அப்போஸ்தலரின் செயல்கள் 2:1-47

  • பெந்தெகொஸ்தே நாளில் கடவுளுடைய சக்தி பொழியப்படுகிறது (1-13)

  • பேதுருவின் பேச்சு (14-36)

  • பேதுருவின் பேச்சைக் கேட்டு கூட்டத்தார் செயல்படுகிறார்கள் (37-41)

    • 3,000 பேர் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் (41)

  • சீஷர்கள் ஒன்றுகூடியிருக்கிறார்கள் (42-47)

2  பெந்தெகொஸ்தே பண்டிகை+ நாளில், அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.  அப்போது, திடீரென்று பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் வானத்திலிருந்து வந்தது; அந்தச் சத்தம் அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதும் கேட்டது.+  அதோடு, நெருப்பு போன்ற நாவுகளை அவர்கள் பார்த்தார்கள்; அவை ஒவ்வொன்றும் பிரிந்துபோய் அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தன.  அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்;+ அந்தச் சக்தியின் உதவியால் வெவ்வேறு மொழிகளில்* பேச ஆரம்பித்தார்கள்.+  அந்தச் சமயத்தில், உலகத்தில் இருந்த எல்லா தேசங்களிலிருந்தும் வந்திருந்த பக்தியுள்ள யூதர்கள் எருசலேமில் தங்கியிருந்தார்கள்.+  அந்தச் சத்தம் வந்தபோது மக்கள் கூட்டமாகக் கூடிவந்து, தங்களுடைய மொழிகளில் அவர்கள் பேசுவதைக் கேட்டுத் திகைத்துப்போனார்கள்.  எல்லாருமே மிகவும் ஆச்சரியப்பட்டு, “இங்கே பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் எல்லாரும் கலிலேயர்கள்தானே?+  அப்படியிருக்கும்போது, இவர்கள் நம்முடைய சொந்த மொழிகளில்* பேசுவதைக் கேட்கிறோமே, அது எப்படி?  பார்த்தர்களும் மேதியர்களும்+ ஏலாமியர்களும்,+ மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசிய மாகாணம்,+ 10  பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய இடங்களில் குடியிருக்கிறவர்களும், சிரேனே நகரத்துக்குப் பக்கத்திலுள்ள லீபியாவின் பகுதிகளில் குடியிருக்கிறவர்களும், ரோமிலிருந்து வந்து தங்கியிருக்கிறவர்களுமான யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும்,+ 11  கிரேத்தர்களும், அரேபியர்களுமாகிய நாம், கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி இவர்கள் நம்முடைய சொந்த மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே!” என்று சொல்லிக்கொண்டார்கள். 12  அவர்கள் எல்லாரும், “இதெல்லாம் என்ன?” என்று குழப்பத்தோடும் பிரமிப்போடும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். 13  வேறு சிலரோ, “இவர்கள் தித்திப்பான* மதுவைக் குடித்து வெறித்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கேலி செய்தார்கள். 14  ஆனால், பேதுரு மற்ற பதினொரு அப்போஸ்தலர்களோடு+ எழுந்து நின்று, உரத்த குரலில், “யூதேய மக்களே, எருசலேமில் குடியிருக்கிறவர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். 15  நீங்கள் நினைப்பது போல இவர்கள் குடிபோதையில் இல்லை. ஏனென்றால், இது மூன்றாம் மணிநேரம்.* 16  யோவேல் தீர்க்கதரிசி மூலம் இப்படிச் சொல்லப்பட்டதுதான் இப்போது நிறைவேறியிருக்கிறது: 17  ‘கடவுள் சொல்வது என்னவென்றால், “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன், உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.+ 18  அந்த நாட்களில், எனக்கு ஊழியம் செய்கிற ஆண்கள்மேலும் பெண்கள்மேலும் என் சக்தியைப் பொழிவேன்; அப்போது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.+ 19  மேலே வானத்தில் அதிசயங்களையும் கீழே பூமியில் அடையாளங்களையும் நான் செய்து காட்டுவேன். எங்கு பார்த்தாலும் இரத்தமாகவும், நெருப்பாகவும், புகை மண்டலமாகவும் இருக்கும். 20  யெகோவாவின்* மகத்தான மகா நாள் வருவதற்குமுன் சூரியன் இருண்டுவிடும், சந்திரன் இரத்த நிறமாகிவிடும். 21  யெகோவாவின்* பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்.”’+ 22  இஸ்ரவேல் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நாசரேத்தூர் இயேசுவின் மூலம் கடவுள் உங்கள் நடுவில் வல்லமையான செயல்களையும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து, அவர் யார் என்பதை உங்களுக்கு வெளிப்படையாகக் காட்டினார்.+ இது உங்களுக்கே தெரியும். 23  கடவுளுடைய மாறாத நோக்கத்தின்படியும்* முன்னறிவின்படியும்+ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரைத்தான் நீங்கள் அக்கிரமக்காரர்களின் கையால் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்.+ 24  ஆனால், கடவுள் அவரை மரணத்தின் பிடியிலிருந்து* காப்பாற்றி உயிரோடு எழுப்பினார்;+ மரணத்தால் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.+ 25  அவர் இப்படிச் சொல்வதாக தாவீது குறிப்பிட்டிருக்கிறார்: ‘யெகோவாவை* எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது. 26  அதனால், என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கிறது, என் நாவு மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறது, நான் நம்பிக்கையோடு வாழ்வேன்; 27  ஏனென்றால், நீங்கள் என்னைக் கல்லறையில்* விட்டுவிட மாட்டீர்கள்; உங்களுக்கு உண்மையாக* இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள்.+ 28  வாழ்வின் வழிகளை எனக்குக் காட்டியிருக்கிறீர்கள், உங்களுடைய சன்னிதியில் என்னை மிகுந்த சந்தோஷத்தால் நிரப்புவீர்கள்.’+ 29  சகோதரர்களே, வம்சத் தலைவரான தாவீதைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் என்னால் பேச முடியும்; அவர் இறந்த பின்பு அடக்கம் செய்யப்பட்டார்.+ அவருடைய சமாதி இன்றுவரை நம் மத்தியில்தான் இருக்கிறது. 30  அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததாலும், கடவுள் அவரிடம், ‘உன்னுடைய சந்ததியில் வரும் ஒருவரை உன் சிம்மாசனத்தில் உட்கார வைப்பேன்’+ என்று ஆணையிட்டுக் கொடுத்ததை அறிந்திருந்ததாலும், 31  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து முன்கூட்டியே தெரிந்து, கிறிஸ்து கல்லறையில்* விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவருடைய உடல் அழிந்துபோகாது+ என்றும் சொல்லியிருந்தார். 32  இந்த இயேசுவைத்தான் கடவுள் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லாரும் சாட்சிகள்.+ 33  தகப்பனாகிய கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டு,+ வாக்குறுதி கொடுக்கப்பட்டபடி கடவுளுடைய சக்தியைப் பெற்று+ இப்போது அதைப் பொழிந்திருக்கிறார்; இதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள். 34  உண்மையில், தாவீது பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை; அவரே இப்படிச் சொன்னார்: ‘யெகோவா* என் எஜமானிடம், 35  “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று சொன்னார்.’ 36  அதனால், நீங்கள் மரக் கம்பத்தில் அறைந்து கொன்ற+ இந்த இயேசுவையே எஜமானாகவும்+ கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார் என்பதை இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொன்னார். 37  இந்த வார்த்தைகளெல்லாம் அங்கே இருந்தவர்களுடைய உள்ளத்தைத் துளைத்தன; அதனால், “சகோதரர்களே, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலர்களிடமும் கேட்டார்கள். 38  அதற்கு பேதுரு, “மனம் திருந்துங்கள்,+ உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட+ வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் எடுங்கள்;+ அப்போது கடவுளுடைய சக்தியை இலவச அன்பளிப்பாகப் பெறுவீர்கள். 39  இந்த வாக்குறுதி+ உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், ரொம்பத் தூரத்திலிருக்கிற மற்ற எல்லாருக்கும், நம் கடவுளாகிய யெகோவா* அழைக்கிற அத்தனை பேருக்கும் கொடுக்கப்படுகிறது”+ என்று சொன்னார். 40  இதைப் பற்றி இன்னும் நிறைய சொல்லி முழுமையாகச் சாட்சி கொடுத்து, “சீர்கெட்ட இந்தத் தலைமுறைக்கு+ வரும் அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார். 41  அவர் சொன்னதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள்;+ அன்று சுமார் 3,000 பேர் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.+ 42  அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கு அவர்கள் முழு கவனம் செலுத்திவந்தார்கள், தவறாமல் ஒன்றுகூடி வந்தார்கள்,* ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள்,+ தொடர்ந்து ஜெபம் செய்தார்கள்.+ 43  அப்போஸ்தலர்கள் மூலம் நிறைய அற்புதங்களும் அடையாளங்களும் நடக்க ஆரம்பித்தன;+ எல்லாருக்கும் பயபக்தி ஏற்பட்டது. 44  இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த எல்லாரும் ஒன்றாகக் கூடியிருந்தார்கள், தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாக வைத்துப் பயன்படுத்தினார்கள். 45  தங்கள் உடைமைகளையும் சொத்துகளையும் விற்று,+ அந்தப் பணத்தை அவரவருடைய தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.+ 46  அவர்கள் ஒரே நோக்கத்தோடு ஆலயத்தில் தினமும் கூடிவந்து, வெவ்வேறு வீடுகளில் உணவு சாப்பிட்டு, தங்களிடம் இருந்த உணவை மிகுந்த சந்தோஷத்தோடும் கள்ளம்கபடமில்லாத உள்ளத்தோடும் பகிர்ந்துகொண்டு, 47  கடவுளைப் புகழ்ந்து வந்தார்கள், எல்லா மனிதர்களுடைய பிரியத்தையும் பெற்று வந்தார்கள். மீட்புப் பெறவிருந்தவர்களை யெகோவா* தினமும் அவர்களோடு சேர்த்துக்கொண்டே வந்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அன்னிய பாஷைகளில்.”
வே.வா., “தாய்மொழிகளில்.”
வே.வா., “புதிய.”
அதாவது, “காலை சுமார் 9 மணி.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “தீர்மானத்தின்படியும்.”
அல்லது, “கயிறுகளிலிருந்து.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “பற்றுமாறாமல்.”
மூலமொழியில், “ஹேடீசில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
மூலமொழியில், “ஹேடீசில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “தங்களிடம் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.