1 சாமுவேல் 6:1-21

6  யெகோவாவின் பெட்டி+ பெலிஸ்தியர்களின் தேசத்தில் ஏழு மாதம் இருந்தது.  பூசாரிகளையும் குறிசொல்கிறவர்களையும்+ பெலிஸ்தியர்கள் வரவழைத்து, “யெகோவாவின் பெட்டியை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதனுடைய இடத்துக்கு எப்படித் திருப்பி அனுப்ப வேண்டும்? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.  அதற்கு அவர்கள், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை நீங்கள் அனுப்புவதாக இருந்தால், காணிக்கை இல்லாமல் சும்மா அனுப்பக் கூடாது. கட்டாயம் குற்ற நிவாரண காணிக்கையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.+ அப்போதுதான் நீங்கள் குணமாவீர்கள். அவர் ஏன் உங்களைத் தண்டிக்கிறார் என்பதும் தெரியவரும்” என்று சொன்னார்கள்.  அதற்கு இவர்கள், “குற்ற நிவாரண காணிக்கையாக நாம் அவருக்கு எதை அனுப்ப வேண்டும்?” என்று கேட்டார்கள். அப்போது அவர்கள், “பெலிஸ்தியர்களுடைய தலைவர்களின் எண்ணிக்கைப்படி,+ ஐந்து மூலக்கட்டி உருவங்களையும் ஐந்து சுண்டெலி உருவங்களையும் தங்கத்தில் செய்து அனுப்புங்கள். ஏனென்றால், உங்களையும் உங்களுடைய தலைவர்களையும் ஒரேவிதமான கொடிய நோய் தாக்கியிருக்கிறது.  உங்களுக்கு வந்த மூலக்கட்டியின் உருவங்களையும் உங்களுடைய தேசத்தை நாசமாக்குகிற சுண்டெலிகளின் உருவங்களையும் நீங்கள் செய்ய வேண்டும்.+ இஸ்ரவேலின் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும். அப்போது, அவர் உங்களையும் உங்களுடைய தெய்வத்தையும் தேசத்தையும் ஒருவேளை தண்டிக்காமல் விட்டுவிடலாம்.+  எகிப்தியர்களுடைய இதயமும் பார்வோனுடைய இதயமும் இறுகிப்போனபோது+ என்ன நடந்ததென்று உங்களுக்குத் தெரியாதா? அவர்களை அவர் கடுமையாகத் தண்டித்தாரே.+ அதனால் இஸ்ரவேலர்களை அவர்கள் அனுப்ப வேண்டியதாகிவிட்டதே.+ நீங்கள் ஏன் அவர்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்?  இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டி செய்து, இதுவரை நுகத்தடியில் பூட்டப்படாத இரண்டு பசு மாடுகளை அதில் பூட்டுங்கள். ஆனால், அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றுக்குப் பின்னால் போகவிடாமல் தொழுவத்தில் கட்டிவையுங்கள்.  பின்பு, யெகோவாவின் பெட்டியை அந்த வண்டியில் வையுங்கள். குற்ற நிவாரண காணிக்கையாக நீங்கள் அனுப்பும் தங்கச் சாமான்களை ஒரு பெட்டியில் போட்டு, அதன் பக்கத்தில் வையுங்கள்.+ அதன்பின் வண்டியை அனுப்பிவிடுங்கள்.  அது எங்கே போகிறதென்று பாருங்கள். அது நெடுஞ்சாலை வழியாக பெத்-ஷிமேசுக்குப்+ போனால், அதாவது நேராக அதனுடைய இடத்துக்கே போனால், இந்த மிகப் பெரிய தண்டனையை இஸ்ரவேலின் கடவுள்தான் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அது அங்கு போகாவிட்டால், அவர் நம்மைத் தாக்கவில்லை, எதேச்சையாகத்தான் இது நமக்கு நடந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்” என்றார்கள். 10  பூசாரிகள் சொன்ன ஆலோசனைப்படியே பெலிஸ்தியர்கள் செய்தார்கள். இரண்டு பசு மாடுகளைப் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டினார்கள், அவற்றின் கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் கட்டிவைத்தார்கள். 11  பின்பு, அந்த வண்டியில் யெகோவாவின் பெட்டியையும், தங்கத்தாலான சுண்டெலி உருவங்களும் மூலக்கட்டி உருவங்களும் இருந்த பெட்டியையும் வைத்தார்கள். 12  அப்போது, அந்த மாடுகள் பெத்-ஷிமேசுக்குப் போகும் பாதையில் நேராகப் போயின.+ வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல், அதே நெடுஞ்சாலையில் கத்திக்கொண்டே போயின. பெத்-ஷிமேசின் எல்லைவரை அவற்றின் பின்னாலேயே பெலிஸ்திய தலைவர்கள் நடந்துபோனார்கள். 13  அந்தச் சமயத்தில், பெத்-ஷிமேஸ் ஜனங்கள் சமவெளியிலே கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து அந்தப் பெட்டியைப் பார்த்தபோது, அவர்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. 14  அந்த வண்டி பெத்-ஷிமேஸ் ஊரைச் சேர்ந்த யோசுவாவின் வயலுக்கு வந்து, அங்கிருந்த ஒரு பாறைக்குப் பக்கத்தில் நின்றது. அப்போது, அவர்கள் வண்டியின் பலகைகளைப் பிளந்துபோட்டு, அந்த மாடுகளை+ யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தினார்கள். 15  யெகோவாவின் பெட்டியையும் தங்கச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் லேவியர்கள்+ எடுத்து அந்தப் பாறைமேல் வைத்தார்கள். அன்றைக்கு பெத்-ஷிமேசின்+ ஆட்கள் தகன பலிகளையும் மற்ற பலிகளையும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள். 16  பெலிஸ்தியர்களின் ஐந்து தலைவர்களும் அதைப் பார்த்துவிட்டு, அன்றைக்கே எக்ரோனுக்குத் திரும்பினார்கள். 17  குற்ற நிவாரண காணிக்கையாக அஸ்தோத்துக்கு+ ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்கலோனுக்கு ஒன்று, காத்துக்கு+ ஒன்று, எக்ரோனுக்கு+ ஒன்று என ஐந்து மூலக்கட்டி உருவங்களை யெகோவாவுக்கு பெலிஸ்தியர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.+ 18  ஐந்து தலைவர்களுக்கும் சொந்தமான மதில் சூழ்ந்த நகரங்கள் மற்றும் மதில் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கைப்படி, தங்கத்தாலான சுண்டெலி உருவங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். யெகோவாவின் பெட்டி வைக்கப்பட்டிருந்த பாறை பெத்-ஷிமேஸ் ஊரைச் சேர்ந்த யோசுவாவின் வயலில் இன்றுவரை சாட்சியாக நிற்கிறது. 19  பெத்-ஷிமேஸ் ஆட்கள் யெகோவாவின் பெட்டியைப் பார்த்ததால், அவர்களில் 50,070 பேரைக் கடவுள் கொன்றுபோட்டார்.+ அத்தனை பேரை யெகோவா கொன்றதால் ஜனங்கள் துக்கம் தாங்காமல் அழுதார்கள். 20  பெத்-ஷிமேஸ் ஆட்கள், “பரிசுத்த கடவுளாகிய யெகோவாவுக்குமுன்+ யாரால் நிற்க முடியும்? அவர் நம்மைவிட்டு வேறு யாரிடமாவது போகக் கூடாதா?”+ என்று சொல்லிக்கொண்டார்கள். 21  பின்பு, கீரியாத்-யெயாரீம்+ ஊர்க்காரர்களிடம் ஆட்களை அனுப்பி, “யெகோவாவின் பெட்டியை பெலிஸ்தியர்கள் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். வந்து அதை எடுத்துக்கொண்டு போங்கள்”+ என்றார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா