லேவியராகமம் 16:1-34

16  யெகோவாவின் சன்னிதியில் அத்துமீறி வந்ததற்காக ஆரோனின் இரண்டு மகன்கள் கொல்லப்பட்ட+ பின்பு யெகோவா மோசேயிடம் பேசினார்.  யெகோவா மோசேயிடம், “திரைச்சீலைக்கு உள்பக்கத்திலுள்ள+ மகா பரிசுத்த அறைக்குள் நினைத்த நேரமெல்லாம் வரக் கூடாதென்று உன் அண்ணன் ஆரோனிடம் சொல்.+ இல்லாவிட்டால் அவனுடைய உயிர் போய்விடும்.+ அந்த அறையில் சாட்சிப் பெட்டியும் அதன்மேல் ஒரு மூடியும் இருக்கிறது, அந்த மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில்+ நான் தோன்றுவேன்.+  ஆரோன் மகா பரிசுத்த அறைக்குள் வருவதற்கு முன்பு, பாவப் பரிகார பலியாக ஒரு இளம் காளையையும்+ தகன பலியாக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும்+ செலுத்த வேண்டும்.  புனித நாரிழை* அங்கியை+ அவன் போட்டுக்கொள்ள வேண்டும். நாரிழையால் செய்த அரைக் கால்சட்டையை+ உள்ளாடையாக உடுத்திக்கொள்ள வேண்டும். நாரிழையாலான இடுப்புக்கச்சையையும்+ தலைப்பாகையையும்+ போட்டுக்கொள்ள வேண்டும், அவை பரிசுத்த உடைகள்.+ அவன் குளித்துவிட்டு+ அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டும்.  பாவப் பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக் குட்டிகளையும் தகன பலிக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.+  பின்பு, ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும்+ தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.  அடுத்ததாக, அந்த இரண்டு வெள்ளாடுகளையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் யெகோவாவின் முன்னிலையில் நிறுத்த வேண்டும்.  அந்த இரண்டு வெள்ளாடுகளுக்காக ஆரோன் குலுக்கல் போட வேண்டும். ஒரு வெள்ளாட்டை யெகோவாவுக்குப் பலி செலுத்தவும் இன்னொன்றை போக்கு ஆடாக விடவும் குலுக்கல் போட வேண்டும்.  யெகோவாவுக்கென்று குலுக்கல்+ விழுந்த வெள்ளாட்டைப் பாவப் பரிகார பலியாக ஆரோன் செலுத்த வேண்டும். 10  போக்கு ஆடாக விடுவதற்கென்று குலுக்கல் விழுந்த வெள்ளாட்டை யெகோவாவின் முன்னிலையில் உயிரோடு நிறுத்த வேண்டும். அதன்மேல் பாவப் பரிகார சடங்கைச் செய்து போக்கு ஆடாக அதை வனாந்தரத்துக்குள் அனுப்பிவிட வேண்டும்.+ 11  ஆரோன் தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய காளையைக் கொண்டுவந்து, தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். பிறகு, தன்னுடைய பாவப் பரிகார பலியாகிய அந்தக் காளையை வெட்ட வேண்டும்.+ 12  பின்பு, ஆரோன் யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்தின் தணல்களை+ ஒரு தூபக்கரண்டியில்+ நிரப்பிக்கொண்டு, தூபப்பொருளை+ இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, திரைச்சீலைக்கு உள்பக்கம் வர வேண்டும்.+ 13  அவன் சாகாதபடிக்கு, யெகோவாவின் சன்னிதியில்+ அந்தத் தூபப்பொருளைத் தணல்மேல் போட வேண்டும். அப்போது, சாட்சிப் பெட்டியின்+ மேலிருக்கிற மூடியைத்+ தூபப் புகை சூழ்ந்துகொள்ளும். 14  காளையின் இரத்தத்தில்+ கொஞ்சத்தை அவர் தன்னுடைய விரலில் தொட்டு, மூடிக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் தெளிக்க வேண்டும். இப்படி, அந்த மூடிக்கு முன்னால் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+ 15  பின்பு, ஜனங்களுடைய பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை அவர் வெட்ட வேண்டும்.+ அதன் இரத்தத்தைத் திரைச்சீலைக்கு உள்பக்கம் கொண்டுவந்து,+ காளையின் இரத்தத்தைத்+ தெளித்தது போலவே இதையும் அந்த மூடிக்கு முன்னால் தெளிக்க வேண்டும். 16  இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற அசுத்தமான செயல்களாலும் குற்றங்களாலும் பாவங்களாலும்+ மகா பரிசுத்த அறை தீட்டுப்படாமல் இருப்பதற்கு ஆரோன் அதைச் சுத்திகரிக்க வேண்டும். அசுத்தமான செயல்கள் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களின் நடுவிலுள்ள சந்திப்புக் கூடாரத்தையும் அவன் சுத்திகரிக்க வேண்டும். 17  பாவப் பரிகாரம் செய்ய மகா பரிசுத்த அறைக்குள் அவன் போய் வரும்வரை வேறு யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போகக் கூடாது. ஆரோன் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இஸ்ரவேல் சபையார் எல்லாருக்காகவும்+ பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ 18  பின்பு, யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்துக்கு+ வந்து அதைச் சுத்திகரிக்க வேண்டும். காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சத்தையும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் இருக்கிற கொம்புகள்மேல் பூச வேண்டும். 19  அந்த இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன்னுடைய விரலில் தொட்டு பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, இஸ்ரவேலர்கள் செய்கிற அசுத்தமான செயல்களிலிருந்து அதைச் சுத்திகரித்து புனிதப்படுத்த வேண்டும். 20  மகா பரிசுத்த அறையையும் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும்+ சுத்திகரித்த+ பின்பு, உயிருள்ள வெள்ளாட்டை ஆரோன் தனக்குப் பக்கத்தில் கொண்டுவர வேண்டும்.+ 21  அந்த வெள்ளாட்டின் மேல் தன் இரண்டு கைகளையும் வைத்து இஸ்ரவேலர்கள் செய்த எல்லா குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் அந்த வெள்ளாட்டின் தலையில் சுமத்த வேண்டும்.+ பின்பு, அதை வனாந்தரத்தில் விடுவதற்கு நியமிக்கப்பட்டவரிடம் அதைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். 22  அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா குற்றங்களையும் சுமந்துகொண்டு+ வனாந்தரத்துக்குள் போகும்.+ நியமிக்கப்பட்டவர் அந்த வெள்ளாட்டை வனாந்தரத்துக்குள் போக விட்டுவிட வேண்டும்.+ 23  பின்பு, ஆரோன் சந்திப்புக் கூடாரத்துக்குள் போக வேண்டும். பரிசுத்த இடத்துக்குள் போனபோது உடுத்தியிருந்த நாரிழை உடைகளைக் கழற்றி அங்கே வைத்துவிட வேண்டும். 24  அதன்பின், பரிசுத்தமான இடத்தில் குளித்து+ தன்னுடைய உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் தகன பலிகளைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ 25  பாவப் பரிகார பலியின் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிக்க வேண்டும். 26  வெள்ளாட்டை போக்கு ஆடாகக் கொண்டுபோய் விட்டவர்+ தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதன் பின்புதான் அவர் முகாமுக்குள் வர வேண்டும். 27  பாவப் பரிகார பலியாக வெட்டப்பட்ட காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவற்றின் இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்வதற்காக மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுவரப்பட்ட இரத்தம். அவற்றின் தோலையும் சதையையும் சாணத்தையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+ 28  அவற்றைச் சுட்டெரிக்கிறவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம். 29  நான் உங்களுக்குக் கொடுக்கும் நிரந்தரச் சட்டம் இதுதான்: ஏழாம் மாதம் பத்தாம் நாளில், உங்கள் பாவங்களுக்காக உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.* நீங்களும் உங்கள் மத்தியில் குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களும் அன்றைக்கு எந்த வேலையும் செய்யக் கூடாது.+ 30  அந்த நாளில் உங்களைச் சுத்திகரிப்பதற்காக+ உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும். அப்போது, உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் யெகோவாவின் முன்னிலையில் சுத்தமாவீர்கள்.+ 31  அது உங்களுக்கு முழு ஓய்வுநாள். உங்கள் பாவங்களுக்காக அன்றைக்கு உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.*+ இது ஒரு நிரந்தரச் சட்டம். 32  தன்னுடைய அப்பாவுக்குப் பின்பு+ குருவாகச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறவன்+ பாவப் பரிகாரம் செய்துவிட்டு பரிசுத்த உடைகளாகிய+ நாரிழை உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும். 33  மகா பரிசுத்த அறையையும்+ சந்திப்புக் கூடாரத்தையும்+ பலிபீடத்தையும்+ அவன் சுத்திகரிக்க வேண்டும். குருமார்களுக்காகவும் சபையார் எல்லாருக்காகவும் அவன் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ 34  இஸ்ரவேலர்கள் செய்கிற எல்லா பாவங்களுக்காகவும் வருஷத்துக்கு ஒருமுறை+ பாவப் பரிகாரம் செய்வதற்கான நிரந்தரச் சட்டம்+ இது” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளை கொடுத்தபடியே ஆரோன் செய்தார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “லினன்.”
விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.
விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத் தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா