ஆதியாகமம் 14:1-24

  • ஆபிராம் லோத்துவைக் காப்பாற்றுகிறார் (1-16)

  • ஆபிராமை மெல்கிசேதேக்கு ஆசீர்வதிக்கிறார் (17-24)

14  அம்ராப்பேல் சினேயாரின் ராஜாவாகவும், ஆரியோகு ஏலாசாரின் ராஜாவாகவும், கெதர்லாகோமேர் ஏலாமின் ராஜாவாகவும், திதியால் கோயிமின் ராஜாவாகவும் இருந்தார்கள்.  இவர்கள் சோதோமின் ராஜா பேராவுக்கும், கொமோராவின் ராஜா பிர்சாவுக்கும், அத்மாவின் ராஜா சிநெயாவுக்கும், செபோயீமின் ராஜா செமேபருக்கும், பேலாவின் (அதாவது, சோவாரின்) ராஜாவுக்கும் எதிராகப் போர் செய்தார்கள்.  இவர்கள்* எல்லாரும் தங்கள் படைகளோடு சித்தீம் பள்ளத்தாக்கிலே, அதாவது இப்போது உப்புக் கடல்* இருக்கிற இடத்திலே, ஒன்றுதிரண்டார்கள்.  இவர்கள்* 12 வருஷங்களாக கெதர்லாகோமேர் ராஜாவுக்கு அடிபணிந்து நடந்தார்கள்; ஆனால், 13-ஆம் வருஷத்தில் கலகம் செய்தார்கள்.  அதனால் 14-ஆம் வருஷத்தில் கெதர்லாகோமேர் ராஜாவும் அவரோடு இருந்த ராஜாக்களும் படையெடுத்து வந்து, அஸ்தரோத்-கர்னாயீமில் இருந்த ரெப்பாயீமியர்களையும், காமில் இருந்த சூசிமியர்களையும், சாவே-கீரியத்தாயீமில் இருந்த ஏமியர்களையும்,  சேயீர் மலையில் இருந்த ஓரியர்களையும் தோற்கடித்தார்கள். இவர்களை வனாந்தரத்தின் எல்லையிலுள்ள எல்-பாரான்வரை தோற்கடித்தார்கள்.  பின்பு, அங்கிருந்து திரும்பி என்-மிஸ்பாத்துக்கு, அதாவது காதேசுக்கு, போய் அமலேக்கியர்களின் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினார்கள். அதோடு, அத்சாத்சோன்-தாமாரில் குடியிருந்த எமோரியர்களைத் தோற்கடித்தார்கள்.  அப்போது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், பேலாவின் (அதாவது, சோவாரின்) ராஜாவும் சித்தீம் பள்ளத்தாக்கிலே அணிவகுத்து வந்து,  ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேருக்கும், கோயிமின் ராஜாவாகிய திதியாலுக்கும், சினேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலுக்கும், ஏலாசாரின் ராஜாவாகிய ஆரியோகுக்கும் எதிராகப் போர் செய்தார்கள். அதாவது, நான்கு ராஜாக்கள் சேர்ந்து ஐந்து ராஜாக்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். 10  சித்தீம் பள்ளத்தாக்கில் தார் குழிகள் நிறைய இருந்தன. சோதோமின் ராஜாவும் கொமோராவின் ராஜாவும் தப்பித்து ஓடியபோது அந்தக் குழிகளுக்குள் விழுந்தார்கள். மற்றவர்கள் மலைப்பகுதிக்கு ஓடிப்போனார்கள். 11  வெற்றி அடைந்த படைவீரர்கள் சோதோம், கொமோரா ஜனங்கள் வைத்திருந்த உணவுப் பொருள்களையும் மற்ற எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 12  ஆபிராமுடைய சகோதரனின் மகனாகிய லோத்து சோதோமில் வாழ்ந்துவந்ததால் அவரையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 13  அவர்களிடமிருந்து தப்பித்து வந்த ஒருவன் அந்த விஷயத்தை எபிரெயரான ஆபிராமிடம் சொன்னான். அந்தச் சமயத்தில் ஆபிராம், எமோரியனான மம்ரே என்பவனுக்குச் சொந்தமான பெரிய மரங்களுக்கு நடுவே குடியிருந்தார்.* இந்த மம்ரே, எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரன். இந்த மூன்று பேரும் ஆபிராமோடு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். 14  எதிரிகள் படையெடுத்து வந்து தன்னுடைய சகோதரனின் மகனைப் பிடித்துக்கொண்டு போனதை ஆபிராம் தெரிந்துகொண்டார். உடனே, தன்னுடைய வீட்டில் பிறந்து வளர்ந்திருந்த பயிற்சி பெற்ற 318 வீரர்களைக் கூட்டிக்கொண்டு தாண்வரை எதிரிகளைத் துரத்திச் சென்றார். 15  அன்றைக்கு ராத்திரி, தன்னோடு இருந்தவர்களை அவர் அணி அணியாகப் பிரித்தார். பின்பு, அவரும் அவருடைய வீரர்களும் எதிரிகளைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார்கள். தமஸ்குவுக்கு வடக்கே இருக்கிற ஓபா வரையில் ஆபிராம் அவர்களைத் துரத்திக்கொண்டு போனார். 16  பின்பு, எதிரிகள் எடுத்துக்கொண்டு போயிருந்த எல்லாவற்றையும், தன் சகோதரனின் மகன் லோத்துவையும் அவருக்குச் சொந்தமானவற்றையும், பெண்களையும், மற்ற ஜனங்களையும் மீட்டுக்கொண்டு வந்தார். 17  ஆபிராம் கெதர்லாகோமேர் ராஜாவையும் அவனுடன் இருந்த ராஜாக்களையும் தோற்கடித்துவிட்டுத் திரும்பியபோது, சோதோமின் ராஜா அவரைச் சந்திப்பதற்காக சாவே பள்ளத்தாக்குக்கு, அதாவது ராஜா-பள்ளத்தாக்குக்கு, புறப்பட்டு வந்தார். 18  சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு ஆபிராமுக்கு ரொட்டியும் திராட்சமதுவும் கொண்டுவந்தார். அவர் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்துவந்த குருவாக இருந்தார். 19  அப்போது அவர் ஆபிராமை ஆசீர்வதித்து, “வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான கடவுள்ஆபிராமை ஆசீர்வதிக்கட்டும்! 20  உன்னதமான கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!அவர் உன்னுடைய எதிரிகளை உன் கையில் கொடுத்தாரே!” என்று சொன்னார். ஆபிராம் தான் மீட்டுவந்த எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவருக்குக் கொடுத்தார். 21  அதன்பின் சோதோமின் ராஜா, “என்னுடைய ஜனங்களை மட்டும் என்னிடம் கொடுத்துவிடுங்கள், பொருள்களை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஆபிராமிடம் சொன்னார். 22  ஆனால் ஆபிராம், “நான் என் கையை உயர்த்தி, வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான கடவுளாகிய யெகோவாவுக்குமுன் உறுதிமொழி தருகிறேன். 23  உங்களிடமிருந்து சின்ன துரும்பைக்கூட* நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ‘ஆபிராமை நான்தான் பணக்காரனாக்கினேன்’ என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. 24  என்னோடு இருக்கிற வாலிபர்கள் எதை எடுத்து சாப்பிட்டார்களோ அதை மட்டுமே நான் எடுத்ததாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், என்னோடு வந்த ஆநேரும் எஸ்கோலும் மம்ரேயும் அவர்களுடைய பங்கை எடுத்துக்கொள்ளட்டும்” என்று சோதோமின் ராஜாவிடம் சொன்னார்.

அடிக்குறிப்புகள்

“இவர்கள்” என்பது வசனம் 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்களாக இருக்கலாம்.
அதாவது, “சவக் கடல்.”
“இவர்கள்” என்பது வசனம் 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள ராஜாக்களாக இருக்கலாம்.
வே.வா., “நடுவே கூடாரங்களில் தங்கியிருந்தார்.”
நே.மொ., “சிறிய நூலையோ செருப்பு வாரையோகூட.”