எண்ணாகமம் 24:1-25
24 இஸ்ரவேலர்களை ஆசீர்வதிக்கத்தான் யெகோவா விரும்புகிறார் என்பதை பிலேயாம் புரிந்துகொண்டபோது, மறுபடியும் மாயமந்திரத்தைத் தேடிப்போகாமல்+ வனாந்தரத்தின் பக்கமாகத் திரும்பினான்.
2 இஸ்ரவேலர்கள் கோத்திரம் கோத்திரமாக முகாம்போட்டிருப்பதை+ பிலேயாம் பார்த்தபோது, கடவுளுடைய சக்தி அவனுக்குக் கிடைத்தது.+
3 அப்போது அவன்,
“பெயோரின் மகன் பிலேயாம் பேசுகிறேன்,கண்கள் திறக்கப்பட்டவன் சொல்கிறேன்.
4 தேவ வார்த்தையைக் காதில் கேட்டவன்,சர்வவல்லமையுள்ளவரின் தரிசனத்தைப் பார்த்தவன்,கண் மூடாமல் கீழே விழுந்தவன், பேசுகிறேன்.+
5 யாக்கோபே, உன் கூடாரம் எவ்வளவு அழகாக இருக்கிறது!இஸ்ரவேலே, நீ குடியிருக்கும் இடங்களைப் பார்த்தால் எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது!+
6 நீளமாக நெளிந்து போகும் பள்ளத்தாக்குகள்* போலவும்,+ஆற்றின் கரையில் இருக்கும் தோட்டங்கள் போலவும்,யெகோவா நட்டு வைத்த அகில் மரக்கன்றுகள் போலவும்,
நீரோடைக்குப் பக்கத்தில் ஓங்கி நிற்கும் தேவதாரு மரங்கள் போலவும் அவை இருக்கின்றன.
7 அவருடைய வாளிகளில் தண்ணீர் வழிந்தோடுகிறது.தண்ணீருக்குப்+ பக்கத்தில் அவருடைய விதை* விதைக்கப்படுகிறது.
அவருடைய ராஜா+ ஆகாகைவிட+ பலம்படைத்தவர்.அவருடைய ராஜ்யம் மேன்மை அடையும்.+
8 அவர்களை எகிப்திலிருந்து அவர் கூட்டிக்கொண்டு வருகிறார்.அவர்களுக்குக் காட்டு எருதின் கொம்புகள் போல அவர் இருக்கிறார்.
தன்னை ஒடுக்கும் தேசங்களை அவன் ஒழித்துக்கட்டுவான்.+அவர்களுடைய எலும்புகளைக் கடித்து நொறுக்குவான்.
அம்புகளால் அவர்களைத் துளைப்பான்.
9 சிங்கம் போல அவன் உட்கார்ந்திருக்கிறான், சிங்கம் போலப் படுத்திருக்கிறான்.அவனை எழுப்ப யாருக்குத் துணிச்சல் இருக்கிறது?
அவனை ஆசீர்வதிப்பவன் ஆசீர்வதிக்கப்படுவான்.அவனைச் சபிப்பவன் சபிக்கப்படுவான்”+ என்று பாடினான்.+
10 அப்போது பிலேயாமின் மேல் பாலாக் பயங்கரமாகக் கோபப்பட்டான். பின்பு, ஏளனமாகத் தன் கைகளைத் தட்டி, “என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லி உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ ஆனால் இந்த மூன்று தடவையும் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாய்.
11 இப்போதே உன் வீட்டுக்குப் போய்விடு. நான் உன்னை ரொம்பவே கௌரவிக்க நினைத்தேன்,+ ஆனால் யெகோவா அதைத் தடுத்துவிட்டார்” என்றான்.
12 அதற்கு பிலேயாம் பாலாக்கிடம், “நான் உங்கள் ஆட்களிடம்,
13 ‘எனக்காக பாலாக் தன்னுடைய மாளிகையையே கொடுத்தாலும், அதில் வெள்ளியையும் தங்கத்தையும் கொட்டிக் கொடுத்தாலும், என் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதையும் செய்ய முடியாது. யெகோவா சொல்வதைத்தான் நான் சொல்வேன்’ என்று சொல்லவில்லையா?+
14 இப்போது நான் என் ஜனங்களிடம் போகிறேன். வாருங்கள், எதிர்காலத்தில் இந்த ஜனங்கள் உங்களுடைய ஜனங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைச் சொல்கிறேன்” என்றான்.
15 பின்பு அவன்,
“பெயோரின் மகன் பிலேயாம் பேசுகிறேன்,கண்கள் திறக்கப்பட்டவன் சொல்கிறேன்.+
16 தேவ வார்த்தையைக் காதில் கேட்டவன்,உன்னதமான கடவுளின் அறிவைப் பெற்றவன்,சர்வவல்லமையுள்ளவரின் தரிசனத்தைப் பார்த்தவன்,கண் மூடாமல் கீழே விழுந்தவன், பேசுகிறேன்:
17 நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் இப்போது அல்ல.நான் அவரைப் பார்ப்பேன், ஆனால் சீக்கிரத்தில் அல்ல.
யாக்கோபிடமிருந்து ஒரு நட்சத்திரம்+ உதிக்கும்.இஸ்ரவேலிடமிருந்து+ ஒரு செங்கோல்+ எழும்பும்.
மோவாபின் நெற்றிப்பொட்டில் அவர் கண்டிப்பாகத் தாக்குவார்.+வெறிபிடித்த ஜனங்களின் மண்டையோட்டை நிச்சயமாக உடைப்பார்.
18 இஸ்ரவேல் வீரத்தைக் காட்டுவான்.அப்போது ஏதோம் அவனுக்குச் சொந்தமாகும்.+சேயீர்+ தன் எதிரிகளுக்குச் சொந்தமாகும்.+
19 யாக்கோபிலிருந்து உதிப்பவர் ஜெயிப்பார்.+நகரத்தில் மீதி இருப்பவர்களை நசுக்குவார்” என்று பாடினான்.+
20 அமலேக்கியர்களைப் பார்த்தபோது அவன்,
“அமலேக்குதான் முதல் தேசம்.+ஆனால் முடிவில் அது அழிந்துபோகும்”+ என்று பாடினான்.
21 கேனியர்களைப்+ பார்த்தபோது,
“நீ கோட்டையிலே குடியிருக்கிறாய், கற்பாறையில் கூடு கட்டியிருக்கிறாய்.
22 ஆனால் கேயினைச் சுட்டெரிக்க ஒருவன் வருவான்.
அசீரியா உன்னைப் பிடித்துக்கொண்டு போவதற்கு எவ்வளவு காலமாகும்?” என்று பாடினான்.
23 அதன்பின் அவன்,
“ஐயோ! கடவுள் இதைச் செய்யும்போது யாரால் உயிர்தப்ப முடியும்?
24 கித்தீம்+ கரையோரத்திலிருந்து கப்பல்கள் மிதந்து வரும்.அவை அசீரியாவை அலைக்கழிக்கும்.+ஏபேரைப் பாடாய்ப் படுத்தும்.
ஆனால், அவனும் அடியோடு அழிந்துபோவான்” என்று பாடினான்.
25 அதன்பின் பிலேயாம்+ எழுந்து, தான் தங்கியிருந்த இடத்துக்குப் போனான். பாலாக்கும் தன்னுடைய இடத்துக்குப் போனான்.