ஆதியாகமம் 1:1-31

  • வானமும் பூமியும் படைக்கப்படுகின்றன (1, 2)

  • பூமியிலுள்ள எல்லாமே ஆறு நாட்களில் படைக்கப்படுகின்றன (3-31)

    • 1-ஆம் நாள்: வெளிச்சம்; பகலும் இரவும் (3-5)

    • 2-ஆம் நாள்: ஆகாயவிரிவு (6-8)

    • 3-ஆம் நாள்: காய்ந்த தரையும், செடிகொடிகளும் (9-13)

    • 4-ஆம் நாள்: வானத்தில் ஒளிச்சுடர்கள் (14-19)

    • 5-ஆம் நாள்: மீன்களும், பறவைகளும் (20-23)

    • 6-ஆம் நாள்: நிலத்தில் வாழ்கிற மிருகங்களும், மனிதர்களும் (24-31)

1  ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.  பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக* இருந்தது, எங்கு பார்த்தாலும் ஆழமான தண்ணீரும் இருட்டுமாக இருந்தது. தண்ணீருக்கு மேலே கடவுளுடைய சக்தி* செயல்பட்டுக்கொண்டு* இருந்தது.  பின்பு கடவுள், “வெளிச்சம் வரட்டும்” என்று சொன்னார். அப்போது வெளிச்சம் வந்தது.  கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தபோது அது நன்றாக இருந்தது. பின்பு, அவர் வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரித்தார்.  வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது.  பின்பு கடவுள், “தண்ணீர் இரண்டாகப் பிரியட்டும், நடுவில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்” என்று சொல்லி,  ஆகாயவிரிவை உண்டாக்க ஆரம்பித்தார். தண்ணீரின் ஒரு பகுதி ஆகாயவிரிவுக்குக் கீழேயும் இன்னொரு பகுதி ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கும்படி பிரித்தார். அது அப்படியே ஆனது.  அவர் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, இரண்டாம் நாள் முடிந்தது.  பின்பு கடவுள், “வானத்துக்குக் கீழே இருக்கிற தண்ணீரெல்லாம் ஒருபக்கமாக ஒதுங்கட்டும், காய்ந்த தரை உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 10  காய்ந்த தரைக்கு நிலம் என்று கடவுள் பெயர் வைத்தார். ஒருபக்கமாக ஒதுங்கிய தண்ணீருக்குக் கடல் என்று பெயர் வைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 11  பின்பு கடவுள், “நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே* முளைக்கட்டும். செடிகள் விதைகளைத் தரட்டும், மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுக்கட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 12  நிலத்தில் புற்களும் செடிகளும் மரங்களும் அந்தந்த இனத்தின்படியே முளைக்க ஆரம்பித்தன. செடிகள் விதைகளைத் தந்தன, மரங்கள் விதைகளுள்ள பழங்களைக் கொடுத்தன. கடவுள் அவற்றைப் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 13  சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, மூன்றாம் நாள் முடிந்தது. 14  பின்பு கடவுள், “பகலையும் இரவையும் தனித்தனியாகப் பிரிப்பதற்கு வானத்தில் ஒளிச்சுடர்கள் தெரியட்டும். பருவ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறித்துக் காட்டுகிற அடையாளங்களாக அவை இருக்கட்டும். 15  அந்த ஒளிச்சுடர்கள் வானத்திலிருந்து பூமிக்கு வெளிச்சம் தரட்டும்” என்று சொன்னார். அது அப்படியே ஆனது. 16  பின்பு, கடவுள் இரண்டு மிகப் பெரிய ஒளிச்சுடர்களைத் தெரியும்படி செய்தார். பகலில் பிரகாசமாய் ஒளிவீச* ஓர் ஒளிச்சுடரையும் இரவில் இதமாய் ஒளிவீச ஓர் ஒளிச்சுடரையும், அதோடு நட்சத்திரங்களையும் தெரிய வைத்தார். 17  இப்படி, பூமிக்கு வெளிச்சம் தருவதற்காகக் கடவுள் அவற்றை வானத்தில் வைத்தார். 18  பகலிலும் இரவிலும் ஒளிவீசுவதற்காகவும், வெளிச்சத்தையும் இருட்டையும் தனித்தனியாகப் பிரிப்பதற்காகவும் அப்படிச் செய்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 19  சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, நான்காம் நாள் முடிந்தது. 20  பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்” என்று சொன்னார். 21  கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினங்களையும் கூட்டங்கூட்டமாக நீந்தும் உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே கடவுள் படைத்தார். பறக்கும் எல்லா பறவைகளையும் அந்தந்த இனத்தின்படியே படைத்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 22  கடவுள் அவற்றை ஆசீர்வதித்து, “ஏராளமாகப் பெருகி கடலை நிரப்புங்கள்” என்று சொன்னார்; “பூமியில் பறவைகள் பெருகட்டும்” என்றும் சொன்னார். 23  சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஐந்தாம் நாள் முடிந்தது. 24  பின்பு கடவுள், “நிலத்தில் வாழும் உயிரினங்கள் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்; வீட்டு விலங்குகளும் ஊரும் பிராணிகளும் காட்டு மிருகங்களும் அந்தந்த இனத்தின்படியே உண்டாகட்டும்” என்றார். அது அப்படியே ஆனது. 25  காட்டு மிருகங்களை அந்தந்த இனத்தின்படியும் வீட்டு விலங்குகளை அந்தந்த இனத்தின்படியும் ஊரும் பிராணிகளை அந்தந்த இனத்தின்படியும் கடவுள் உண்டாக்க ஆரம்பித்தார். அவற்றை அவர் பார்த்தபோது அவை நன்றாக இருந்தன. 26  பின்பு கடவுள், “மனிதனை நம்முடைய சாயலில் நம்மைப் போலவே உண்டாக்கலாம். கடலில் வாழும் மீன்களும், வானத்தில் பறக்கும் பறவைகளும், வீட்டு விலங்குகளும், ஊரும் பிராணிகளும், முழு பூமியும் அவனுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொன்னார். 27  மனிதனைக் கடவுள் தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னுடைய சாயலிலேயே அவனைப் படைத்தார். ஆணையும் பெண்ணையும் அவர் படைத்தார். 28  கடவுள் அவர்களிடம், “நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்.* கடலில் வாழ்கிற மீன்களும், வானத்தில் பறக்கிற பறவைகளும், நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களும் உங்கள் அதிகாரத்தின்கீழ் இருக்கட்டும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார். 29  பின்பு கடவுள், “பூமியிலுள்ள எல்லா செடிகளையும், விதைகளுள்ள பழங்களைத் தருகிற மரங்களையும் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவை உங்களுக்கு உணவாக இருக்கட்டும். 30  பூமியிலுள்ள எல்லா காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நிலத்தில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் புல்பூண்டுகளை உணவாகத் தந்திருக்கிறேன்” என்றார். அது அப்படியே ஆனது. 31  பின்பு, தான் படைத்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்தார், எல்லாமே மிகவும் நன்றாக இருந்தன. சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, ஆறாம் நாள் முடிந்தது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “காலியாக.”
வே.வா., “செயல் நடப்பிக்கும் ஆற்றல்.”
நே.மொ., “அசைந்தாடிக்கொண்டு.”
அதாவது, “வகையின்படியே.”
வே.வா., “பகலை ஆள.”
சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
நே.மொ., “பறக்கும் உயிரினங்கள்.” இவை சிறகுள்ள பூச்சிகளையும் குறிக்கலாம்.
நே.மொ., “கீழ்ப்படுத்துங்கள்.”