லேவியராகமம் 10:1-20

10  பிறகு, ஆரோனின் மகன்களான நாதாபும் அபியூவும்+ அவரவர் தூபக்கரண்டியில் தணலையும் தூபப்பொருளையும்+ எடுத்துக்கொண்டு, யெகோவா ஏற்றுக்கொள்ளாத விதத்தில், அத்துமீறி* அவருடைய சன்னிதியில் தூபம் காட்டினார்கள்.+  அப்போது, யெகோவாவின் சன்னிதியிலிருந்து நெருப்பு வந்து அவர்களைச் சுட்டுப் பொசுக்கியது.+ அவர்கள் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+  பின்பு மோசே ஆரோனிடம், “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘என் சன்னிதியில் இருப்பவர்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்.+ அப்போதுதான், எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் நான் மகிமைப்படுவேன்’” என்றார். அதைக் கேட்டபோது, ஆரோன் அமைதியாக இருந்தார்.  பின்பு மோசே, ஆரோனின் சித்தப்பாவாகிய ஊசியேலின்+ மகன்களான மீஷாவேலையும் எல்சாப்பானையும் கூப்பிட்டு, “உங்கள் சகோதரர்களின் உடல்களைப் பரிசுத்த இடத்தின் பிரகாரத்திலிருந்து எடுத்து முகாமுக்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றார்.  மோசே சொன்னபடியே அவர்கள் போய், குருமார்களின் அங்கிகளோடு கிடந்த அந்த உடல்களை முகாமுக்கு வெளியே கொண்டுபோனார்கள்.  மோசே ஆரோனையும் அவருடைய மற்ற மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “நீங்கள் உங்களுடைய தலைமுடியை அலங்கோலமாக விடக்கூடாது, அங்கிகளைக் கிழித்துக்கொள்ளவும் கூடாது.+ அப்படிச் செய்தால், நீங்கள் சாக வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஜனங்களும் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். நெருப்பினால் யெகோவா கொன்றுபோட்ட ஆட்களுக்காக உங்கள் சகோதரர்களான இஸ்ரவேலர்கள் எல்லாரும் அழுவார்கள்.  யெகோவா உங்களை அபிஷேகத் தைலத்தால் அபிஷேகம் செய்திருக்கிறார்.+ அதனால், சந்திப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு நீங்கள் வெளியே போகக் கூடாது. அப்படிப் போனால் நீங்கள் செத்துப்போவீர்கள்” என்றார். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.  பின்பு யெகோவா ஆரோனிடம்,  “நீயும் உன்னோடு இருக்கிற உன் மகன்களும் திராட்சமதுவோ வேறெந்த மதுவோ குடித்துவிட்டு சந்திப்புக் கூடாரத்துக்குள் வரக் கூடாது.+ அப்படி வந்தால் செத்துப்போவீர்கள். தலைமுறை தலைமுறைக்கும் இதை உங்களுக்கு நிரந்தரச் சட்டமாகத் தருகிறேன். 10  ஏனென்றால், பரிசுத்தமான காரியங்களுக்கும் பரிசுத்தமில்லாத காரியங்களுக்கும், சுத்தமான காரியங்களுக்கும் அசுத்தமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காட்ட வேண்டும்.+ 11  அதோடு, யெகோவாவாகிய நான் மோசே மூலம் கொடுத்த எல்லா விதிமுறைகளையும் நீங்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்”+ என்றார். 12  பின்பு, மோசே ஆரோனையும் அவருடைய மகன்களான எலெயாசாரையும் இத்தாமாரையும் பார்த்து, “யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்திய உணவுக் காணிக்கையில் மீதியிருப்பதை எடுத்து, புளிப்பில்லாத ரொட்டி செய்து, பலிபீடத்துக்குப் பக்கத்தில் சாப்பிடுங்கள்.+ ஏனென்றால், அது மிகவும் பரிசுத்தமானது.+ 13  அதைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் கொடுக்கப்படும் பங்கு. அதைக் கொடுக்கும்படி கடவுள் எனக்குக் கட்டளை தந்திருக்கிறார். 14  நீயும் உன் மகன்களும் உன்னோடு இருக்கிற உன் மகள்களும்,+ அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும்* பரிசுத்த பங்காகிய காலையும் சுத்தமான இடத்தில் சாப்பிட வேண்டும்.+ இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்தும் சமாதான பலிகளிலிருந்து இவை உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் பங்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 15  தகன பலியாகச் செலுத்தப்படும் கொழுப்புத் துண்டுகளோடு, பரிசுத்த பங்காகிய காலையும் அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அவற்றை அசைவாட்ட வேண்டும். யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அந்தக் காலும் மார்க்கண்டமும் உனக்கும் உன் மகன்களுக்கும் எப்போதுமே பங்காகக் கிடைக்கும்”+ என்றார். 16  பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை+ மோசே தேடியபோது, அது எரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அதனால், ஆரோனின் மகன்களான எலெயாசார்மேலும் இத்தாமார்மேலும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது. 17  அவர்களிடம், “பரிசுத்த இடத்தில் நீங்கள் ஏன் பாவப் பரிகார பலியைச் சாப்பிடவில்லை?+ அது மிகவும் பரிசுத்தமானதுதானே? ஜனங்களின் குற்றத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று, யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யத்தானே அவர் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்? 18  அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள் கொண்டுவரப்படவில்லையே!+ அதனால், கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்தபடி அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட்டிருக்க வேண்டும்” என்றார். 19  அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்று அவர்கள் தங்களுடைய பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் யெகோவாவின் சன்னிதியில் செலுத்தினார்கள்.+ இருந்தாலும், எனக்கு இப்படி நடந்துவிட்டது. இன்று நான் பாவப் பரிகார பலியைச் சாப்பிட்டிருந்தால் யெகோவாவுக்குச் சந்தோஷமாக இருந்திருக்குமா?” என்று கேட்டார். 20  மோசேக்கு அந்தப் பதில் திருப்தியாக இருந்தது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தகாத விதத்தில்.”
அதாவது, “நெஞ்சுப் பகுதியையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா