ஆதியாகமம் 30:1-43

30  ராகேலுக்குக் குழந்தை இல்லாததால் அவள் தன்னுடைய அக்காவைப் பார்த்துப் பொறாமைப்பட்டாள். பின்பு யாக்கோபிடம், “எனக்குக் குழந்தை வேண்டும், இல்லாவிட்டால் நான் செத்துப்போவேன்” என்று புலம்பினாள்.  அதனால், யாக்கோபுக்கு ராகேல்மேல் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. “நான் என்ன கடவுளா? அவர்தானே உனக்குக் குழந்தை பாக்கியம் தராமல் இருக்கிறார்” என்று சொன்னார்.  அதற்கு அவள், “என் அடிமைப் பெண் பில்காளை+ உங்களுக்குக் கொடுக்கிறேன். அவள் மூலமாக எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்” என்று சொல்லி,  தன் வேலைக்காரி பில்காளை அவருக்கு மனைவியாகக் கொடுத்தாள். யாக்கோபு அவளோடு உறவுகொண்டார்.+  பில்காள் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள்.  அப்போது ராகேல், “கடவுள் என்னுடைய நீதிபதியாக இருந்து, என் அழுகையைக் கேட்டு, ஒரு மகனைத் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு தாண்*+ என்று பெயர் வைத்தாள்.  ராகேலின் வேலைக்காரி பில்காள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள்.  அப்போது ராகேல், “என் அக்காவோடு கஷ்டப்பட்டுப் போராடி, வெற்றியும் பெற்றிருக்கிறேன்!” என்று சொல்லி அவனுக்கு நப்தலி*+ என்று பெயர் வைத்தாள்.  லேயாளுக்குக் கொஞ்சக் காலமாகக் குழந்தை பிறக்காததால் தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.+ 10  லேயாளின் வேலைக்காரி சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 11  அப்போது லேயாள், “எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது!” என்று சொல்லி அவனுக்கு காத்*+ என்று பெயர் வைத்தாள். 12  பின்பு, லேயாளின் வேலைக்காரி சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 13  அப்போது லேயாள், “எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது! பெண்கள் கண்டிப்பாக என்னைச் சந்தோஷமானவள் என்று புகழ்வார்கள்”+ என்று சொல்லி அவனுக்கு ஆசேர்*+ என்று பெயர் வைத்தாள். 14  கோதுமை அறுவடை நடந்த காலத்தில், ரூபன்+ ஒருநாள் காட்டுவெளியில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அங்கே சில பழங்களை* பார்த்து, அதைக் கொண்டுவந்து தன்னுடைய அம்மா லேயாளிடம் கொடுத்தான். அப்போது ராகேல், “உன் மகன் கொண்டுவந்த பழங்களைத் தயவுசெய்து எனக்கும் கொஞ்சம் தா” என்று லேயாளிடம் கேட்டாள். 15  அதற்கு லேயாள், “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது போதாதா?+ இப்போது என் மகன் கொண்டுவந்த பழங்களையும் கேட்கிறாயா?” என்றாள். அப்போது ராகேல், “சரி சரி, உன் மகன் கொண்டுவந்த பழங்களுக்குப் பதிலாக இன்று ராத்திரி அவர் உன்னோடு படுத்துக்கொள்ளட்டும்” என்று சொன்னாள். 16  சாயங்காலத்தில் யாக்கோபு வயல்வெளியிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது லேயாள் அவரிடம் போய், “இன்றைக்கு ராத்திரி நீங்கள் என்னோடுதான் படுத்துக்கொள்ள வேண்டும். அதற்குக் கூலியாக, என் மகன் கொண்டுவந்த பழங்களைக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னாள். அதனால் அவர் அன்றைக்கு ராத்திரி அவளோடு படுத்தார். 17  லேயாளுடைய ஜெபத்துக்குக் கடவுள் பதில் தந்தார். அவள் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஐந்தாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 18  அப்போது லேயாள், “என்னுடைய வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்ததால் கடவுள் எனக்கு நல்ல கூலியைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார்*+ என்று பெயர் வைத்தாள். 19  லேயாள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள்.+ 20  அப்போது லேயாள், “கடவுள் எனக்கு அருமையான பரிசைக் கொடுத்திருக்கிறார். என் கணவர் இனி என்னை ஏற்றுக்கொள்வார்.+ அவருக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன்”+ என்று சொல்லி அந்த மகனுக்கு செபுலோன்*+ என்று பெயர் வைத்தாள். 21  பிற்பாடு ஒரு மகளைப் பெற்றெடுத்து, அவளுக்கு தீனாள்+ என்று பெயர் வைத்தாள். 22  கடைசியில், ராகேலுக்குக் கடவுள் கருணை காட்டினார்.* அவளுடைய ஜெபத்தைக் கேட்டு, அவளுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார்.*+ 23  அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தபோது, “கடவுள் என் அவமானத்தை நீக்கிவிட்டார்!”+ என்று சொன்னாள். 24  பின்பு, “யெகோவா எனக்கு இன்னும் ஒரு மகனைச் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு யோசேப்பு*+ என்று பெயர் வைத்தாள். 25  ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்ததும் லாபானிடம் யாக்கோபு, “நான் என்னுடைய தேசத்துக்கே திரும்பிப் போக வேண்டும்,+ அனுமதி கொடுங்கள். 26  என் மனைவிகளையும் பிள்ளைகளையும் என்னோடு அனுப்பி வையுங்கள். அவர்களுக்காகத்தானே உங்களிடம் வேலை செய்தேன்.+ அதுவும் எவ்வளவு நேர்மையாக வேலை செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்” என்றார். 27  அதற்கு லாபான், “தயவுசெய்து என்னுடனேயே இரு. உன்னால்தான் யெகோவா என்னை ஆசீர்வதிக்கிறாரென்று சகுனம்* பார்த்துத் தெரிந்துகொண்டேன்” என்றார். 28  “உனக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமோ கேள், தருகிறேன்”+ என்றும் சொன்னார். 29  அதற்கு யாக்கோபு, “நான் உங்களுக்கு எப்படியெல்லாம் வேலை செய்தேன், உங்கள் மந்தைகளை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டேன் என்று உங்களுக்கே தெரியும்.+ 30  நான் வருவதற்கு முன்பு உங்கள் மந்தையில் கொஞ்சம் ஆடுகள்தான் இருந்தன. ஆனால், அதற்குப்பின் ஏராளமாகப் பெருகிவிட்டன. நான் வந்த சமயத்திலிருந்து யெகோவா உங்களை நிறைய ஆசீர்வதித்திருக்கிறார். இப்போது நான் என்னுடைய குடும்பத்துக்காக உழைக்க வேண்டாமா?”+ என்றார். 31  அதற்கு லாபான், “உனக்கு நான் என்ன தர வேண்டும்?” என்று கேட்டார். அப்போது யாக்கோபு, “எனக்கு ஒன்றும் தர வேண்டாம்! நான் எப்போதும்போல் உங்கள் மந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள+ வேண்டுமென்றால் ஒரேவொரு காரியம் மட்டும் செய்யுங்கள். 32  இன்றைக்கு உங்களுடைய எல்லா ஆடுகளையும் போய்ப் பார்க்கலாம். புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருக்கிற செம்மறியாடுகளையும் பெண் வெள்ளாடுகளையும், கரும்பழுப்பு நிறத்தில் இருக்கிற செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் தனியாகப் பிரித்துவிடுங்கள். இனிமேல் பிறக்கிற இந்த மாதிரியான ஆடுகளை என் சம்பளமாகக் கொடுங்கள்.+ 33  அப்படி எனக்குச் சம்பளமாகக் கிடைக்கும் ஆடுகளை நீங்கள் பார்க்க வரும்போது என்னுடைய நேர்மையைத் தெரிந்துகொள்வீர்கள். புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இல்லாத பெண் வெள்ளாடுகளும், கரும்பழுப்பு நிறத்தில் இல்லாத செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளும் என்னுடைய மந்தையில் இருந்தால், அவற்றை நான் திருடியதாக வைத்துக்கொள்ளலாம்” என்று சொன்னார். 34  அதற்கு லாபான், “சரி, நீ சொன்னபடியே செய்யலாம்”+ என்றார். 35  அன்றைக்கே, வரிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருந்த வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ இருந்த பெண் வெள்ளாடுகளையும், வெள்ளைத் திட்டுகள் இருந்த எல்லா ஆடுகளையும், கரும்பழுப்பு நிறத்தில் இருந்த செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் பிரித்து தன் மகன்களிடம் ஒப்படைத்தார். 36  அதன்பின், மூன்று நாள் பயண தூரத்தில் இருக்கும் ஓர் இடத்துக்கு அந்த மந்தையைக் கொண்டுபோனார். மிச்சமிருந்த லாபானின் ஆடுகளை யாக்கோபு மேய்த்துவந்தார். 37  பின்பு, வாதுமை மரத்திலிருந்தும் அர்மோன் மரத்திலிருந்தும் மற்ற மரங்களிலிருந்தும்* பச்சைக் கொம்புகளை வெட்டி, இடையிடையே பட்டைகளை உரித்தார். அதனால் அங்கங்கே வெள்ளையாகத் தெரிந்தன. 38  தண்ணீர் குடிக்க வரும் ஆடுகள் அந்த மரக்கொம்புகளுக்கு முன்னால் இணைசேர வேண்டும் என்பதற்காக அவற்றைத் தண்ணீர்த் தொட்டிகளில் போட்டுவைத்தார். 39  அந்த மரக்கொம்புகளுக்கு முன்னால் ஆடுகள் இணைசேர்ந்து, வரிகளோ புள்ளிகளோ கலப்புநிறத் திட்டுகளோ உள்ள குட்டிகளைப் போட்டன. 40  பின்பு, செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளை யாக்கோபு பிரித்து வைத்தார். பிற்பாடு, லாபானின் மந்தைகளில் இருந்த வரிகளுள்ள ஆடுகளையும் கரும்பழுப்பு நிற ஆடுகளையும் பார்த்தபடி மற்ற ஆடுகளை நிற்க வைத்தார். அதன்பின் தன்னுடைய ஆடுகளை லாபானுடைய ஆடுகளோடு சேர்க்காமல் தனியாகப் பிரித்து வைத்தார். 41  கொழுத்த ஆடுகள் இணைசேர்ந்த சமயங்களில் அவற்றின் கண்களில் படுமாறு அந்த மரக்கொம்புகளைத் தண்ணீர்த் தொட்டிகளில் போட்டுவைத்தார். 42  ஆனால், நோஞ்சான் ஆடுகளுக்கு முன்பாக அவற்றைப் போடவில்லை. அதனால், நோஞ்சான் ஆடுகள் எல்லாமே லாபானுக்குப் போய்ச் சேர்ந்தன, கொழுத்த ஆடுகள் எல்லாமே யாக்கோபுக்கு வந்து சேர்ந்தன.+ 43  இப்படி, யாக்கோபு பெரிய பணக்காரராக ஆனார். அவருக்கு ஏராளமான ஆடுகளும் ஒட்டகங்களும் கழுதைகளும் இருந்தன, நிறைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

அர்த்தம், “நீதிபதி.”
அர்த்தம், “என் போராட்டம்.”
அர்த்தம், “பாக்கியம்.”
அர்த்தம், “சந்தோஷம்; சந்தோஷமாக.”
நே.மொ., “காட்டுச்சூட்டிப் பழங்களை.” இந்தப் பழங்கள் கருத்தரிக்க உதவியதாக நம்பப்பட்டது.
அர்த்தம், “இவன்தான் கூலி.”
அர்த்தம், “ஏற்றுக்கொள்வது.”
நே.மொ., “ராகேலைக் கடவுள் நினைத்துப் பார்த்தார்.”
நே.மொ., “அவளுடைய கருப்பையைத் திறந்தார்.”
யொசிபியா என்ற பெயரின் சுருக்கம். அர்த்தம், “‘யா’ சேர்க்கட்டும் (அதிகரிக்கட்டும்).”
வே.வா., “அத்தாட்சி.”
எபிரெயுவில், “லிவ்னே மரங்களிலிருந்தும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா