லேவியராகமம் 15:1-33

15  பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும்,  “நீங்கள் இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவனுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் வந்தால் அவன் தீட்டுள்ளவன்.+  அந்த ஒழுக்கு பிறப்புறுப்பிலிருந்து விடாமல் வந்துகொண்டிருந்தாலும் அங்கே அடைபட்டிருந்தாலும் அவன் தீட்டுள்ளவன்.  ஒழுக்கு நோயுள்ளவன் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டாகிவிடும்.  அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+  ஒழுக்கு நோயுள்ளவன் உட்கார்ந்திருந்த பொருளின் மேல் உட்காருகிறவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.  ஒழுக்கு நோயுள்ளவனைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.  ஒழுக்கு நோயுள்ளவனின் எச்சில், தீட்டில்லாத ஒருவன்மேல் தெறித்தால் அவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.  ஒழுக்கு நோயுள்ளவன் எந்தச் சேணத்தின்* மேல் உட்கார்ந்து சவாரி செய்தாலும் அது தீட்டாகிவிடும். 10  அவன் உட்கார்ந்திருந்த எந்தவொரு பொருளையும் தொடுகிறவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். அதைத் தூக்கிக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 11  ஒழுக்கு நோயுள்ளவன்+ தன்னுடைய கைகளைக் கழுவாமல் ஒருவனைத் தொட்டுவிட்டால், அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். 12  ஒழுக்கு நோயுள்ளவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொட்டுவிட்டால் அதை உடைத்துப்போட வேண்டும். அவன் ஒரு மரப் பாத்திரத்தைத் தொட்டுவிட்டால் அதைக் கழுவ வேண்டும்.+ 13  ஒழுக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பிறகு அவன் தன் உடைகளைத் துவைத்து, ஊற்றுநீரில் குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+ 14  எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ அவன் கொண்டுவர வேண்டும்.+ அவற்றை யெகோவாவின் முன்னிலையில் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும். 15  குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்த வேண்டும். இப்படி, யெகோவாவின் முன்னிலையில் அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்து அவனைத் தீட்டிலிருந்து சுத்திகரிக்க வேண்டும். 16  ஒருவனுக்கு விந்து வெளியேறினால் அவன் குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.+ 17  உடையிலோ தோல் பொருளிலோ விந்து பட்டால் அதை அவன் கழுவ வேண்டும். அது சாயங்காலம்வரை தீட்டுள்ளதாக இருக்கும். 18  ஒருவன் ஒரு பெண்ணுடன் உடலுறவுகொள்ளும்போது அவனுக்கு விந்து வெளியேறினால், அவர்கள் இரண்டு பேரும் குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+ 19  ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால், அவள் ஏழு நாட்கள் தீட்டுள்ளவளாக இருப்பாள்.+ அவளைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+ 20  மாதவிலக்கின்போது அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டுள்ளதாக இருக்கும்.+ 21  அவளுடைய படுக்கையைத் தொடுகிற எல்லாரும் தங்கள் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 22  அவள் உட்கார்ந்திருந்த எந்தவொரு பொருளையும் தொடுகிறவர்கள் தங்கள் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 23  படுக்கையின் மேலோ வேறு ஏதாவது பொருளின் மேலோ அவள் உட்கார்ந்தால் அதைத் தொடுகிற எல்லாரும் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+ 24  ஒருவன் அவளோடு உறவுகொள்ளும்போது அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு அந்த இரத்தம் அவன்மேல் பட்டால்,+ அவன் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான். அவன் படுக்கிற படுக்கை தீட்டுள்ளதாக இருக்கும். 25  மாதவிலக்கு+ இல்லாத சமயத்தில் ஒரு பெண்ணுக்குப் பல நாட்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டால்,+ அல்லது மாதவிலக்கு நாட்கள் முடிந்தும் இரத்தப்போக்கு நீடித்தால், மாதவிலக்கு நாட்களைப் போலவே அந்த எல்லா நாட்களும் அவள் தீட்டுள்ளவளாக இருப்பாள். 26  அந்த நாட்களில் அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் மாதவிலக்கு நாட்களில் இருப்பதைப் போலவே அது தீட்டுள்ளதாக இருக்கும்.+ 27  அதைத் தொடுகிறவர்கள் தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவர்கள் சாயங்காலம்வரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.+ 28  அவளுடைய இரத்தப்போக்கு நின்றுவிட்டால், அது நின்று ஏழு நாட்களுக்குப் பின்பு அவளுடைய தீட்டு நீங்கும்.+ 29  எட்டாம் நாளில் இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ அவள் கொண்டுவர வேண்டும்.+ அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+ 30  குருவானவர் அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் செலுத்தி, யெகோவாவின் முன்னிலையில் அவளுக்குப் பாவப் பரிகாரம் செய்து அவளைத் தீட்டிலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+ 31  இப்படி, தீட்டிலிருந்து விலகியிருக்க இஸ்ரவேலர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு நடுவிலுள்ள என் கூடாரத்தை அவர்கள் தீட்டுப்படுத்திவிடுவார்கள், அதனால் செத்துப்போவார்கள்.+ 32  ஒரு ஆணுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு ஏற்பட்டாலோ, விந்து வெளியேறியதால் தீட்டு ஏற்பட்டாலோ,+ 33  ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கினால்+ தீட்டு ஏற்பட்டாலோ, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பிறப்புறுப்பில் ஒழுக்கு ஏற்பட்டாலோ,+ தீட்டுள்ள ஒரு பெண்ணோடு ஒரு ஆண் உறவுகொண்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் இவைதான்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா