ஆதியாகமம் 15:1-21

  • ஆபிராமோடு கடவுள் செய்கிற ஒப்பந்தம் (1-21)

    • 400 வருட அடிமைத்தனம் முன்னறிவிக்கப்படுகிறது (13)

    • ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (18-21)

15  அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே. நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன். உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்” என்று சொன்னார்.  அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள் என்ன ஆசீர்வாதத்தைத் தருவீர்கள்? எனக்குத்தான் இன்னும் குழந்தை இல்லையே; என்னிடம் இருப்பதெல்லாம் தமஸ்கு ஊர்க்காரனாகிய எலியேசருக்குத்தானே போய்ச் சேரும்” என்று சொன்னார்.  அதோடு ஆபிராம், “நீங்கள் எனக்குக் குழந்தை பாக்கியம் தராததால், என் வீட்டில் வேலை செய்கிறவன்தான் என் வாரிசு ஆவான்” என்றார்.  அதற்கு யெகோவா, “அவன் உன் வாரிசு ஆக மாட்டான்; உனக்குப் பிறக்கும் மகன்தான் உன் வாரிசு ஆவான்” என்று சொன்னார்.  அப்போது ஆபிராமைக் கடவுள் வெளியே கூட்டிக்கொண்டு வந்து, “தயவுசெய்து வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடிந்தால் எண்ணு” என்றார். பின்பு, “இப்படித்தான் உன் சந்ததியும் எண்ணற்றதாக ஆகும்” என்றார்.  யெகோவாமேல் ஆபிராம் விசுவாசம் வைத்தார். அதனால், அவர் ஆபிராமை நீதிமானாகக் கருதினார்.  அதோடு அவர், “இந்தத் தேசத்தை உனக்குக் கொடுப்பதற்காக கல்தேயர்களுடைய நகரமான ஊர் நகரத்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்த யெகோவா நான்தான்” என்று சொன்னார்.  அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இந்தத் தேசம் எனக்குச் சொந்தமாகும் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார்.  அதற்குக் கடவுள், “மூன்று வயதுள்ள இளம் பசுவையும், மூன்று வயதுள்ள பெண் வெள்ளாட்டையும், மூன்று வயதுள்ள செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக் குஞ்சையும் கொண்டுவா” என்றார். 10  அப்படியே, ஆபிராம் அவற்றைக் கொண்டுவந்து, இரண்டு துண்டுகளாக வெட்டி, அந்தத் துண்டுகளை எதிரெதிராக வைத்தார். பறவைகளை அவர் அப்படி வெட்டவில்லை. 11  அந்த இறைச்சித் துண்டுகளைச் சாப்பிட வேறு பறவைகள் பறந்து வந்தன, ஆனால் ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். 12  சூரியன் மறையும் நேரத்தில், ஆபிராம் நன்றாகத் தூங்கிவிட்டார். அப்போது, பயங்கரமான இருட்டுக்குள் இருப்பதுபோல் அவருக்கு ஒரு கனவு வந்தது. 13  அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி. 14  ஆனால், அவர்களை அடிமைப்படுத்திய தேசத்தை நான் தண்டிப்பேன். அதன்பின், அவர்கள் அங்கிருந்து நிறைய பொருள்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். 15  முதிர்வயதில் நீ உன் முன்னோர்களைப் போல நிம்மதியாகக் கண்மூடுவாய். 16  உன்னுடைய சந்ததியின் நான்காவது தலைமுறைதான் இங்கே திரும்பி வரும். ஏனென்றால், எமோரியர்களை* தண்டிக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை” என்று சொன்னார். 17  சூரியன் மறைந்து, நன்றாக இருட்டிவிட்டது. அப்போது, புகைகிற சூளை ஒன்று தெரிந்தது. ஒரு தீப்பந்தம் அந்த இறைச்சித் துண்டுகளின் நடுவே கடந்துபோனது. 18  அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து, “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை* இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன். 19  கேனியர்களும், கெனிசியர்களும், கத்மோனியர்களும், 20  ஏத்தியர்களும், பெரிசியர்களும், ரெப்பாயீமியர்களும், 21  எமோரியர்களும், கானானியர்களும், கிர்காசியர்களும், எபூசியர்களும் வாழ்கிற அந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

இந்த வசனத்தில் எமோரியர்கள் என்பது கானானியர்கள் எல்லாரையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது.
அதாவது, “ஐப்பிராத்துவரை.”