ஆதியாகமம் 22:1-24

  • ஈசாக்கைப் பலிகொடுக்கும்படி ஆபிரகாமிடம் சொல்லப்படுகிறது (1-19)

    • ஆபிரகாமின் சந்ததி மூலம் கிடைக்கும் ஆசீர்வாதம் (15-18)

  • ரெபெக்காளின் குடும்பம் (20-24)

22  பின்பு, ஆபிரகாமின் விசுவாசத்தை உண்மைக் கடவுள் சோதித்துப் பார்த்தார். ஒருநாள் அவர், “ஆபிரகாமே!” என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள் எஜமானே!” என்றார்.  அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன் ஈசாக்கைத் தயவுசெய்து மோரியா தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைத் தகன பலியாகக் கொடு” என்று சொன்னார்.  அதனால், ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம்* வைத்தார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, தகன பலிக்கு வேண்டிய விறகுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்குப் புறப்பட்டுப் போனார்.  மூன்றாம் நாள் ஆபிரகாம் அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்.  அவர் தன் வேலைக்காரர்களிடம், “நீங்கள் இங்கேயே கழுதையுடன் இருங்கள். நானும் என் மகனும் அங்கே போய் கடவுளை வணங்கிவிட்டு வருகிறோம்” என்று சொன்னார்.  பின்பு, ஆபிரகாம் தகன பலிக்கான விறகுகளை எடுத்து, தன்னுடைய மகன் ஈசாக்கின் தோள்மேல் வைத்தார். அதன்பின், நெருப்பையும் கத்தியையும்* எடுத்துக்கொண்டார். இரண்டு பேரும் ஒன்றாக நடந்துபோனார்கள்.  அப்போது ஈசாக்கு ஆபிரகாமிடம், “அப்பா!” என்றார். அதற்கு அவர், “என்ன மகனே?” என்று கேட்டார். அப்போது ஈசாக்கு, “நெருப்பும் விறகும் இருக்கிறது, ஆனால் தகன பலி கொடுக்க ஆடு எங்கே?” என்று கேட்டார்.  அதற்கு ஆபிரகாம், “மகனே, தகன பலிக்கான ஆட்டைக் கடவுள் கொடுப்பார்” என்று சொன்னார். இரண்டு பேரும் தொடர்ந்து நடந்துபோனார்கள்.  கடைசியாக, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி, அந்த விறகுகள்மேல் படுக்க வைத்தார். 10  அதன்பின், ஆபிரகாம் தன்னுடைய மகனைக் கொல்வதற்காகக் கத்தியை* எடுத்தார். 11  உடனே யெகோவாவின் தூதர் பரலோகத்திலிருந்து, “ஆபிரகாமே, ஆபிரகாமே!” என்று கூப்பிட்டார். அதற்கு ஆபிரகாம், “சொல்லுங்கள், எஜமானே!” என்றார். 12  அப்போது அவர், “உன் மகனைக் கொன்றுவிடாதே, அவனுக்கு ஒன்றும் செய்துவிடாதே. நீ கடவுள்பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை” என்று சொன்னார். 13  அப்போது, கொஞ்சத் தூரத்தில் ஒரு செம்மறியாட்டுக் கடா இருப்பதை ஆபிரகாம் பார்த்தார். அதனுடைய கொம்புகள் ஒரு புதரில் சிக்கியிருந்தன. ஆபிரகாம் அங்கே போய் அந்தச் செம்மறியாட்டுக் கடாவைப் பிடித்துக்கொண்டு வந்து, தன் மகனுக்குப் பதிலாக அதைத் தகன பலியாகச் செலுத்தினார். 14  ஆபிரகாம் அந்த இடத்துக்கு யெகோவா-யீரே* என்று பெயர் வைத்தார். அதனால்தான், “யெகோவா தன்னுடைய மலையில் கொடுப்பார்” என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. 15  யெகோவாவின் தூதர் இரண்டாம் தடவை பரலோகத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு, 16  “யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘என்மேல் சத்தியமாகச் சொல்கிறேன், நீ உன்னுடைய ஒரே மகனை எனக்குக் கொடுக்கத் தயங்காததால் 17  நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன். உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும். 18  நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’” என்று சொன்னார். 19  பின்பு, ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்து அவர்கள் எல்லாரும் பெயெர்-செபாவுக்குத் திரும்பிப் போனார்கள். ஆபிரகாம் தொடர்ந்து பெயெர்-செபாவிலேயே குடியிருந்தார். 20  அதன்பின் ஒருவன் ஆபிரகாமிடம் வந்து, “உங்கள் சகோதரன் நாகோருக்கும் அவருடைய மனைவி மில்காளுக்கும் இப்போது மகன்கள் இருக்கிறார்கள். 21  முதல் மகனுடைய பெயர் ஊத்ஸ், இரண்டாவது மகன் பூஸ், மூன்றாவது மகன் அராமின் அப்பாவான கேமுவேல். 22  இவர்களைத் தவிர கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்ற மகன்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னான். 23  பெத்துவேலுக்கு ரெபெக்காள் பிறந்தாள். பெத்துவேலோடு சேர்த்து அந்த எட்டு மகன்களும் ஆபிரகாமின் சகோதரனான நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்தவர்கள். 24  நாகோரின் மறுமனைவி பெயர் ரேயுமாள். அவளுக்கு தேபா, காகாம், தாகாஸ், மாக்கா என்ற மகன்கள் பிறந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
வே.வா., “வெட்டுக்கத்தியையும்.”
வே.வா., “வெட்டுக்கத்தியை.”
அர்த்தம், “யெகோவா கொடுப்பார்; யெகோவா பார்த்துக்கொள்வார்.”
நே.மொ., “நகரங்களின் நுழைவாசலை.”