எரேமியா 52:1-34

52  சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது. அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்.+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள்.  யோயாக்கீமைப் போலவே சிதேக்கியாவும் யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார்.+  எருசலேமிலும் யூதாவிலும் இப்படிப்பட்ட காரியங்கள் நடந்து வந்ததால் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. கடைசியில் அவர்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்தே ஒதுக்கித்தள்ளிவிட்டார்.+ பாபிலோன் ராஜாவுக்கு எதிராக சிதேக்கியா கலகம் செய்தார்.+  அதனால், சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான். அவர்கள் நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினார்கள்.+  சிதேக்கியா ராஜா ஆட்சி செய்த 11-ஆம் வருஷம்வரை முற்றுகை நீடித்தது.  நான்காம் மாதம் ஒன்பதாம் தேதியில்,+ நகரத்தில் பஞ்சம் மிகக் கடுமையாக இருந்தது. குடிமக்களுக்குக் கொஞ்சம்கூட உணவு கிடைக்கவில்லை.+  கடைசியில், நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது. கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் நகரத்திலிருந்து தப்பித்துப் போனார்கள். அவர்கள் அரபா வழியாகத் தப்பித்து ஓடினார்கள்.+  ஆனால், கல்தேய வீரர்கள் சிதேக்கியாவைத் துரத்திக்கொண்டுபோய்,+ எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள். அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள்.  கல்தேய வீரர்கள் ராஜாவைப் பிடித்து, காமாத்திலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள். ராஜா அவனுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கினான். 10  சிதேக்கியாவின் கண் முன்னாலேயே அவருடைய மகன்களை பாபிலோன் ராஜா படுகொலை செய்தான். யூதாவின் அதிகாரிகள் எல்லாரையும்கூட ரிப்லாவில் படுகொலை செய்தான். 11  பின்பு பாபிலோன் ராஜா, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி,+ அவருக்குச் செம்பு விலங்குகளை மாட்டி, அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர் சாகும்வரை காவலிலேயே வைத்திருந்தான். 12  ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான் எருசலேமுக்குள் வந்தான்.+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் சேவகன். 13  யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும் எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும் அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பெரிய மனிதர்களுடைய வீடுகளைக்கூட ஒன்றுவிடாமல் எரித்துப்போட்டான். 14  காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+ 15  காவலாளிகளின் தலைவன் நேபுசராதான், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களையும் மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். அதோடு, பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், திறமையான கைத்தொழிலாளிகளையும் கொண்டுபோனான்.+ 16  ஆனால், காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் கட்டாய வேலை செய்வதற்காக பரம ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.+ 17  கல்தேயர்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்த செம்புத் தூண்களையும்+ யெகோவாவின் ஆலயத்திலிருந்த தள்ளுவண்டிகளையும்+ ‘செம்புக் கடல்’ தொட்டியையும்+ உடைத்து, அவற்றின் செம்பையெல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.+ 18  அதோடு சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், திரி வெட்டும் கருவிகள், கிண்ணங்கள்,+ கோப்பைகள்+ ஆகியவற்றையும், ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா செம்புப் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 19  சொக்கத்தங்கத்திலும் வெள்ளியிலும்+ செய்யப்பட்ட தொட்டிகளையும்,+ தணல் அள்ளும் கரண்டிகளையும், கிண்ணங்களையும், சட்டிகளையும், குத்துவிளக்குகளையும்,+ கோப்பைகளையும், காணிக்கைகளுக்கான கிண்ணங்களையும் காவலாளிகளின் தலைவன் கொண்டுபோனான். 20  யெகோவாவின் ஆலயத்தில் சாலொமோன் செய்துவைத்த இரண்டு தூண்கள், ‘செம்புக் கடல்’ தொட்டியின் கீழிருந்த 12 செம்புக் காளைகள்,+ தள்ளுவண்டிகள் ஆகியவற்றின் செம்பு எடைபோட முடியாதளவுக்கு மிக அதிகமாக இருந்தது. 21  ஒவ்வொரு தூணின் உயரமும் 18 முழம்.* ஒவ்வொரு தூணையும் அளவுநூல் கொண்டு அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழம் இருந்தது.+ அதன் தடிமன் நான்கு விரலளவு இருந்தது. உள்ளே வெற்றிடமாக இருந்தது. 22  அதன் மேலிருந்த கும்பம் செம்பினால் செய்யப்பட்டிருந்தது. ஒரு கும்பத்தின் உயரம் ஐந்து முழம்.+ கும்பத்தைச் சுற்றியிருந்த வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் செம்பினால் செய்யப்பட்டிருந்தன. மற்றொரு தூணும் இதேபோல் இருந்தது, மாதுளம்பழ வடிவங்களும் இதேபோல் இருந்தன. 23  கும்பத்தைச் சுற்றிலும் 96 மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. மொத்தம், 100 மாதுளம்பழ வடிவங்கள் வலைப்பின்னலைச் சுற்றி இருந்தன.+ 24  முதன்மை குரு செராயாவையும்,+ இரண்டாம் குரு செப்பனியாவையும்,+ காவலாளிகள்+ மூன்று பேரையும் நேபுசராதான் பிடித்துக்கொண்டு போனான். 25  போர்வீரர்களுக்குத் தலைவரான அரண்மனை அதிகாரி ஒருவரையும், நகரத்தில் இருந்த ராஜாவின் நெருங்கிய நண்பர்கள் ஏழு பேரையும், போருக்கு ஆட்களைத் திரட்டுகிற படைத் தளபதியின் செயலாளரையும், நகரத்தில் மிச்சமிருந்த பாமர மக்களில் 60 ஆண்களையும் பிடித்துக்கொண்டு போனான். 26  காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் இவர்களைப் பிடித்து ரிப்லாவில் இருந்த பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான். 27  காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில்+ பாபிலோன் ராஜா இவர்களை வெட்டிக் கொன்றான். இப்படி, யூதா ஜனங்கள் தங்களுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+ 28  நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துக்கொண்டு போனவர்களின் விவரம் இதுதான்: நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில் 3,023 யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+ 29  நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில்,+ எருசலேமிலிருந்து 832 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். 30  நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 23-ஆம் வருஷத்தில், காவலாளிகளின் தலைவனான நேபுசராதான் 745 யூதர்களை சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ மொத்தம், 4,600 பேர் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். 31  ஏவில்-மெரொதாக் என்பவன் பாபிலோனின் ராஜாவான வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.+ அது, யோயாக்கீன் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன 37-ஆம் வருஷம்,+ 12-ஆம் மாதம், 25-ஆம் நாள். 32  யோயாக்கீனிடம் ஏவில்-மெரொதாக் அன்பாகப் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற ராஜாக்களைவிட அவருக்கு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்தான். 33  அதன்பின், யோயாக்கீன் கைதி உடையைப் போட்டுக்கொள்ளவில்லை; வாழ்நாள் முழுக்க ராஜாவுடன் சேர்ந்து சாப்பிட்டார். 34  பாபிலோன் ராஜாவின் கட்டளைப்படியே, யோயாக்கீன் உயிரோடு இருந்த நாளெல்லாம் அவருக்கு உணவுப் பொருள்கள் கொடுக்கப்பட்டன. அவர் சாகும்வரை தினமும் அவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.

அடிக்குறிப்புகள்

ஒரு முழம் என்பது 44.5 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா