ஆதியாகமம் 13:1-18

  • ஆபிராம் கானானுக்குத் திரும்பிப் போகிறார் (1-4)

  • ஆபிராமும் லோத்துவும் பிரிந்து போகிறார்கள் (5-13)

  • ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (14-18)

13  அதன்பின், ஆபிராம் தன் மனைவியோடும் லோத்துவோடும் தன்னிடம் இருந்த எல்லாவற்றோடும் எகிப்திலிருந்து நெகேபுக்குப் போனார்.  ஆபிராமிடம் ஏராளமான கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் இருந்தன.  நெகேபிலிருந்து பெத்தேலுக்கு அவர் பயணம் செய்தபோது பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கினார். கடைசியில், பெத்தேல் நகரத்துக்கும் ஆயி நகரத்துக்கும் இடையில், ஏற்கெனவே கூடாரம் போட்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.  முன்பு அவர் பலிபீடம் கட்டியிருந்த அந்த இடத்தில் யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.  ஆபிராமுடன் பயணம் செய்துவந்த லோத்துவுக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.  அதனால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் போதவில்லை. அவர்களுக்கு ஏராளமான பொருள்கள் சேர்ந்துவிட்டதால் அவர்களால் ஒன்றாகக் குடியிருக்க முடியவில்லை.  இதன் காரணமாக, ஆபிராமின் மேய்ப்பர்களுக்கும் லோத்துவின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. (அந்தச் சமயத்தில் கானானியர்களும் பெரிசியர்களும் அந்தத் தேசத்தில் குடியிருந்தார்கள்.)  அதனால் ஆபிராம் லோத்துவிடம், “உனக்கும் எனக்கும் உன் மேய்ப்பர்களுக்கும் என் மேய்ப்பர்களுக்கும் தயவுசெய்து எந்த வாக்குவாதமும் வேண்டாம். நீயும் நானும் சகோதரர்கள்தானே?  இந்தத் தேசத்தில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் நீ எடுத்துக்கொள். தயவுசெய்து நாம் பிரிந்துவிடலாம். நீ இடது பக்கமாகப் போனால், நான் வலது பக்கமாகப் போவேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போவேன்” என்று சொன்னார். 10  சோவார் வரையுள்ள யோர்தான் பிரதேசம் முழுவதையும் லோத்து பார்த்தார். அது நிறைய தண்ணீர் உள்ள இடமாக இருந்தது. (சோதோமையும் கொமோராவையும் யெகோவா அழிப்பதற்கு முன்பு அது அப்படி இருந்தது.) யெகோவாவின் தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் அது இருந்தது. 11  யோர்தான் பிரதேசம் முழுவதையும் லோத்து தேர்ந்தெடுத்தார். பின்பு, கிழக்கே போய்க் குடியிருந்தார். இப்படி, ஆபிராமும் லோத்துவும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோனார்கள். 12  ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தார். ஆனால் லோத்து, யோர்தான் பிரதேசத்தில் இருந்த நகரங்களில் குடியிருந்தார். கடைசியாக, அவர் சோதோமுக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டார். 13  சோதோமிலிருந்த ஆட்கள் பொல்லாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தார்கள். 14  ஆபிராமிடமிருந்து லோத்து பிரிந்துபோன பின்பு யெகோவா ஆபிராமிடம், “நீ இருக்கும் இடத்திலிருந்து தயவுசெய்து வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் பார். 15  நீ பார்க்கும் எல்லா இடங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் நிரந்தர சொத்தாகத் தருவேன். 16  உன் சந்ததியைப் பூமியிலுள்ள மணலைப் போலப் பெருக வைப்பேன். பூமியிலுள்ள மணலை யாராவது எண்ண முடிந்தால்தான் உன் சந்ததியையும் எண்ண முடியும். 17  நீ புறப்பட்டுப் போய் அந்தத் தேசம் முழுவதையும் சுற்றிப் பார். நான் அதை உனக்குத் தருவேன்” என்று சொன்னார். 18  ஆபிராம் தொடர்ந்து கூடாரங்களில் வாழ்ந்துவந்தார். பிற்பாடு, எப்ரோனிலே பெரிய மரங்கள் இருக்கிற மம்ரே என்ற இடத்துக்குப் போய்க் குடியிருந்தார். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டினார்.

அடிக்குறிப்புகள்