புலம்பல் 1:1-22
א [ஆலெஃப்]*
1 ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே!
ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே!
மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+
ב [பேத்]
2 ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+
அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள்.
ג [கீமெல்]
3 யூதா சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டாள்;+ அங்கே கொடுமைகளை அனுபவிக்கிறாள்.+
அவள் மற்ற தேசத்து ஜனங்களோடுதான் வாழ வேண்டும்;+ அவளுக்கு நிம்மதியே கிடையாது.
அவள் கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து எதிரிகள் அவளைப் பிடித்துவிட்டார்கள்.
ד [டாலத்]
4 சீயோனுக்குப் போகிற சாலைகள் புலம்புகின்றன; ஏனென்றால், பண்டிகைக்கு யாரும் வரவில்லை.+
அவளுடைய நுழைவாசல்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன;+ அவளுடைய குருமார்கள் பெருமூச்சுவிடுகிறார்கள்.
அவளுடைய கன்னிப்பெண்கள்* அழுது புலம்புகிறார்கள்; அவள் தீராத வேதனையில் துடிக்கிறாள்.
ה [ஹே]
5 அவளுடைய எதிரிகள் இப்போது அவளுடைய எஜமான்களாக இருக்கிறார்கள்; அவளுடைய விரோதிகளுக்கு இப்போது கவலையே இல்லை.+
அவள் பாவத்துக்குமேல் பாவம் செய்ததால் யெகோவா அவளைச் சோகத்தில் தள்ளிவிட்டார்.+
அவளுடைய பிள்ளைகளை எதிரிகள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+
ו [வா]
6 சீயோன் மகளுடைய மகிமையெல்லாம் மங்கிவிட்டது.+
அவளுடைய அதிகாரிகள், புல் இல்லாமல் தவிக்கிற மான்களைப் போல இருக்கிறார்கள்.அவர்களைத் துரத்துகிறவர்களுக்கு முன்பாகச் சக்தியே இல்லாமல் நடந்து போகிறார்கள்.
ז [ஸாயின்]
7 எருசலேம் வீடுவாசலை இழந்து கஷ்டப்படும்போது,ஒருகாலத்தில் தான் அனுபவித்த அருமையான காரியங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.+
அவளுடைய ஜனங்கள் எதிரிகளின் கையில் சிக்கியபோது யாரும் உதவிக்கு வரவில்லை.+அவள் அழிந்துபோனதைப் பார்த்து எதிரிகள் கைகொட்டிச் சிரித்தார்கள்.+
ח [ஹேத்]
8 எருசலேம் மகா பெரிய பாவம் செய்தாள்.+
அதனால்தான், எல்லாராலும் அருவருக்கப்படுகிறாள்.
அவளை உயர்வாக மதித்தவர்கள் இப்போது அவளைக் கேவலமாக நடத்துகிறார்கள்.
ஏனென்றால், அவளுடைய நிர்வாணத்தை அவர்கள் பார்த்தார்கள்.+
அவள் குமுறிக்கொண்டு,+ அவமானத்தில் திரும்பிக்கொள்கிறாள்.
ט [டேத்]
9 அவளுடைய பாவாடை தீட்டுப்பட்டிருக்கிறது.
அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.+
அவளுக்குப் பயங்கரமான அழிவு வந்தது; அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
யெகோவாவே, நான் படுகிற வேதனையைப் பாருங்கள். என்னுடைய எதிரி ஜெயித்துவிட்டதாகப் பெருமையடிக்கிறான்.+
י [யோத்]
10 அவளுடைய எல்லா பொக்கிஷங்களின் மேலும் எதிரி கை வைத்துவிட்டான்.+
எந்த ஜனங்கள் உங்கள் சபைக்குள் வரக் கூடாது என்று கட்டளை கொடுத்தீர்களோஅந்த ஜனங்களே அவளுடைய ஆலயத்துக்குள் வருவதை அவள் பார்த்தாள்!+
כ [காஃப்]
11 அவளுடைய மக்கள் எல்லாரும் பெருமூச்சு விடுகிறார்கள்.
உயிர்வாழ வேண்டும் என்பதற்காக உணவைத் தேடி அலைகிறார்கள்.+
கொஞ்சம் உணவுக்காகக் கையில் இருக்கிற மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்துவிட்டார்கள்.
யெகோவாவே, நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்ணாகிவிட்டதைப் பாருங்கள்.
ל [லாமெத்]
12 சாலையில் போகிறவர்களே, இது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையா?
என்னைக் கொஞ்சம் பாருங்கள்!
எனக்கு வந்த வேதனையைவிட பயங்கரமான வேதனை வேறு ஏதாவது இருக்கிறதா?யெகோவாதான் அவருடைய கடும் கோபத்தின் நாளில் என்னை இப்படித் தண்டித்துவிட்டார்.+
מ [மேம்]
13 மேலிருந்து அவர் என்னுடைய எலும்புகளுக்குள் நெருப்பை அனுப்பி,+ எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கிவிட்டார்.
என் கால்களைச் சிக்க வைக்க வலையை விரித்தார்; என்னைத் திரும்பிப் போக வைத்துவிட்டார்.
கைவிடப்பட்டவளைப் போல என்னை ஆக்கிவிட்டார்.
நாளெல்லாம் நான் சுகமில்லாமல் கிடக்கிறேன்.
נ [நூன்]
14 அவர் தன்னுடைய கையால் என்னுடைய குற்றங்களையெல்லாம் கட்டி
ஒரு நுகத்தடியைப் போல என் கழுத்தின் மேல் வைத்தார்; என் தெம்பெல்லாம் போய்விட்டது.
என்னால் எதிர்க்க முடியாதவர்களின் கையில் யெகோவா என்னைக் கொடுத்துவிட்டார்.+
ס [சாமெக்]
15 என்னுடைய பலசாலிகள் எல்லாரையும் யெகோவா தூக்கி வீசிவிட்டார்.+
என்னுடைய வாலிபர்களை நொறுக்க ஒரு படையை வர வைத்தார்.+
கன்னிப்பெண்ணாகிய யூதாவைத் திராட்சரச ஆலையில் யெகோவா மிதித்துப்போட்டார்.+
ע [ஆயின்]
16 இதையெல்லாம் நினைத்து நான் கதறுகிறேன்;+ என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.
எனக்கு ஆறுதல் சொல்லவோ புதுத்தெம்பு தரவோ யாரும் இல்லை, எல்லாரும் தூரமாகப் போய்விட்டார்கள்.
எதிரி ஜெயித்துவிட்டதால் என் மகன்களுடைய வாழ்க்கையே பாழாய்ப் போய்விட்டது.
פ [பே]
17 சீயோன் தன்னுடைய கைகளை விரித்திருக்கிறாள்;+ அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
யாக்கோபைத் தாக்கச் சொல்லி அவனைச் சுற்றியுள்ள எல்லா எதிரிகளுக்கும் யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.+
அந்த எதிரிகளுக்கு எருசலேமைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.+
צ [சாதே]
18 யெகோவா நீதியுள்ளவர்.+ நான்தான் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனேன்.+
ஜனங்களே, கேளுங்கள்; என்னுடைய வேதனையைப் பாருங்கள்.
என்னுடைய கன்னிப்பெண்களும்* வாலிபர்களும் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+
ק [கோஃப்]
19 நான் என்னுடைய காதலர்களைக் கூப்பிட்டேன்; ஆனால், அவர்கள் எனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+
நகரத்திலே என்னுடைய குருமார்களும் பெரியோர்களும்* உயிர்வாழ்வதற்காக உணவு தேடி அலைந்தார்கள்.ஆனால் ஒன்றும் கிடைக்காமல் செத்துப்போனார்கள்.+
ר [ரேஷ்]
20 யெகோவாவே, நான் தவிக்கிற தவிப்பைப் பாருங்கள்.
என் குடல் துடிக்கிறது. துக்கம் என் நெஞ்சத்தைப் பிழிகிறது.
நான் உங்களுக்குக் கொஞ்சமும் கீழ்ப்படியாமல் போய்விட்டேனே!+
வெளியே வாள் எல்லாரையும் வெட்டிச் சாய்க்கிறது;+ வீட்டுக்குள்ளும் சாவுதான் விழுகிறது.
ש [ஷீன்]
21 ஜனங்கள் என்னுடைய பெருமூச்சைக் கேட்டார்கள்; எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
எனக்கு வந்த அழிவைப் பற்றி எல்லா எதிரிகளும் கேள்விப்பட்டார்கள்.
நீங்கள் என்னைத் தண்டித்ததைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.+
ஆனால், நீங்கள் சொன்ன நாள் வரும்போது+ அவர்களும் என்னைப் போல ஆகிவிடுவார்கள்.+
ת [ட்டா]
22 என்னுடைய குற்றங்களுக்காக நீங்கள் என்னைக் கடுமையாகத் தண்டித்தது போலவே,அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக அவர்களையும் கடுமையாகத் தண்டியுங்கள்.+
நான் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறேன். என் நெஞ்சு வலிக்கிறது.
அடிக்குறிப்புகள்
^ முதல் நான்கு அதிகாரங்கள் ஒப்பாரி வைத்துப் பாடப்பட்ட பாட்டுகள். எபிரெய எழுத்துக்களின் வரிசைப்படியே இவை 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த பகுதியின் மேலே அந்தந்த எபிரெய எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
^ வே.வா., “இளம் பெண்கள்.”
^ வே.வா., “இளம் பெண்களும்.”
^ வே.வா., “மூப்பர்களும்.”