யோபு 20:1-29

20  அப்போது, நாகமாத்தியனான சோப்பார்,+   “நீ பேசுவதைக் கேட்டு என் இரத்தம் கொதிக்கிறது.என் மனதில் இருப்பதையெல்லாம் சொல்ல என் வாய் துடிக்கிறது.   குத்தலாகப் பேசி என்னைக் கேவலப்படுத்திவிட்டாய்.என் புத்தி* இப்போது என்னைப் பேச வைக்கிறது.   நான் சொல்லப்போவது ஒன்றும் உனக்குத் தெரியாத விஷயம் இல்லை.மனுஷன் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான்.+   பொல்லாதவனுடைய கூத்தும் கும்மாளமும் கொஞ்ச நாளுக்குத்தான்.கெட்டவனின்* ஆட்டம்பாட்டமெல்லாம் நொடி நேரத்துக்குத்தான்.+   அவனுடைய புகழ் வானத்தைத் தொடலாம்.அவனுடைய பெருமை மேகத்தை எட்டலாம்.   ஆனாலும், அவனுடைய மலத்தைப் போல அவனும் மண்ணோடு மண்ணாகிப்போவான்.அவனுக்குப் பழக்கமானவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.   கனவைப் போல அவன் கலைந்துபோவான்; அவர்கள் தேடினாலும் அவன் கிடைக்க மாட்டான்.ராத்திரியில் வரும் தரிசனம்போல் அவன் மறைந்துபோவான்.   அவனைப் பார்த்த கண்கள் இனி அவனைப் பார்க்காது.அவன் இருந்த இடத்தில் இனி அவனைப் பார்க்க முடியாது.+ 10  அவனுடைய பிள்ளைகள் ஏழைகளிடம் கையேந்தி நிற்பார்கள்.மற்றவர்களிடமிருந்து பறித்துக்கொண்ட பொருள்களை அவனே திருப்பிக்கொடுப்பான்.+ 11  அவன்* இளமைத்துடிப்போடு இருந்தாலும்,அது அவனோடு சேர்ந்து மண்ணுக்குப் போகும். 12  கெட்டதைச் செய்வது அவனுக்கு இனிப்பு சாப்பிடுவதுபோல் இருக்கலாம்.அதைத் துப்புவதற்கு மனதே இல்லாமல், 13  நாக்கின் அடியில் வைத்து,ரசித்து ருசித்துக்கொண்டே இருக்கலாம். 14  ஆனால் அது வயிற்றுக்குள் போனதும்,கசப்பாக மாறி, நாகப்பாம்புகளின் விஷம்போல் ஆகிவிடும். 15  மற்றவர்களின் சொத்துகளை அவன் விழுங்கினான்; ஆனால், விழுங்கியதையெல்லாம் வாந்தியெடுப்பான்.கடவுள்தான் அவனை வாந்தியெடுக்க வைப்பார். 16  நாகப்பாம்பின் விஷத்தை அவன் குடிப்பான்.விரியன் பாம்பு அவன் உயிரைக் குடிக்கும். 17  இனி நீரோடைகள் அவன் கண்ணில் படாது.ஆறுபோல் ஓடும் தேனும் நெய்யும் அவனுக்குக் கிடைக்காது. 18  சேர்த்து வைத்த பொருள்களை அனுபவிக்காமலேயே திருப்பிக் கொடுப்பான்.அவன் சம்பாதித்தவை அவனுக்குச் சந்தோஷம் தராது.+ 19  ஏனென்றால், அவன் ஏழைகளைக் கொடுமைப்படுத்தினான், ஒதுக்கித்தள்ளினான்.மற்றவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொண்டான். 20  ஆனாலும், அவனுக்கு நிம்மதியே இருக்காது.அவனுடைய சொத்து அவனைக் காப்பாற்றாது. 21  ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவன் விழுங்கிவிட்டான்.அதனால், அவனுடைய செல்வமும் செழிப்பும் நிலைக்காது. 22  அவனுக்குப் பணம் வந்து குவியும்போது கவலைகளும் வந்து குவியும்.அவனுக்கு அடுத்தடுத்து பல அசம்பாவிதங்கள் நடக்கும். 23  அவன் வயிறு நிறைய சாப்பிடுவான்.அப்போது, கடவுள் அவன்மேல் தன்னுடைய கோபக் கனலைக் கொட்டுவார்.அதை அவன் வயிற்றில் கொட்டுவார். 24  இரும்பு ஆயுதங்களுக்குப் பயந்து அவன் தப்பியோடும்போது,செம்பு வில்லிலிருந்து பாயும் அம்புகள் அவனைத் துளைக்கும். 25  முதுகிலிருந்து ஒரு அம்பை உருவி எடுப்பான்.பித்தப்பையில் பாய்ந்த பளபளக்கும் அம்பைப் பிடுங்கி எடுப்பான்.பயத்தில் குலைநடுங்கி நிற்பான்.+ 26  அவன் சொத்துகளெல்லாம் அழிந்துவிடும்.யாரும் பற்ற வைக்காத* நெருப்பு அவனைப் பொசுக்கிவிடும்.அவனுடைய கூடாரத்தில் மிச்சமிருக்கிற எல்லாருக்கும் அழிவு வரும். 27  வானம் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தும்.பூமி அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லும். 28  கடவுள் கோபத்தைக் காட்டப்போகிற நாளில் பெருவெள்ளம் வரும்.அது அவனுடைய வீட்டை அடித்துக்கொண்டு போகும். 29  இதுதான் கெட்டவனுக்குக் கடவுள் கொடுக்கும் கூலி.இதுதான் கடவுள் அவனுக்கு ஒதுக்கியிருக்கும் சொத்து” என்று சொன்னான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனின்; விசுவாசதுரோகியின்.”
நே.மொ., “அவனுடைய எலும்புகள்.”
வே.வா., “கிளறிவிடாத.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா