ஆதியாகமம் 47:1-31

47  பின்பு யோசேப்பு பார்வோனிடம் வந்து,+ “என் அப்பாவும் சகோதரர்களும் தங்களுடைய மந்தைகளோடும் மற்ற எல்லாவற்றோடும் கானான் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் கோசேனில்+ இருக்கிறார்கள்” என்று சொன்னார்.  அதன்பின், தன்னுடைய சகோதரர்களில் ஐந்து பேரைக் கூட்டிக்கொண்டு போய் பார்வோனின் முன்னால் நிறுத்தினார்.+  அப்போது பார்வோன் யோசேப்பின் சகோதரர்களிடம், “நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “உங்கள் அடிமைகளாகிய நாங்கள் எங்களுடைய முன்னோர்களைப் போல ஆடு மேய்த்துவருகிறோம்”+ என்றார்கள்.  அதோடு, “கானான் தேசத்தில் பஞ்சம் கடுமையாக இருக்கிறது.+ எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. அதனால், இந்தத் தேசத்தில் அன்னியர்களாய்க் குடியிருப்பதற்காக வந்திருக்கிறோம்.+ உங்கள் அடிமைகளாகிய நாங்கள் கோசேனில் குடியிருப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள்”+ என்றார்கள்.  அப்போது பார்வோன் யோசேப்பைப் பார்த்து, “உன்னுடைய அப்பாவும் சகோதரர்களும் உன்னைத் தேடி வந்திருக்கிறார்கள்.  எகிப்து தேசமே உன் கையில் இருக்கிறது. இங்கு இருக்கிற இடங்களிலேயே நல்ல இடமான கோசேனில்+ அவர்களைக் குடி வை. அவர்களில் திறமைசாலிகள் யாராவது இருந்தால், என்னுடைய மந்தைகளைக் கவனிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்” என்றான்.  பின்பு, யோசேப்பு தன்னுடைய அப்பா யாக்கோபை பார்வோனிடம் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். யாக்கோபு பார்வோனை வாழ்த்தினார்.  அப்போது பார்வோன் யாக்கோபைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டான்.  அதற்கு யாக்கோபு, “எனக்கு 130 வயதாகிறது. இத்தனை வருஷங்களாக என் முன்னோர்களைப் போலவே நாடோடியாக* வாழ்ந்துவருகிறேன்.+ அவர்களைப் போல நான் நிறைய காலம் வாழாவிட்டாலும், வாழ்ந்த இந்தக் கொஞ்சக் காலத்திலேயே நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன்”+ என்றார். 10  அதன்பின், யாக்கோபு பார்வோனை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுப் போனார். 11  பார்வோன் கட்டளை கொடுத்தபடியே, யோசேப்பு தன்னுடைய அப்பாவையும் சகோதரர்களையும் எகிப்து தேசத்தில் குடிவைத்தார். தேசத்திலேயே மிகச் சிறந்த இடமாகிய ராமசேஸ் பகுதியில்+ ஓர் இடத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 12  யோசேப்பு தன்னுடைய அப்பாவுக்கும் சகோதரர்களுக்கும் அப்பாவின் குடும்பத்தாருக்கும், அவரவருடைய பிள்ளைகளின் எண்ணிக்கைப்படி தொடர்ந்து உணவு தந்தார். 13  எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலும் பஞ்சம் கடுமையாக இருந்ததால் உணவு இல்லாமல்போனது. அங்கிருந்த ஜனங்கள் பஞ்சத்தால் வாடினார்கள்.+ 14  எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களுக்குத் தானியம் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம்+ யோசேப்பு பார்வோனுடைய அரண்மனை கஜானாவில் சேர்த்துவைத்தார். 15  எகிப்திலும் கானானிலும் இருந்த ஜனங்களிடம் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர்கள் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, “எங்கள் பணமெல்லாம் தீர்ந்துவிட்டது! எங்களுக்கு உணவு கொடுங்கள். உங்கள் கண் முன்னால் நாங்கள் ஏன் சாக வேண்டும்?” என்றார்கள். 16  அதற்கு யோசேப்பு, “பணம் தீர்ந்துபோயிருந்தால், உங்கள் கால்நடைகளைக் கொண்டுவந்து கொடுங்கள். அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுக்கிறேன்” என்றார். 17  அதனால், அவர்கள் தங்களுடைய கால்நடைகளை யோசேப்பிடம் கொண்டுவரத் தொடங்கினார்கள். யோசேப்பு அவர்களுடைய குதிரைகளையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு உணவுப் பொருள்களைத் தந்தார். இப்படி, அந்த வருஷம் முழுவதும் அவர்களுடைய கால்நடைகளை வாங்கிக்கொண்டு உணவு தந்துகொண்டே இருந்தார். 18  அடுத்த வருஷம் அவர்கள் அவரிடம் வந்து, “எஜமானே, எங்கள் பணத்தையும் மந்தைகளையும் எஜமானாகிய உங்களிடம் ஏற்கெனவே கொடுத்துவிட்டோம் என்று உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களிடம் கொடுப்பதற்கு எங்களையும் எங்களுடைய நிலங்களையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. 19  உங்கள் கண் முன்னால் நாங்களும் எங்கள் நிலங்களும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு உணவு கொடுங்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாவோம், எங்கள் நிலங்களும் அவருக்குச் சொந்தமாகும். விதைப்பதற்கு விதைகளை எங்களுக்குக் கொடுங்கள். அப்போதுதான் நாங்கள் சாகாமல் இருப்போம், எங்கள் நிலங்களும் அழியாமல் இருக்கும்” என்றார்கள். 20  அதனால், யோசேப்பு எகிப்தியர்களுடைய எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கினார். பஞ்சம் மிகவும் கடுமையாக இருந்ததால் எகிப்தியர்கள் எல்லாரும் தங்களுடைய வயல்களை விற்றார்கள். அவை பார்வோனுக்குச் சொந்தமாயின. 21  பின்பு யோசேப்பு, எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லைவரை இருந்த ஜனங்களைப் பக்கத்து நகரங்களுக்குக் குடிமாற்றினார்.+ 22  பூசாரிகளுடைய நிலங்களை மட்டும் அவர் வாங்கவில்லை.+ அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை பார்வோன் கொடுத்துவந்ததால், அவர்கள் தங்களுடைய நிலங்களை விற்கவில்லை. 23  அப்போது யோசேப்பு ஜனங்களிடம், “உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக இன்று வாங்கியிருக்கிறேன். இப்போது உங்களுக்கு விதைகளைத் தருகிறேன், கொண்டுபோய் நிலத்தில் விதையுங்கள். 24  விளைச்சலில் ஐந்திலொரு பாகத்தை நீங்கள் பார்வோனுக்குக் கொடுக்க வேண்டும்.+ மீதி நான்கு பாகத்தை வயலில் விதைப்பதற்காகவும், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்பவர்களும் சாப்பிடுவதற்காகவும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். 25  அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ எங்கள் எஜமானே, நீங்கள் கருணை காட்டினால், நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருக்கிறோம்”+ என்றார்கள். 26  ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை யோசேப்பு சட்டமாக்கினார். இன்றுவரை அந்தச் சட்டம் எகிப்து தேசத்தில் இருந்துவருகிறது. பூசாரிகளின் நிலங்கள் மட்டும்தான் பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.+ 27  இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேனில் தொடர்ந்து குடியிருந்தார்கள்.+ அவர்கள் அங்கேயே வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகினார்கள்.+ 28  யாக்கோபு எகிப்து தேசத்தில் 17 வருஷங்கள் வாழ்ந்தார். அவர் மொத்தம் 147 வருஷங்கள் உயிர்வாழ்ந்தார்.+ 29  சாவு நெருங்கிவிட்டதை இஸ்ரவேல் உணர்ந்ததால்+ தன்னுடைய மகன் யோசேப்பைக் கூப்பிட்டு, “நீ எனக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால், என்மேல் இருக்கிற அன்பை விட்டுவிடாமல் எப்போதும் எனக்கு விசுவாசத்தோடு இருப்பாய் என்று தயவுசெய்து என்னுடைய தொடையின் கீழ் கையை வைத்து சத்தியம் செய்து கொடு.* நீ என்னை எகிப்தில் அடக்கம் செய்யக் கூடாது.+ 30  நான் இறந்த பின்பு தயவுசெய்து என்னை எகிப்திலிருந்து கொண்டுபோய் என்னுடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே* அடக்கம் செய்”+ என்றார். அதற்கு யோசேப்பு, “நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்றார். 31  அப்போது இஸ்ரவேல், “எனக்குச் சத்தியம் செய்து கொடு” என்றார். யோசேப்பும் சத்தியம் செய்து கொடுத்தார்.+ பின்பு, இஸ்ரவேல் தன்னுடைய கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து ஜெபம் செய்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அன்னியனாக.”
பழங்காலத்தில் இப்படித்தான் உறுதிமொழி கொடுத்தார்கள்.
வே.வா., “கல்லறையிலேயே.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா