ஆதியாகமம் 4:1-26

  • காயீனும் ஆபேலும் (1-16)

  • காயீனின் வம்சம் (17-24)

  • சேத்தும் அவருடைய மகன் ஏனோசும் (25, 26)

4  பின்பு, ஆதாம் தன் மனைவி ஏவாளோடு உறவுகொண்டான். அவள் கர்ப்பமாகி காயீனைப் பெற்றெடுத்தாள். அப்போது, “யெகோவாவின் உதவியால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்” என்று சொன்னாள்.  பிற்பாடு, அவள் இன்னொரு மகனைப் பெற்றெடுத்தாள். அவன்தான் காயீனின் தம்பி ஆபேல். ஆபேலும் காயீனும் வளர்ந்து ஆளானார்கள். ஆபேல் ஆடுகளை மேய்த்துவந்தான், காயீன் விவசாயம் செய்துவந்தான்.  சில காலம் கழித்து, நிலத்தில் விளைந்த சில பொருள்களை காயீன் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.  ஆனால், ஆபேல் தன்னுடைய ஆடுகளின் முதல் குட்டிகளில் சிலவற்றை, அவற்றின் கொழுப்போடு சேர்த்துக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்.  ஆனால், காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால், காயீனுக்குப் பயங்கர கோபம் வந்தது, அவன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டான்.  அப்போது யெகோவா காயீனிடம், “நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? ஏன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறாய்?  நீ மனம் மாறி நல்லது செய்தால், உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேனா?* நீ நல்லது செய்யவில்லை என்றால், இதோ, பாவம் உன் கதவுக்கு வெளியில் பதுங்கியிருக்கிறது. அது உன்மேல் பாய்வதற்குக் காத்திருக்கிறது. ஆனால், நீ அதை அடக்குவாயா?” என்றார்.  பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.  பின்பு யெகோவா காயீனிடம், “உன் தம்பி ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பிக்கு நான் என்ன காவல்காரனா?” என்று கேட்டான். 10  அப்போது கடவுள், “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது. 11  நான் உன்னைச் சபிக்கிறேன்; உன் தம்பியின் இரத்தத்தை உன் கையிலிருந்து வாங்கிக் குடித்த இந்த மண்ணைவிட்டு உன்னைத் துரத்துகிறேன். 12  நீ நிலத்தில் பயிர் செய்தாலும் உனக்கு விளைச்சல் கிடைக்காது. இந்தப் பூமியில் நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார். 13  அதற்கு காயீன் யெகோவாவிடம், “நான் செய்த குற்றத்துக்கு நீங்கள் தருகிற தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. 14  இன்று நீங்கள் இந்த மண்ணைவிட்டு என்னைத் துரத்துகிறீர்கள். இனி நான் உங்கள் முகத்துக்கு முன்னால் நிற்க முடியாது. இந்தப் பூமியில் நாடோடியாகத்தான் அலைந்து திரிய வேண்டியிருக்கும். என்னை யாராவது பார்த்தால் கண்டிப்பாகக் கொன்றுவிடுவார்களே” என்றான். 15  அதற்கு யெகோவா, “அப்படியென்றால், காயீனைக் கொலை செய்கிறவன் ஏழு மடங்கு பழிவாங்கப்படுவான்” என்றார். காயீனைப் பார்க்கிற எவனும் அவனை அடித்துக் கொல்லாமல் இருப்பதற்காக, யெகோவா காயீனுக்காக ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.* 16  அப்போது, யெகோவாவின் முன்னிலையிலிருந்து காயீன் புறப்பட்டுப் போய், ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோத்* தேசத்தில் குடியேறினான். 17  அதன்பின், காயீன் தன் மனைவியோடு உறவுகொண்டான். அவள் கர்ப்பமாகி ஏனோக்கைப் பெற்றாள். பின்பு, காயீன் ஒரு நகரத்தைக் கட்டத் தொடங்கி, அதற்குத் தன்னுடைய மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான். 18  பிற்பாடு, ஏனோக்குக்கு ஈராத் என்ற மகன் பிறந்தான். ஈராத்துக்கு மெகுயவேல் பிறந்தான். மெகுயவேலுக்கு மெத்தூசவேல் பிறந்தான். மெத்தூசவேலுக்கு லாமேக்கு பிறந்தான். 19  லாமேக்குக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஆதாள், இரண்டாம் மனைவியின் பெயர் சில்லாள். 20  ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள். கூடாரங்களில் தங்கி கால்நடைகளை வளர்த்த முதல் மனிதன் யாபால்தான். 21  அவனுடைய சகோதரன் பெயர் யூபால். யாழும் குழலும் வாசித்த முதல் மனிதன் யூபால்தான். 22  சில்லாள், தூபால்-காயீனைப் பெற்றெடுத்தாள். அவன் எல்லாவித செம்புக் கருவிகளையும் இரும்புக் கருவிகளையும் செய்தான். தூபால்-காயீனின் சகோதரி பெயர் நாமாள். 23  பின்பு, லாமேக்கு தன் மனைவிகளான ஆதாளையும் சில்லாளையும் பார்த்து, “லாமேக்கின் மனைவிகளே, கேளுங்கள்.என் வார்த்தைகளுக்குக் காதுகொடுங்கள்: ஒரு மனுஷனைக் கொன்றேன், என்னைக் காயப்படுத்தியதற்காக.ஆம், ஓர் இளைஞனைக் கொன்றேன், என்னை அடித்ததற்காக. 24  காயீனுக்காக 7 தடவை பழிவாங்கப்படும் என்றால்,லாமேக்குக்காக 77 தடவை பழிவாங்கப்படும்” என்று சொன்னான். 25  ஆதாம் தன் மனைவியோடு மறுபடியும் உறவுகொண்டான், அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது அவள், “ஆபேலைக் காயீன் கொலை செய்ததால் அவனுக்குப் பதிலாகக் கடவுள் எனக்கு இன்னொரு வாரிசைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சேத்* என்று பெயர் வைத்தாள். 26  சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் அவனுக்கு ஏனோஸ் என்று பெயர் வைத்தார். அந்தச் சமயத்தில், ஜனங்கள் யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்த* ஆரம்பித்தார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நீ உயர்வடைய மாட்டாயா?”
இது மற்றவர்களை எச்சரிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையாக இருந்திருக்கலாம்.
வே.வா., “நாடுகடத்தப்படுதல்.”
அர்த்தம், “நியமிப்பது; கொடுப்பது.”
நே.மொ., “யெகோவாவின் பெயரில் அழைக்க.”