அப்போஸ்தலரின் செயல்கள் 6:1-15

  • ஏழு ஆண்கள் முக்கிய வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (1-7)

  • கடவுளை நிந்தித்ததாக ஸ்தேவான் குற்றம்சாட்டப்படுகிறார் (8-15)

6  அந்த நாட்களில், சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனபோது எபிரெய மொழி பேசிய யூதர்களுக்கு எதிராகக் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் குறை சொல்ல ஆரம்பித்தார்கள்; ஏனென்றால், அன்றாட உணவு கொடுக்கிற விஷயத்தில் அவர்கள் மத்தியிலிருந்த விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை.+  அப்போது, பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மற்ற எல்லா சீஷர்களையும் கூப்பிட்டு, “நாங்கள் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் வேலையை விட்டுவிட்டு உணவு கொடுக்கிற வேலையில் ஈடுபடுவது சரியாக இருக்காது.+  அதனால் சகோதரர்களே, கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்தவர்களாகவும்,+ நல்ல பெயரெடுத்தவர்களாகவும்+ இருக்கிற ஏழு ஆண்களை உங்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுங்கள். இந்த அவசியமான வேலையை மேற்பார்வை செய்ய நாங்கள் அவர்களை நியமிப்போம்.+  அதேசமயத்தில், ஜெபம் செய்வதற்கும் கடவுளுடைய வார்த்தையைக் கற்பிப்பதற்கும் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்” என்று சொன்னார்கள்.  அவர்கள் சொன்னது சரியென்று அங்கிருந்த எல்லாருக்கும் தோன்றியது. அதனால், கடவுளுடைய சக்தியும் விசுவாசமும் நிறைந்தவரான ஸ்தேவானையும், பிலிப்புவையும்,+ பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், அந்தியோகியா நகரத்தைச் சேர்ந்தவரும் யூத மதத்துக்கு மாறியவருமான நிக்கொலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.  பின்பு, அவர்களை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; அப்போஸ்தலர்கள் ஜெபம் செய்துவிட்டு அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.+  இதன் காரணமாக, கடவுளுடைய வார்த்தை பரவிக்கொண்டே வந்தது;+ எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வந்தது;+ ஏராளமான குருமார்களும் இயேசுவின் சீஷர்களானார்கள்.+  கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவரான ஸ்தேவான் பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் மக்கள் மத்தியில் செய்துவந்தார்.  இருந்தாலும், ‘விடுதலை பெற்றவர்களின் ஜெபக்கூடம்’ என்ற பிரிவைச் சேர்ந்த ஆட்களில் சிலர், சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலரோடு வந்து ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். 10  ஆனால், ஞானத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் பேசிய அவரை அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.+ 11  பின்பு, அவர்கள் சில ஆட்களை ரகசியமாகக் கூப்பிட்டு, “மோசேயையும் கடவுளையும் இவன் நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லும்படி தூண்டிவிட்டார்கள். 12  அதோடு, மக்களையும் பெரியோர்களையும்* வேத அறிஞர்களையும் தூண்டிவிட்டார்கள்; அவர்கள் திடீரென்று அவரிடம் வந்து, அவரைப் பலவந்தமாகப் பிடித்து நியாயசங்கத்துக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். 13  பின்பு, பொய் சாட்சிகளை அங்கே நிறுத்தினார்கள்; இவர்கள், “இந்தப் பரிசுத்த இடத்துக்கு எதிராகவும் திருச்சட்டத்துக்கு எதிராகவும் இவன் பேசிக்கொண்டே இருக்கிறான். 14  உதாரணத்துக்கு, நாசரேத்தூர் இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார், மோசே நமக்குக் கொடுத்த சட்டதிட்டங்களை* மாற்றிவிடுவார் என்றெல்லாம் இவன் சொல்கிறான்; அதை நாங்களே கேட்டோம்” என்று சொன்னார்கள். 15  நியாயசங்கத்தில் உட்கார்ந்திருந்த எல்லாரும் அவரை உற்றுப் பார்த்தபோது அவருடைய முகம் ஒரு தேவதூதரின் முகம்போல் இருந்ததைக் கவனித்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களையும்.”
வே.வா., “முறைமைகளை.”