எண்ணாகமம் 6:1-27

6  பின்பு யெகோவா மோசேயிடம்,  “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவாவுக்கு நசரேயராய்*+ இருப்பதாக ஒரு ஆணோ பெண்ணோ விசேஷமாக நேர்ந்துகொண்டால்,  திராட்சமதுவையும் வேறெந்த மதுவையும் அவர் குடிக்கக் கூடாது. திராட்சமதுவிலோ வேறெந்த மதுவிலோ செய்யப்படும் காடியைக் குடிக்கக் கூடாது.+ திராட்சையில் தயாரிக்கப்படும் எந்தப் பானத்தையும் குடிக்கக் கூடாது. பழுத்த திராட்சையையோ உலர்ந்த திராட்சையையோ சாப்பிடக் கூடாது.  அவர் நசரேயராக இருக்கும் நாளெல்லாம் திராட்சைக் கொடிகளிலிருந்து கிடைக்கும் எதையுமே சாப்பிடக் கூடாது. திராட்சைக் காய்களையும் தோல்களையும்கூட சாப்பிடக் கூடாது.  நசரேயராய் இருப்பதாக அவர் நேர்ந்துகொண்ட நாளெல்லாம் தன்னுடைய தலைமுடியை வெட்டக் கூடாது.+ யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த காலம் முழுவதும் தன் தலைமுடியை நீளமாக வளர்த்து, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.  யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்த அந்தக் காலம் முழுவதும் எந்தப் பிணத்தின்* பக்கத்திலும் அவர் போகக் கூடாது.  அப்பாவோ அம்மாவோ சகோதரனோ சகோதரியோ இறந்தால்கூட பக்கத்தில் போய்த் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+ ஏனென்றால், அவர் கடவுளுக்கு நசரேயராக இருக்கிறார். அவருடைய தலைமுடி அதற்கு அடையாளமாக இருக்கிறது.  அவர் நசரேயராக இருக்கும் நாளெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கிறார்.  ஆனால், தனக்குப் பக்கத்தில் இருக்கிற யாராவது திடீரென்று இறந்துவிட்டால் அந்த நசரேயர் தீட்டுப்பட்டுவிடுவார்.+ அப்போது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்ததற்கு அடையாளமாக இருக்கிற தலைமுடியை அவர் சிரைத்துவிட வேண்டும்.+ தன்னைத் தூய்மைப்படுத்தும் நாளில், அதாவது ஏழாம் நாளில், தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும். 10  எட்டாம் நாளில், இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவந்து சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 11  குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்துவார். இப்படி, இறந்தவரால் தீட்டுப்பட்ட அந்த நசரேயருக்காகப் பாவப் பரிகாரம் செய்வார்.+ அந்த நாள்முதல் நசரேயர் தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள* வேண்டும். 12  அப்போது, அவர் யெகோவாவுக்கு நசரேயராக இருக்கும் நாட்கள் மறுபடியும் ஆரம்பிக்கும். அதற்காக, ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் குற்ற நிவாரண பலியாகக் கொண்டுவர வேண்டும். அவர் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதால், ஏற்கெனவே நசரேயராக இருந்த நாட்கள் கணக்கில் சேராது. 13  நசரேயருக்கான சட்டம் இதுதான்: ஒருவர் நசரேயராக இருக்கும் காலம் முடியும்போது+ அவரைச் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கூட்டிக்கொண்டு வர வேண்டும். 14  அங்கே அவர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொடுக்க வேண்டும். அதாவது, குறையற்ற ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாகவும்,+ குறையற்ற ஒருவயது பெண் செம்மறியாட்டுக் குட்டியைப் பாவப் பரிகார பலியாகவும்,+ குறையற்ற செம்மறியாட்டுக் கடாவைச் சமாதான பலியாகவும்+ கொடுக்க வேண்டும். 15  அதோடு ஒரு கூடையில், நைசான மாவிலே எண்ணெய் கலந்து சுடப்பட்ட புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளையும், எண்ணெய் தடவிய மெல்லிய ரொட்டிகளையும், அவற்றுக்கான உணவுக் காணிக்கையையும்,+ திராட்சமது காணிக்கையையும்+ கொடுக்க வேண்டும். 16  குருவானவர் அவற்றை யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்து, அந்த நசரேயருடைய பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் செலுத்துவார். 17  கூடையிலுள்ள புளிப்பில்லாத ரொட்டிகளோடு, ஒரு செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவுக்குச் சமாதான பலியாகச் செலுத்துவார். அவற்றோடு, உணவுக் காணிக்கையையும்+ திராட்சமது காணிக்கையையும் செலுத்துவார். 18  பின்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் அந்த நசரேயர் தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும்.+ நசரேயராக இருக்கும்போது வளர்த்த அந்தத் தலைமுடியைச் சமாதான பலியின் கீழே எரிகிற நெருப்பில் போட வேண்டும். 19  நசரேயருக்கு அடையாளமாக இருக்கும் தலைமுடியை அவர் சிரைத்துக்கொண்ட பின்பு, வேக வைத்த+ செம்மறியாட்டுக் கடாவின் முன்னங்காலையும், கூடையிலுள்ள புளிப்பில்லாத வட்ட ரொட்டிகளில் ஒன்றையும், மெல்லிய ரொட்டிகளில் ஒன்றையும் குருவானவர் எடுத்து அந்த நசரேயரின் கைகளில் வைக்க வேண்டும். 20  பின்பு, அவற்றை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் குருவானவர் அசைவாட்ட வேண்டும்.+ அந்தக் காணிக்கை பரிசுத்தமானது, குருவானவருக்குச் சொந்தமானது. அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தோடும்* பரிசுத்த பங்காகிய காலோடும் அவை குருவானவருக்குக் கொடுக்கப்படும்.+ அதன்பின், அந்த நசரேயர் திராட்சமதுவைக் குடிக்கலாம். 21  நசரேயராய்+ இருப்பதாக நேர்ந்துகொள்ளும் ஒருவருக்கான சட்டம் இதுதான்: நசரேயர்கள் செலுத்த வேண்டிய காணிக்கைகள் தவிர வேறு காணிக்கைகளையும் செலுத்துவதாக அவர் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், அதையும் நிறைவேற்ற வேண்டும்’” என்றார். 22  பின்பு யெகோவா மோசேயிடம், 23  “நீ ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நீங்கள் இஸ்ரவேலர்களை வாழ்த்தும்போது,+ 24  “யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்,+ அவர் உங்களைப் பாதுகாக்கட்டும். 25  யெகோவா தன்னுடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து,+ உங்களுக்குக் கருணை காட்டட்டும். 26  யெகோவா உங்களைக் கரிசனையோடு பார்த்து,* உங்களுக்குச் சமாதானம் தரட்டும்”+ என்று சொல்லி வாழ்த்த வேண்டும்’” என்றார். 27  “அவர்கள் என் பெயரைச் சொல்லி இஸ்ரவேலர்களை வாழ்த்த வேண்டும்,+ நான் அவர்களுக்கு ஆசீர்வாதம் தருவேன்”+ என்றும் சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அர்ப்பணிக்கப்பட்டவராய், பிரித்துவைக்கப்பட்டவராய்.”
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நே.மொ., “தன் தலையைப் புனிதப்படுத்திக்கொள்ள.” அநேகமாக, தலைமுடியை மறுபடியும் வளர்ப்பதைக் குறிக்கலாம்.
அதாவது, “நெஞ்சுப் பகுதியோடும்.”
நே.மொ., “யெகோவா தன் முகத்தை நிமிர்த்தி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா