லேவியராகமம் 26:1-46

26  பின்பு அவர், “‘ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களை நீங்கள் உண்டாக்கக் கூடாது.+ செதுக்கப்பட்ட சிலைகளையோ+ பூஜைத் தூண்களையோ வைத்து வணங்கக் கூடாது. உங்கள் தேசத்தில் கற்சிலைகளை+ வைத்து அவற்றின் முன்னால் தலைவணங்கக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.  நான் சொன்ன ஓய்வுநாட்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும், என் வழிபாட்டுக் கூடாரத்துக்கு நீங்கள் பயபக்தி காட்ட வேண்டும். நான் யெகோவா.  நீங்கள் என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து என்னுடைய கட்டளைகளின்படி நடந்துவந்தால்,+  அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன்.+ நிலம் விளைச்சல் தரும்,+ மரம் கனி கொடுக்கும்.  திராட்சையின் அறுவடைக் காலம்வரை போரடிப்புக் காலம் நீடிக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சையின் அறுவடைக் காலம் நீடிக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு உங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+  தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன்.+ நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள்.+ தேசத்திலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்தியடிப்பேன். யாரும் வாளை எடுத்துக்கொண்டு உங்களோடு போர் செய்ய வர மாட்டார்கள்.  எதிரிகளை நீங்கள் துரத்திக்கொண்டு போவீர்கள், அவர்கள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள்.  உங்களில் 5 பேர் 100 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள், 100 பேர் 10,000 பேரைத் துரத்திக்கொண்டு போவீர்கள். எதிரிகள் உங்களுடைய வாளுக்குப் பலியாவார்கள்.+  நான் உங்கள்மேல் கருணை காட்டுவேன். உங்களுடைய வம்சத்தைத் தழைக்கச் செய்வேன்.+ உங்களுடன் செய்த ஒப்பந்தத்தைக் காப்பேன்.+ 10  உங்களுக்கு அமோக விளைச்சல் கிடைக்கும். அடுத்த வருஷம்வரை சாப்பிட்டாலும் அது தீராது. புதிய தானியத்தை வைப்பதற்காகப் பழையதைத் தூக்கிப்போடும் அளவுக்கு ஏராளமான விளைச்சல் கிடைக்கும். 11  உங்கள் நடுவில் என் வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பேன்.+ உங்களை நான் ஒதுக்கித்தள்ள மாட்டேன். 12  நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன்.+ நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ 13  நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை நான் விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தேன். உங்கள் நுகத்தடியை உடைத்துப்போட்டு உங்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தேன். 14  நீங்கள் என் பேச்சைக் கேட்காமலும், இந்த எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமலும்,+ 15  என் சட்டதிட்டங்களை ஒதுக்கி,+ என் நீதித்தீர்ப்புகளை வெறுத்து, என் ஒப்பந்தத்தை மீறி,+ என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல் போனால், 16  நானும் என் பங்குக்கு இப்படியெல்லாம் உங்களைத் தண்டிப்பேன்: உங்களுக்குப் பீதி உண்டாக்குவேன். காசநோயாலும் கடும் காய்ச்சலாலும் உங்களை அவதிப்பட வைப்பேன். அவை உங்கள் பார்வையை மங்க வைக்கும், உங்கள் சக்தியை உறிஞ்சிவிடும். நீங்கள் விதை விதைத்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போகும், எதிரிகள் அவற்றைத் தின்றுவிடுவார்கள்.+ 17  நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+ 18  அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காவிட்டால், உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 19  உங்கள் அகங்காரத்தையும் ஆணவத்தையும் அடக்குவேன். உங்கள் வானத்தை இரும்பைப் போல மாற்றுவேன்,*+ உங்கள் பூமியைச் செம்பைப் போல ஆக்குவேன்.* 20  உங்கள் நிலத்தில் விளைச்சல் இருக்காது, மரங்களில் பழம் காய்க்காது. நீங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் உங்கள் சக்தியெல்லாம் வீணாய்ப்போகும்.+ 21  நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் எனக்கு விரோதமாக நடந்துகொண்டே இருந்தால், உங்கள் பாவங்களுக்கு ஏற்றபடி இன்னும் ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 22  கொடிய மிருகங்களை உங்கள் நடுவில் அனுப்புவேன்.+ அவை உங்கள் பிள்ளைகளைக் கொன்றுபோடும்,+ ஆடுமாடுகளைக் கடித்துக் குதறிவிடும். கொஞ்சம் பேர்தான் மிஞ்சுவீர்கள், உங்கள் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும்.+ 23  இத்தனை நடந்தும் நீங்கள் திருந்தாமல்+ பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால், 24  நானும் உங்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுப்பேன். உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 25  என் ஒப்பந்தத்தை மீறியதற்காக உங்களை வாளால் பழிதீர்ப்பேன்.+ நீங்கள் நகரங்களுக்குள் ஓடி ஒளிந்தாலும் உங்கள் நடுவில் நோயைப் பரப்புவேன்.+ எதிரியின் கையில் உங்களைச் சிக்க வைப்பேன்.+ 26  உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+ 27  அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால், 28  நானும் உங்களுக்கு விரோதமாக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.+ உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன். 29  அதனால், உங்களுடைய மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் நீங்கள் தின்பீர்கள்.+ 30  நான் உங்களுடைய ஆராதனை மேடுகளை அழிப்பேன்,+ தூபபீடங்களை உடைப்பேன். வெறும் ஜடமாயிருக்கிற அருவருப்பான* சிலைகள்மேல் உங்கள் பிணங்களைக் குவிப்பேன்.+ அருவருப்புடன் உங்களைவிட்டுத் திரும்பிக்கொள்வேன்.+ 31  உங்கள் நகரங்களை நாசம் செய்வேன்,+ உங்கள் புனித ஸ்தலங்களைப் பாழாக்குவேன். உங்களுடைய பலிகளை ஏற்றுக்கொள்ள* மாட்டேன். 32  தேசத்தைப் பாழாக்குவேன்,+ அதில் குடியிருக்கப்போகிற எதிரிகள் அதிர்ச்சியுடன் அதைப் பார்ப்பார்கள்.+ 33  பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும். 34  நீங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது உங்கள் நிலம் பாழாய்க் கிடக்கும். அது அனுபவிக்காமல்போன ஓய்வு வருஷங்களை அப்போது அனுபவிக்கும். அந்தக் காலமெல்லாம் நிலம் ஓய்ந்திருக்கும். அதற்குக் கிடைத்திருக்க வேண்டிய ஓய்வு வருஷங்கள் கிடைக்க வேண்டும்.+ 35  அந்த நிலம் பாழாய்க் கிடக்கும் காலமெல்லாம் ஓய்ந்திருக்கும். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நீங்கள் குடியிருந்தபோது ஓய்வுநாள் சட்டத்தின்படி நீங்கள் நிலத்துக்கு ஓய்வு தரவில்லை. 36  எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+ 37  யாரும் துரத்தாவிட்டால்கூட வாளுக்குத் தப்பியோடுவதுபோல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் மோதி விழுவார்கள். உங்களால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.+ 38  மற்ற தேசத்தார் மத்தியில் நீங்கள் அழிந்துபோவீர்கள்,+ எதிரிகளின் தேசம் உங்களை விழுங்கிவிடும். 39  உங்களில் மீதியாக இருப்பவர்கள் தாங்கள் செய்த குற்றத்தையும் தங்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும்+ நினைத்து எதிரிகளின் தேசத்தில் வாடி வதங்குவார்கள்.+ 40  அப்போது, அவர்கள் செய்த குற்றத்தையும் அவர்களுடைய முன்னோர்கள் செய்த குற்றத்தையும் துரோகத்தையும் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். எனக்கு விரோதமாக நடந்து எனக்குத் துரோகம் செய்ததை ஒத்துக்கொள்வார்கள்.+ 41  அவர்கள் எனக்குத் துரோகம் செய்ததால் நானும் அவர்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுத்தேன்.+ எதிரிகளின் தேசத்துக்கு அவர்களைக் கொண்டுபோனேன்.+ அவர்கள் ஒருவேளை தங்களுடைய இதயத்திலுள்ள பிடிவாத குணத்தை விட்டுவிட்டுத்+ தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துதான் அப்படிக் கொண்டுபோனேன். 42  யாக்கோபோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஈசாக்கோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஆபிரகாமோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ நினைத்துப் பார்ப்பேன். தேசத்தையும் நான் நினைத்துப் பார்ப்பேன். 43  அவர்களால் தேசம் வெறுமையாக விடப்படும்போது, அது அனுபவிக்க வேண்டிய ஓய்வு வருஷங்களை அனுபவிக்கும்,+ அவர்கள் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்; அவர்கள் என்னுடைய நீதித்தீர்ப்புகளை ஒதுக்கித்தள்ளியதாலும் என் சட்டதிட்டங்களை வெறுத்ததாலும் தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையைப் பெறுவார்கள்.+ 44  அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா. 45  அவர்களுடைய முன்னோர்களோடு செய்த ஒப்பந்தத்தை+ அவர்களுக்காக நான் நினைத்துப் பார்ப்பேன். நான் அவர்களுடைய கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக, மற்ற தேசத்தாரின் கண் முன்னாலேயே எகிப்து தேசத்திலிருந்து அவர்களுடைய முன்னோர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ நான் யெகோவா’” என்றார். 46  சீனாய் மலையில் மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா தந்த விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் சட்டங்களும் இவைதான்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “வானம் மழை பொழியாதபடி செய்வேன்.”
அதாவது, “பூமி வறண்டுபோகும்படி செய்வேன்.”
நே.மொ., “ரொட்டிக் கோல்களை முறித்துப்போடுவேன்.” இவை ஒருவேளை ரொட்டிகளை மாட்டி வைக்கப் பயன்படுத்தப்பட்ட கோல்களாக இருந்திருக்கலாம்.
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “பலிகளின் இனிய வாசனையை முகர.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா