ஆதியாகமம் 40:1-23

  • கைதிகள் கண்ட கனவுகளின் அர்த்தத்தை யோசேப்பு சொல்கிறார் (1-19)

    • ‘கடவுளால் மட்டும்தான் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்’ (8)

  • பார்வோனுடைய பிறந்த நாள் விருந்து (20-23)

40  பிற்பாடு, எகிப்து ராஜாவுக்குப் பானம் பரிமாறுபவர்களின் தலைவனும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனும் ராஜாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.  அதனால், அந்த இரண்டு அதிகாரிகள்மேலும் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது.  அவர்களைக் காவலர்களுடைய தலைவரின் பொறுப்பிலிருந்த சிறைச்சாலையில்* தள்ளினார். அங்குதான் யோசேப்பும் கைதியாக இருந்தார்.  காவலர்களுடைய தலைவர் அந்த இரண்டு பேரையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை யோசேப்புக்குக் கொடுத்தார். அந்த இரண்டு பேரும் கொஞ்சக் காலம் அந்தச் சிறைச்சாலையில் இருந்தார்கள்.  எகிப்து ராஜாவுடைய அந்த இரண்டு அதிகாரிகளும் சிறைச்சாலையில் இருந்தபோது, ஒருநாள் ராத்திரி ஆளுக்கொரு கனவு கண்டார்கள். ஒவ்வொருவருடைய கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது.  அடுத்த நாள் காலையில் யோசேப்பு உள்ளே வந்து பார்த்தபோது, அவர்களுடைய முகம் வாடிப்போயிருந்தது.  அதனால், சிறைச்சாலையில் தன்னோடு அடைக்கப்பட்டிருந்த அந்த அதிகாரிகளைப் பார்த்து, “இன்றைக்கு ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள், “நாங்கள் இரண்டு பேரும் கனவு கண்டோம். ஆனால், அதற்கு அர்த்தம் சொல்ல யாரும் இல்லை” என்று சொன்னார்கள். அப்போது யோசேப்பு, “கடவுளால் மட்டும்தானே கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும்? நீங்கள் என்ன கனவு கண்டீர்கள் என்று தயவுசெய்து சொல்லுங்கள்” என்றார்.  அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவன் தன்னுடைய கனவை யோசேப்பிடம் சொன்னான். அவன், “என் முன்னால் ஒரு திராட்சைக் கொடி இருப்பதைப் பார்த்தேன். 10  அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்விட்டு, பூ பூத்தன. அவற்றில் திராட்சைகள் கொத்துக்கொத்தாகப் பழுத்துத் தொங்கின. 11  பார்வோனுடைய கோப்பை என் கையில் இருந்தது. அப்போது, நான் அந்தத் திராட்சைப் பழங்களைப் பறித்து பார்வோனின் கோப்பையில் பிழிந்தேன். பின்பு, அந்தக் கோப்பையை பார்வோனின் கையில் கொடுத்தேன்” என்று சொன்னான். 12  யோசேப்பு அவனிடம், “இந்தக் கனவின் அர்த்தம் இதுதான்: மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். 13  இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உங்களை விடுதலை செய்து மறுபடியும் அதே பதவியைக் கொடுப்பார். முன்பு போலவே பார்வோனுக்கு நீங்கள் பானம் பரிமாறுவீர்கள். 14  அப்படி உங்களுக்கு நல்லது நடக்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து எனக்கு விசுவாசமாக இருங்கள். என்னைப் பற்றி பார்வோனிடம் சொல்லி இந்தச் சிறையிலிருந்து வெளியே வர உதவி செய்யுங்கள். 15  எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து நான் கடத்திவரப்பட்டேன். சிறைச்சாலையில் போடுமளவுக்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை” என்று சொன்னார். 16  பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு நல்லது நடக்குமென்று யோசேப்பு சொன்னதைக் கேட்டு, ரொட்டி சுடுபவர்களின் தலைவன் அவரிடம், “நானும் ஒரு கனவு கண்டேன். என்னுடைய தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. 17  பார்வோனுக்காகச் சுட்ட எல்லா வகையான ரொட்டிகளும் மேல் கூடையில் இருந்தன. ஆனால், பறவைகள் அவற்றைத் தின்றுவிட்டன” என்றான். 18  அதற்கு யோசேப்பு, “இந்தக் கனவின் அர்த்தம் இதுதான்: மூன்று கூடைகள் என்பது மூன்று நாட்கள். 19  இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் உங்கள் தலையை வெட்டி, உங்கள் உடலை மரக் கம்பத்தில் தொங்கவிடுவார். உங்கள் சதையைப் பறவைகள் தின்னும்” என்றார். 20  மூன்றாம் நாளில் பார்வோனின் பிறந்த நாள் விழா நடந்தது. அவன் தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தான். அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவனையும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனையும் தன்னுடைய ஊழியர்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான். 21  பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு மறுபடியும் அதே பதவியைக் கொடுத்தான். அவன் பார்வோனுடைய கையில் முன்பு போலவே கோப்பையைக் கொடுத்தான். 22  ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவனை பார்வோன் மரக் கம்பத்தில் தொங்கவிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நடந்தது. 23  இருந்தாலும், பானம் பரிமாறுபவர்களின் தலைவனுக்கு யோசேப்பைப் பற்றிய ஞாபகம் வரவில்லை, அவரை மறந்துவிட்டான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தலைவரின் வீட்டுச் சிறைச்சாலையில்.”