ஆதியாகமம் 23:1-20

  • சாராளின் மரணமும் அவள் அடக்கம் செய்யப்படுகிற இடமும் (1-20)

23  சாராள் 127 வருஷங்கள் வாழ்ந்தாள்.  அவள் கானான் தேசத்திலுள்ள கீரியாத்-அர்பாவில், அதாவது எப்ரோனில், இறந்தாள். அவளுக்காக ஆபிரகாம் துக்கம் அனுசரிக்கவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தார்.  பின்பு, அங்கிருந்து எழுந்து போய் ஏத்தின் மகன்களிடம்,  “நான் என்னுடைய தேசத்தைவிட்டு இங்கே வந்து அன்னியனாகக் குடியேறினேன். என் மனைவியை அடக்கம் செய்வதற்காக எனக்கு ஒரு இடம் கொடுங்கள்” என்றார்.  அதற்கு ஏத்தின் மகன்கள் ஆபிரகாமிடம்,  “எஜமானே, நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபதி* என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அடக்கம் செய்கிற இடங்களில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து உங்கள் மனைவியை நீங்கள் அடக்கம் செய்துகொள்ளலாம். நாங்கள் எல்லாருமே எங்களுடைய இடத்தைத் தருவதற்குத் தயாராக இருக்கிறோம்” என்று சொன்னார்கள்.  அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்தத் தேசத்தைச் சேர்ந்த ஏத்தின் மகன்களைப் பார்த்துத் தலைவணங்கி,  “என் மனைவியை இங்கே அடக்கம் செய்ய நீங்கள் ஒத்துக்கொண்டால், சோகாரின் மகன் எப்பெரோனிடம் பேசி,  மக்பேலாவில் அவருடைய நிலத்தின் ஓரத்தில் இருக்கிற குகையை எனக்கு விற்கச் சொல்லுங்கள். உங்களுடைய முன்னிலையில் அதை அவர் விற்கட்டும், அதற்கான மொத்த விலையையும் நான் கொடுத்துவிடுகிறேன். அப்போது, அடக்கம் செய்ய எனக்கென்று சொந்தமாக ஒரு இடம் இருக்கும்” என்று சொன்னார். 10  ஏத்தின் மகன்களோடு ஏத்தியனான எப்பெரோன் உட்கார்ந்துகொண்டிருந்தார். அவர்களுடைய முன்னிலையிலும் அந்த நகரவாசலில் இருந்த எல்லாருடைய முன்னிலையிலும் எப்பெரோன் ஆபிரகாமைப் பார்த்து, 11  “என் எஜமானே! நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தோடு சேர்த்து அதிலுள்ள குகையையும் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய ஜனங்களின் முன்னிலையில் அதை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்யுங்கள்” என்று சொன்னார். 12  அப்போது ஆபிரகாம் அந்தத் தேசத்து ஜனங்கள்முன் தலைவணங்கி, 13  அவர்கள் முன்னிலையில் எப்பெரோனிடம், “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள். நிலத்துக்கான மொத்த விலையையும் நான் உங்களுக்குக் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்ளுங்கள். அப்போது, என் மனைவியை நான் அங்கே அடக்கம் செய்வேன்” என்று சொன்னார். 14  அதற்கு எப்பெரோன் ஆபிரகாமிடம், 15  “என் எஜமானே, நான் சொல்வதைக் கேளுங்கள். அந்த நிலத்தின் விலை 400 வெள்ளி சேக்கல்.* ஆனால், நமக்குள்ளே பணம் ஒரு பெரிய விஷயமா? உங்கள் மனைவியை அங்கே அடக்கம் செய்துகொள்ளுங்கள்” என்றார். 16  ஏத்தின் மகன்களுடைய முன்னிலையில் எப்பெரோன் சொன்னதை ஆபிரகாம் ஒத்துக்கொண்டு, அன்றைய வியாபாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்குப்படி 400 வெள்ளி சேக்கலை* நிறுத்துக் கொடுத்தார். 17  அப்போது, மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலாவில் இருந்த எப்பெரோனின் நிலத்தையும் அதிலிருந்த குகையையும் எல்லா மரங்களையும், 18  ஏத்தின் மகன்களுடைய முன்னிலையிலும் நகரவாசலில் இருந்த எல்லாருடைய முன்னிலையிலும் ஆபிரகாம் வாங்கியதாக உறுதி செய்யப்பட்டது. 19  அதன்பின், மக்பேலாவில் இருந்த அந்த நிலத்தின் குகையில் ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தார். அது கானான் தேசத்தில் இருந்த மம்ரேக்குப் பக்கத்தில், அதாவது எப்ரோனில், இருந்தது. 20  இப்படி, அடக்கம் செய்வதற்கான இடமாக அந்த நிலத்தையும் அதிலிருந்த குகையையும் ஏத்தின் மகன்கள் ஆபிரகாமுக்குக் கொடுத்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “நீங்கள் மகா அதிபதி.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.