ஆதியாகமம் 20:1-18

  • அபிமெலேக்கிடமிருந்து சாராள் விடுவிக்கப்படுகிறாள் (1-18)

20  பிற்பாடு, ஆபிரகாம் புறப்பட்டு நெகேபுக்குப் போய் காதேசுக்கும் ஷூருக்கும் இடையில் குடியிருந்தார். அவர் கேராரில் வாழ்ந்துவந்தபோது,  மறுபடியும் தன்னுடைய மனைவி சாராளைத் தன்னுடைய தங்கை என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதால், கேராரின் ராஜா அபிமெலேக்கு* ஆள் அனுப்பி சாராளைக் கொண்டுபோனார்.  ஆனால் ராத்திரியில் அபிமெலேக்கின் கனவில் கடவுள் வந்து, “அந்தப் பெண்ணைக் கொண்டுவந்திருப்பதால் நீ சாகப்போகிறாய். அவள் கல்யாணம் ஆனவள், இன்னொருவனுக்குச் சொந்தமானவள்” என்று சொன்னார்.  அபிமெலேக்கு அதுவரை அவளை நெருங்காமல்* இருந்ததால் கடவுளிடம், “யெகோவாவே, ஒரு பாவமும் செய்யாத ஜனங்களை நீங்கள் கொன்றுவிடுவீர்களா?  ‘இவள் என்னுடைய தங்கை’ என்று அவன் என்னிடம் சொன்னானே; அவளும் அவனை அண்ணன் என்று சொன்னாளே. நான் கெட்ட எண்ணத்துடனோ வேண்டுமென்றோ இதைச் செய்யவில்லை”* என்றார்.  அப்போது கடவுள் அவரிடம், “நீ கெட்ட எண்ணத்துடன் இதைச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் பாவம் செய்யாதபடி நான் உன்னைத் தடுத்தேன், அவளைத் தொடுவதற்கு உன்னை விடவில்லை.  இப்போது, அவளை அவளுடைய கணவனிடமே அனுப்பிவிடு, அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் உனக்காக என்னிடம் மன்றாடுவான், அப்போது நீ சாகாமல் பிழைத்துக்கொள்வாய். ஆனால் அவளைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், நீயும் உன் வீட்டிலிருக்கிற எல்லாரும் கண்டிப்பாகச் சாவீர்கள்” என்றார்.  அபிமெலேக்கு விடியற்காலையில் எழுந்து தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லாரையும் கூப்பிட்டு, இந்த எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர்கள் பயத்தில் வெலவெலத்துப் போனார்கள்.  பின்பு அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து, “ஏன் இப்படிச் செய்தாய்? நான் உனக்கு என்ன பாவம் செய்தேன்? உன்னால் என்மேலும் என் நாட்டின்மேலும் எவ்வளவு பெரிய பழி விழுந்திருக்கும்! நீ செய்த காரியம் கொஞ்சம்கூட சரியில்லை” என்று சொன்னார். 10  அதோடு, “என்ன நினைத்து நீ இப்படிச் செய்தாய்?” என்று அபிமெலேக்கு கேட்டார். 11  அதற்கு ஆபிரகாம், “இங்கு இருக்கிறவர்களுக்குக் கடவுள்பயமே இல்லை என்றும், என் மனைவியை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள் என்றும் நினைத்தேன். 12  அதோடு, அவள் நிஜமாகவே என் தங்கைதான். அவளும் என் அப்பாவுக்குப் பிறந்தவள்தான். எங்கள் அம்மாதான் வேறு வேறு. அவளை நான் கல்யாணம் செய்துகொண்டேன். 13  என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்து கடவுள் என்னைப் புறப்பட்டுப் போகச் சொன்னபோது நான் அவளிடம், ‘உனக்கு உண்மையிலேயே என்மேல் அன்பு* இருந்தால், நாம் எங்கு போனாலும் நான் உன் அண்ணன் என்றுதான் நீ சொல்ல வேண்டும்’ என்று சொல்லி வைத்திருந்தேன்” என்றார். 14  அதன்பின், அபிமெலேக்கு ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்தார், அவருடைய மனைவி சாராளையும் அவரிடமே ஒப்படைத்தார். 15  அப்போது அபிமெலேக்கு அவரிடம், “என்னுடைய தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் நீ குடியிருக்கலாம்” என்றும் சொன்னார். 16  அதோடு சாராளிடம், “உன் அண்ணனுக்கு நான் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுக்கிறேன். என் நிழல்கூட உன்மேல் படவில்லை என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். உன்னோடு இருப்பவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் இது அடையாளமாக இருக்கும். நீ களங்கம் இல்லாதவள்” என்று சொன்னார். 17  அப்போது, ஆபிரகாம் உண்மைக் கடவுளிடம் மன்றாடினார். கடவுள் அபிமெலேக்கையும் அவருடைய மனைவியையும் அவருடைய அடிமைப் பெண்களையும் குணப்படுத்தி, அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தந்தார். 18  ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராளை அபிமெலேக்கு கொண்டுவந்த சமயத்திலிருந்து அவருடைய அரண்மனையில் இருந்த எந்தப் பெண்ணும் கர்ப்பமாகாதபடி யெகோவா செய்திருந்தார்.

அடிக்குறிப்புகள்

இது பெலிஸ்திய ராஜாக்களின் பட்டப்பெயராக இருக்கலாம்.
வே.வா., “அவளுடன் உறவுகொள்ளாமல்.”
வே.வா., “நான் நேர்மையான இதயத்தோடும் சுத்தமான கைகளோடும்தான் இதைச் செய்தேன்.”
வே.வா., “மாறாத அன்பு.”