எண்ணாகமம் 23:1-30

23  பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “இந்த இடத்தில் ஏழு பலிபீடங்களைக் கட்டி,+ ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எனக்காகக் கொண்டுவாருங்கள்” என்றான்.  பிலேயாம் சொன்னபடி பாலாக் உடனே செய்தான். அவர்கள் இரண்டு பேரும் ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினார்கள்.+  பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “உங்களுடைய தகன பலியின் பக்கத்திலேயே நில்லுங்கள், நான் போகிறேன். ஒருவேளை யெகோவா என்னைச் சந்திக்கலாம். அவர் எனக்குச் சொல்வதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான். அதன்பின், அவன் ஒரு குன்றின் மேல் ஏறிப்போனான்.  பிலேயாமைக் கடவுள் சந்தித்தார்.+ அப்போது அவன் அவரிடம், “நான் ஏழு பலிபீடங்களை வரிசையாக வைத்து, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினேன்” என்றான்.  யெகோவா பிலேயாமின் வாயில் தன்னுடைய வார்த்தைகளை அருளி,+ “நீ பாலாக்கிடம் போய் இதைப் பேசு” என்றார்.  அதன்படியே அவன் போனபோது, பாலாக்கும் மோவாபின் அதிகாரிகள் எல்லாரும் அவனுடைய தகன பலியின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.  அப்போது அவன், “மோவாப் ராஜா என்னை அராமிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்.+பாலாக் ராஜா என்னைக் கிழக்கு மலைகளிலிருந்து அழைத்து வந்தார். அவருக்காக யாக்கோபைச் சபிக்கச் சொன்னார். இஸ்ரவேலைக் கண்டனம் செய்யச் சொன்னார்.+   கடவுள் சபிக்காத ஜனங்களை நான் சபிக்க முடியுமா? யெகோவா கண்டனம் செய்யாத மக்களை நான் கண்டனம் செய்ய முடியுமா?+   குன்றின் உச்சியிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன்.கற்பாறையின் மேலிருந்து அவர்களைக் காண்கிறேன். அவர்கள் அங்கே தனியாக வாழ்கிறார்கள்.+மற்ற ஜனங்களிலிருந்து தாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று நினைக்கிறார்கள்.+ 10  மணல்போல் பரந்துகிடக்கும் யாக்கோபின் வம்சத்தை யாரால் எண்ண முடியும்?+இஸ்ரவேலில் கால்வாசியைக்கூட ஒருவராலும் எண்ண முடியாது. நேர்மையான ஜனங்களைப் போல நான் சாக வேண்டும்.அவர்களுக்கு வரும் முடிவைப் போல என் முடிவு இருக்க வேண்டும்” என்று பாடினான்.+ 11  பாலாக் இதைக் கேட்டதும் பிலேயாமிடம், “என்ன காரியம் செய்திருக்கிறாய்! என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லித்தானே உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன். ஆனால் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாயே”+ என்றான். 12  அதற்கு அவன், “யெகோவா என் வாயில் அருளுவதைத்தானே நான் பேச வேண்டும்?”+ என்றான். 13  அப்போது பாலாக், “தயவுசெய்து இன்னொரு இடத்துக்கு என்னோடு வா. அங்கே அவர்கள் எல்லாரையும் உன்னால் பார்க்க முடியாது, சிலரை மட்டும்தான் பார்க்க முடியும். எனக்காக அவர்களை அங்கிருந்து சபி”+ என்றான். 14  அதன்படியே, பிலேயாமை பிஸ்காவின் உச்சியிலுள்ள+ சோப்பீமின் வெட்டவெளிக்குக் கூட்டிக்கொண்டு போனான். அங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்.+ 15  அதன்பின் பிலேயாம் பாலாக்கிடம், “உங்களுடைய தகன பலிக்குப் பக்கத்திலேயே நில்லுங்கள். நான் போய் கடவுளிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்றான். 16  பின்பு, பிலேயாமை யெகோவா சந்தித்தார். அவனுடைய வாயில் வார்த்தைகளை அருளி,+ “நீ பாலாக்கிடம் போய் இதைப் பேசு” என்றார். 17  அதன்படியே, அவன் பாலாக்கிடம் வந்தான். அப்போது, பாலாக் தன்னுடைய தகன பலியின் பக்கத்தில் காத்துக்கொண்டிருந்தான். மோவாபின் அதிகாரிகள் அவனுடன் இருந்தார்கள். பாலாக் அவனிடம், “யெகோவா என்ன சொன்னார்?” என்று கேட்டான். 18  அதற்கு அவன், “பாலாக்கே, எழுந்து என் வார்த்தையைக் கேள். சிப்போரின் மகனே, நான் சொல்வதைக் கேள். 19  பொய் சொல்ல கடவுள் என்ன சாதாரண மனுஷனா?+மனம் மாறுவதற்கு அவர் என்ன மனுஷனா?+ அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா? அவர் சொன்னதை நிறைவேற்றாமல் இருப்பாரா?+ 20  இதோ! ஆசீர்வதிக்கும்படி எனக்குக் கட்டளை கிடைத்தது.கடவுள் ஆசீர்வதித்துவிட்டார்,+ என்னால் அதை மாற்ற முடியாது.+ 21  எந்த மந்திர சக்தியும் யாக்கோபிடம் பலிக்க அவர் விட மாட்டார்.எந்தக் கெடுதலும் இஸ்ரவேலுக்கு வர அவர் அனுமதிக்க மாட்டார். அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்.+அவர்களுடைய ராஜாவாக அவர் போற்றிப் புகழப்படுகிறார். 22  அவர்களை எகிப்திலிருந்து அவர் கூட்டிக்கொண்டு வருகிறார்.+ அவர்களுக்குக் காட்டு எருதின் கொம்புகள் போல அவர் இருக்கிறார்.+ 23  யாக்கோபுக்கு எதிராக யாரும் மாயமந்திரம் செய்ய முடியாது.+இஸ்ரவேலுக்கு எதிராக யாரும் குறிசொல்ல முடியாது.+ இப்போது யாக்கோபையும் இஸ்ரவேலையும் பார்த்து, ‘இதோ! கடவுள் செய்த அற்புதத்தைப் பாருங்கள்!’ என்று எல்லாரும் சொல்வார்கள். 24  இதோ! இந்த ஜனக்கூட்டம் சிங்கத்தைப் போல எழும்பும்.சிங்கத்தைப் போல நிமிர்ந்து நிற்கும்.+ இரையைத் தின்றுதீர்க்கும்வரை ஓயாது.இரத்தத்தைக் குடித்து முடிக்கும்வரை தூங்காது” என்று பாடினான்.+ 25  அதற்கு பாலாக் பிலேயாமிடம், “அவர்களை உன்னால் சபிக்க முடியாதென்றால் அவர்களை ஆசீர்வதிக்கவும் கூடாது” என்றான். 26  அதற்கு பிலேயாம், “‘யெகோவா சொல்கிறபடியெல்லாம் செய்வேன்’ என்று நான் உங்களிடம் சொல்லவில்லையா?”+ என்றான். 27  அப்போது பாலாக், “தயவுசெய்து என்னோடு வா, நான் உன்னை இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன். எனக்காக நீ அங்கிருந்து அவர்களைச் சபிப்பது உண்மைக் கடவுளுடைய விருப்பமாக இருக்கலாம்”+ என்றான். 28  அப்படிச் சொல்லி, பேயோரின் உச்சிக்கு பிலேயாமைக் கூட்டிக்கொண்டு போனான். அது எஷிமோனை* பார்த்தபடி இருந்தது.+ 29  அப்போது பிலேயாம் பாலாக்கிடம், “இந்த இடத்தில் ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எனக்காகக் கொண்டுவாருங்கள்”+ என்றான். 30  பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான். ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “வனாந்தரத்தை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா