நெகேமியா 9:1-38

9  அந்த மாதம் 24-ஆம் நாளில் இஸ்ரவேலர்கள் கூடிவந்தார்கள். துக்கத் துணி* உடுத்திக்கொண்டு, தங்கள்மேல் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டு, விரதம் இருந்தார்கள்.+  இஸ்ரவேலர்கள் மற்ற தேசத்தாரைவிட்டுப் பிரிந்து நின்று,+ தாங்களும் தங்கள் முன்னோர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டார்கள்.+  பின்பு அவர்கள் அங்கேயே நின்று, அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்தை மூன்று மணிநேரத்துக்கு சத்தமாக வாசித்தார்கள்.+ அடுத்த மூன்று மணிநேரத்துக்குத் தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டும், தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை வணங்கிக்கொண்டும் இருந்தார்கள்.  யெசுவா, பானி, கத்மியேல், ஷெபனியா, புன்னி, செரெபியா,+ பானி, கெனானி ஆகியவர்கள் லேவியர்களின் மேடையில் நின்றுகொண்டு,+ சத்தமாக தங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டினார்கள்.  யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, ஷெபனியா, பெத்தகியா ஆகிய லேவியர்கள் இப்படிச் சொன்னார்கள்: “எழுந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவை என்றென்றும் புகழுங்கள்.+ எங்கள் கடவுளே, உங்களுடைய மகிமையான பெயரை இவர்கள் புகழட்டும். உங்கள் பெயரை நாங்கள் எவ்வளவு புகழ்ந்தாலும் போற்றினாலும் போதாது.  யெகோவாவே, நீங்கள் ஒருவர்தான் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும், ஏன் வானாதி வானத்தையும், அதன் படைகளையும்,* பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்கள். நீங்கள்தான் எல்லா உயிர்களையும் வாழ வைக்கிறீர்கள். வானத்திலுள்ள படைகள்* உங்களுக்கு முன்னால் தலைவணங்குகின்றன.  யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான்.  ஆபிரகாம் நெஞ்சார விசுவாசம் வைத்திருந்ததை நீங்கள் பார்த்து,+ கானானியர்களுக்கும் ஏத்தியர்களுக்கும் எமோரியர்களுக்கும் பெரிசியர்களுக்கும் எபூசியர்களுக்கும் கிர்காசியர்களுக்கும் சொந்தமான தேசத்தை அவருடைய சந்ததிக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தீர்கள்.+ நீங்கள் நீதியுள்ளவர் என்பதால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினீர்கள்.  எகிப்தில் எங்கள் முன்னோர்கள் பட்ட பாடுகளைப் பார்த்தீர்கள்,+ செங்கடலுக்கு முன்னால் அவர்கள் கதறிய கதறலைக் கேட்டீர்கள். 10  பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் அவனுடைய ஜனங்களும் எங்கள் முன்னோர்களிடம் அகங்காரத்தோடு* நடந்துகொண்டதால்,+ அவர்களுக்கு எதிராக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தீர்கள்.+ இப்படி, உங்கள் பெயருக்கு இன்றுவரை புகழ் சேர்த்திருக்கிறீர்கள்.+ 11  எங்கள் முன்னோர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்தீர்கள், அவர்கள் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.+ ஆனால் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தவர்களை, கொந்தளிக்கும் கடலுக்குள் கல்லைத் தூக்கி எறிவதுபோல் தூக்கி எறிந்தீர்கள்.+ 12  பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டினீர்கள், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டினீர்கள்.+ 13  பரலோகத்திலிருந்து சீனாய் மலைக்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசினீர்கள்.+ நீதியான தீர்ப்புகளையும் நம்பகமான* சட்டங்களையும் அருமையான விதிமுறைகளையும் கட்டளைகளையும் கொடுத்தீர்கள்.+ 14  உங்களுடைய பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தி,+ உங்கள் ஊழியராகிய மோசே மூலம் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்கள். 15  அவர்களுக்குப் பசியெடுத்தபோது வானத்திலிருந்து உணவைக் கொடுத்தீர்கள்,+ தாகமெடுத்தபோது கற்பாறையிலிருந்து தண்ணீரைத் தந்தீர்கள்.+ நீங்கள் கொடுப்பதாக உறுதிமொழி தந்த தேசத்துக்குப் போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்படி அவர்களிடம் சொன்னீர்கள். 16  ஆனால், எங்கள் முன்னோர்கள் அகங்காரமாக நடந்தார்கள்,+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்,+ உங்கள் கட்டளைகளை அலட்சியம் செய்தார்கள். 17  உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+ 18  அவர்கள் தங்கத்தில் ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்து, ‘நம்மை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்’+ என்று சொன்னபோதிலும், உங்களைத் துளியும் மதிக்காமல் பல அக்கிரமங்கள் செய்தபோதிலும், 19  அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினீர்கள். நீங்கள் அவர்களை வனாந்தரத்திலேயே விட்டுவிடவில்லை.+ பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டுவதையும், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டுவதையும் நிறுத்திவிடவில்லை.+ 20  அவர்கள் விவேகத்தோடு* நடந்துகொள்வதற்காக உங்களுடைய அருமையான சக்தியைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு மன்னாவைக் கொடுத்தீர்கள்.+ அவர்களுடைய தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தீர்கள்.+ 21  வனாந்தரத்தில் 40 வருஷங்களாக அவர்களுக்கு உணவு தந்தீர்கள்,+ அவர்களுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்களுடைய உடை பழையதாகிப் போகவும் இல்லை,+ அவர்களுடைய பாதங்கள் வீங்கிப் போகவும் இல்லை. 22  அவர்களுக்கு ராஜ்யங்களையும் தேசங்களையும் பகுதி பகுதியாகப் பங்குபோட்டுக் கொடுத்தீர்கள்.+ அதனால் எஸ்போனின்+ ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும்+ பாசானின் ராஜாவாகிய ஓகின்+ தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள். 23  அவர்களுடைய வம்சத்தாரை வானத்து நட்சத்திரங்களைப் போலப் பெருக வைத்தீர்கள்.+ பின்பு, அவர்களுடைய முன்னோர்களுக்குத் தருவதாக உறுதிமொழி கொடுத்திருந்த தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்.+ 24  அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ அங்கு வாழ்ந்துவந்த கானானியர்களை நீங்கள் அவர்கள்முன் தோற்கடித்தீர்கள்.+ அந்த கானானியர்களையும் அவர்களுடைய ராஜாக்களையும் இஷ்டம்போல் நடத்தும்படி அவர்கள் கையில் விட்டுவிட்டீர்கள். 25  மதில் சூழ்ந்த நகரங்களையும்+ செழிப்பான தேசத்தையும்+ அவர்கள் கைப்பற்றினார்கள். நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், ஏற்கெனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும்,+ காய்த்துக் குலுங்கும் மரங்களையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள். திருப்தியாகச் சாப்பிட்டு கொழுகொழுவென்று ஆனார்கள். நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். 26  நீங்கள் இவ்வளவு செய்தும், உங்கள் பேச்சைக் கேட்காமல் உங்களுடைய திருச்சட்டத்தை மீறினார்கள்.*+ உங்களிடம் திருந்தி வரும்படி எச்சரித்த உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். உங்களைத் துளியும் மதிக்காமல் அக்கிரமம் செய்தார்கள்.+ 27  அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+ 28  ஆனால், பிரச்சினை தீர்ந்தவுடனேயே அவர்கள் மறுபடியும் கெட்ட வழியில் போனார்கள்,+ நீங்கள் மறுபடியும் அவர்களை எதிரிகளின் பிடியில் விட்டுவிட்டீர்கள்.+ அந்த எதிரிகள் அவர்களை ஆட்டிப்படைத்தபோது* திரும்ப உங்களிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள்.+ நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டு மிகுந்த இரக்கத்தோடு மறுபடியும் மறுபடியும் அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+ 29  திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி நீங்கள் எச்சரித்தபோதும், அவர்கள் அகங்காரத்தோடு உங்கள் கட்டளைகளை மீறினார்கள்;+ வாழ்வளிக்கும் விதிமுறைகளைப்+ பின்பற்றாமல் பாவம் செய்தார்கள். உங்கள் வழிக்குத் திரும்பிவர விடாப்பிடியாக மறுத்தார்கள், உங்கள் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தார்கள். 30  நீங்கள் எத்தனையோ வருஷங்களாகப் பொறுமையோடு+ தீர்க்கதரிசிகளை அனுப்பி எச்சரித்துக்கொண்டே இருந்தீர்கள். ஆனால், அவர்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. கடைசியில், மற்ற தேசத்தாரின் கையில் அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ 31  அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள். 32  மகத்துவமுள்ள எங்கள் கடவுளே, மாவல்லவரே, அற்புதமானவரே, ஒப்பந்தத்தைக் காப்பவரே, மாறாத அன்பைக் காட்டுபவரே,+ அசீரிய ராஜாக்களின் நாளிலிருந்து+ இந்த நாள்வரை நாங்களும் எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும்+ குருமார்களும்+ தீர்க்கதரிசிகளும்+ முன்னோர்களும் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அற்பமாக நினைக்காதீர்கள். 33  எங்களுக்கு வந்த துன்பங்களுக்காக உங்களை நாங்கள் குற்றப்படுத்த முடியாது. நீங்கள் நீதியுள்ளவர். நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள். நாங்கள்தான் கெட்ட வழியில் நடந்தோம்.+ 34  எங்கள் ராஜாக்களும் அதிகாரிகளும் குருமார்களும் முன்னோர்களும் உங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, உங்களுடைய கட்டளைகளையும் எச்சரிப்புகளையும்* காதுகொடுத்துக் கேட்கவில்லை. 35  அவர்கள் தங்களுடைய ராஜ்யத்தில் வாழ்ந்து, நீங்கள் அள்ளிக்கொடுத்த நன்மைகள் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்ந்த காலத்திலும் சரி, நீங்கள் தந்த வளமான, விசாலமான தேசத்தில் குடியிருந்த காலத்திலும் சரி, உங்களுக்குச் சேவை செய்யவோ+ கெட்ட பழக்கங்களைவிட்டு விலகவோ இல்லை. 36  அதனால், இன்று நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.+ எந்தத் தேசத்தின் விளைச்சலையும் வளங்களையும் அனுபவிக்கும்படி எங்கள் முன்னோர்களைக் குடிவைத்தீர்களோ அந்தத் தேசத்தில் நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம். 37  நாங்கள் பாவங்கள் செய்ததால் வேறு ராஜாக்களுக்கு எங்களை அடிமைகளாக்கிவிட்டீர்கள். எங்கள் தேசத்தின் அமோக விளைச்சலை அவர்கள்தான் அனுபவிக்கிறார்கள்.+ எங்களையும் எங்கள் ஆடுமாடுகளையும் இஷ்டம்போல் அடக்கி ஆளுகிறார்கள். நாங்கள் தவியாய்த் தவிக்கிறோம். 38  அதனால், நாங்கள் உறுதியான தீர்மானத்தோடு ஓர் ஒப்பந்தத்தை+ எழுதி வைத்திருக்கிறோம். எங்கள் அதிகாரிகளும் லேவியர்களும் குருமார்களும் தங்கள் முத்திரையைப் போட்டு அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.”+

அடிக்குறிப்புகள்

நட்சத்திரங்களையும் குறிக்கலாம், தேவதூதர்களையும் குறிக்கலாம்.
நட்சத்திரங்களையும் குறிக்கலாம், தேவதூதர்களையும் குறிக்கலாம்.
இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “சத்தியத்தின்.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
நே.மொ., “தங்களுக்குப் பின்னால் தூக்கியெறிந்தார்கள்.”
வே.வா., “நொறுக்கியபோது.”
வே.வா., “கனிவும்.”
வே.வா., “நினைப்பூட்டுதல்களையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா