எசேக்கியேல் 9:1-11

9  பின்பு என் காதுகள் கேட்க அவர் மிகவும் சத்தமாக, “இந்த நகரத்துக்குத் தண்டனை கொடுக்கப்போகிறவர்கள் பயங்கரமான* ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வரட்டும்!” என்று சொன்னார்.  அப்போது, வடக்கே பார்த்தபடி இருந்த உயர்ந்த நுழைவாசலின்+ திசையிலிருந்து ஆறு பேர் வருவதைப் பார்த்தேன். அடித்து நொறுக்குவதற்கான ஆயுதம் அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் இருந்தது. அவர்களோடு இருந்த இன்னொருவர் நாரிழை* உடையை உடுத்தியிருந்தார். செயலாளருடைய* மைப் பெட்டியை* இடுப்பில் வைத்திருந்தார். அவர்கள் எல்லாரும் செம்புப் பலிபீடத்துக்குப்+ பக்கத்தில் வந்து நின்றார்கள்.  அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது.+ பின்பு, நாரிழை உடையைப் போட்டுக்கொண்டு இடுப்பில் மைப் பெட்டியை வைத்திருந்தவரைக் கடவுள் கூப்பிட்டார்.  அவரிடம், “எருசலேம் நகரமெங்கும் போ. அங்கே நடக்கிற எல்லா அருவருப்புகளையும்+ பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் குமுறுகிற+ ஆட்களின் நெற்றியில் அடையாளம் போடு” என்று யெகோவா சொன்னார்.  பின்பு, என் காதுகளில் விழும்படி மற்ற ஆறு பேரிடம், “அவருக்குப் பின்னால் நகரமெங்கும் போய், ஜனங்களைக் கொன்றுபோடுங்கள். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாதீர்கள்; அவர்கள்மேல் கரிசனை காட்டாதீர்கள்.+  வயதானவர்கள், வாலிபர்கள், கன்னிப் பெண்கள், பிள்ளைகள், பெண்கள் என எல்லாரையும் கொன்றுபோடுங்கள்.+ ஆனால், நெற்றியில் அடையாளம் இருக்கிற யார்மேலும் கை வைக்காதீர்கள்.+ என்னுடைய ஆலயத்திலிருந்து ஆரம்பியுங்கள்”+ என்று சொன்னார். அதனால், ஆலயத்துக்குமுன் நின்றுகொண்டிருந்த பெரியோர்களை* அவர்கள் முதலில் கொன்றுபோட்டார்கள்.+  பின்பு கடவுள் அவர்களிடம், “ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் பிரகாரங்களில் பிணங்களைக் குவியுங்கள்.+ புறப்பட்டுப் போங்கள்!” என்று சொன்னார். அவர்களும் போய், நகரத்தில் இருந்த ஜனங்களைக் கொன்றுபோட்டார்கள்.  என்னைத் தவிர எல்லாரையும் அவர்கள் கொன்றுபோட்டார்கள். அதனால் நான் சாஷ்டாங்கமாக விழுந்து, “ஐயோ, உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! நீங்கள் எருசலேமின் மேல் உங்களுடைய கோபத்தைக் கொட்டும்போது, இஸ்ரவேலில் மீதியாயிருக்கிற எல்லாரையும் அழித்துவிடுவீர்களா?”+ என்று கேட்டேன்.  அதற்கு அவர், “இஸ்ரவேல் ஜனங்களும் யூதா வம்சத்தாரும் மகா பெரிய அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள்.+ தேசமெங்கும் இரத்தம் ஓடுகிறது,+ எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது.+ அவர்கள் எல்லாரும், ‘யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார், யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை’+ என்று சொல்லிக்கொள்கிறார்கள். 10  அவர்களைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ அவர்கள் செய்த குற்றங்களுக்கான விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி செய்வேன்” என்று சொன்னார். 11  பின்பு, நாரிழை உடையைப் போட்டுக்கொண்டு இடுப்பில் மைப் பெட்டியை வைத்திருந்தவர் திரும்பி வருவதைப் பார்த்தேன். அவர், “நீங்கள் சொன்னபடியே செய்து முடித்துவிட்டேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அழிப்பதற்கான.”
அதாவது, “லினன்.”
வே.வா., “எழுத்தருடைய.”
எழுதுகோல்களும் மையும் வைக்கப்பட்டிருந்த சின்ன டப்பி.
வே.வா., “மூப்பர்களை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா