1 நாளாகமம் 23:1-32

23  தாவீது தன்னுடைய வயதான காலத்தில், தான் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய மகன் சாலொமோனை இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவாக்கினார்.+  பின்பு, இஸ்ரவேலில் இருந்த எல்லா தலைவர்களையும் குருமார்களையும்+ லேவியர்களையும்+ வரவழைத்தார்.  முப்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய லேவியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தார்.+ அவர்கள் மொத்தம் 38,000 பேர்.  இவர்களில் 24,000 பேர் மேற்பார்வையாளர்களாக இருந்து யெகோவாவின் ஆலய வேலையைச் செய்தார்கள்; 6,000 பேர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும்+ இருந்தார்கள்.  4,000 பேர் வாயிற்காவலர்களாக இருந்தார்கள்;+ 4,000 பேர் இசைக் கலைஞர்களாக இருந்தார்கள்.+ கடவுளைப் புகழ்ந்து பாடுவதற்காக தாவீது செய்து வைத்திருந்த இசைக் கருவிகளை வாசித்து யெகோவாவை இவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.  தாவீது இவர்களை லேவியின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி+ ஆகியோரின் குடும்பங்களின்படி பிரித்தார்.+  கெர்சோனியர்கள்: லாதான், சீமேயி.  லாதானின் மகன்கள்: தலைவர் யெகியேல், சேத்தாம், யோவேல்+ ஆகிய மூன்று பேர்.  சீமேயியின் மகன்கள்: செலெமோத், ஹாசியேல், ஆரான் ஆகிய மூன்று பேர். இவர்கள் லாதானின் வம்சத்தில் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள். 10  யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய நான்கு பேரும் சீமேயியின் மகன்கள். 11  யாகாத் தலைவராக இருந்தார், சீசாகு அவருக்கு இரண்டாவது இடத்தில் இருந்தார். எயூஷுக்கும் பெரீயாவுக்கும் நிறைய மகன்கள் இல்லாததால் அவர்கள் ஒரே தந்தைவழிக் குடும்பமாகக் கருதப்பட்டார்கள், ஒரேவிதமான வேலையைச் செய்தார்கள். 12  கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சேயார்,+ எப்ரோன், ஊசியேல்+ என நான்கு பேர். 13  அம்ராமின் மகன்கள்: ஆரோன்,+ மோசே.+ மகா பரிசுத்த அறையைப் புனிதமாக வைத்திருக்கும் பொறுப்பு ஆரோனுக்கும் அவருடைய மகன்களுக்கும் நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது.+ அதோடு, யெகோவாவின் சன்னிதியில் பலிகளைச் செலுத்துவதும், அவருக்குச் சேவை செய்வதும், எப்போதும் கடவுளின் சார்பாக மக்களை ஆசீர்வதிப்பதும் இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+ 14  உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயும் அவருடைய மகன்களும் லேவி கோத்திரத்தாரோடு சேர்த்து எண்ணப்பட்டார்கள். 15  மோசேயின் மகன்கள்: கெர்சோம்,+ எலியேசர்.+ 16  கெர்சோமின் மகன்களில் செபுவேல்+ தலைவராக இருந்தார். 17  எலியேசரின் வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரெகபியா+ தலைவராக இருந்தார்; எலியேசருக்கு வேறு மகன்கள் இல்லை; ஆனால், ரெகபியாவுக்கு நிறைய மகன்கள் இருந்தார்கள். 18  இத்சேயாரின்+ வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு செலோமித்+ தலைவராக இருந்தார். 19  எப்ரோனின் மகன்கள்: தலைவர் எரியா, இரண்டாவது மகன் அமரியா, மூன்றாவது மகன் யகாசியேல், நான்காவது மகன் எக்காமியாம்.+ 20  ஊசியேலின் வம்சத்தார்:+ தலைவர் மீகா, அவருக்கு அடுத்த இடத்திலிருந்த இஷியா. 21  மெராரியின் மகன்கள்: மகேலி, மூசி.+ மகேலியின் மகன்கள்: எலெயாசார், கீஸ். 22  எலெயாசார் இறந்துபோனார், ஆனால் அவருக்கு மகன்கள் இல்லை, மகள்கள்தான் இருந்தார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்களான* கீசின் மகன்கள் அந்தப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். 23  மூசியின் மகன்கள்: மகேலி, ஏதேர், எரேமோத் என மூன்று பேர். 24  தங்களுடைய தந்தைவழி குடும்பத்தின்படியும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களின்படியும் பதிவு செய்யப்பட்ட லேவியின் வம்சத்தார் இவர்களே; 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய லேவியர்கள் ஒவ்வொருவரும் எண்ணப்பட்டார்கள், பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன. யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்வதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 25  “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களுக்கு ஓய்வு தந்திருக்கிறார்,+ அவர் எருசலேமில் என்றென்றும் குடியிருப்பார்.+ 26  அதோடு, வழிபாட்டுக் கூடாரத்தையோ அதற்குரிய பாத்திரங்களையோ லேவியர்கள் இனி சுமக்க வேண்டியிருக்காது”+ என்று தாவீது சொன்னார். 27  தாவீது கடைசியாகக் கொடுத்த கட்டளைகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய லேவியர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள். 28  யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்யும் ஆரோனின் வம்சத்தாருக்கு உதவி செய்ய வேண்டியது இவர்களுடைய பொறுப்பாக இருந்தது.+ பிரகாரங்களையும்+ சாப்பாட்டு அறைகளையும் கவனித்துக்கொள்வதற்கும், எல்லா புனிதப் பொருள்களையும் சுத்தப்படுத்துவதற்கும் ஆரோனின் வம்சத்தாருக்கு இவர்கள் உதவி செய்ய வேண்டும். அதோடு, உண்மைக் கடவுளின் ஆலயத்தில் செய்யப்படும் எல்லா வேலைகளிலும் அவர்களுக்குக் கூடமாட உதவி செய்ய வேண்டும். 29  படையல் ரொட்டிகளையும்+ உணவுக் காணிக்கையாகக் கொடுக்கப்படுகிற நைசான மாவையும், புளிப்பில்லாத மெல்லிய ரொட்டியையும்,+ வட்டக் கல்லில் செய்யப்படும் பணியாரங்களையும், எண்ணெய்விட்டுப் பிசைந்த மாவையும்+ தயாரிக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதோடு, எல்லாவற்றின் அளவையும் எடையையும் கணக்கிட உதவி செய்ய வேண்டும். 30  தினமும் காலையும்+ மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி அவரைப் புகழ்ந்துபாட வேண்டும்.+ 31  திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, ஓய்வுநாளிலும்+ மாதப்பிறப்பு நாட்களிலும்*+ பண்டிகைக் காலங்களிலும்+ யெகோவாவின் சன்னிதியில் குருமார்கள் யெகோவாவுக்குத் தகன பலி கொடுக்கும்போதெல்லாம் குருமார்களுக்கு இவர்கள் உதவி செய்ய வேண்டும். 32  சந்திப்புக் கூடாரத்தில் செய்ய வேண்டிய வேலைகள், பரிசுத்த இடத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதோடு, இவர்களுடைய சகோதரர்களான ஆரோனின் வம்சத்தாருக்கு யெகோவாவின் ஆலயத்தில் உதவி செய்ய வேண்டும்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சகோதரர்களான.”
வே.வா., “முதலாம் பிறையிலும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா