மத்தேயு புத்தகத்துக்கு அறிமுகம்
எழுத்தாளர்: மத்தேயு
எழுதப்பட்ட இடம்: இஸ்ரவேல்
முடிக்கப்பட்ட வருஷம்: ஏறக்குறைய கி.பி. 41
காலப்பகுதி: கி.மு. 2-கி.பி. 33
முக்கிய விவரங்கள்:
இயேசு இறந்து எட்டே வருஷங்களில், மத்தேயு தன்னுடைய சுவிசேஷப் புத்தகத்தை எபிரெய மொழியில் எழுதியதாக அத்தாட்சி காட்டுகிறது; அவரே அதைக் கிரேக்க மொழியில் மொழிபெயர்த்திருக்கலாம்.
மத்தேயு புத்தகம் கிட்டத்தட்ட நூறு தடவை எபிரெய வேதாகமத்தில் இருக்கும் விஷயங்களைக் குறிப்பிடுகிறது. அதுவும் 40 தடவை எபிரெய வேதாகமத்திலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டுகிறது.
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய மத்தேயுவின் பதிவு, முக்கியமாக யூதர்களை மனதில் வைத்து எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
மத்தேயு வரிவசூலிப்பவராக இருந்தார்; பணம், காசு, எண்ணிக்கை, மதிப்பீடு ஆகியவற்றை அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கலாம். (17:27; 26:15; 27:3)
பலி மட்டுமல்ல, இரக்கமும் அவசியம் என்று இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியதைப் பற்றி மத்தேயு மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார். (9:9-13; 12:7; 18:21-35)
“அரசாங்கம்” என்ற வார்த்தையை மத்தேயு 50 தடவைக்கும் மேலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
கடவுளுடைய அரசாங்கத்தை மையமாக வைத்து முதல் 18 அதிகாரங்களை மத்தேயு எழுதியிருக்கிறார்; அதனால், அவற்றிலுள்ள சம்பவங்கள் காலவரிசைப்படி இல்லை. ஆனால், கடைசி பத்து அதிகாரங்களை (19 முதல் 28 அதிகாரங்களை) அவர் பெரும்பாலும் காலவரிசைப்படிதான் பதிவு செய்திருக்கிறார்.
மத்தேயுவின் சுவிசேஷப் புத்தகத்திலுள்ள 40 சதவீதத்துக்கும் அதிகமான தகவல்கள் வேறெந்த சுவிசேஷப் புத்தகத்திலும் இல்லை. அவற்றில் குறைந்தபட்சம் பத்து உவமைகள் அடங்கும்: வயலில் களைகள் (13:24-30), புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷம் (13:44), விலை உயர்ந்த முத்து (13:45, 46), இழுவலை (13:47-50), இரக்கம் காட்டாத அடிமை (18:23-35), கூலியாட்களும் தினாரியுவும் (20:1-16), அப்பாவும் இரண்டு பிள்ளைகளும் (21:28-32), ராஜாவின் மகனுடைய திருமணம் (22:1-14), பத்துக் கன்னிப்பெண்கள் (25:1-13), தாலந்துகள் (25:14-30).