நியாயாதிபதிகள் 16:1-31

16  சிம்சோன் ஒருநாள் காசாவுக்குப் போனார். அங்கே ஒரு விபச்சாரியைப் பார்த்து அவள் வீட்டுக்குப் போனார்.  சிம்சோன் அங்கு வந்திருக்கும் செய்தி அந்த நகரத்திலிருந்த ஜனங்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே, அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து, நகரவாசலில் ராத்திரி முழுவதும் பதுங்கியிருந்தார்கள். “பொழுது விடிந்ததும் அவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம்” என்று சொல்லி ராத்திரி முழுக்க அமைதியாகக் காத்திருந்தார்கள்.  சிம்சோன் நடுராத்திரிவரை அங்கே படுத்திருந்தார். பின்பு எழுந்து, நகரவாசலின் கதவுகளையும் அவற்றின் இரண்டு நிலைக்கால்களையும் தாழ்ப்பாளோடு சேர்த்துப் பெயர்த்தெடுத்தார். அவற்றைத் தன்னுடைய தோள்களில் சுமந்துகொண்டு எப்ரோனுக்கு எதிரில் இருந்த மலையின் உச்சிக்குப் போனார்.  பிற்பாடு, சோரேக் பள்ளத்தாக்கில்* இருந்த ஒரு பெண்ணை அவர் காதலித்தார். அவள் பெயர் தெலீலாள்.+  பெலிஸ்தியர்களின் தலைவர்கள் அவளிடம் வந்து, “அவனுக்கு எப்படி இவ்வளவு பலம் வந்தது என்பதை அவன் வாயிலிருந்தே தந்திரமாக வர வை.+ நாங்கள் அவனை எப்படிப் பிடித்துக் கட்டிப்போட்டு அடக்கலாம் என்பதையும் கண்டுபிடி. அதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு 1,100 வெள்ளிக் காசுகள் தருகிறோம்” என்று சொன்னார்கள்.  பின்பு தெலீலாள் சிம்சோனிடம், “உங்களுக்கு இவ்வளவு பலம் எப்படி வந்தது? எதை வைத்து உங்களைக் கட்டிப்போட்டு அடக்குவது? தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டாள்.  அதற்கு சிம்சோன், “உலராத ஏழு நாண்களை* கொண்டுவந்து என்னைக் கட்டினால் என்னுடைய பலமெல்லாம் போய்விடும், நான் சாதாரண மனுஷன்போல் ஆகிவிடுவேன்” என்று சொன்னார்.  அதனால், பெலிஸ்தியர்களின் தலைவர்கள் உலராத ஏழு நாண்களைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தார்கள். அவள் அவற்றை வைத்து சிம்சோனைக் கட்டினாள்.  அந்தத் தலைவர்கள் அங்கிருந்த உள்ளறையில் சிலரைப் பதுங்கியிருக்க வைத்திருந்தார்கள். அப்போது அவள், “சிம்சோன், உங்களைப் பிடிக்க பெலிஸ்தியர்கள் வந்துவிட்டார்கள்!” என்று கத்தினாள். உடனே, சிம்சோன் அந்த நாண்களை அறுத்தெறிந்தார். நெருப்பு பட்ட நாரிழைபோல் அவை சட்டென்று அறுந்து விழுந்தன.+ அவருடைய பலத்தின் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. 10  பின்பு தெலீலாள் சிம்சோனிடம், “நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், என்னிடம் பொய் சொல்லிவிட்டீர்கள். உங்களை எதை வைத்துக் கட்டிப்போட முடியும்? தயவுசெய்து இப்போதாவது சொல்லுங்கள்” என்று கேட்டாள். 11  அதற்கு அவர், “இதுவரை பயன்படுத்தப்படாத புதிய கயிறுகளை வைத்து என்னைக் கட்டினால், என்னுடைய பலமெல்லாம் போய்விடும், நான் சாதாரண மனுஷன்போல் ஆகிவிடுவேன்” என்று சொன்னார். 12  அதனால், தெலீலாள் புதிய கயிறுகளை எடுத்து அவரைக் கட்டி, “சிம்சோன், உங்களைப் பிடிக்க பெலிஸ்தியர்கள் வந்துவிட்டார்கள்!” என்று கத்தினாள். உடனே அவர் தன்னுடைய கைகளிலிருந்த கயிறுகளை நூல் போல அறுத்துப்போட்டார்.+ அதெல்லாம் நடந்தபோது, உள்ளறையில் ஆட்கள் பதுங்கியிருந்தார்கள். 13  அப்போது தெலீலாள் சிம்சோனிடம், “திரும்பத் திரும்ப என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள், என்னிடம் பொய் சொல்கிறீர்கள்.+ எதை வைத்து உங்களைக் கட்டிப்போட்டு அடக்கலாம் என்று சொல்லுங்கள்” என்று கேட்டாள். அதற்கு அவர், “என்னுடைய ஏழு ஜடைகளையும் பாவு நூலோடு* சேர்த்து நெய்துவிட்டால் போதும்” என்று சொன்னார். 14  அப்படியே அவள் அவற்றை நெசவு ஆணியடித்து மாட்டி, “சிம்சோன், உங்களைப் பிடிக்க பெலிஸ்தியர்கள் வந்துவிட்டார்கள்!” என்று கத்தினாள். ஆனால் அவர் தூக்கத்திலிருந்து எழுந்து அந்த நெசவு ஆணியையும் பாவு நூலையும் பிடுங்கி எறிந்தார். 15  அப்போது அவள், “நீங்கள் என்னை மனதார* நேசிக்கவே இல்லை. என்னை நேசிப்பதாக வாயளவில்தான் சொல்கிறீர்கள்.+ இந்த மூன்று தடவையும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், உங்கள் பலத்தின் ரகசியத்தை என்னிடம் சொல்லாமலேயே இருக்கிறீர்கள்”+ என்றாள். 16  தினம் தினம் அவள் அவரை நச்சரித்துக்கொண்டும் வற்புறுத்திக்கொண்டும் இருந்தாள். செத்தால் போதும் என்று அவர் நினைக்கும் அளவுக்கு அவரை நோகடித்தாள்.+ 17  கடைசியில் அவர், “என்னுடைய தலைமுடியை நான் இதுவரை வெட்டியதே கிடையாது. பிறந்ததிலிருந்தே கடவுளுக்கு நசரேயனாக இருக்கிறேன்.+ என் முடியை வெட்டிவிட்டால், என்னுடைய பலமெல்லாம் போய்விடும். நான் பலம் இழந்து மற்ற மனுஷர்களைப் போலாகிவிடுவேன்” என்று உள்ளம் திறந்து சொல்லிவிட்டார். 18  அவர் எல்லாவற்றையும் உள்ளம் திறந்து சொல்லிவிட்டதை தெலீலாள் புரிந்துகொண்டவுடன், பெலிஸ்தியர்களின் தலைவர்களிடம் ஆள் அனுப்பி,+ “இந்தத் தடவை கண்டிப்பாக வந்துவிடுங்கள். அவன் உள்ளம் திறந்து ரகசியத்தைச் சொல்லிவிட்டான்” என்றாள். அதனால், பெலிஸ்தியர்களின் தலைவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள். 19  சிம்சோனை அவள் தன்னுடைய மடியில் தூங்க வைத்தாள். பின்பு, ஓர் ஆளை வரவழைத்து அவருடைய ஏழு ஜடைகளையும் வெட்டினாள். அவருடைய பலம் அவரைவிட்டுப் போனதால் அவரைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவளால் முடிந்தது. 20  அவள் சத்தமாக, “சிம்சோன், உங்களைப் பிடிக்க பெலிஸ்தியர்கள் வந்துவிட்டார்கள்!” என்று கத்தினாள். அவர் தூக்கத்திலிருந்து எழுந்து, “எப்போதும் போலவே+ இப்போதும் நான் தப்பித்துப் போய்விடுவேன்” என்று சொல்லிக்கொண்டார். யெகோவா அவரைவிட்டு விலகிவிட்டதை அவர் உணரவில்லை. 21  பெலிஸ்தியர்கள் அவரைப் பிடித்து, அவருடைய கண்களைத் தோண்டி எடுத்து, அவரை காசாவுக்குக் கொண்டுவந்தார்கள். பின்பு, அவருக்கு இரண்டு செம்பு விலங்குகளை மாட்டினார்கள். அதுமட்டுமல்ல, சிறைச்சாலையில் அவரை மாவு அரைக்க வைத்தார்கள். 22  நாட்கள் போகப் போக, வெட்டப்பட்ட அவருடைய தலைமுடி+ மறுபடியும் வளர ஆரம்பித்தது. 23  பெலிஸ்தியர்களின் தலைவர்கள், “நம்முடைய எதிரி சிம்சோனை நம் தெய்வம் நம்முடைய கையில் கொடுத்துவிட்டது” என்று சொல்லி, தாகோன்+ என்ற தங்களுடைய தெய்வத்துக்குப் பெரிய அளவில் பலி செலுத்தவும் விழா கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள். 24  ஜனங்கள் சிம்சோனைப் பார்த்தவுடன், “நம் தேசத்தை நாசம்செய்து,+ நம் ஆட்கள் நிறைய பேரைக் கொன்றுபோட்டவனை+ நம்முடைய தெய்வம் நம் கையில் கொடுத்துவிட்டது” என்று சொல்லி தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தார்கள். 25  அவர்கள் குஷியாக இருந்ததால், “சிம்சோனைக் கொண்டுவாருங்கள், அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்” என்று சொன்னார்கள். பின்பு, அவரை வைத்து வேடிக்கை பார்ப்பதற்காகச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து, தூண்களுக்கு நடுவில் நிற்க வைத்தார்கள். 26  சிம்சோன் தன்னுடைய கையைப் பிடித்திருந்த பையனிடம், “இந்தக் கோயிலின் தூண்களைத் தொடும்படி என்னை நிற்க வை. நான் அவற்றின் மேல் சாய வேண்டும்” என்றார். 27  அந்தச் சமயத்தில், அந்தக் கோயில் முழுக்க ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தார்கள். பெலிஸ்தியர்களின் தலைவர்கள் எல்லாரும் அங்கே இருந்தார்கள். ஏறக்குறைய 3,000 ஆண்களும் பெண்களும் சிம்சோனை மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 28  அப்போது சிம்சோன்+ யெகோவாவிடம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, தயவுசெய்து என்னை நினைத்துப் பாருங்கள். கடவுளே, தயவுசெய்து இந்த ஒரேவொரு தடவை மட்டும் என்னைப் பலப்படுத்துங்கள்.+ என்னுடைய இரண்டு கண்களில்+ ஒரு கண்ணுக்காவது நான் பெலிஸ்தியர்களைப் பழிவாங்க வேண்டும்” என்று கெஞ்சினார். 29  பின்பு, அந்தக் கோயிலின் நடுவே அதைத் தாங்கிக்கொண்டிருந்த இரண்டு தூண்களில் ஒன்றின் மேல் தன் வலது கையையும் இன்னொன்றின் மேல் தன் இடது கையையும் வைத்து, 30  “பெலிஸ்தியர்களுடன் சேர்ந்து என்னுடைய உயிரும் போகட்டும்!” என்று சத்தமாகச் சொல்லி, தன்னுடைய முழு பலத்தோடு அந்தத் தூண்களைத் தள்ளினார். அப்போது, அங்கிருந்த தலைவர்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் அந்தக் கோயில் இடிந்து விழுந்தது.+ இப்படி, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றவர்களைவிட+ சாகும்போது கொன்றவர்கள்தான் ஏராளம். 31  பிற்பாடு, அவருடைய சகோதரர்களும் அப்பாவின் குடும்பத்தாரும் வந்து அவருடைய உடலை எடுத்துக்கொண்டு போய், அவருடைய தகப்பன் மனோவாவின்+ கல்லறையில் அடக்கம் செய்தார்கள். இது சோராவுக்கும்+ எஸ்தாவோலுக்கும் இடையில் இருந்தது. சிம்சோன் 20 வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.”
வில்லை வளைத்துக் கட்டப்பட்டிருக்கும் நாண்கள் அல்லது மிருகங்களின் தசை நாண்கள்.
பாவு நூல் என்பது தறியில் நீளவாட்டில் செல்லும் இழை.
வே.வா., “நெஞ்சார.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா