ஆதியாகமம் 25:1-34

  • ஆபிரகாம் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்கிறார் (1-6)

  • ஆபிரகாமின் மரணம் (7-11)

  • இஸ்மவேலின் மகன்கள் (12-18)

  • யாக்கோபும் ஏசாவும் பிறக்கிறார்கள் (19-26)

  • மூத்த மகனின் உரிமையை ஏசா விற்கிறான் (27-34)

25  பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார்.  அவர்களுக்கு சிம்ரான், யக்‍ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சுவாகு என்ற மகன்கள் பிறந்தார்கள்.  யக்‍ஷானின் மகன்கள்: சேபா, தேதான். தேதானின் மகன்கள்: அசூரீம், லெத்தூசீம், லெயூமீம்.  மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பேரன்கள்.  ஆபிரகாம் தன்னுடைய எல்லா சொத்துகளையும் ஈசாக்குக்குக் கொடுத்தார்.  ஆனால், தன்னுடைய மறுமனைவிகள் பெற்ற மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தான் உயிரோடு இருக்கும்போதே தன் மகன் ஈசாக்கைவிட்டுத் தூரமாய்க் கிழக்கத்திய தேசத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.  ஆபிரகாம் 175 வருஷங்கள் வாழ்ந்தார்.  அவர் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்த பின்பு முதிர்வயதில் இறந்துபோனார்.*  அவருடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்குப் பக்கத்தில், ஏத்தியனான சோகாரின் மகன் எப்பெரோனுடைய நிலத்திலுள்ள மக்பேலா குகையில், அவரை அடக்கம் செய்தார்கள். 10  அந்த நிலத்தை ஏத்தின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார். அவருடைய மனைவி சாராள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார். 11  ஆபிரகாம் இறந்த பின்பு, அவருடைய மகன் ஈசாக்கைக் கடவுள் தொடர்ந்து ஆசீர்வதித்தார். பெயெர்-லகாய்-ரோயீ என்ற கிணற்றுக்குப் பக்கத்தில் ஈசாக்கு வாழ்ந்துவந்தார். 12  சாராளின் வேலைக்காரியான எகிப்தியப் பெண் ஆகாருக்கும் ஆபிரகாமுக்கும் பிறந்த இஸ்மவேலின் வரலாறு இதுதான். 13  இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத். அவனுக்குப் பிறகு கேதார், அத்பியேல், மிப்சாம், 14  மிஷ்மா, தூமா, மாஸா, 15  ஆதாத், தீமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா ஆகிய மகன்களும் இஸ்மவேலுக்குப் பிறந்தார்கள். 16  இஸ்மவேலுடைய மகன்களாகிய இந்த 12 பேரும் அவரவர் குலத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த கிராமங்களும் முகாம்களும் அவர்களுடைய பெயர்களால் அழைக்கப்பட்டன. 17  இஸ்மவேல் 137 வருஷங்கள் வாழ்ந்த பின்பு இறந்துபோனார்.* 18  எகிப்துக்குக் கிழக்கே ஷூருக்குப் பக்கத்திலுள்ள ஆவிலா பகுதியிலிருந்து அசீரியாவரை இஸ்மவேலர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் தங்களுடைய எல்லா சகோதரர்களுக்கும் பக்கத்தில் குடியிருந்தார்கள்.* 19  ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வரலாறு இதுதான். ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். 20  ஈசாக்கு 40 வயதில் ரெபெக்காளைக் கல்யாணம் செய்துகொண்டார். இவள் பதான்-அராமைச் சேர்ந்த அரமேயனான பெத்துவேலின் மகள், அரமேயனான லாபானின் தங்கை. 21  ரெபெக்காளுக்குக் குழந்தை இல்லாததால் ஈசாக்கு யெகோவாவிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். யெகோவா அவருடைய வேண்டுதலைக் கேட்டார், ரெபெக்காள் கர்ப்பமானாள். 22  அவளுடைய வயிற்றிலிருந்த மகன்கள் ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவள், “நான் இப்படிக் கஷ்டப்படுவதற்குச் செத்துப்போவதே மேல்” என்று சொன்னாள். அதன்பின், யெகோவாவிடம் விசாரித்தாள். 23  யெகோவா அவளிடம், “உன் வயிற்றில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.* உன்னிடமிருந்து இரண்டு தேசங்கள் உருவாகும். ஒரு தேசம் மற்றொன்றைவிட பலமானதாக இருக்கும். பெரியவன் சின்னவனுக்குச் சேவை செய்வான்” என்று சொன்னார். 24  பிரசவ நேரம் வந்தது. அவளுடைய வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன. 25  முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது. அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா* என்று அவர்கள் பெயர் வைத்தார்கள். 26  இரண்டாவதாகப் பிறந்த குழந்தை தன்னுடைய அண்ணன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்தபடி வெளியே வந்தது. அதனால், இந்தக் குழந்தைக்கு யாக்கோபு* என்ற பெயர் வைக்கப்பட்டது. ரெபெக்காள் குழந்தைகளைப் பெற்றபோது ஈசாக்குக்கு 60 வயது. 27  அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளானார்கள். ஏசா வேட்டையாடுவதில் கெட்டிக்காரனாக ஆனான். அவன் காட்டிலேயே சுற்றித் திரிந்துகொண்டு இருந்தான். ஆனால், யாக்கோபு அமைதியாக* கூடாரத்தில் தங்கிவந்தான். 28  ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தார். ஏனென்றால், அவருடைய வாய்க்கு ருசியானதை அவன் வேட்டையாடிக் கொண்டுவந்தான். ஆனால், ரெபெக்காள் யாக்கோபை அதிகமாக நேசித்தாள். 29  ஒருநாள், யாக்கோபு கூழ் காய்ச்சிக்கொண்டிருந்தான். அப்போது, காட்டிலிருந்து ஏசா களைப்பாகத் திரும்பி வந்தான். 30  அதனால் யாக்கோபிடம், “நான் ரொம்பக் களைத்துப்போயிருக்கிறேன்,* தயவுசெய்து அந்தச் சிவப்பான கூழைக் கொஞ்சம்* தா! சீக்கிரம் கொடு!” என்று கேட்டான். அதனால்தான் அவனுக்கு ஏதோம்* என்ற பெயர் வந்தது. 31  யாக்கோபு அவனிடம், “மூத்த மகனின் உரிமையை முதலில் எனக்கு விற்றுவிடு!” என்றான். 32  அதற்கு ஏசா, “நானே செத்துக்கொண்டிருக்கிறேன்! மூத்த மகனின் உரிமையை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறேன்?” என்றான். 33  “அப்படியானால், முதலில் நீ எனக்குச் சத்தியம் செய்து கொடு!” என்று யாக்கோபு கேட்டான். அதன்படியே, ஏசா சத்தியம் செய்து கொடுத்து, மூத்த மகனின் உரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். 34  அப்போது, ஏசாவுக்கு ரொட்டியையும் பயற்றங்கூழையும் யாக்கோபு கொடுத்தான். அவன் சாப்பிட்டான், குடித்தான். பின்பு எழுந்து போனான். இப்படி, மூத்த மகனின் உரிமையை ஏசா அலட்சியம் பண்ணினான்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
நே.மொ., “தன் முன்னோர்களுடன் சேர்க்கப்பட்டார்.” எபிரெயுவில் கவிதை நடையிலுள்ள இந்த வார்த்தைகள் மரணத்தைக் குறிக்கின்றன.
அல்லது, “எல்லா சகோதரர்களையும் பகைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.”
நே.மொ., “இரண்டு தேசங்கள் இருக்கின்றன.”
அர்த்தம், “நிறைய முடி உள்ளவன்.”
அர்த்தம், “குதிங்காலைப் பிடித்துக்கொண்டவன்; இன்னொருவனின் இடத்தை எடுத்துக்கொண்டவன்.”
வே.வா., “குற்றமற்றவனாக.”
வே.வா., “என் வயிறு காய்கிறது.”
வே.வா., “ஒரு வாய்.”
அர்த்தம், “சிவப்பு.”