1 ராஜாக்கள் 10:1-29

10  சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+  மிகப் பெரிய பரிவாரத்துடன் எருசலேமுக்கு வந்தாள்.+ பரிமளத் தைலத்தையும்+ ஏராளமான தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் அவளுடைய ஒட்டகங்கள் சுமந்துவந்தன. அவள் சாலொமோனைச் சந்தித்து, தன் மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாள்.  அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சாலொமோன் பதில் சொன்னார்; எந்தக் கேள்வியும் அவருக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.  எல்லா விஷயங்களிலும் சாலொமோனுக்கு இருந்த ஞானம்,+ அவர் கட்டிய அரண்மனை,+  மேஜையில் பரிமாறப்பட்ட உணவு,+ ஊழியர்கள் உட்கார்ந்திருந்த வரிசை, உணவு பரிமாறப்பட்ட விதம், பரிமாறுகிறவர்களின் உடை, பானம் பரிமாறுகிற ஆட்கள், யெகோவாவின் ஆலயத்தில் அவர் வழக்கமாகச் செலுத்திய தகன பலிகள் ஆகியவற்றைப் பார்த்து சேபா தேசத்து ராணி வாயடைத்துப்போனாள்.*  அதனால் ராஜாவிடம், “உங்களுடைய சாதனைகளையும்* ஞானத்தையும் பற்றி எங்கள் தேசத்தில் நான் கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை.  ஆனால், நேரில் வந்து பார்க்கும்வரை அதையெல்லாம் நான் நம்பவே இல்லை. அதில் பாதியைக்கூட நான் கேள்விப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுடைய ஞானமும் செல்வச்செழிப்பும் நான் கேள்விப்பட்டதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.  உங்களுடைய மக்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்! எப்போதும் உங்களோடு இருந்து, உங்களுடைய ஞானமான வார்த்தைகளைக் கேட்கிற உங்களுடைய ஊழியர்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்!+  உங்கள்மீது பிரியம் வைத்து இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்த உங்களுடைய கடவுளான யெகோவாவைப் போற்றிப் புகழ்கிறேன்.+ இஸ்ரவேலர்கள்மீது யெகோவா என்றென்றும் அன்பு வைத்திருப்பதால் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உங்களை ராஜாவாக ஆக்கியிருக்கிறார்” என்று சொன்னாள். 10  பின்பு, 120 தாலந்து* தங்கத்தையும் பெருமளவு பரிமளத் தைலத்தையும்+ ரத்தினக் கற்களையும்+ சாலொமோன் ராஜாவுக்கு அவள் கொடுத்தாள். சேபா தேசத்து ராணி கொண்டுவந்த அளவுக்குப் பரிமளத் தைலத்தை அதன் பிறகு வேறு யாருமே கொண்டுவரவில்லை. 11  ஓப்பீரிலிருந்து தங்கத்தை+ மட்டுமல்லாமல், ஏராளமான சந்தன மரங்களையும்+ விலைமதிப்புள்ள கற்களையும் ஈராமின் கப்பல்கள் கொண்டுவந்தன.+ 12  அந்தச் சந்தன மரங்களைப் பயன்படுத்தி, யெகோவாவின் ஆலயத்துக்கும் தன்னுடைய அரண்மனைக்கும் தேவையான பிடிமானங்களை ராஜா செய்தார். அதோடு, பாடகர்களுக்காக யாழ்களையும் நரம்பிசைக் கருவிகளையும் செய்தார்.+ அவ்வளவு சந்தன மரங்களை அதன் பின்பு யாரும் கொண்டுவரவுமில்லை, இன்றுவரை யாரும் பார்த்ததுமில்லை. 13  சாலொமோன் ராஜாவும்கூட சேபா தேசத்து ராணிக்குத் தாராளமாக அன்பளிப்புகளைக் கொடுத்தார். அதோடு, அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார். அதன் பின்பு, அவள் தன் ஊழியர்களோடு தன்னுடைய தேசத்துக்குத் திரும்பிப் போனாள்.+ 14  ஒவ்வொரு வருஷமும் சாலொமோனுக்குக் கிடைத்த தங்கத்தின் எடை 666 தாலந்து.+ 15  இது தவிர, வியாபாரிகளிடமிருந்தும் பயண வியாபாரிகளிடமிருந்தும் அரேபியாவிலுள்ள எல்லா ராஜாக்களிடமிருந்தும் இஸ்ரவேல் ஆளுநர்களிடமிருந்தும் வருமானம் வந்தது. 16  சாலொமோன் ராஜா கலப்புத் தங்கத்தில் 200 பெரிய கேடயங்களைச் செய்தார்+ (ஒவ்வொரு கேடயத்தையும் செய்ய 600 சேக்கல்* தங்கம் பயன்படுத்தப்பட்டது).+ 17  அதோடு, கலப்புத் தங்கத்தில் 300 சிறிய கேடயங்களையும்* செய்தார். (இவை ஒவ்வொன்றையும் செய்ய மூன்று மினா* தங்கம் பயன்படுத்தப்பட்டது). பின்பு, ‘லீபனோன் வன மாளிகையில்’+ அவற்றை வைத்தார். 18  அதோடு, யானைத்தந்தத்தில் மிகப் பெரிய சிம்மாசனம் ஒன்றைச் செய்து,+ அதன்மீது சொக்கத்தங்கத்தால் தகடு அடித்தார்.+ 19  அந்தச் சிம்மாசனத்துக்கு ஏறிப் போக ஆறு படிக்கட்டுகள் இருந்தன. சிம்மாசனத்தின் மேலே வட்ட வடிவில் அலங்காரக் கூரையும் இருந்தது. இருக்கையின் இரண்டு பக்கங்களிலும் கைப்பிடிகள் இருந்தன, ஒவ்வொரு கைப்பிடியின் பக்கத்திலும் ஒரு சிங்க உருவம்+ வைக்கப்பட்டிருந்தது. 20  அதோடு, ஆறு படிக்கட்டுகளிலும் இந்தப் பக்கம் ஒரு சிங்கம், அந்தப் பக்கம் ஒரு சிங்கம் என மொத்தம் 12 சிங்க உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. வேறெந்த ராஜ்யத்திலும் இப்படிப்பட்ட சிம்மாசனம் செய்யப்படவில்லை. 21  சாலொமோன் ராஜா குடிக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாமே தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன. ‘லீபனோன் வன மாளிகையில்’+ இருந்த எல்லா பாத்திரங்களும் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன, எதுவும் வெள்ளியில் செய்யப்படவில்லை. ஏனென்றால், சாலொமோன் காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.+ 22  ராஜாவிடம் ‘தர்ஷீஸ்+ கப்பல்கள்’ இருந்தன. ஈராமின் கப்பல்களோடு சேர்ந்து இவையும் கடலில் சென்றன. மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம்,+ வாலில்லா குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை இந்தக் கப்பல்கள் கொண்டுவந்தன. 23  இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும்+ ஞானத்திலும் சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார்.+ 24  சாலொமோனைச் சந்தித்து, கடவுள் தந்த ஞானத்தால்+ அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்க உலகத்திலிருந்த எல்லா தேசத்து மக்களும் ஆசைப்பட்டார்கள். 25  அவரைச் சந்திக்க வந்த ஒவ்வொருவரும் தங்கப் பொருள்கள், வெள்ளிப் பொருள்கள், உடைகள், ஆயுதங்கள், பரிமளத் தைலம், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாகக் கொண்டுவந்தார்கள். வருஷா வருஷம் இப்படிச் செய்துவந்தார்கள். 26  ரதங்களையும் குதிரைகளையும்* சாலொமோன் ஏராளமாகச் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவரிடம் 1,400 ரதங்களும் 12,000 குதிரைகளும்* இருந்தன.+ ரதங்களுக்கான நகரங்களிலும் எருசலேமில் ராஜா குடியிருந்த இடத்துக்குப் பக்கத்திலும் அவற்றை நிறுத்தி வைத்தார்.+ 27  வெள்ளியைக் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+ 28  எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளை சாலொமோன் வைத்திருந்தார். ராஜாவின் வியாபாரிகள் குதிரைக் கூட்டங்களை* மொத்த விலைக்கு வாங்குவார்கள்.+ 29  எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரதத்தின் விலை 600 வெள்ளிக் காசுகள். ஒரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுகள். பின்பு, இவற்றை சீரியாவின் ராஜாக்கள் எல்லாருக்கும் ஏத்திய+ ராஜாக்கள் எல்லாருக்கும் ஏற்றுமதி செய்வார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “புதிர்களைப் போட்டு.”
வே.வா., “ராணிக்குப் பேச்சு மூச்சே இல்லாமல் போனது.”
வே.வா., “வார்த்தைகளையும்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பொதுவாக, வில்வீரர்கள் இவற்றை வைத்திருப்பார்கள்.
எபிரெய வேதாகமத்தில், ஒரு மினா என்பது 570 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “குதிரைவீரர்களையும்.”
வே.வா., “குதிரைவீரர்களும்.”
அல்லது, “குதிரைக் கூட்டங்களை எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும்; ராஜாவின் வியாபாரிகள் அவற்றை கியூவிலிருந்து.” கியூ என்பது சிலிசியாவைக் குறிக்கலாம்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா