லூக்கா எழுதியது 19:1-48

19  பின்பு அவர் எரிகோவுக்கு வந்து, அந்த ஊர் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தார்.  அங்கே சகேயு என்ற ஒரு பணக்காரன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவன்.  இயேசு யாரென்று பார்க்க அவன் ஆசைப்பட்டான். ஆனால், அவன் குள்ளமாக இருந்ததால் அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை.  அதனால் அவர் போய்க்கொண்டிருந்த வழியில், முன்னால் ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டத்தி மரத்தின் மேல் ஏறினான்.  இயேசு அந்த இடத்துக்கு வந்தபோது அண்ணாந்து பார்த்து, “சகேயு, சீக்கிரம் இறங்கி வா; நான் இன்றைக்கு உன் வீட்டில் தங்க வேண்டும்” என்று சொன்னார்.  அப்போது அவன் சீக்கிரமாக இறங்கி வந்து, சந்தோஷத்தோடு அவரைத் தன் விருந்தாளியாக அழைத்துக்கொண்டு போனான்.  அவனுடைய வீட்டுக்குள் அவர் போவதைப் பார்த்த எல்லாரும், “ஒரு பாவியின் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறாரே” என்று முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.+  ஆனால் சகேயு எழுந்து நின்று, “எஜமானே, இதோ! என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; மற்றவர்களிடமிருந்து அபகரித்ததையெல்லாம்* நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்”+ என்று சொன்னான்.  அப்போது இயேசு அவனிடம், “இன்று இந்த வீட்டுக்கு மீட்பு வந்திருக்கிறது; ஏனென்றால், இவனும் ஆபிரகாமின் மகன்தான். 10  வழிதவறிப்போனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்குமே மனிதகுமாரன் வந்தார்”+ என்று சொன்னார். 11  அவர் பேசியதையெல்லாம் சீஷர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் எருசலேமுக்குப் பக்கத்தில் இருந்ததாலும், கடவுளுடைய அரசாங்கம் உடனடியாக வருமென்று அவர்கள் நினைத்ததாலும்,+ இந்த உவமையை அவர்களுக்குச் சொன்னார்: 12  “அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ராஜ அதிகாரத்தைப் பெற்றுவர தூர தேசத்துக்குப் புறப்பட்டார்.+ 13  அப்போது, தன்னுடைய பத்து அடிமைகளைக் கூப்பிட்டு ஆளுக்கொரு மினாவை* கொடுத்து, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வியாபாரம் செய்யுங்கள்’+ என்று சொன்னார். 14  அவருடைய குடிமக்கள் அவரை வெறுத்தார்கள். அதனால், ‘இவன் எங்களுக்கு ராஜாவாக ஆவதில் எங்களுக்கு விருப்பமே இல்லை’ என்று சொல்லும்படி தூதுவர் குழுவை அவருக்குப் பின்னால் அனுப்பினார்கள். 15  கடைசியில், அவர் ராஜ அதிகாரத்தை* பெற்றுக்கொண்டு திரும்பி வந்தபோது, தான் பணம்* கொடுத்திருந்த அடிமைகளை வரச் சொன்னார். ஏனென்றால், அவர்கள் வியாபாரம் செய்து எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினார்.+ 16  அப்போது முதலாம் அடிமை வந்து, ‘எஜமானே, நீங்கள் கொடுத்த மினாவை வைத்து இன்னும் பத்து மினாவைச் சம்பாதித்தேன்’+ என்று சொன்னான். 17  அதற்கு அவர், ‘சபாஷ்! நல்ல அடிமையே, மிகச் சிறிய காரியத்தில் உண்மையுள்ளவனாக இருந்தாய், அதனால் பத்து நகரங்களுக்கு நீ அதிகாரியாக இரு’+ என்று சொன்னார். 18  அடுத்து, இரண்டாம் அடிமை வந்து, ‘எஜமானே, நீங்கள் கொடுத்த மினாவை வைத்து இன்னும் ஐந்து மினாவைச் சம்பாதித்தேன்’+ என்று சொன்னான். 19  அவனிடமும் எஜமான், ‘நீயும்கூட ஐந்து நகரங்களுக்கு அதிகாரியாக இரு’ என்று சொன்னார். 20  ஆனால் வேறொருவன் வந்து, ‘எஜமானே, இதோ! நீங்கள் கொடுத்த மினா. இதை நான் ஒரு துணியில் சுற்றி வைத்திருந்தேன். 21  உங்களுக்குப் பயந்து அப்படிச் செய்தேன்; ஏனென்றால், நீங்கள் ரொம்பக் கறாரானவர், மற்றவர்கள் சேமித்ததை எடுக்கிறவர், மற்றவர்கள் விதைத்ததை அறுக்கிறவர்’+ என்று சொன்னான். 22  அதற்கு அவர், ‘பொல்லாத அடிமையே, உன்னுடைய வார்த்தைகளை வைத்தே உன்னை நியாயந்தீர்ப்பேன்; நான் ரொம்பக் கறாரானவன், மற்றவர்கள் சேமித்ததை எடுக்கிறவன், மற்றவர்கள் விதைத்ததை அறுக்கிறவன் என்றெல்லாம் உனக்குத் தெரிந்திருந்ததுதானே?+ 23  அப்படியானால், என் பணத்தை* நீ ஏன் வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்ததும் அதை வட்டியோடு வாங்கியிருப்பேனே’ என்று சொன்னார். 24  அப்படிச் சொல்லிவிட்டு, பக்கத்தில் நின்றவர்களிடம், ‘அவனிடமிருந்து அந்த மினாவை எடுத்து, பத்து மினா வைத்திருப்பவனிடம் கொடுங்கள்’+ என்று சொன்னார். 25  ஆனால் அவர்கள், ‘எஜமானே, அவனிடம் ஏற்கெனவே பத்து மினா இருக்கிறது!’ என்று சொன்னார்கள். 26  அதற்கு அவர், ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+ 27  நான் ராஜாவாக ஆவதை விரும்பாத என் எதிரிகளை இங்கே கொண்டுவந்து என் முன்னால் கொன்றுபோடுங்கள்’ என்று சொன்னார்.” 28  இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, எருசலேமை நோக்கி அவர்களுக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார். 29  ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலுள்ள+ பெத்பகே, பெத்தானியா கிராமங்களுக்குப் பக்கத்தில் வந்தபோது அவர் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அனுப்பி,+ 30  “அதோ! அங்கே தெரிகிற அந்தக் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே போனவுடன், இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள். 31  ‘இதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால், ‘எஜமானுக்கு வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார். 32  அவர்கள் புறப்பட்டுப் போய், அவர் சொல்லியிருந்தபடியே ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்தார்கள்.+ 33  அவர்கள் அதை அவிழ்த்துக்கொண்டிருந்தபோது, “கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?” என்று அதன் உரிமையாளர்கள் கேட்டார்கள். 34  அதற்கு அவர்கள், “எஜமானுக்கு வேண்டும்” என்று சொன்னார்கள்; 35  பின்பு அதை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்கள் மேலங்கிகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் உட்கார வைத்தார்கள்.+ 36  அவர் போகும்போது, மக்கள் தங்களுடைய மேலங்கிகளை வழியில் விரித்தார்கள்.+ 37  ஒலிவ மலையிலிருந்து கீழ்நோக்கிப் போகும் பாதைக்குப் பக்கத்தில் அவர் வந்தவுடன், திரளான சீஷர்கள் எல்லாரும் தாங்கள் பார்த்த அற்புதங்கள் எல்லாவற்றையும் குறித்து சந்தோஷப்பட்டு, 38  “யெகோவாவின்* பெயரில் ராஜாவாக வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! பரலோகத்தில் சமாதானம்! பரலோகத்தில் இருக்கிறவருக்கு மகிமை!”+ என்று உரத்த குரலில் கடவுளைப் புகழ ஆரம்பித்தார்கள். 39  ஆனால் கூட்டத்திலிருந்த பரிசேயர்களில் சிலர், “போதகரே, உங்களுடைய சீஷர்களை அதட்டுங்கள்”+ என்று அவரிடம் சொன்னார்கள். 40  ஆனால் அவர், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இவர்கள் அமைதியாக இருந்தால் இந்தக் கற்களே சத்தமிடும்” என்று சொன்னார். 41  எருசலேம் நகரத்துக்குப் பக்கத்தில் அவர் வந்தபோது, அதைப் பார்த்து அழுது,+ 42  “சமாதானத்துக்கு வழிநடத்துகிற காரியங்களை நீ இன்றைக்காவது பகுத்தறிந்திருக்கக் கூடாதா? இப்போது அவை உன் கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.+ 43  நீ நியாயந்தீர்க்கப்படும்* காலத்தைப் பகுத்தறியாததால் உன் எதிரிகள் உன்னைச் சுற்றிலும் கூர்முனை கொண்ட கம்பங்களால் அரண் எழுப்பி, உன்னை வளைத்துக்கொண்டு, எல்லா பக்கங்களிலிருந்தும் உன்னை நெருக்கி,+ 44  உன்னையும் உன் பிள்ளைகளையும் அடித்து நொறுக்கி,+ ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி உன்னைத் தரைமட்டமாக்கப்போகும்+ நாட்கள் வரும்” என்று சொன்னார். 45  பின்பு அவர் ஆலயத்துக்குள் போய், அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தவர்களிடம், 46  “‘என் வீடு ஜெப வீடாக இருக்கும்’+ என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்கிவிட்டீர்கள்”+ என்று சொல்லி அவர்களை வெளியே துரத்த ஆரம்பித்தார்.+ 47  அவர் தினமும் ஆலயத்தில் கற்பித்துவந்தார். ஆனால், முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் முக்கியப் பிரமுகர்களும் அவரைக் கொல்வதற்கு வழிதேடினார்கள்.+ 48  இருந்தாலும், மக்கள் எல்லாரும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு அவரிடமே ஒட்டிக்கொண்டிருந்ததால்,+ அவரைக் கொன்றுபோட அவர்களுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பொய்க் குற்றம்சாட்டி அபகரித்ததையெல்லாம்.”
ஒரு கிரேக்க மினாவின் எடை 340 கிராம். இது 100 திராக்மாவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “வெள்ளியை.”
வே.வா., “ராஜ்யத்தை.”
நே.மொ., “வெள்ளியை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “சோதனையிடப்படும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்
பெத்பகே, ஒலிவ மலை, எருசலேம்

இந்தச் சின்ன வீடியோ, கிழக்கிலிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையைக் காட்டுகிறது. இன்றுள்ள எட்-டூர் கிராமத்தில் ஆரம்பித்து, ஒலிவ மலையின் உயரமான ஒரு பகுதிவரை காட்டுகிறது. எட்-டூர் கிராமம்தான் பைபிளில் சொல்லப்பட்ட பெத்பகே ஊராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெத்பகேயின் கிழக்கே இருக்கிற ஒலிவ மலையின் கிழக்குச் சரிவிலே பெத்தானியா இருக்கிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமில் இருந்தபோது, பெத்தானியாவில் தங்குவது வழக்கம். இன்று அந்தப் பகுதி எல்-அஸாரீயா (எல் ஐஸாரீயா) என்று அழைக்கப்படுகிறது. “லாசருவின் இடம்” என்பதுதான் இந்த அரபியப் பெயரின் அர்த்தம். மார்த்தாள், மரியாள், லாசரு ஆகியவர்களின் வீட்டில் இயேசு தங்கினார் என்பதில் சந்தேகமே இல்லை. (மத் 21:17; மாற் 11:11; லூ 21:37; யோவா 11:1) இயேசு அவர்களுடைய வீட்டிலிருந்து எருசலேமுக்குப் போனபோது, இந்த வீடியோவில் காட்டப்படுகிற வழியில் போயிருக்கலாம். கி.பி. 33, நிசான் 9-ம் தேதி, இயேசு பெத்பகே ஊரிலிருந்து ஒரு கழுதையின் மேல் ஏறி ஒலிவ மலை வழியாக எருசலேமுக்குப் போயிருக்கலாம்.

1. பெத்தானியாவிலிருந்து பெத்பகேவுக்குப் போகும் சாலை

2. பெத்பகே

3. ஒலிவ மலை

4. கீதரோன் பள்ளத்தாக்கு

5. ஆலயப் பகுதி

கழுதைக்குட்டி
கழுதைக்குட்டி

கழுதை, கடினமான குளம்புகளைக் கொண்ட ஒரு விலங்கு. அது குதிரையின் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், குதிரையைவிட உருவத்தில் சிறியது, அதைவிடக் குட்டையான பிடரிமயிரையும், நீளமான காதுகளையும், வாலின் முனைப்பகுதியில் மட்டும் குட்டையான முடியையும் கொண்டது. கழுதை பொதுவாக முட்டாள்தனத்துக்கும் பிடிவாதத்துக்கும் உதாரணமாகச் சொல்லப்படுகிறது; ஆனாலும், அது குதிரையைவிடப் புத்திசாலியான விலங்கு, பெரும்பாலும் பொறுமையாக இருக்கும் விலங்கு. இஸ்ரவேலில் ஆண்களும், பெண்களும், பிரபலமானவர்களும்கூட கழுதையில் சவாரி செய்தார்கள். (யோசு 15:18; நியா 5:10; 10:3, 4; 12:14; 1சா 25:42) தாவீதின் மகனாகிய சாலொமோன், ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுவதற்குப் போனபோது தன்னுடைய அப்பாவுக்குச் சொந்தமான ஒரு பெட்டைக் கழுதையில்தான் சவாரி செய்தார்; அது பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த கோவேறு கழுதை. (1ரா 1:33-40) அதனால், பெரிய சாலொமோனாகிய இயேசு ஒரு குதிரைமேல் சவாரி செய்யாமல் கழுதைக்குட்டிமேல் சவாரி செய்தது மிகப் பொருத்தமாக இருந்தது; அது சக 9:9-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகவும் இருந்தது.

ஆலயப் பகுதியின் கற்கள்
ஆலயப் பகுதியின் கற்கள்

மேற்கு மதிலின் தென்பகுதியில் காணப்படும் இந்தக் கற்கள், முதல் நூற்றாண்டு ஆலயப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்களைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்ட கோர சம்பவத்தை நினைப்பூட்டுவதற்காக அவை இங்கே விடப்பட்டிருக்கின்றன.