ஆதியாகமம் 19:1-38

  • தேவதூதர்கள் லோத்துவைச் சந்திக்கிறார்கள் (1-11)

  • குடும்பத்தோடு ஓடிப்போகும்படி லோத்துவிடம் சொல்லப்படுகிறது (12-22)

  • சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன (23-29)

    • லோத்துவின் மனைவி உப்புச் சிலையாகிறாள் (26)

  • லோத்துவும் அவருடைய மகள்களும் (30-38)

    • மோவாபியர்கள் மற்றும் அம்மோனியர்களின் ஆரம்பம் (37, 38)

19  அந்த இரண்டு தேவதூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது, லோத்து நகரவாசலில் உட்கார்ந்திருந்தார். அவர்களைப் பார்த்ததும் அவர் எழுந்துபோய், அவர்கள்முன் மண்டிபோட்டு,  “என் எஜமான்களே, இன்றைக்கு ராத்திரி தயவுசெய்து அடியேனுடைய வீட்டில் தங்குங்கள். உங்கள் பாதங்களைக் கழுவ எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள். விடிந்ததுமே நீங்கள் கிளம்பிவிடலாம்” என்றார். அதற்கு அவர்கள், “பரவாயில்லை, இன்றைக்கு ராத்திரி நாங்கள் பொது சதுக்கத்திலேயே தங்கிக்கொள்கிறோம்” என்றார்கள்.  ஆனால், அவர் மிகவும் வற்புறுத்திக் கூப்பிட்டதால் அவருடைய வீட்டுக்குப் போனார்கள். அவர்களுக்காக லோத்து புளிப்பில்லாத ரொட்டி சுட்டு, விருந்து வைத்தார்; அவர்கள் சாப்பிட்டார்கள்.  அவர்கள் படுக்கப் போவதற்கு முன்பு, சோதோம் நகரத்திலிருந்த சிறுவன்முதல் கிழவன்வரை எல்லா ஆண்களும் கும்பலாக வந்து அவருடைய வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள்.  லோத்துவை அவர்கள் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். “ராத்திரி உன் வீட்டில் தங்க வந்த ஆண்கள் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவுகொள்ள வேண்டும், அவர்களை வெளியே கொண்டுவா” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.  அப்போது லோத்து வீட்டுக்கு வெளியே வந்து, கதவைச் சாத்தினார்.  அவர் அவர்களிடம், “என் சகோதரர்களே, தயவுசெய்து இந்தக் கெட்ட காரியத்தைச் செய்யாதீர்கள்.  தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். கல்யாணமாகாத இரண்டு பெண்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களை நான் வெளியில் கொண்டுவருகிறேன், அவர்களை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இந்த ஆண்களை மட்டும் தயவுசெய்து ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர்கள் என் வீட்டில்* தங்க வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்.  அதற்கு அவர்கள், “தள்ளிப் போ!” என்று சொல்லிவிட்டு, “நம் ஊரில் பிழைக்க வந்த நாதியில்லாத இவன் நமக்கே நியாயம் சொல்ல வந்துவிட்டான், என்ன துணிச்சல்! முதலில் உன்னைத்தான் ஒருவழி பண்ண வேண்டும்” என்றார்கள். பின்பு, லோத்துவை நெருக்கித் தள்ளி கதவை உடைக்கப் பார்த்தார்கள். 10  உடனே, வீட்டுக்குள் இருந்த மனிதர்கள்* கையை நீட்டி, லோத்துவை உள்ளே இழுத்துக்கொண்டு, கதவைச் சாத்தினார்கள். 11  பின்பு, வீட்டு வாசலில் இருந்த சிறுவன்முதல் கிழவன்வரை எல்லா ஆண்களுடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்கள் வாசல் கதவைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள். 12  அப்போது அந்த மனிதர்கள்* லோத்துவிடம், “இந்த நகரத்தில் உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? மருமகன்கள், மகன்கள், மகள்கள் என்று யார் இருந்தாலும் எல்லா சொந்தபந்தங்களையும் கூட்டிக்கொண்டு இங்கிருந்து போய்விடு! 13  நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம். இந்த ஜனங்களைப் பற்றிய பயங்கரமான புலம்பலை யெகோவா கேட்டிருக்கிறார். அதனால், இந்த நகரத்தை அழிக்க யெகோவா எங்களை அனுப்பியிருக்கிறார்” என்று சொன்னார்கள். 14  உடனே, லோத்து தன் மகள்களுக்கு நிச்சயம் செய்திருந்த மருமகன்களைப் போய்ப் பார்த்து, “சீக்கிரம்! இங்கிருந்து புறப்படுங்கள்! யெகோவா இந்த நகரத்தை அழிக்கப்போகிறார்!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஆனால், அவர் ஏதோ வேடிக்கையாகச் சொல்கிறார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். 15  பொழுது விடியும் நேரத்தில் அந்தத் தேவதூதர்கள் லோத்துவிடம், “சீக்கிரம்! உன் மனைவியையும் உன் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையென்றால், இந்த நகரம் அதன் அக்கிரமத்துக்காக அழிக்கப்படும்போது நீயும் அழிக்கப்படுவாய்!” என்று சொல்லி அவசரப்படுத்தினார்கள். 16  லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார். ஆனாலும், யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால் அந்த மனிதர்கள்* அவருடைய கையையும், அவருடைய மனைவியின் கையையும், இரண்டு மகள்களுடைய கையையும் பிடித்து நகரத்துக்கு வெளியில் கொண்டுவந்து விட்டார்கள். 17  நகரத்துக்கு வெளியில் வந்ததும் அந்த மனிதர்களில் ஒருவர், “தப்பித்து ஓடு! திரும்பிப் பார்க்காதே, இந்தப் பிரதேசத்தில் எங்கேயும் நிற்காதே! மலைப்பகுதிக்குத் தப்பித்து ஓடு! இல்லையென்றால் உன் உயிர் போய்விடும்!” என்றார். 18  அதற்கு லோத்து அவர்களிடம், “யெகோவாவே,* தயவுசெய்து அங்கே போகச் சொல்லாதீர்கள்! 19  நீங்கள் அடியேனுக்குக் கருணை காட்டியிருக்கிறீர்கள். அளவுகடந்த அன்பை* காட்டி, என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். ஆனாலும், என்னால் அந்த மலைப்பகுதிக்கு ஓடிப்போக முடியாது. அங்கே ஏதாவது ஆபத்தில் சிக்கி செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. 20  தயவுசெய்து, பக்கத்தில் உள்ள ஊருக்கு ஓடிப்போகிறேனே; அது சின்ன ஊர்தானே. தயவுசெய்து அங்கே ஓடிப்போகட்டுமா? அது சின்ன ஊர்தான். அங்கே போனால் நான் பிழைத்துக்கொள்வேன்” என்று சொன்னார். 21  அதற்கு அவர், “சரி, இந்த விஷயத்திலும் உனக்குக் கருணை காட்டுகிறேன், நீ சொல்கிற ஊரை அழிக்காமல் விடுகிறேன். 22  சீக்கிரம் ஓடிப்போ, நீ அங்கே போய்ச் சேரும்வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது!” என்று சொன்னார். அதனால்தான், அந்த ஊருக்கு சோவார்* என்ற பெயர் வந்தது. 23  லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது சூரியன் உதித்திருந்தது. 24  அப்போது யெகோவா சோதோம், கொமோராவில் நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். யெகோவா வானத்திலிருந்து அவற்றைக் கொட்டி, 25  அந்த நகரங்களை அழித்தார். ஜனங்கள், செடிகொடிகள் என எதையும் விட்டுவைக்காமல் முழு பிரதேசத்தையும் அழித்தார். 26  லோத்துவுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அவருடைய மனைவி திரும்பிப் பார்த்தாள், உடனே உப்புச் சிலையானாள். 27  ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, தான் ஏற்கெனவே யெகோவாவுக்குமுன் நின்றிருந்த இடத்துக்குப் போனார். 28  அங்கிருந்து அவர் கீழே பார்த்தபோது, சோதோமும் கொமோராவும் அந்த முழு பிரதேசமும் கோரமாகக் காட்சியளித்தது. சூளையிலிருந்து போகிற புகையைப் போல அடர்த்தியான புகை மேலே போய்க்கொண்டிருந்தது! 29  கடவுள் அந்தப் பிரதேசத்திலுள்ள நகரங்களை அழிப்பதற்குமுன், ஆபிரகாமோடு தான் பேசியதை நினைத்துப் பார்த்தார். அதனால், அங்கு வாழ்ந்துவந்த லோத்துவை அங்கிருந்து அனுப்பிவிட்டார். 30  பிற்பாடு, லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, தன்னுடைய இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பகுதிக்குப் போனார். அங்கே, தன்னுடைய இரண்டு மகள்களுடன் ஒரு குகையில் குடியிருந்தார். 31  ஒருநாள் பெரியவள் தன் தங்கையிடம், “அப்பாவுக்கு வயதாகிவிட்டது. எல்லாரையும் போல நாமும் கல்யாணம் செய்துகொள்ள இந்த இடத்தில் ஒரு ஆண்கூட இல்லை. 32  வா, அப்பாவுக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடுக்கலாம். அப்புறம், அவரோடு படுத்துக்கொள்ளலாம். அப்போதுதான் அப்பாவுடைய வம்சம் அழியாமல் இருக்கும்” என்று சொன்னாள். 33  அதனால் அன்றைக்கு ராத்திரி, அவர்கள் தங்களுடைய அப்பாவுக்குத் திராட்சமதுவை ஊற்றி ஊற்றிக் கொடுத்தார்கள். பின்பு, பெரியவள் உள்ளே போய்த் தன் அப்பாவோடு படுத்துக்கொண்டாள். ஆனால், அவள் எப்போது படுத்தாள், எப்போது எழுந்தாள் என்று லோத்துவுக்குத் தெரியவில்லை. 34  அடுத்த நாள் பெரியவள் தன் தங்கையிடம், “நேற்று ராத்திரி நான் அப்பாவோடு படுத்துக்கொண்டேன். இன்றைக்கு ராத்திரியும் அவருக்குத் திராட்சமதுவைக் குடிக்கக் கொடுக்கலாம். அப்புறம் நீ உள்ளே போய் அவரோடு படுத்துக்கொள். அப்போதுதான் அப்பாவின் வம்சம் அழியாமல் இருக்கும்” என்று சொன்னாள். 35  அதனால், அன்றைக்கு ராத்திரியும் அவர்கள் தங்களுடைய அப்பாவுக்குத் திராட்சமதுவை ஊற்றி ஊற்றிக் கொடுத்தார்கள். பின்பு, சின்னவள் போய்த் தன் அப்பாவோடு படுத்துக்கொண்டாள். ஆனால், அவள் எப்போது படுத்தாள், எப்போது எழுந்தாள் என்று லோத்துவுக்குத் தெரியவில்லை. 36  இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள். 37  பெரியவளுக்கு ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு மோவாப் என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று மோவாபியர்கள் என்று சொல்கிறோம். 38  சின்னவளுக்கும் ஒரு பையன் பிறந்தான். அவனுக்கு பென்னம்மி என்று அவள் பெயர் வைத்தாள். அவனுடைய வம்சத்தில் வந்தவர்களைத்தான் இன்று அம்மோனியர்கள் என்று சொல்கிறோம்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “என் கூரை நிழலில்.”
அதாவது, “மனித உருவில் வந்த தேவதூதர்கள்.”
அதாவது, “மனித உருவில் வந்த தேவதூதர்கள்.”
அதாவது, “மனித உருவில் வந்த தேவதூதர்கள்.”
யெகோவாவிடம் நேரடியாகப் பேசுவதுபோல் யெகோவாவின் தூதர்களிடம் லோத்து பேசினார்.
வே.வா., “மாறாத அன்பை.”
அர்த்தம், “சிறியது.”