ஆதியாகமம் 33:1-20

  • ஏசாவை யாக்கோபு சந்திக்கிறார் (1-16)

  • யாக்கோபு சீகேமுக்குப் போகிறார் (17-20)

33  யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, ஏசா 400 ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார். அதனால், லேயாளிடமும் ராகேலிடமும் இரண்டு வேலைக்காரிகளிடமும் அவரவர் பிள்ளைகளை ஒப்படைத்தார்.  பின்பு, வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலில் நிறுத்தினார். அடுத்து, லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் நிறுத்தினார். அவர்களுக்குப் பின்னால் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.  அதன்பின், அவர்கள் எல்லாருக்கும் முன்னால் நடந்து போனார். அவருடைய அண்ணனின் பக்கத்தில் போகப்போக ஏழு தடவை மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.  அப்போது ஏசா அவரிடம் ஓடிவந்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவர்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள்.  யாக்கோபுடன் வந்த பெண்களையும் பிள்ளைகளையும் ஏசா பார்த்தபோது, “இவர்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “உங்கள் அடியேனுக்குக் கடவுள் தந்திருக்கிற பிள்ளைகள்” என்றார்.  அப்போது, வேலைக்காரிகள் தங்களுடைய பிள்ளைகளுடன் முன்னால் வந்து தலைவணங்கினார்கள்.  பின்பு, லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் முன்னால் வந்து தலைவணங்கினார்கள். அதன்பின், யோசேப்பும் ராகேலும் முன்னால் வந்து தலைவணங்கினார்கள்.  பின்பு ஏசா, “எதற்காக உன்னுடைய ஆட்களிடம் இதையெல்லாம் கொடுத்து அனுப்பினாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “என் எஜமானுடைய கருணை கிடைப்பதற்காகத்தான்” என்று சொன்னார்.  அப்போது ஏசா, “என்னிடமே ஏராளமான சொத்துப்பத்துகள் இருக்கின்றன. அதனால் உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றார். 10  ஆனால் யாக்கோபு அவரிடம், “அப்படிச் சொல்லாதீர்கள். எனக்குக் கருணை காட்ட நினைத்தால், நான் தரும் அன்பளிப்புகளைத் தயவுசெய்து வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் இதையெல்லாம் கொண்டுவந்தேன். நீங்கள் என்னைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டதால், இப்போது உங்களுடைய முகத்தைப் பார்க்கும்போது கடவுளுடைய முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. 11  தயவுசெய்து, நான் அன்போடு தருகிற இந்தப் பரிசுகளை வாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார், தேவையான எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார். யாக்கோபு அவரை வற்புறுத்திக்கொண்டே இருந்ததால், அவரும் அவற்றை வாங்கிக்கொண்டார். 12  பிற்பாடு ஏசா, “நாம் புறப்படலாம், வா; நான் உனக்குத் துணையாக வருகிறேன்” என்றார். 13  ஆனால் யாக்கோபு, “எஜமானே, என்னுடைய பிள்ளைகள் சின்னஞ்சிறுசுகள் என்று உங்களுக்கே தெரியும். அதோடு, என்னுடைய மந்தையில் கறவை* ஆடுகளும் மாடுகளும் இருக்கின்றன. ஒரேவொரு நாள் வேகமாய் ஓட்டிக்கொண்டு போனால்கூட மந்தையெல்லாம் செத்துப்போகும். 14  அதனால் எஜமானே, தயவுசெய்து நீங்கள் உங்களுடைய அடியேனுக்கு முன்னால் போங்கள். நான் என்னுடைய ஆடுமாடுகளோடும் பிள்ளைகளோடும் சேர்ந்து மெதுவாக வருகிறேன். சேயீர் தேசத்தில் என் எஜமானாகிய உங்களைச் சந்திக்கிறேன்” என்றார். 15  அப்போது ஏசா, “அப்படியானால், என்னுடைய ஆட்களில் சிலரை உனக்காக விட்டுவிட்டுப் போகட்டுமா?” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “என் எஜமானுடைய கருணை கிடைத்தாலே எனக்குப் போதும், இதெல்லாம் எதற்கு?” என்றார். 16  அதனால் ஏசா அன்றைக்கே புறப்பட்டு, சேயீர் தேசத்துக்குத் திரும்பிப் போனார். 17  யாக்கோபு சுக்கோத்துக்குப் போய் அங்கே தனக்காக ஒரு வீடு கட்டினார், மந்தைகளுக்குக் கொட்டகைகளும் போட்டார். அதனால், அந்த இடத்துக்கு சுக்கோத்* என்று பெயர் வைத்தார். 18  பதான்-அராமிலிருந்து புறப்பட்டு வந்திருந்த யாக்கோபு, கானான் தேசத்திலுள்ள சீகேம் நகரத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். அந்த நகரத்துக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்கினார். 19  பின்பு, கூடாரம் போட்டுத் தங்கிய நிலத்தை சீகேமின் அப்பாவான ஏமோரின் மகன்களிடமிருந்து 100 வெள்ளிக் காசுகளுக்கு வாங்கினார். 20  அங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஏல் எல்லோகே இஸ்ரவேல்* என்று அதற்குப் பெயர் வைத்தார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “குட்டிகளுக்குப் பாலூட்டுகிற.”
அர்த்தம், “பந்தல்கள்; கொட்டகைகள்.”
அர்த்தம், “இஸ்ரவேலின் கடவுளே கடவுள்.”