ஆதியாகமம் 29:1-35

29  அதன்பின், யாக்கோபு அங்கிருந்து புறப்பட்டு, கிழக்கத்திய தேசத்துக்குப் போனார்.  அங்கே வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தார். அதன் பக்கத்தில் மூன்று ஆட்டு மந்தைகள் படுத்துக் கிடந்தன. வழக்கமாக, அந்தக் கிணற்றிலிருந்துதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.  மந்தைகளெல்லாம் அங்கு வந்துசேர்ந்ததும், மேய்ப்பர்கள் அந்தக் கல்லை உருட்டிவிட்டு, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். பின்பு, மறுபடியும் அந்தக் கல்லால் கிணற்றை மூடிவிடுவார்கள்.  யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “சகோதரர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரானிலிருந்து+ வருகிறோம்” என்றார்கள்.  அவர்களிடம் அவர், “நாகோரின்+ பேரன் லாபானை+ உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அவர்கள், “தெரியும்” என்றார்கள்.  அதற்கு யாக்கோபு, “அவர் எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார். “நன்றாக இருக்கிறார். இதோ! அவருடைய மகள் ராகேல்+ ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்றார்கள்.  பின்பு அவர், “மத்தியானம்தான் ஆகிறது. ஆடுகளைப் பட்டியில் அடைக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதனால், இந்த ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டிவிட்டு மேயவிடலாம், இல்லையா?” என்றார்.  அதற்கு அவர்கள், “முதலில் எல்லா மந்தைகளும் வந்துசேர வேண்டும். அப்புறம்தான் கிணற்றின் மேலிருக்கிற கல்லை உருட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்று சொன்னார்கள்.  இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் அப்பாவின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள். 10  யாக்கோபு தன்னுடைய தாய்மாமன் லாபானின் மகளான ராகேல் ஆடுகளுடன் வருவதை பார்த்ததும், கிணற்றின் மேலிருந்த கல்லை உருட்டி, லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினார். 11  பின்பு, ராகேலுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, ஓவென்று அழுதார். 12  அதன்பின், தான் அவளுடைய அத்தை ரெபெக்காளின் மகன் என்று சொன்னார். உடனே அவள் ஓடிப்போய்த் தன்னுடைய அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னாள். 13  லாபான்+ தன்னுடைய தங்கையின் மகன் யாக்கோபைப் பற்றிக் கேட்டவுடன், அவரைப் பார்க்க ஓடினார். பின்பு, யாக்கோபைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். நடந்த எல்லாவற்றையும் லாபானிடம் யாக்கோபு சொன்னார். 14  அப்போது லாபான், “நீ எனக்கு இரத்த சொந்தம்”* என்றார். யாக்கோபு அவருடன் ஒரு மாதம் முழுவதும் தங்கியிருந்தார். 15  பின்பு லாபான் யாக்கோபிடம், “நீ என் சொந்தக்காரன்+ என்பதற்காக எனக்குச் சும்மா வேலை செய்ய வேண்டியதில்லை. சொல், உனக்கு என்ன சம்பளம்+ வேண்டும்?” என்று கேட்டார். 16  லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். பெரியவள் பெயர் லேயாள், சின்னவள் பெயர் ராகேல்.+ 17  லேயாளுடைய கண்கள் வசீகரமாக இல்லை. ஆனால், ராகேல் ரொம்ப அழகாகவும் லட்சணமாகவும் இருந்தாள். 18  யாக்கோபு ராகேலைக் காதலித்தார். அதனால் அவர் லாபானிடம், “உங்களுடைய இரண்டாவது பெண் ராகேலுக்காக உங்களிடம் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்,+ அவளை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார். 19  அதற்கு லாபான், “யாரோ ஒருவனுக்கு அவளைக் கொடுப்பதைவிட உனக்குக் கொடுப்பது நல்லதுதான். சரி, என்னுடனேயே தங்கியிரு” என்று சொன்னார். 20  யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+ ஆனாலும், அவள்மேல் இருந்த காதலால் அந்த ஏழு வருஷங்கள் சில நாட்கள் போல உருண்டோடிவிட்டன. 21  பின்பு யாக்கோபு லாபானிடம், “ஏழு வருஷங்கள் முடிந்துவிட்டன, என் மனைவியை எனக்குக் கொடுங்கள். நான் அவளோடு குடும்பம் நடத்த* வேண்டும்” என்றார். 22  அதனால், லாபான் அந்த ஊர் ஜனங்களைக் கூப்பிட்டு கல்யாண விருந்து வைத்தார். 23  ஆனால், சாயங்காலத்தில் ராகேலுக்குப் பதிலாக லேயாளைக் கூட்டிக்கொண்டு போய் யாக்கோபிடம் விட்டார். யாக்கோபு அவளோடு உறவுகொண்டார். 24  லாபான் தன்னுடைய வேலைக்காரி சில்பாளைத் தன் மகள் லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தார்.+ 25  காலையில் யாக்கோபு எழுந்து பார்த்தபோது அவருடன் லேயாள் படுத்திருந்தாள்! அதனால் அவர் லாபானிடம் போய், “ஏன் இப்படிச் செய்தீர்கள்? நான் ராகேலுக்காகத்தானே உங்களிடம் வேலை செய்தேன்? ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?”+ என்று கேட்டார். 26  அதற்கு லாபான், “பெரியவள் இருக்கும்போது சின்னவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கம் இல்லை. 27  இந்த வாரம் முழுக்க இவளோடு இரு. அதற்கு அப்புறம் அவளையும் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், இன்னும் ஏழு வருஷங்கள் நீ எனக்கு வேலை செய்ய வேண்டும்”+ என்றார். 28  யாக்கோபு அந்த வாரம் அவளோடு இருந்தார். பின்பு லாபான், தன்னுடைய மகள் ராகேலையும் அவருக்கு மனைவியாகக் கொடுத்தார். 29  லாபான் தன்னுடைய வேலைக்காரி பில்காளைத்+ தன் மகள் ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தார்.+ 30  அதன்பின், யாக்கோபு ராகேலுடனும் உறவுகொண்டார். அவர் லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்து, லாபானிடம் இன்னும் ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+ 31  லேயாளுக்கு அன்பு கிடைக்காததை யெகோவா பார்த்தபோது அவளுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார்.+ ஆனால் ராகேலுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.+ 32  லேயாள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “யெகோவா என்னுடைய கஷ்டத்தைப் பார்த்திருக்கிறார்,+ இப்போது என் கணவர் என்னை நேசிப்பார்” என்று சொல்லி அவனுக்கு ரூபன்*+ என்று பெயர் வைத்தாள். 33  அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “அன்பு கிடைக்காத இந்தப் பெண்ணின் புலம்பலைக் கேட்டு யெகோவா இவனையும் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன்*+ என்று பெயர் வைத்தாள். 34  அவள் திரும்பவும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “என் கணவருக்கு நான் மூன்று மகன்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன், இனிமேல் அவர் என்னிடம் நெருக்கமாக இருப்பார்” என்று சொல்லி அவனுக்கு லேவி*+ என்று பெயர் வைத்தாள். 35  அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “எலும்பும் சதையுமானவன்.”
நே.மொ., “உறவுகொள்ள.”
அர்த்தம், “இதோ, ஒரு மகன்!”
அர்த்தம், “கேட்பது.”
அர்த்தம், “இணைந்திருப்பது; நெருங்கியிருப்பது.”
அர்த்தம், “புகழப்படுவது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா