நியாயாதிபதிகள் 9:1-57

9  பிற்பாடு, யெருபாகாலின் மகனாகிய அபிமெலேக்கு+ சீகேமிலிருந்த தன்னுடைய தாய்மாமன்களிடம் போய், அவர்களிடமும் தன் தாத்தா* குடும்பத்தார் எல்லாரிடமும்,  “‘யெருபாகாலின் 70 மகன்கள்+ உங்களை ஆட்சி செய்வது நல்லதா, அல்லது ஒரு ஆள் மட்டும் உங்களை ஆட்சி செய்வது நல்லதா?’ என்று சீகேமின் தலைவர்களிடம்* தயவுசெய்து கேளுங்கள். நான் அவர்களுடைய சொந்த இரத்தம்* என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்” என்று சொன்னான்.  அதனால், அவனுடைய தாய்மாமன்கள் சீகேமின் தலைவர்களிடம் போய், அபிமெலேக்கு சொன்னதையெல்லாம் சொன்னார்கள். அவர்கள் அதைக் கேட்டபோது, “அவன் நம்முடைய சொந்த சகோதரன்” என்று சொல்லி, அபிமெலேக்கின் பக்கம் சேர்ந்துகொள்ள ஆசைப்பட்டார்கள்.  பின்பு, பாகால்-பேரீத் கோயிலிலிருந்து+ 70 வெள்ளிக் காசுகளை எடுத்து அபிமெலேக்கிடம் தந்தார்கள். ஆனால் அவன், வேலைவெட்டி இல்லாத திமிர்பிடித்த ஆட்களுக்கு அந்தப் பணத்தைக் கூலியாகக் கொடுத்து அவர்களைத் தன் அடியாட்களாக வைத்துக்கொண்டான்.  அதன்பின், ஒப்ராவிலிருந்த தன் அப்பாவின் வீட்டுக்குப்+ போய், அங்கே யெருபாகாலின் மகன்களாகிய தன் சகோதரர்கள் 70 பேரையும் ஒரே கல்லின் மேல் கொன்றான்.+ ஆனால், யெருபாகாலின் கடைசி மகனாகிய யோதாம் ஒளிந்துகொண்டதால் அவர் மட்டும் தப்பித்துவிட்டார்.  பின்பு, சீகேமின் தலைவர்களும் பெத்-மில்லோவில் இருந்தவர்களும் ஒன்றுகூடி, சீகேமிலிருந்த பெரிய மரத்தின் பக்கத்திலே, அங்கிருந்த தூணுக்கு முன்னால், அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.+  இந்த விஷயம் யோதாமுக்குச் சொல்லப்பட்டபோது, அவர் உடனே கெரிசீம் மலை+ உச்சிக்குப் போய் நின்றுகொண்டு, சத்தமாக அவர்களிடம், “சீகேமின் தலைவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள், அப்போதுதான் கடவுளும் உங்கள் வேண்டுதலைக் கேட்பார்.  ஒருசமயம், சில மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்க* நினைத்தன. அதனால் அவை ஒலிவ மரத்தைப் பார்த்து, ‘நீ எங்களுக்கு ராஜாவாக இரு’ என்றன.+  ஆனால் ஒலிவ மரம், ‘நான் தரும் எண்ணெய் கடவுளுக்கும் மனுஷர்களுக்கும் மகிமை சேர்க்கிறது. அதைத் தருவதை விட்டுவிட்டு நான் எதற்காக உங்களை ஆட்சி செய்ய வேண்டும்?’* என்று கேட்டது. 10  பின்பு, அந்த மரங்கள் அத்தி மரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு ராஜாவாக இரு’ என்றன. 11  அதற்கு அந்த அத்தி மரம், ‘தித்திப்பான நல்ல பழங்களைத் தருவதை விட்டுவிட்டு, நான் எதற்காக உங்களை ஆட்சி செய்ய வேண்டும்?’* என்று கேட்டது. 12  அடுத்ததாக அந்த மரங்கள் திராட்சைக் கொடியிடம் போய், ‘நீ வந்து எங்களுக்கு ராஜாவாக இரு’ என்றன. 13  அதற்குத் திராட்சைக் கொடி, ‘நான் தரும் புதிய திராட்சமது கடவுளுக்கும் மனுஷர்களுக்கும் சந்தோஷம் தருகிறது. அதைத் தருவதை விட்டுவிட்டு நான் எதற்காக உங்களை ஆட்சி செய்ய வேண்டும்?’* என்று கேட்டது. 14  கடைசியாக, அந்த மரங்களெல்லாம் முட்செடியிடம் வந்து, ‘நீ எங்களுக்கு ராஜாவாக இரு’+ என்றன. 15  அதற்கு முட்செடி, ‘நீங்கள் உண்மையிலேயே என்னை ராஜாவாக்க விரும்புகிறீர்கள் என்றால், என் நிழலில் வந்து பாதுகாப்பாக இருங்கள். இல்லாவிட்டால், என்னிடமிருந்து நெருப்பு கிளம்பி லீபனோனின் தேவதாரு மரங்களைச் சுட்டுப் பொசுக்கும்’ என்றது. 16  அபிமெலேக்கை ராஜாவாக்கியதால்+ நீங்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டதாக நினைக்கிறீர்களோ? யெருபாகாலுக்கும் அவருடைய வீட்டாருக்கும் நல்லது செய்துவிட்டதாகவும், அவருக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுத்துவிட்டதாகவும் நினைக்கிறீர்களோ? 17  என்னுடைய அப்பா உங்களுக்காகப் போர் செய்தபோது,+ மீதியானியர்களின் கையிலிருந்து உங்களைக் காப்பாற்ற தன்னுடைய உயிரையே பணயம் வைத்தார்.+ 18  ஆனால், இன்று நீங்கள் என்னுடைய அப்பாவின் குடும்பத்தாருக்கு விரோதமாக வந்து அவருடைய 70 மகன்களை ஒரே கல்லின் மேல் கொன்றுபோட்டீர்கள்.+ அவருடைய அடிமைப் பெண்ணின் மகனாகிய அபிமெலேக்கு+ உங்கள் சகோதரனாக இருப்பதால் அவனை சீகேமின் தலைவர்களான உங்களுக்கு ராஜாவாக்கினீர்கள். 19  இன்றைக்கு நீங்கள் யெருபாகாலிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்கிறீர்கள் என்றால், அபிமெலேக்கை நினைத்து சந்தோஷப்படுங்கள், அவனும் உங்களை நினைத்து சந்தோஷப்படட்டும். 20  இல்லாவிட்டால், அபிமெலேக்கிடமிருந்து நெருப்பு கிளம்பி சீகேம், பெத்-மில்லோ தலைவர்களைச் சுட்டுப் பொசுக்கட்டும்.+ சீகேம், பெத்-மில்லோ தலைவர்களிடமிருந்து நெருப்பு கிளம்பி அபிமெலேக்கைச் சுட்டுப் பொசுக்கட்டும்”+ என்று சொன்னார். 21  பின்பு, யோதாம்+ அங்கிருந்து பேயேருக்குத் தப்பியோடினார். தன்னுடைய சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து அங்கேயே வாழ்ந்துவந்தார். 22  அபிமெலேக்கு மூன்று வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தான். 23  பின்பு, அபிமெலேக்குக்கும் சீகேமின் தலைவர்களுக்கும் இடையே பகை வளர கடவுள் விட்டுவிட்டதால், அவர்கள் அபிமெலேக்குக்கு எதிராகச் சதி செய்தார்கள். 24  யெருபாகாலின் 70 மகன்களைக் கொடூரமாய்க் கொன்றதற்காக அவர்களுடைய சகோதரன் அபிமெலேக்கின் மேலும், அதற்கு உடந்தையாய் இருந்த சீகேமின் தலைவர்களின் மேலும் கொலைப்பழி* சுமத்தப்படுவதற்காகவும் அவர்கள் பழிவாங்கப்படுவதற்காகவும்+ அப்படி நடந்தது. 25  மலை உச்சிகளில் பதுங்கியிருந்து அபிமெலேக்கைத் தாக்குவதற்காக சீகேமின் தலைவர்கள் ஆட்களை ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் அந்த வழியாகப் போய்வந்த ஆட்களிடம் கொள்ளையடித்தார்கள். இந்த விஷயம் பிற்பாடு அபிமெலேக்கிடம் சொல்லப்பட்டது. 26  எபெத்தின் மகனாகிய காகால் தன்னுடைய சகோதரர்களோடு சீகேமுக்கு+ வந்தான். சீகேமின் தலைவர்கள் அவன்மேல் நம்பிக்கை வைத்தார்கள். 27  அவர்கள் எல்லாரும் சேர்ந்து வயல்வெளிக்குப் போய், தங்களுடைய திராட்சைத் தோட்டங்களிலிருந்து பழங்களைப் பறித்து, அவற்றை மிதித்து, அவற்றின் ரசத்தைப் பிழிந்தெடுத்தார்கள். பின்பு, விழா கொண்டாடினார்கள். அதோடு, தங்களுடைய தெய்வத்தின் கோயிலுக்குள்* போய்ச்+ சாப்பிட்டார்கள், குடித்தார்கள், அபிமெலேக்கைச் சபித்தார்கள். 28  அப்போது எபெத்தின் மகனாகிய காகால், “யார் அந்த அபிமெலேக்கு? யார் அந்த சீகேம்? நாம் ஏன் அவனுக்குச் சேவை செய்ய வேண்டும்? அவன் யெருபாகாலின் மகன்தானே?+ சேபூல் அவன் நியமித்த அதிகாரிதானே? சீகேமின் அப்பாவான ஏமோரின் ஆட்களுக்குச் சேவை செய்யுங்கள்! நாம் ஏன் அபிமெலேக்குக்குச் சேவை செய்ய வேண்டும்? 29  ஜனங்கள் மட்டும் என் பக்கம் இருந்தால் அபிமெலேக்கை நான் சிம்மாசனத்தைவிட்டு இறக்கிவிடுவேன்” என்று சொன்னான். பின்பு அபிமெலேக்கிடம், “இன்னும் நிறைய படைகளோடு வந்து என்னோடு மோதிப் பார்” என்று சவால்விட்டான். 30  எபெத்தின் மகனாகிய காகால் பேசியதை அந்த நகரத்தின் அதிகாரியாகிய சேபூல் கேட்டபோது, அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது. 31  அதனால் அவன் அபிமெலேக்கிடம் ரகசியமாக* தூதுவர்களை அனுப்பி, “எபெத்தின் மகன் காகாலும் அவன் சகோதரர்களும் இப்போது சீகேமில் இருக்கிறார்கள். இந்த நகரத்தில் இருக்கிற ஜனங்களை உங்களுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார்கள். 32  அதனால், நீங்களும் உங்களுடைய ஆட்களும் ராத்திரியில் வந்து நகரத்துக்கு வெளியே பதுங்கியிருங்கள். 33  விடிந்தவுடன் எழுந்து வந்து நகரத்தைத் தாக்குங்கள். அவனும் அவன் ஆட்களும் உங்களைத் திருப்பித் தாக்க வரும்போது, எப்படியாவது அவனைத் தோற்கடித்துவிடுங்கள்”* என்று சொன்னான். 34  அதனால், அபிமெலேக்கும் அவனோடு இருந்த ஆட்களும் ராத்திரியில் புறப்பட்டு வந்து, சீகேமைத் தாக்குவதற்காக நான்கு பிரிவுகளாகப் பிரிந்து பதுங்கிக்கொண்டார்கள். 35  எபெத்தின் மகனாகிய காகால் நகரவாசலில் வந்து நின்றபோது, அபிமெலேக்கும் அவனோடு இருந்த ஆட்களும் தாங்கள் பதுங்கியிருந்த இடங்களிலிருந்து வெளியே வந்தார்கள். 36  காகால் அவர்களைப் பார்த்தவுடன் சேபூலிடம், “அங்கே பார், மலை உச்சிகளிலிருந்து ஆட்கள் இறங்கி வருகிறார்கள்” என்று சொன்னான். ஆனால் சேபூல், “மலைகளின் நிழலைப் பார்த்து ஆட்கள் என்று நினைத்துவிட்டாய்” என்று சொன்னான். 37  பின்பு காகால் அவனிடம், “அங்கே பார், தேசத்தின் நடுவிலிருந்து ஆட்கள் இறங்கி வருகிறார்கள். ஒரு பிரிவினர் மெயொனெனீமில் பெரிய மரம் இருக்கிற பாதை வழியாக வருகிறார்கள்” என்று சொன்னான். 38  அதற்கு சேபூல், “நீதானே இந்த ஆட்களுக்கு எதிராகப் பேசினாய்? ‘யார் அந்த அபிமெலேக்கு? நாம் ஏன் அவனுக்குச் சேவை செய்ய வேண்டும்?’+ என்று ஆணவத்தோடு கேட்டாயே. இப்போது நீயே போய் இவர்களோடு சண்டை போடு” என்று சொன்னான். 39  காகால் உடனே சீகேமின் தலைவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அபிமெலேக்கோடு சண்டை போட்டான். 40  ஆனால் அபிமெலேக்கு அவனைத் துரத்தினான், அப்போது அவன் தப்பித்து ஓடினான். நகரவாசல்வரை நிறைய பேர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். 41  பின்பு, அபிமெலேக்கு அருமாவுக்குத் திரும்பி வந்து அங்கே தங்கினான். காகாலையும் அவனுடைய சகோதரர்களையும் சீகேமிலிருந்து சேபூல்+ துரத்திவிட்டான். 42  அடுத்த நாள் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்தார்கள்; இந்த விஷயம் அபிமெலேக்கிடம் சொல்லப்பட்டது. 43  அதனால், அவன் தன்னுடைய ஆட்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, நகரத்துக்கு வெளியே அவர்களோடு சேர்ந்து பதுங்கியிருந்தான். நகரத்தைவிட்டு ஜனங்கள் வெளியே வருவதைப் பார்த்தவுடன், அவர்களை வெட்டி வீழ்த்தினான். 44  அபிமெலேக்கும் அவனோடு இருந்த ஒரு பிரிவினரும் வேகமாகப் போய் நகரவாசலில் தயாராக நின்றார்கள். அதேசமயத்தில், மற்ற இரண்டு பிரிவினர் நகரத்துக்கு வெளியே இருந்த எல்லாரையும் வெட்டிச் சாய்த்தார்கள். 45  அபிமெலேக்கு அந்த நாள் முழுக்க போர் செய்து அந்த நகரத்தைக் கைப்பற்றினான். நகரத்திலிருந்த ஜனங்களைக் கொன்றுபோட்டு, நகரத்தை இடித்துத் தரைமட்டமாக்கினான்.+ பின்பு, நகரமெங்கும் உப்பைக் கொட்டினான். 46  சீகேம் கோட்டையில் இருந்த தலைவர்கள் இதைக் கேள்விப்பட்டதும், எல்-பேரீத் கோயிலில்+ உள்ள மறைவான அறைக்குப் போய் ஒளிந்துகொண்டார்கள். 47  அந்தத் தலைவர்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கிற விஷயம் அபிமெலேக்கிடம் சொல்லப்பட்டது. 48  உடனே, அவனும் அவனோடு இருந்த ஆட்களும் சால்மோன் மலைக்கு ஏறிப் போனார்கள். அபிமெலேக்கு ஒரு கோடாலியை எடுத்து மரக் கிளை ஒன்றை வெட்டி அதைத் தன்னுடைய தோளில் வைத்துக்கொண்டான். பின்பு தன்னோடு இருந்தவர்களிடம், “சீக்கிரம்! நான் செய்வதைப் போலவே நீங்களும் செய்யுங்கள்” என்று சொன்னான். 49  அதனால், அவனோடு இருந்த ஆட்கள் ஒவ்வொருவரும் மரக் கிளைகளை வெட்டி எடுத்துக்கொண்டு அவன் பின்னால் போனார்கள். பின்பு, மரக் கிளைகளைச் சுற்றிலும் வைத்து அந்த மறைவான அறையைக் கொளுத்தினார்கள். சீகேம் கோட்டையிலிருந்த ஆண்கள், பெண்கள் எனக் கிட்டத்தட்ட 1,000 பேரும் செத்துப்போனார்கள். 50  பின்பு, அபிமெலேக்கு தேபேஸ் நகரத்துக்குப் போய், அதற்கு எதிராக முகாம்போட்டு, அதைக் கைப்பற்றினான். 51  அந்த நகரத்தின் நடுப்பகுதியில் ஒரு பலமான கோட்டை இருந்தது. நகரத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் தலைவர்களும் அதற்குள் ஓடிப்போய், அதைப் பூட்டிவிட்டு, கோட்டையின் உச்சிக்கு ஏறினார்கள். 52  அபிமெலேக்கு அந்தக் கோட்டைவரை போய் அதைத் தாக்கினான். கோட்டையைக் கொளுத்துவதற்காக அதன் வாசலுக்குப் பக்கத்தில் போனான். 53  அப்போது ஒரு பெண், மாவு அரைக்கிற கல்லின்* மேற்கல்லை எடுத்து அபிமெலேக்கின் தலைமேல் போட்டாள். அவனுடைய மண்டை உடைந்தது.+ 54  உடனே, அவன் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்த பணியாளனைக் கூப்பிட்டு, “உன் வாளை உருவி என்னைக் கொன்றுவிடு. அப்போதுதான், ‘இவன் ஒரு பெண்ணின் கையால் செத்தான்’ என்று யாரும் சொல்ல மாட்டார்கள்” என்றான். அதனால், அவனுடைய பணியாளன் அவனை வாளால் குத்தினான், அவன் செத்துப்போனான். 55  அபிமெலேக்கு செத்துப்போனதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது, அவரவர் வீட்டுக்குத் திரும்பினார்கள். 56  இப்படி, அபிமெலேக்கு தன்னுடைய 70 சகோதரர்களைக் கொன்று தன் அப்பாவுக்குக் கெடுதல் செய்ததால் கடவுள் அவனைத் தண்டித்தார்.+ 57  அதோடு, சீகேமின் ஆட்கள் செய்த எல்லா கெடுதலும் அவர்களுக்கே வரும்படி செய்தார். இப்படி, யெருபாகாலின்+ மகனாகிய யோதாம் கொடுத்த சாபம்+ பலித்தது.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அம்மாவுடைய அப்பா.”
அல்லது, “நிலச் சொந்தக்காரர்களிடம்.”
நே.மொ., “எலும்பும் சதையுமாக இருக்கிறேன்.”
வே.வா., “அபிஷேகம் செய்ய.”
நே.மொ., “மற்ற மரங்களுக்கு மேல் அசைந்தாட வேண்டும்?”
நே.மொ., “மற்ற மரங்களுக்கு மேல் அசைந்தாட வேண்டும்?”
நே.மொ., “மற்ற மரங்களுக்கு மேல் அசைந்தாட வேண்டும்?”
வே.வா., “இரத்தப்பழி.”
நே.மொ., “வீட்டுக்குள்.”
வே.வா., “தந்திரமாக.”
வே.வா., “அவனைத் தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.”
வே.வா., “திரிகைக் கல்லின்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா