சங்கீதம் 106:1-48
106 “யா”வைப் புகழுங்கள்!*
யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+
2 யெகோவாவின் வல்லமையான செயல்களை யாரால் முழுமையாக அறிவிக்க முடியும்?அவருடைய அருமையான* செயல்கள் எல்லாவற்றையும் யாரால் அறிவிக்க முடியும்?+
3 நியாயமாக நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.எப்போதும் சரியானதைச் செய்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
4 யெகோவாவே, உங்கள் மக்களுக்குக் கருணை காட்டும்போது என்னை நினைத்துப் பாருங்கள்.+
என்னைக் கவனித்துக்கொள்ளுங்கள், எனக்கு மீட்பு கொடுங்கள்.
5 அப்போதுதான், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு+ நீங்கள் தருகிற நன்மைகளை நானும் அனுபவிக்க முடியும்.உங்களுடைய தேசத்தாரோடு சேர்ந்து நானும் சந்தோஷப்பட முடியும்.உங்களுக்குச் சொத்துபோல் இருக்கிற ஜனங்களோடு சேர்ந்து பெருமையோடு உங்களைப் புகழ* முடியும்.
6 எங்கள் முன்னோர்களைப் போலவே நாங்களும் பாவம் செய்துவிட்டோம்.+நாங்கள் தவறு செய்துவிட்டோம், அக்கிரமம் செய்துவிட்டோம்.+
7 எகிப்தில் நீங்கள் செய்த அற்புதங்களை எங்களுடைய முன்னோர்கள் உணரவில்லை.
நீங்கள் காட்டிய அளவுகடந்த அன்பை* நினைத்துப் பார்க்கவில்லை.அதற்குப் பதிலாக, செங்கடலின் ஓரத்தில் உங்களுக்கு எதிராகப் பேசினார்கள்.+
8 ஆனால், கடவுள் தன்னுடைய பெயரை மனதில் வைத்து அவர்களைக் காப்பாற்றினார்.+தன்னுடைய வல்லமையைக் காட்டுவதற்காக அவர்களைக் காப்பாற்றினார்.+
9 அவர் செங்கடலை அதட்டினார், அது காய்ந்துபோனது.பாலைவனத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போவதுபோல்,ஆழமான கடல் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்.+
10 எதிரிகளின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.+விரோதிகளின் பிடியிலிருந்து விடுவித்தார்.+
11 எதிரிகளைத் தண்ணீர் மூழ்கடித்தது.அவர்களில் ஒருவன்கூட தப்பிக்கவில்லை.+
12 அப்போது, கடவுளுடைய ஜனங்கள் அவருடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தார்கள்.+அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+
13 ஆனால், அவர் செய்ததையெல்லாம் சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள்.+அவருடைய அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.
14 வனாந்தரத்தில் தங்களுடைய சுயநல ஆசைகளுக்கு இடம்கொடுத்தார்கள்.+பாலைவனத்தில் கடவுளைச் சோதித்தார்கள்.+
15 அவர்கள் கேட்டதைக் கடவுள் கொடுத்தார்.ஆனால் கடைசியில், உடலை உருக்கும் வியாதியால் அவர்களைத் தாக்கினார்.+
16 முகாமில் அவர்கள் மோசேயைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள்.யெகோவாவுக்குப் பரிசுத்தமானவராக இருந்த+ ஆரோனைப் பார்த்தும் பொறாமைப்பட்டார்கள்.+
17 அதனால், பூமி பிளந்து தாத்தானை விழுங்கியது.அபிராமுடன் கூடியிருந்த எல்லாரையும் புதைத்துவிட்டது.+
18 அந்தக் கூட்டத்தின் நடுவே நெருப்பு பற்றியெரிந்தது.பொல்லாதவர்களைத் தீ ஜுவாலை சுட்டுப்பொசுக்கியது.+
19 அவர்கள் ஓரேபில் கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்கள்.அந்த உலோகச் சிலை முன்னால் தலைவணங்கினார்கள்.+
20 அவர்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை,வெறும் புல்லைத் தின்கிற காளையின் உருவத்துக்குக் கொடுத்தார்கள்.+
21 தங்கள் மீட்பரான கடவுளை மறந்துவிட்டார்கள்.+எகிப்திலே மாபெரும் செயல்களையும்,+
22 காமின் தேசத்திலே அதிசயங்களையும்,+செங்கடலிலே பிரமிப்பூட்டும் செயல்களையும் செய்தவரை மறந்துவிட்டார்கள்.+
23 அவர்களை அழிப்பதற்குக் கடவுள் கட்டளை கொடுக்க இருந்தார்.ஆனால், அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரிடம் கெஞ்சினார்.ஆக்ரோஷத்தில் அவர்களை அழித்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்.+
24 அருமையான தேசத்தை அந்த ஜனங்கள் அற்பமாக நினைத்தார்கள்.+கடவுளுடைய வாக்குறுதியில் அவர்கள் துளிகூட விசுவாசம் வைக்கவில்லை.+
25 தங்கள் கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+யெகோவாவின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை.+
26 அதனால், வனாந்தரத்தில் அவர்களைச் சாகடிக்கப்போவதாகஅவர் ஆணையிட்டுச் சொன்னார்.+
27 அவர்களுடைய வம்சத்தாரை மற்ற ஜனங்கள்முன் வீழ்த்தப்போவதாகவும்,எல்லா தேசங்களுக்கும் அவர்களைச் சிதறடிக்கப்போவதாகவும் சொன்னார்.+
28 அவர்கள் பாகால் பேயோரை வணங்க ஆரம்பித்தார்கள்.+செத்தவர்களுக்கு* படைக்கப்பட்டதைச் சாப்பிட்டார்கள்.
29 கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்து அவரைக் கோபப்படுத்தினார்கள்.+அதனால், கொள்ளைநோய் அவர்கள் நடுவே பரவியது.+
30 ஆனால், பினெகாஸ் எழுந்துபோய் நடவடிக்கை எடுத்தபோது,அந்தக் கொள்ளைநோய் ஓய்ந்தது.+
31 அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.என்றென்றைக்கும், எல்லா தலைமுறைகளுக்கும், அவர் அப்படியே கருதப்படுவார்.+
32 மேரிபாவின்* தண்ணீருக்குப் பக்கத்தில் அவர்கள் கடவுளைக் கோபப்படுத்தினார்கள்.அவர்களால் மோசேக்குப் பயங்கர பிரச்சினை வந்தது.+
33 அந்த மக்கள் அவருக்கு எரிச்சலூட்டினார்கள்.அதனால், அவர் ஆத்திரப்பட்டுப் பேசிவிட்டார்.+
34 மற்ற தேசத்து மக்களை அழிக்கும்படி யெகோவா கட்டளை கொடுத்திருந்தும்,+இஸ்ரவேலர்கள் அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார்கள்.+
35 அதற்குப் பதிலாக, அவர்களோடு நெருக்கமாகப் பழகினார்கள்.+அவர்களுடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்.*+
36 அவர்களுடைய சிலைகளை வணங்கினார்கள்.+அவை இஸ்ரவேலர்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிட்டன.+
37 அவர்கள் தங்களுடைய மகன்களையும் மகள்களையும்பேய்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+
38 சொந்த மகன்களையும் மகள்களையுமேகானானியர்களின் தெய்வங்களுக்குப் பலி கொடுத்தார்கள்.+ஒரு பாவமும் அறியாதவர்களின் இரத்தத்தைச் சிந்திக்கொண்டே இருந்தார்கள்.+இப்படி, தேசத்தையே தீட்டுப்படுத்தினார்கள்.
39 அவர்கள் தங்களுடைய செயல்களால் அசுத்தமானார்கள்.தங்களுடைய செயல்களால் கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+
40 அதனால், யெகோவாவின் கோபம் அவர்கள்மேல் பற்றியெரிந்தது.அவருடைய சொத்து போன்ற ஜனங்களை அவர் வெறுக்க ஆரம்பித்தார்.
41 அவர்களைத் திரும்பத் திரும்ப மற்ற தேசத்து மக்களின் கையில் கொடுத்தார்.+அவர்களை வெறுத்தவர்கள் அவர்களை ஆளுவதற்கு விட்டுவிட்டார்.+
42 விரோதிகள் அவர்களை அடக்கி ஒடுக்கினார்கள்.எதிரிகள் அவர்களை ஆட்டிப்படைத்தார்கள்.
43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+
44 ஆனால், அவர்கள் பட்ட வேதனையைக் கடவுள் பார்த்தார்.+உதவிக்காக அவர்கள் கதறியதை அவர் கேட்டார்.+
45 அவர்களுக்காகத் தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.அவர்கள்மேல் அளவுகடந்த அன்பு* வைத்திருந்ததால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.*+
46 அவர்களைச் சிறைபிடித்துக்கொண்டு போன ஆட்கள்,அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படும்படி செய்தார்.+
47 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, எங்களைக் காப்பாற்றுங்கள்.+மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேருங்கள்.+அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்.சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+
48 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும்!என்றென்றும் அவருக்குப் புகழ் சேரட்டும்!+
மக்கள் எல்லாரும் “ஆமென்!”* என்று சொல்லட்டும்.
“யா”வைப் புகழுங்கள்!*
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ வே.வா., “புகழத்தக்க.”
^ வே.வா., “உங்களைப் பற்றிப் பேச.”
^ வே.வா., “மாறாத அன்பை.”
^ இது உயிரற்ற தெய்வங்களையும் குறிக்கலாம்.
^ அர்த்தம், “தகராறு செய்தல்.”
^ வே.வா., “கற்றுக்கொண்டார்கள்.”
^ வே.வா., “வருத்தப்பட்டார்.”
^ வே.வா., “மாறாத அன்பு.”
^ அதாவது, “அப்படியே ஆகட்டும்!”
^ வே.வா., “அல்லேலூயா!” “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.