ஆதியாகமம் 34:1-31

  • தீனாள் கற்பழிக்கப்படுகிறாள் (1-12)

  • யாக்கோபின் மகன்கள் தந்திரமாக நடந்துகொள்கிறார்கள் (13-31)

34  யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த தீனாள், அந்தத் தேசத்திலிருந்த இளம் பெண்களோடு பொழுதைக் கழிப்பதற்காக* அடிக்கடி போய்வந்தாள்.  அங்கே ஏவியர்களின் தலைவனான ஏமோரின் மகன் சீகேம் அவளைக் கவனித்தான். அவன் அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான்.  அதன்பின், யாக்கோபின் மகளான தீனாளின் மேல் பைத்தியமாக இருந்தான். அவளைக் காதலித்ததால் அவளுடைய மனதை மயக்கும் விதத்தில் பேசினான்.  கடைசியில், தன்னுடைய அப்பா ஏமோரிடம் போய், “இந்தப் பெண்ணை எப்படியாவது எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொன்னான்.  தன்னுடைய மகள் தீனாளை சீகேம் கெடுத்துவிட்டான் என்ற விஷயத்தை யாக்கோபு கேள்விப்பட்டார். ஆனால், அவருடைய மகன்கள் மந்தையை மேய்ப்பதற்காகப் போயிருந்ததால் அவர்கள் வரும்வரை அமைதியாக இருந்தார்.  அதற்குள், நடந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்காக சீகேமின் அப்பா ஏமோர் யாக்கோபிடம் வந்தார்.  யாக்கோபின் மகன்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு, பயங்கர கோபத்தோடு உடனே கிளம்பி வந்தார்கள். சீகேம் யாக்கோபுடைய மகளைப் பலாத்காரம் செய்து இஸ்ரவேலை அவமானப்படுத்தியது பெரிய அட்டூழியம் என்று அவர்கள் நினைத்தார்கள்.  ஏமோர் அவர்களைப் பார்த்து, “என் மகன் சீகேம் உங்கள் மகள்மேல் உயிரையே வைத்திருக்கிறான். தயவுசெய்து அவளை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள்.  எங்களோடு சம்பந்தம் பண்ணுங்கள். நாம் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொள்ளலாம். 10  நீங்கள் எங்களுடைய தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இங்கேயே குடியிருந்து, வியாபாரம் செய்து, சொத்துகளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார். 11  அப்போது சீகேம் தீனாளுடைய அப்பாவிடமும் அண்ணன்களிடமும், “கொஞ்சம் பெரியமனதுபண்ணுங்கள். நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். 12  பணமும்* பொருளும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். அதைத் தருவதற்கு நான் தயார். உங்கள் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகத் தந்தால் போதும்” என்று சொன்னான். 13  தீனாளை சீகேம் கெடுத்துவிட்டதால் அவளுடைய அண்ணன்கள் சீகேமிடமும் அவனுடைய அப்பா ஏமோரிடமும் இப்படித் தந்திரமாகப் பதில் சொன்னார்கள்: 14  “விருத்தசேதனம் செய்யாத ஒருவனுக்கு எங்களுடைய தங்கையைக் கொடுப்பது எங்களுக்குப் பெரிய அவமானம். அதனால், நீங்கள் கேட்கிறபடி அவளைத் தர முடியாது. 15  நீங்களும் உங்களுடைய ஆண்கள் எல்லாரும் எங்களைப் போலவே விருத்தசேதனம் செய்தால்தான் இந்தக் கல்யாணத்துக்கு நாங்கள் சம்மதிப்போம். 16  அப்போதுதான், எங்களுடைய பெண்களை உங்களுக்குக் கொடுத்து உங்களுடைய பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களோடு குடியிருந்து, ஒன்றுக்குள் ஒன்றாக இருப்போம். 17  ஆனால், நாங்கள் சொல்கிறபடி நீங்கள் விருத்தசேதனம் செய்யவில்லை என்றால், எங்களுடைய தங்கையைக் கூட்டிக்கொண்டு போய்விடுவோம்.” 18  அவர்கள் சொன்ன விஷயம் ஏமோருக்கும் அவருடைய மகன் சீகேமுக்கும் நல்லதாகத் தெரிந்தது. 19  சீகேம் கொஞ்சம்கூட காலம் தாழ்த்தவில்லை. ஏனென்றால், அவன் யாக்கோபுடைய மகள்மேல் கொள்ளை ஆசை வைத்திருந்தான். அதோடு, அவனுடைய அப்பாவின் குடும்பத்திலேயே அவனுக்குத்தான் அதிக மதிப்பும் மரியாதையும் இருந்தது. 20  அதனால் ஏமோரும் அவருடைய மகன் சீகேமும் நகரவாசலுக்குப் போய் அங்கிருந்த ஆண்களிடம், 21  “அந்த மனிதர்கள் நம்மோடு சமாதானமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் இந்த இடத்தில் குடியிருந்து வியாபாரம் செய்துகொள்ளட்டும். இந்தத் தேசத்தில்தான் இடத்துக்குப் பஞ்சமே இல்லையே! நம்முடைய பெண்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய பெண்களை நமக்கு எடுத்துக்கொள்ளலாம். 22  ஆனால், நம்முடைய ஆண்கள் எல்லாரும் அவர்களைப் போலவே விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதற்குச் சம்மதித்தால் மட்டும்தான் அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழ்வார்கள், ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பார்கள். 23  அப்போது, அவர்களுடைய எல்லா ஆடுமாடுகளும் சொத்துப்பத்துகளும் நமக்குச் சொந்தமாகிவிடும். அதனால், அவர்களுக்குச் சம்மதம் சொல்லிவிடலாம். அவர்கள் நம்மோடு சேர்ந்து வாழட்டும்” என்றார்கள். 24  ஏமோரும் அவருடைய மகன் சீகேமும் சொன்ன ஆலோசனையை நகரவாசலில் இருந்த எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். பின்பு, அந்த நகரத்திலிருந்த ஆண்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். 25  ஆனால், மூன்றாம் நாளில் அவர்கள் இன்னமும் வலியில் இருந்தபோது யாக்கோபின் மகன்களும் தீனாளின் அண்ணன்களுமான சிமியோனும் லேவியும் ஆளுக்கொரு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். யாருக்கும் சந்தேகம் வராதபடி அந்த நகரத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த எல்லா ஆண்களையும் கொன்றுபோட்டார்கள். 26  ஏமோரையும் அவருடைய மகன் சீகேமையும் வாளால் வெட்டிவிட்டு, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 27  யாக்கோபுடைய மற்ற மகன்கள் அந்த நகரத்துக்குள் புகுந்தபோது எல்லாரும் செத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள். அந்த நகரத்தில் தங்களுடைய தங்கை கெடுக்கப்பட்டதால் அங்கிருந்த எல்லாவற்றையும் சூறையாடினார்கள். 28  ஆடுமாடுகளையும், கழுதைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அந்த நகரத்திலும் வயல்வெளியிலும் இருந்த மற்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனார்கள். 29  அவர்களுடைய சொத்துகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவர்களுடைய வீடுகளில் எதையுமே விட்டுவைக்கவில்லை. 30  அப்போது யாக்கோபு சிமியோனிடமும் லேவியிடமும், “என்னை எவ்வளவு பெரிய பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டீர்கள்! இந்தத் தேசத்தில் இருக்கிற கானானியர்கள் மத்தியிலும் பெரிசியர்கள் மத்தியிலும் என்னுடைய பெயரைக் கெடுத்துவிட்டீர்கள்.* என்னோடு கொஞ்சம் பேர் மட்டுமே இருப்பதால், அவர்கள் கும்பலாக வந்து என்னைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள். என்னையும் என் குடும்பத்தையும் நிச்சயம் அழித்துவிடுவார்கள்” என்று சொன்னார். 31  ஆனால் அந்த இரண்டு பேரும், “அவர்கள் மட்டும் எங்கள் தங்கையை விபச்சாரிபோல் நடத்தலாமா?” என்றார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “பெண்களைப் பார்ப்பதற்காக.”
நே.மொ., “மணமகள் விலையும்.”
வே.வா., “நாறடித்துவிட்டீர்கள்.”