லேவியராகமம் 9:1-24

9  எட்டாம் நாளில்,+ ஆரோனையும் அவருடைய மகன்களையும் இஸ்ரவேலின் பெரியோர்களையும்* மோசே கூப்பிட்டார்.  அவர் ஆரோனிடம், “குறையில்லாத ஒரு கன்றுக்குட்டியைப் பாவப் பரிகார பலியாகவும்,+ குறையில்லாத ஒரு செம்மறியாட்டுக் கடாவைத் தகன பலியாகவும் கொண்டுவந்து உங்களுக்காக யெகோவாவின் முன்னிலையில் செலுத்துங்கள்.  அதேசமயத்தில், இஸ்ரவேல் ஜனங்களிடம் இப்படிச் சொல்லுங்கள்: ‘ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப் பரிகார பலியாகவும், குறையில்லாத ஒருவயது கன்றுக்குட்டியையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும் தகன பலியாகவும் கொண்டுவாருங்கள்.  யெகோவாவின் முன்னிலையில் செலுத்துவதற்கு, ஒரு காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் சமாதான பலியாகக்+ கொண்டுவாருங்கள். எண்ணெய் கலந்த உணவுக் காணிக்கையையும்+ கொண்டுவாருங்கள். ஏனென்றால், இன்று யெகோவா உங்கள்முன் தோன்றுவார்’”+ என்றார்.  அதனால், மோசே கட்டளை கொடுத்த எல்லாவற்றையும் சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் அவர்கள் கொண்டுவந்தார்கள். பின்பு, ஜனங்கள் எல்லாரும் வந்து யெகோவாவின் முன்னிலையில் நின்றார்கள்.  அப்போது மோசே, “இப்படிச் செய்யச் சொல்லி யெகோவா உங்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். இப்படிச் செய்தால்தான் யெகோவா தன்னுடைய மகிமையை உங்களுக்குக் காட்டுவார்”+ என்றார்.  பின்பு மோசே ஆரோனிடம், “நீங்கள் பலிபீடத்துக்குப் போய், பாவப் பரிகாரப் பலியையும்+ தகன பலியையும் செலுத்தி, உங்களுக்காகவும்+ உங்களுடைய குடும்பத்துக்காகவும் பாவப் பரிகாரம் செய்யுங்கள். யெகோவா கட்டளை கொடுத்தபடி, ஜனங்கள் கொண்டுவருகிற பலியைச் செலுத்தி அவர்களுக்காகவும் பாவப் பரிகாரம் செய்யுங்கள்”+ என்றார்.  உடனே, ஆரோன் பலிபீடத்துக்குப் போய்த் தன்னுடைய பாவத்துக்குப் பலியாகக் கன்றுக்குட்டியை வெட்டினார்.+  அதன் இரத்தத்தை+ அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் விரலில் தொட்டு பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசினார். மீதியிருந்த இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினார்.+ 10  அதோடு, மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, ஆரோன் பாவப் பரிகார பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து பலிபீடத்தின் மேல் எரித்தார்.+ 11  அதன் சதையையும் தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தார்.+ 12  பின்பு, தகன பலிக்கான கடாவை ஆரோன் வெட்டினார். அவருடைய மகன்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 13  அவர்கள் தகன பலிக்கான அந்தக் கடாவின் துண்டுகளை அதன் தலையோடு சேர்த்து அவரிடம் கொடுத்தார்கள். அவர் அதைப் பலிபீடத்தின் மேல் எரித்தார். 14  அதோடு, அதன் குடல்களையும் கால்களையும் கழுவி, அவற்றைத் தகன பலியின் மேல் வைத்து எரித்தார். 15  பின்பு, பாவப் பரிகார பலியாக ஜனங்கள் கொண்டுவந்த வெள்ளாட்டை அவர் வெட்டினார். முந்தின பலியைப் போலவே இதையும் பாவப் பரிகார பலியாகச் செலுத்தினார். 16  அதன்பின், வழக்கமான முறைப்படி தகன பலியைச் செலுத்தினார்.+ 17  அடுத்ததாக, உணவுக் காணிக்கையை+ ஒரு கைப்பிடி எடுத்து, காலையில்+ பலிபீடத்தில் செலுத்தப்பட்ட தகன பலியின் மேல் எரித்தார். 18  பின்பு, ஜனங்கள் தங்களுக்காகக் கொண்டுவந்த சமாதான பலியாகிய காளையையும் செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டினார். அவற்றின் இரத்தத்தை அவருடைய மகன்கள் அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தார்.+ 19  ஆரோனின் மகன்கள் காளையின் கொழுப்புத் துண்டுகளையும்,+ செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பு நிறைந்த வாலையும், உள்ளுறுப்புகளின் மேலுள்ள கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுத்து,+ 20  அந்த எல்லா கொழுப்பையும் மார்க்கண்டங்களின்* மேல் வைத்தார்கள். அதன்பின், அந்தக் கொழுப்புத் துண்டுகளைப் பலிபீடத்தின் மேல் அவர் எரித்தார்.+ 21  மோசே கட்டளை கொடுத்தபடியே, ஆரோன் அவற்றின் மார்க்கண்டங்களையும் வலது காலையும் அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டினார்.+ 22  பின்பு, ஆரோன் ஜனங்களைப் பார்த்தபடி தன் கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.+ அதன்பின், பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் சமாதான பலிகளையும் செலுத்திய இடத்தைவிட்டு இறங்கி வந்தார். 23  கடைசியாக, மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போனார்கள். பின்பு, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்.+ யெகோவா தன்னுடைய மகிமையை எல்லா ஜனங்களுக்கும் காட்டினார்.+ 24  யெகோவாவிடமிருந்து நெருப்பு வந்து,+ பலிபீடத்தின் மேலிருந்த தகன பலியையும் கொழுப்புத் துண்டுகளையும் விழுங்கியது. ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்த்தபோது, சந்தோஷமாகக் கோஷம்போட்டார்கள். பின்பு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களையும்.”
அதாவது, “நெஞ்சுப் பகுதிகளின்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா