2 நாளாகமம் 18:1-34

18  யோசபாத்துக்கு ஏராளமான செல்வமும் பேரும் புகழும் இருந்தும்கூட,+ ஆகாப் குடும்பத்தோடு அவர் சம்பந்தம் செய்துகொண்டார்.+  அதனால், சில வருஷங்களுக்குப் பின்பு, ஆகாபைப் பார்க்க சமாரியாவுக்குப் போனார்.+ யோசபாத்துக்காகவும் அவருடன் வந்திருந்த ஆட்களுக்காகவும் எக்கச்சக்கமான ஆடுமாடுகளை ஆகாப் வெட்டினார்.* பின்பு, ராமோத்-கீலேயாத்தை+ எதிர்த்துப் போர் செய்யத் தன்னோடு வரச் சொல்லி அவரை வேண்டிக்கொண்டார்.*  “ராமோத்-கீலேயாத்தைப் பிடிக்க நீங்களும் என்னோடு வருவீர்களா?” என்று யூதாவின் ராஜாவான யோசபாத்திடம் ஆகாப் கேட்டார். அதற்கு யோசபாத், “நீங்கள் வேறு நான் வேறு அல்ல. என்னுடைய மக்கள் உங்களுடைய மக்கள். போர் செய்யும்போது நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்” என்று சொன்னார்.  அதோடு, “தயவுசெய்து முதலில் யெகோவாவிடம் விசாரியுங்கள்”+ என்று இஸ்ரவேல் ராஜாவிடம் யோசபாத் சொன்னார்.  அதனால், இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசிகளை வரவழைத்தார்; 400 பேர் கூடிவந்தார்கள். அவர்களிடம், “நாங்கள் ராமோத்-கீலேயாத்தின் மீது படையெடுத்துப் போகலாமா, வேண்டாமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “போங்கள், உண்மைக் கடவுள் அதை உங்கள் கையில் கொடுப்பார்” என்று சொன்னார்கள்.  அப்போது யோசபாத், “யெகோவாவின் தீர்க்கதரிசி வேறு யாராவது இருக்கிறாரா?+ இருந்தால், அவர் மூலமாகவும் விசாரித்துவிடலாம்”+ என்றார்.  அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “இன்னும் ஒருவன் இருக்கிறான்.+ அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம். ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, எப்போதும் கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்.+ அவன் பெயர் மிகாயா, இம்லாவின் மகன்” என்றார். அதற்கு யோசபாத், “ராஜாவே, நீங்கள் இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்று சொன்னார்.  அதனால், இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய அரண்மனை அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டு, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனே கூட்டிக்கொண்டு வாருங்கள்”+ என்று சொன்னார்.  அப்போது, இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜா யோசபாத்தும் ராஜ உடை உடுத்திக்கொண்டு சமாரியாவின் நகரவாசலில் இருந்த களத்துமேட்டில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். தீர்க்கதரிசிகள் எல்லாரும் அவர்கள் முன்னால் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 10  அப்போது, கெனானாவின் மகனான சிதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “இவற்றை வைத்து நீங்கள் சீரியர்களை முட்டித் தள்ளி, அவர்களை அடியோடு அழிப்பீர்கள் என்று யெகோவா சொல்கிறார்” என்றான். 11  மற்ற தீர்க்கதரிசிகள் எல்லாரும்கூட இதேபோல தீர்க்கதரிசனம் சொன்னார்கள். “நீங்கள் ராமோத்-கீலேயாத்துக்கு எதிராகப் போர் செய்யுங்கள், உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.+ அதைப் பிடிக்க யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்” என்று சொன்னார்கள். 12  மிகாயாவைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகப் போனவர் அவரிடம், “இங்கே பாருங்கள், எல்லா தீர்க்கதரிசிகளும் ராஜாவுக்குச் சாதகமாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள். தயவுசெய்து நீங்களும் அவர்களைப் போலவே சாதகமாகச் சொல்லுங்கள்”+ என்றார். 13  அதற்கு மிகாயா, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* என் கடவுள் என்ன சொல்கிறாரோ அதைத்தான் சொல்வேன்”+ என்றார். 14  பின்பு, அவர் ராஜாவிடம் வந்தார். ராஜா அவரிடம், “ராமோத்-கீலேயாத்தை எதிர்த்துப் போர் செய்ய நாங்கள் போகலாமா, வேண்டாமா?” என்று கேட்டார். உடனே மிகாயா, “போங்கள், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அங்கிருக்கிற மக்கள் உங்கள் கையில் கொடுக்கப்படுவார்கள்” என்று சொன்னார். 15  அதற்கு ராஜா, “யெகோவாவின் பெயரில் உண்மையைத்தான் பேச வேண்டும் என்று எத்தனை தடவை உன்னிடம் சத்தியம் வாங்க வேண்டும்?” என்று கேட்டார். 16  அப்போது மிகாயா, “இஸ்ரவேலர்கள் எல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் மலைகளில் சிதறிப்போவதைப் பார்க்கிறேன்.+ யெகோவா என்னிடம், ‘இவர்களுக்கு எஜமான் இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளுக்குச் சமாதானமாகத் திரும்பிப் போகட்டும்’ என்று சொல்கிறார்” என்றார். 17  அப்போது இஸ்ரவேலின் ராஜா, “‘இவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொல்ல மாட்டான், கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்’ என்று அப்போதே சொன்னேன், இல்லையா?”+ என்று யோசபாத்திடம் சொன்னார். 18  அப்போது மிகாயா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள்: யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ பரலோகப் படை+ முழுவதும் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தது.+ 19  அப்போது யெகோவா, ‘ராமோத்-கீலேயாத்துக்குப் போய்ச் சாகும்படி யார் இஸ்ரவேலின் ராஜாவான ஆகாபை ஏமாற்றி அங்கே அனுப்புவீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ஒரு தேவதூதர் ஒரு விதமாகவும் இன்னொரு தேவதூதர் இன்னொரு விதமாகவும் கருத்துச் சொன்னார்கள். 20  அப்போது ஒரு தேவதூதர்+ யெகோவா முன்னால் வந்து, ‘ஆகாபை நான் ஏமாற்றுவேன்’ என்று சொன்னார். அதற்கு யெகோவா, ‘எப்படி ஏமாற்றுவாய்?’ என்று கேட்டார். 21  அந்தத் தேவதூதர், ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாயிலிருந்தும் பொய்யான செய்தியை வர வைப்பேன்’ என்று சொன்னார். அதற்கு அவர், ‘நீ சொன்னபடியே செய். நீ அவனை ஏமாற்றுவாய், உனக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்’ என்று சொன்னார். 22  அதனால்தான், யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி தீர்க்கதரிசிகள் வாயிலிருந்து பொய்யான செய்தியை வர வைத்திருக்கிறார்.+ ஆனால், நீங்கள் அழிய வேண்டும் என்று யெகோவா தீர்மானித்துவிட்டார்” என்று சொன்னார். 23  அப்போது, கெனானாவின் மகனான சிதேக்கியா+ மிகாயாவிடம்+ வந்து, அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “எப்போதிருந்து யெகோவாவின் சக்தி என்னை விட்டுவிட்டு உன்னிடம் பேச ஆரம்பித்தது?”+ என்று கேட்டான். 24  அதற்கு மிகாயா, “நீ போய் உள்ளறையில் ஒளிந்துகொள்ளும் நாளில் உன் கேள்விக்குப் பதில் கிடைக்கும்” என்று சொன்னார். 25  அப்போது இஸ்ரவேலின் ராஜா, “மிகாயாவைக் கொண்டுபோய் நகர அதிகாரி ஆமோனிடமும் ராஜாவின் மகன் யோவாசிடமும் ஒப்படையுங்கள். 26  அவர்களிடம், ‘இந்த ஆளைச் சிறையில் தள்ளுங்கள்.+ நான் சமாதானமாகத் திரும்பி வரும்வரை இவனுக்குக் கொஞ்சம் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே கொடுங்கள்’ என்று ராஜா கட்டளையிட்டார் என்று சொல்லுங்கள்” என்றார். 27  அதற்கு மிகாயா, “நீங்கள் சமாதானமாகத் திரும்பி வந்துவிட்டால், யெகோவா என் மூலம் பேசவில்லை என்று அர்த்தம்”+ என்று சொன்னார். அதோடு, “மக்களே, எல்லாரும் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றும் சொன்னார். 28  பின்பு, இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜா யோசபாத்தும் ராமோத்-கீலேயாத்துக்குப் போனார்கள்.+ 29  அப்போது யோசபாத்திடம் இஸ்ரவேலின் ராஜா, “நீங்கள் ராஜ உடையைப் போட்டுக்கொண்டு போர்க்களத்துக்கு வாருங்கள், நான் மாறுவேஷத்தில் வருகிறேன்” என்று சொன்னார். அதன்படியே, இஸ்ரவேலின் ராஜா மாறுவேஷம் போட்டுக்கொண்டார்; பின்பு, அவர்கள் போர்க்களத்துக்குப் போனார்கள். 30  சீரியாவின் ராஜா தன்னுடைய ரதத் தலைவர்களைப் பார்த்து, “வேறு யாரோடும்* போர் செய்யாமல், இஸ்ரவேலின் ராஜாவோடு மட்டும் போர் செய்யுங்கள்” என்று சொல்லியிருந்தான். 31  ரதத் தலைவர்கள் யோசபாத்தைப் பார்த்ததும், “இவர்தான் இஸ்ரவேலின் ராஜா” என்று நினைத்துக்கொண்டு, அவரைத் தாக்க வந்தார்கள். அப்போது, யோசபாத் உதவி கேட்டுக் கதறினார்,+ யெகோவாவும் அவருக்கு உதவி செய்தார். உடனடியாக எதிரிகளைத் திசைதிருப்பி அவரைக் காப்பாற்றினார். 32  அவர் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்பது தெரிந்ததும் ரதத் தலைவர்கள் அவரைத் துரத்தாமல் உடனடியாக விலகிப்போனார்கள். 33  அதன்பின், ஒருவன் எதேச்சையாக எறிந்த அம்பு இஸ்ரவேலின் ராஜாவுடைய உடல்கவசத்தின் இணைப்புகளுக்கு இடையே பாய்ந்தது. அப்போது ராஜா தன்னுடைய ரத ஓட்டியிடம், “எனக்குப் பயங்கரமாகக் காயம்பட்டுவிட்டது; ரதத்தைத் திருப்பி, என்னைப் போர்க்களத்திலிருந்து* வெளியே கொண்டுபோ”+ என்று சொன்னார். 34  அன்று முழுவதும் கடுமையான போர் நடந்ததால், சாயங்காலம்வரை சீரியர்களைப் பார்த்தவாறு ராஜாவை ரதத்தில் நிற்கவைக்க வேண்டியிருந்தது. சூரியன் மறையும் நேரத்தில் அவர் இறந்துபோனார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “பலி கொடுத்தார்.”
வே.வா., “சம்மதிக்க வைத்தார்.”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “சிறியோரோடும் பெரியோரோடும்.”
நே.மொ., “முகாமிலிருந்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா