ்

எழுதப்பட்ட இடம்: யூதா

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 804

ஆமோஸ் ஒரு தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் குமாரனும் அல்ல. மாறாக ஆடு மேய்க்கிறவரும் காட்டத்தி பழங்களைப் பொறுக்குகிறவருமாக இருந்தார். இப்படிப்பட்ட ஆமோஸையே யெகோவா அழைத்து, ஆமோஸின் சொந்த ஜனமாகிய யூதாவுக்கு மட்டுமல்ல முக்கியமாக வடக்கு ராஜ்யமாகிய இஸ்ரவேலுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைக்கும்படி அனுப்பினார். 2 இராஜாக்கள் 17:13, 22, 23-ல் குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசிகளில் இவரும் ஒருவர். இவர் யூதாவிலிருந்த தெக்கோவா ஊரைச் சேர்ந்தவர். இது, எருசலேமுக்கு தெற்கே சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலும் பத்து கோத்திர ராஜ்யமாகிய இஸ்ரவேலின் தெற்கு எல்லையிலிருந்து ஏறக்குறைய ஒரு நாள் பயண தூரத்திலும் இருந்தது.​—ஆமோ. 1:1; 7:14, 15.

2யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும் இஸ்ரவேலின் ராஜாவான யோவாசின் குமாரனாகிய இரண்டாம் யெரொபெயாமின் நாட்களிலும், அசாதாரணமான ஒரு பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவும் இவர் தீர்க்கதரிசியாக தன் ஊழியத்தை ஆரம்பித்தார் என இவருடைய தீர்க்கதரிசனத்தின் முதல் வசனம் கூறுகிறது. ஆகவே இவருடைய தீர்க்கதரிசனம், இவ்விரண்டு அரசர்களின் ஆட்சிகளும் ஒன்றாக இருந்த காலமாகிய பொ.ச.மு. 829-லிருந்து சுமார் 804 வரையான 26 ஆண்டு காலப்பகுதியில் உரைக்கப்பட்டிருக்க வேண்டும். உசியாவின் நாட்களில் ஏற்பட்ட பெரும் அழிவுண்டாக்கிய பூமியதிர்ச்சியைப் பற்றி சகரியா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். அந்தச் சமயத்தில் ஜனங்கள் பயத்தில் தப்பியோடினர். (சக. 14:5) உசியா துணிகரமாய் ஆலயத்தில் தூபம் காட்ட முயற்சி செய்தபோது ஒரு பூமியதிர்ச்சி உண்டானது என்று யூத சரித்திராசிரியர் ஜொஸிபஸ் கூறுகிறார். எனினும், ஆமோஸ் குறிப்பிட்ட இந்தப் பூமியதிர்ச்சி உசியாவின் ஆட்சியின் ஆரம்பத்தில் உண்டானது என தோன்றுகிறது.

3ஆமோஸ் என்ற பெயருக்கு “பாரமாக இருப்பது” அல்லது “பாரத்தை சுமப்பது” என்று அர்த்தம். இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் (புறமத தேசங்கள் பலவற்றிற்கும்கூட) அவர் கூறிய அழிவுக்குரிய செய்திகள் பாரமானவையாய் இருந்தன. என்றபோதிலும், யெகோவாவின் ஜனங்கள் திரும்ப நிலைநாட்டப்படுவது பற்றிய ஆறுதலான ஒரு செய்தியையும் அவர் கூறினார். இஸ்ரவேலுக்கு எதிராக ஆபத்தை அறிவிப்பதற்கு நல்ல காரணங்கள் இருந்தன. செழுமை, ஆடம்பர வாழ்க்கை, இழிவான காமம் ஆகியவை சர்வசாதாரணமாக இருந்தன. ஜனங்கள் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை மறந்துவிட்டனர். அளவுக்கு மீறி பழுத்துவிட்ட பழங்களைப் போல் அவர்கள் அழிவுக்கு வழிநடத்தும் பாதையில் இருக்கிறார்கள். ஆனால், இந்த உண்மையை உணர முடியாதபடி அவர்களுடைய தற்கால செழுமை அவர்கள் கண்களைக் குருடாக்கிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அந்தப் பத்து கோத்திர ராஜ்யத்தார் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்தப்படுவர் என ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்தார். இவ்வாறு யெகோவாவின் நீதியையும் பேரரசுரிமையையும் அவர் மகிமைப்படுத்தினார். அவரை “கர்த்தராகிய பேரரசர்” என 21 தடவை குறிப்பிடுகிறார்.​—ஆமோ. 1:8, NW.

4இதுவும் மற்ற தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியது ஆமோஸின் நம்பகத் தன்மையை உறுதி செய்கின்றன. இஸ்ரவேலைச் சுற்றியிருந்த எதிரிகளான சீரியர், பெலிஸ்தர், தீரு தேசத்தார், ஏதோமியர், அம்மோனியர், மோவாபியர் ஆகிய அனைவரும் அழிவின் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவார்கள் என்றும் இந்தத் தீர்க்கதரிசி முன்னறிவித்தார். காலப்போக்கில் இந்தச் சத்துருக்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர் என்பதை சரித்திரம் நிரூபிக்கிறது. யூதாவும் இஸ்ரவேலும் யெகோவாவை விட்டு விலகி பொய் வணக்கத்தை பின்தொடர்ந்ததால் அவர்களுடைய பாவம் இதைவிட அதிக மோசமானது. ஐந்தாம் சல்மனாசார் வழிநடத்தி வந்த அசீரிய சேனைகள், இஸ்ரவேலின் கடைசி பாதுகாப்பிடமான அரண் சூழ்ந்த சமாரியா நகரத்தை முற்றுகையிட்டு பொ.ச.மு. 740-ல் அதைக் கைப்பற்றின. (2 இரா. 17:1-6) யூதா, அதற்கு அருகிலிருந்த தேசமான இஸ்ரவேலுக்கு சம்பவித்ததிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறியது. ஆகவே அது பொ.ச.மு. 607-ல் அழிக்கப்பட்டது.

5இஸ்ரவேலின் ஆடம்பர வாழ்க்கையை ஆமோஸ் கண்டனம் செய்தார். ஏனெனில் செல்வந்தர், ‘யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தங்கள் வீடுகளைக்’ கட்டுவதற்காக தரித்திரரை வஞ்சித்தார்கள்; அந்த வீடுகளில் அவர்கள் மதுபானம் குடித்து, வெறித்து விருந்துண்டார்கள். (ஆமோ. 3:15; 5:11, 12; 6:4-7) இந்த ஆடம்பர வாழ்க்கைக்கான அத்தாட்சிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சமாரியாவை தோண்டி ஆராய்ந்ததில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட மிகுதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பரிசுத்த நகரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) பின்வருமாறு கூறுகிறது: “முக்கியமான இரண்டு தொகுதிகளைக் காண முடிகிறது: 1. அதிக புடைப்பு சிற்பவேலை (high relief) செய்யப்பட்ட பலகைகள், . . . 2. குறைவான புடைப்பு சிற்பவேலை (low relief) செய்யப்பட்ட பலகைகள், விலையுயர்ந்த கற்கள், பல நிற கண்ணாடி, பொன் தகடுகள் முதலியவை சேர்த்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. . . . யானை தந்தங்கள் ஃபொனீஷிய கால கலைப் படைப்புகளாக கருதப்படுகின்றன; அவை இஸ்ரவேல் அரசர்களின் அரண்மனை தட்டுமுட்டு சாமான்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆகாப் கட்டின ‘தந்த அரமனை’ பற்றியும் (1 இராஜாக்கள் 22:39) ஆமோஸின் கண்டன வார்த்தைகளில் (6:4) கூறப்பட்ட சமாரியாவின் ஆடம்பர வாழ்க்கையை அடையாளப்படுத்தின ‘தந்தக் கட்டில்களைப்’ பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது.” a

6ஆமோஸ் புத்தகம், பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்போஸ்தலர் 7:42, 43-ல் ஸ்தேவான் ஆமோஸிலிருந்து மூன்று வசனங்களை சுருக்கிக் கூறுவதும், அப்போஸ்தலர் 15:15-18-ல் யாக்கோபு இதிலிருந்து மேற்கோள் காட்டுவதும் இதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகின்றன.​—ஆமோ. 5:25-27; 9:11, 12.

ஆமோஸின் பொருளடக்கம்

7தேசங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்புகள் (1:1–2:3). “கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சி”ப்பார். (1:2) தேசங்களுக்கு எதிரான அவருடைய உக்கிரமான நியாயத்தீர்ப்புகளைக் குறித்து ஆமோஸ் எச்சரிக்கிறார். தமஸ்கு (சிரியா) கீலேயாத்தை இருப்பு கருவிகளினால் போரடித்தது. காத்சாவும் (பெலிஸ்தியா) தீருவும் சிறைப்பட்ட இஸ்ரவேலரை ஏதோமிடம் ஒப்படைத்தன. ஏதோமிலோ இரக்கமும் இல்லை, சகோதர அன்பும் இல்லை. அம்மோன் கீலேயாத்திற்குள் படையெடுத்தது. மோவாப், ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச் சுண்ணாம்புக்காக சுட்டெரித்தது. யெகோவா இந்த எல்லா தேசங்களுக்கு எதிராகவும் செயல்படுவார், அதைத் “திருப்பமாட்டேன்” என்று அவர் சொல்கிறார்.​—1:3, 6, 8, 9, 11, 13; 2:1.

8யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிரான நியாயத்தீர்ப்பு (2:4-16). யூதாவிற்கு எதிராக இருக்கும் தம்முடைய கோபத்தையும் யெகோவா திருப்பமாட்டார். அவர்கள் “கர்த்தருடைய வேதத்தை வெறுத்து”விட்டதால் பாவம் செய்திருக்கிறார்கள். (2:4) இஸ்ரவேலைப் பற்றியென்ன? பலம்படைத்த எமோரியரை யெகோவா அவர்களுக்காக நிர்மூலமாக்கி அந்த நல்ல தேசத்தை அவர்களுக்கு கொடுத்தார். அவர்களுக்குள்ளே நசரேயரையும் தீர்க்கதரிசிகளையும் ஏற்படுத்தினார். ஆனால் அவர்களோ நசரேயர் தங்கள் பொருத்தனையை மீறும்படி செய்வித்து தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்கள். (2:12) ஆகவே, புதிதாக அறுக்கப்பட்ட தானியத்தின் சுமையால் பளுவடைந்த வண்டியைப் போல் அவர்களுடைய அஸ்திவாரங்கள் அசையும்படி யெகோவா செய்கிறார். அவர்களுடைய பராக்கிரமசாலிகள் நிர்வாணிகளாக ஓடிப்போவார்கள்.

9இஸ்ரவேலிடம் கணக்கு கேட்டல் (3:1–6:14). மனதில் பதியவைக்கும் எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைப்பதே, யெகோவா பேசியிருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி என அறிவுறுத்துகிறார். “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தமது ஊழியருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். . . . கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பவன்?” (3:7, 8) சமாரியாவில் குடியிருக்கிற, ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிற மோசடிக்காரருக்கு எதிராக ஆமோஸ் கண்டிப்பாகவே தீர்க்கதரிசனம் சொல்கிறார். யெகோவா அவர்களுடைய ஆடம்பரமான கட்டில்களிலிருந்து அவர்களைத் தூக்கியெறிவார், தந்தத்தால் செய்யப்பட்ட அவர்களுடைய வீடுகள் அழிந்துபோகும்.

10யெகோவா, இஸ்ரவேலை தண்டித்ததையும் அவர்களுக்கு கொடுத்த திருத்தங்களையும் திரும்ப விவரிக்கிறார். “நீங்களோ என்னிடம் திரும்பாமற்போனீர்கள்” என அவர் ஐந்து தடவை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். ஆகையால், இஸ்ரவேலே, “உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.” (4:6-12) தீர்க்கதரிசன புலம்பல் ஒன்றை ஆமோஸ் கூறுகிறார்: “இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை.” (5:2) இருந்தாலும், வானத்திலும் பூமியிலும் அதிசயமான காரியங்களைச் செய்யும் யெகோவா, இஸ்ரவேல் தம்மைத் தேடவும், அழியாமல் வாழவும் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். ஆம், “நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்.” (5:4, 6, 14) ஆனால் யெகோவாவின் நாளில் அவர்களுக்கு என்ன நேரிடும்? அது அவர்களுக்கு ஆபத்தைக் குறிக்கும் நாள். பெருவெள்ளத்தைப் போல் அது அவர்களை தமஸ்குவுக்கு அப்பால் அடித்துக்கொண்டு செல்லும். சவுக்கியமாய் சயனித்து, விருந்துகளைக் கொண்டாடிய தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த வீடுகள் குப்பைக் கூளங்களாக்கப்படும்.

11எதிர்ப்பின் மத்தியிலும் ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைக்கிறார் (7:1-17). இஸ்ரவேலின் நடுவில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு தூக்குநூலை யெகோவா அந்தத் தீர்க்கதரிசிக்கு காட்டுகிறார். இனிமேலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. அவர் இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்களை பாழாக்கி, இரண்டாம் யெரொபெயாமின் வீட்டாருக்கு விரோதமாக ஒரு பட்டயத்துடன் எழும்புவார். பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா யெரொபெயாமிடம் ஆள் அனுப்பி, “ஆமோஸ் . . . உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான் [“சதி செய்கிறான்,” NW]” என்று சொல்லுகிறான். (7:10) ஆமோஸ் யூதாவுக்கு சென்று தன் தீர்க்கதரிசனத்தை உரைக்கும்படி அமத்சியா சொல்கிறான். ஆமோஸோ தனக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்பதைத் தெளிவாக்குகிறார்: “மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.” (7:15) பின்பு அமத்சியாவுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் பெரும் தீங்கு வரும் என ஆமோஸ் முன்னறிவிக்கிறார்.

12ஒடுக்கப்படுதலும் தண்டனையும் திரும்ப நிலைநாட்டப்படுதலும் (8:1–9:15). பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையை யெகோவா ஆமோஸுக்கு காட்டுகிறார். இஸ்ரவேலர் ஏழைகளை ஒடுக்குவதை அவர் கண்டனம் செய்கிறார்; அவர்களுடைய கெட்ட செயல்களின் காரணமாக அவர்கள் துக்கிக்க வேண்டும் என “யாக்கோபுடைய மகிமையின்பேரில்” ஆணையிடுகிறார். “இதோ, நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” (8:7, 11) அவர்கள் கீழே விழுவார்கள், இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள். அவர்கள் பாதாளத்திற்குள் பதுங்கிக்கொண்டாலும் சரி வானங்களில் ஏறி மறைந்துகொண்டாலும் சரி யெகோவாவின் கரம் அவர்களைப் பிடித்துவிடும். அவருடைய ஜனத்திலுள்ள பாவிகள் பட்டயத்தால் சாவார்கள். அதற்கு பிறகு, மகிமையான ஒரு வாக்கு கொடுக்கிறார்! “அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, . . . பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்.” (9:12) திரும்ப கூட்டிச்சேர்க்கப்பட்ட சிறைப்பட்டோர் அபரிமிதமான செழுமையை அனுபவிப்பார்கள். அப்போது அறுவடை செய்கிறவன் ஏராளமான பயிரை அறுத்து சேர்ப்பதற்கு முன்பாக, உழுகிறவன் அவனை முந்திக்கொள்வான். யெகோவாவிடமிருந்து வரும் இந்த ஆசீர்வாதங்கள் நிலையாய் இருக்கும்!

ஏன் பயனுள்ளது

13இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் அக்கம்பக்கத்தில் வாழ்ந்த மற்ற தேசத்தாருக்கும் ஆமோஸ் அறிவித்த எச்சரிக்கைகளின் காரணத்தைக் கவனித்தால் இன்று பைபிளை வாசிப்பவர்களும் நன்மையடையலாம். யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித் தள்ளுவோர், ஏழைகளை ஏமாற்றி ஒடுக்குவோர், பேராசை பிடித்த ஒழுக்கங்கெட்டோர், விக்கிரகாராதனையில் ஈடுபடுவோர் போன்றவர்கள் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. ஆனால் இத்தகைய காரியங்களை விட்டு விலகி மனந்திரும்புவோரை யெகோவா மன்னிக்கிறார், அவர்களுக்கு இரக்கமும் காண்பிக்கிறார். இந்தப் பொல்லாத உலகின் கறைப்படுத்தும் கூட்டுறவுகளைவிட்டு பிரிந்து, “என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்” என்ற யெகோவாவின் அறிவுரைக்கு செவிகொடுப்பதே ஞானமான காரியமாகும்.​—5:4, 6, 14.

14ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரிக்கவிருந்த சமயத்தில் ஆமோஸிலிருந்து மேற்கோள் காட்டினார். மோளோகு, ரெம்பான் போன்ற அன்னிய தெய்வங்களின் விக்கிரக வணக்கத்தில் ஈடுபட்டதே இஸ்ரவேல் நாடுகடத்தப்பட்டதற்கு காரணம் என அவர் அந்த யூதர்களுக்கு நினைப்பூட்டினார். ஆமோஸின் வார்த்தைகள் திரும்ப கூறப்படுவதைக் கேட்ட அந்த யூதர்கள் பயனடைந்தார்களா? இல்லை! அவர்கள் மூர்க்கமடைந்து ஸ்தேவானைக் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்வாறு பொ.ச. 70-ல் எருசலேமோடு சேர்த்து மீண்டும் அழிக்கப்பட தகுதியுள்ளவர்களாக இருந்தார்கள்.​—ஆமோ. 5:25-27; அப். 7:42, 43.

15ஆமோஸின் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதைக் கவனிப்பது அதிக பயனுள்ளது. இஸ்ரவேலையும் யூதாவையும் மற்ற தேசங்களையும் தண்டிப்பதில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை மட்டுமல்ல, திரும்ப நிலைநாட்டப்படுதல் சம்பந்தமாக நிறைவேறிய தீர்க்கதரிசனங்களையும் கவனிப்பது பயனுள்ளது. ஆமோஸ் மூலமாக யெகோவா கூறியபடியே சிறைப்பட்டு சென்ற இஸ்ரவேலர் பொ.ச.மு. 537-ல் திரும்பி வந்தனர். அப்போது பாழாக்கப்பட்ட தங்கள் நகரங்களைக் கட்டி திராட்சை தோட்டங்களையும் மற்ற தோட்டங்களையும் நாட்டி மகிழ்ந்தனர்.​—ஆமோ. 9:14; எஸ்றா 3:1.

16எனினும், ஆமோஸ் தீர்க்கதரிசனம் அப்போஸ்தலரின் நாட்களில் மகிமையான, பலப்படுத்தும் ஒரு நிறைவேற்றத்தைக் கண்டது. புறஜாதியாரும் கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச்சேர்க்கப்படுவதைப் பற்றி ஆவியின் தூண்டுதலினால் யாக்கோபு பேசினார். அப்போது ஆமோஸ் 9:11, 12-ல் உள்ள தீர்க்கதரிசனத்தில் இது முன்னறிவிக்கப்பட்டது என்றும் விளக்கினார். ‘விழுந்துபோன தாவீதின் கூடாரம் மறுபடியும் கட்டப்படுவது’ கிறிஸ்தவ சபையில் நிறைவேறியது என்றார். மேலும், “அந்த மனிதரில் மீந்திருப்போர், என் பெயரால் அழைக்கப்படுகிற ஜனமாகிய சகல தேசத்தாரோடுகூட யெகோவாவை ஊக்கமாக தேடுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார். மேலுமாக, கடவுள் ‘தம்முடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தை’ தேசங்களிலிருந்து எடுக்கிறார் என சீமோன் பேதுரு கூறினார். இந்தப் புதிய முன்னேற்றத்திற்கான வேதப்பூர்வமான ஆதாரம் இதுதான்.​—அப். 15:13-19, NW.

17இந்தக் கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்து “தாவீதின் குமாரன்” என்றும் பைபிளில் அழைக்கப்படுகிறார். இவர், “அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை” சுதந்தரித்து என்றென்றும் ஆளுகை செய்வார். (லூக். 1:32, 33; 3:31) இவ்வாறு, ஒரு ராஜ்யத்திற்காக தாவீதுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையின் எதிர்கால நிறைவேற்றத்தை ஆமோஸ் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. ஆமோஸ் புத்தகத்தின் முடிவான வார்த்தைகள், “தாவீதின் கூடாரத்தை” எழுப்பும் காலத்தில் பொங்கிவழியும் செழுமையின் அதிசயமான முன்காட்சியை அளிக்கின்றன. அதோடுகூட, கடவுளுடைய ராஜ்யத்தின் நிலையான தன்மையையும் அவை வலியுறுத்துகின்றன: “அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.” “தாவீதின் கூடாரத்தை” யெகோவா முழுமையாக திரும்ப நிலைநாட்டும்போது பூமியில் நித்திய ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியும்!​—ஆமோ. 9:13-15.

[அடிக்குறிப்பு]

a 1978, எருசலேம், பக்கம் 1046.

[கேள்விகள்]

1. ஆமோஸ் யார்?

2. ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த காலப்பகுதியை எவ்வாறு தீர்மானிக்கலாம்?

3. (அ) ஆமோஸின் பாரமிக்க செய்தி ஏன் காலத்திற்கு ஏற்றதாயிருந்தது? (ஆ) அவர் யெகோவாவின் பேரரசுரிமையை எவ்வாறு மகிமைப்படுத்தினார்?

4. எந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் ஆமோஸ் புத்தகத்தின் நம்பகத் தன்மைக்கு சாட்சி பகருகிறது?

5. ஆமோஸிலுள்ள பதிவை தொல்பொருள் ஆராய்ச்சி எவ்வாறு உறுதிசெய்கிறது?

6. ஆமோஸின் நம்பகத் தன்மையை எது உறுதிப்படுத்துகிறது?

7. எந்தத் தேசங்களுக்கு எதிராக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை ஆமோஸ் எச்சரிக்கிறார்?

8. யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் ஏன் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிராக அறிவிக்கப்படுகின்றன?

9. யெகோவா பேசியிருக்கிறார் என்பதை எது நிரூபிக்கிறது, முக்கியமாய் யாருக்கு எதிராக ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?

10. யெகோவா இஸ்ரவேலுக்கு எதை நினைப்பூட்டுகிறார், ஆபத்தைக் குறிக்கும் என்ன நாள் வரவிருக்கிறது?

11. ஆமோஸ், யாருடைய அதிகாரத்தின் காரணமாக இஸ்ரவேலுக்கு எதிராக தொடர்ந்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார்?

12. இஸ்ரவேலில் என்ன பஞ்சம் ஏற்படும் என முன்னறிவிக்கப்படுகிறது, ஆனால் மகிமையான என்ன வாக்குறுதியுடன் இந்தத் தீர்க்கதரிசனம் முடிகிறது?

13. ஆமோஸின் எச்சரிக்கைகளிலிருந்து இன்று நாம் எவ்வாறு பயனடையலாம்?

14. ஸ்தேவானின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் ஆமோஸின் நினைப்பூட்டுதல்களிலிருந்து பயனடைந்தார்களா?

15. திரும்ப நிலைநாட்டப்படுதல் பற்றிய என்ன தீர்க்கதரிசனங்கள் கவனிப்பதற்கு பயனுள்ளவை?

16. ஆமோஸ் 9:11, 12 வசனங்கள் கிறிஸ்தவ சபையில் நிறைவேற்றமடைந்ததை யாக்கோபு எவ்வாறு குறிப்பிட்டார்?

17. கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்ததில் என்ன செழுமையையும் நிலையான தன்மையையும் ஆமோஸ் முன்னறிவிக்கிறது?