அப்போஸ்தலரின் செயல்கள் 3:1-26

  • கால் ஊனமான பிச்சைக்காரனை பேதுரு குணமாக்குகிறார் (1-10)

  • சாலொமோன் மண்டபத்தில் பேதுரு பேசுகிறார் (11-26)

    • ‘எல்லாம் புதுப்பிக்கப்படும்’ (21)

    • மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி (22)

3  ஜெப நேரமாகிய ஒன்பதாம் மணிநேரத்தில்,* பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.  பிறவியிலேயே கால் ஊனமாக இருந்த ஒருவனைச் சிலர் தினமும் அங்கே தூக்கிக்கொண்டு வந்து, ஆலயத்துக்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்பதற்காக ‘அழகு நுழைவாசல்’ என்ற வாசலுக்குப் பக்கத்தில் உட்கார வைத்தார்கள்.  பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குள் நுழையப்போவதை அவன் பார்த்தபோது அவர்களிடம் பிச்சை கேட்டான்.  அப்போது பேதுருவும் யோவானும் அவனை நேராகப் பார்த்து, “எங்களைப் பார்” என்று சொன்னார்கள்.  அவர்கள் ஏதாவது கொடுப்பார்கள் என்று நினைத்து அவர்களையே அவன் உற்றுப் பார்த்தான்.  அப்போது பேதுரு, “தங்கமும் வெள்ளியும் என்னிடம் இல்லை. ஆனால், என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன்; நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!”+ என்று சொல்லி,  அவனுடைய வலது கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார்;+ உடனே அவனுடைய உள்ளங்கால்களும் கணுக்கால்களும் பலமடைந்தன.+  அவன் துள்ளியெழுந்து நடக்க ஆரம்பித்தான்;+ பின்பு, துள்ளிக் குதித்துக்கொண்டு கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களோடு ஆலயத்துக்குள் போனான்.  அவன் கடவுளைப் புகழ்ந்துகொண்டு நடந்துபோவதை அங்கிருந்த எல்லா மக்களும் பார்த்தார்கள். 10  வழக்கமாக ஆலயத்தின் ‘அழகு நுழைவாசலில்’ உட்கார்ந்துகொண்டு பிச்சை கேட்பவன்தான்+ அவன் என்பதைத் தெரிந்துகொண்டு, அவனுக்கு நடந்த அற்புதத்தைப் பார்த்து மலைத்துப்போனார்கள், பிரமிப்பும் பூரிப்பும் அடைந்தார்கள். 11  சாலொமோன் மண்டபம்+ என்ற இடத்தில் பேதுருவின் கையையும் யோவானின் கையையும் அவன் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தபோது, அந்த மக்கள் எல்லாரும் ஆச்சரியம் தாங்காமல் அவர்களிடம் கூட்டமாக ஓடிவந்தார்கள். 12  பேதுரு அதைப் பார்த்தபோது, “இஸ்ரவேல் மக்களே, ஏன் இப்படி ஆச்சரியப்படுகிறீர்கள்? எங்களுடைய சொந்த சக்தியாலோ பக்தியாலோ இவனை நாங்கள் நடக்க வைத்ததுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? 13  நம் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள்+ தன்னுடைய ஊழியரான இயேசுவை+ மகிமைப்படுத்தியிருக்கிறார்;+ அவரைத்தான் முன்பு நீங்கள் எதிரிகளிடம் ஒப்படைத்தீர்கள்.+ பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பிலாத்துவுக்கு முன்னால் அவரை ஒதுக்கித்தள்ளினீர்கள். 14  பரிசுத்தமானவரும் நீதியுள்ளவருமான அவரை ஒதுக்கித்தள்ளிவிட்டு, கொலைகாரனை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டீர்கள்.+ 15  வாழ்வின் அதிபதியையே+ கொலை செய்தீர்கள். ஆனால், கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்.+ 16  அவருடைய பெயர்தான், அவருடைய பெயரில் நாங்கள் வைத்திருக்கிற விசுவாசம்தான், நீங்கள் பார்க்கிற, அறிந்திருக்கிற இந்த மனுஷனின் கால்களைப் பலப்படுத்தியிருக்கிறது; இயேசுவின் மேல் நாங்கள் வைத்திருக்கிற விசுவாசம்தான் உங்கள் எல்லாருக்கும் முன்னால் இவனை முழுமையாகக் குணப்படுத்தியிருக்கிறது. 17  சகோதரர்களே, உங்கள் தலைவர்களைப் போல்+ நீங்களும் அறியாமையால்தான் இப்படிச் செய்தீர்கள்+ என்று எனக்குத் தெரியும். 18  தன்னுடைய கிறிஸ்து பாடுகள் படுவார் என்று எல்லா தீர்க்கதரிசிகள் மூலமாகவும் முன்கூட்டியே சொன்னதைத்தான் கடவுள் இப்படி நிறைவேற்றியிருக்கிறார்.+ 19  அதனால், மனம் திருந்தி,+ உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்;*+ அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்,+ யெகோவாவிடமிருந்து* புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும். 20  அதோடு, உங்களுக்கென்று நியமிக்கப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசுவை அவர் உங்களிடம் அனுப்புவார். 21  பூர்வ காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலம் அவர் சொன்னபடியே, எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலங்கள்வரை கிறிஸ்து பரலோகத்திலேயே இருக்க வேண்டும். 22  சொல்லப்போனால், ‘உங்கள் கடவுளாகிய யெகோவா* உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார்.+ அந்தத் தீர்க்கதரிசி சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+ 23  அவர் சொல்வதைக் கேட்டு நடக்காத எவனும் மக்கள் மத்தியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவான்’ என்று மோசே சொன்னார்.+ 24  எல்லா தீர்க்கதரிசிகளும், சொல்லப்போனால் சாமுவேல் முதற்கொண்டு அடுத்தடுத்து வந்த எல்லா தீர்க்கதரிசிகளும், இந்த நாட்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.+ 25  நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் உங்கள் முன்னோர்களோடு கடவுள் செய்த ஒப்பந்தத்துக்கும் வாரிசுகளாக இருக்கிறீர்கள்;+ அந்த ஒப்பந்தத்தின்படி, ‘உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும்’+ என்று ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார். 26  உங்கள் ஒவ்வொருவரையும் உங்களுடைய பொல்லாத செயல்களிலிருந்து விலக்கி ஆசீர்வதிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய ஊழியரை நியமித்து, முதன்முதலில் உங்களிடம்தான் அனுப்பினார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “மதியம் சுமார் 3 மணிக்கு.”
நே.மொ., “முழுமையாகத் திரும்புங்கள்.”
நே.மொ., “யெகோவாவின் முகத்திலிருந்து.” இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.