ஆதியாகமம் 41:1-57

  • பார்வோன் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு அர்த்தம் சொல்கிறார் (1-36)

  • யோசேப்பைப் பார்வோன் உயர்த்துகிறார் (37-46அ)

  • யோசேப்பு உணவு நிர்வாகி ஆகிறார் (46ஆ-57)

41  இரண்டு வருஷங்களுக்குப் பின்பு பார்வோன் ஒரு கனவு கண்டான். அதில், அவன் நைல் நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தான்.  அப்போது, புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியே வந்து நதிக்கரையில் இருந்த புல்லை மேய்ந்துகொண்டிருந்தன.  அதற்குப்பின் நைல் நதியிலிருந்து இன்னும் ஏழு பசுக்கள் வெளியே வந்தன. அவை பார்ப்பதற்கு அசிங்கமாகவும், எலும்பும் தோலுமாகவும் இருந்தன. அவை நைல் நதிக்கரையில் இருந்த புஷ்டியான பசுக்களின் பக்கத்தில் நின்றன.  பின்பு, எலும்பும் தோலுமாக இருந்த அசிங்கமான பசுக்கள், புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்களை விழுங்க ஆரம்பித்தன. உடனே, பார்வோன் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான்.  அவன் மறுபடியும் தூங்கியபோது இன்னொரு கனவைக் கண்டான். அதில், ஒரே தாளில் ஏழு கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.  அதற்குப்பின் முளைத்த ஏழு கதிர்கள் கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் தீய்ந்துபோய்ப் பதராக இருந்தன.  பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த கதிர்களை விழுங்க ஆரம்பித்தன. உடனே பார்வோன் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டான். அது ஒரு கனவு என்று புரிந்துகொண்டான்.  காலையில் அவனுக்கு ஒரே பதற்றமாக இருந்தது. அதனால், எகிப்திலிருந்த எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரச் சொல்லி, தான் கண்ட கனவுகளை அவர்களிடம் சொன்னான். ஆனால், அவற்றின் அர்த்தத்தை யாராலும் பார்வோனுக்குச் சொல்ல முடியவில்லை.  அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவன் பார்வோனிடம், “நான் செய்த பாவங்களை இன்றைக்கு உங்களிடம் சொல்லிவிடுகிறேன். 10  பார்வோன் அவர்களே, நீங்கள் ஒருசமயம் ரொட்டி சுடுபவர்களின் தலைவன்மேலும் என்மேலும் பயங்கரமாகக் கோபப்பட்டு, காவலர்களின் தலைவருடைய கண்காணிப்பில் இருந்த சிறைச்சாலையில் போட்டீர்கள் இல்லையா? 11  அதன் பின்பு, நாங்கள் இரண்டு பேரும் ஒரே ராத்திரியில் கனவு கண்டோம். ஒவ்வொருவருடைய கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது. 12  அங்கே, எபிரெயனான ஒரு வாலிபன் எங்களோடு இருந்தான். அவன் காவலர்களின் தலைவருடைய ஊழியன். எங்கள் கனவை அவனிடம் சொன்னபோது, ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அவன் சொன்னான். 13  எல்லாம் அவன் சொன்னபடியே நடந்தது. எனக்கு மறுபடியும் அதே பதவி கிடைத்தது. ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவன் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டான்” என்று சொன்னான். 14  உடனே, யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு பார்வோன் தன்னுடைய ஆட்களை அனுப்பினான். அவர்கள் வேகமாகப் போய் சிறைச்சாலையிலிருந்து யோசேப்பைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். யோசேப்பு சவரம்* செய்து, தன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்வோனிடம் போனார். 15  பார்வோன் யோசேப்பிடம், “நான் ஒரு கனவு கண்டேன், அதற்கு யாராலும் அர்த்தம் சொல்ல முடியவில்லை. ஆனால், நீ கனவுகளுக்கு அர்த்தம் சொல்வாய் என்று கேள்விப்பட்டேன்” என்றான். 16  அதற்கு யோசேப்பு, “நான் இல்லை, பார்வோனாகிய உங்களுக்குக் கடவுள்தான் நல்ல செய்தி சொல்வார்” என்றார். 17  அப்போது பார்வோன் யோசேப்பிடம், “என் கனவு இதுதான். நைல் நதிக்கரையில் நான் நின்றுகொண்டிருந்தேன். 18  அப்போது, அந்த நைல் நதியிலிருந்து புஷ்டியாக இருந்த அழகான ஏழு பசுக்கள் வெளியே வந்து நதிக்கரையில் இருந்த புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. 19  அதற்குப்பின் இன்னும் ஏழு பசுக்கள் வெளியே வந்தன. அவை பார்ப்பதற்குப் பரிதாபமாகவும், அசிங்கமாகவும், எலும்பும் தோலுமாகவும் இருந்தன. இந்த எகிப்து தேசத்தில் எங்கேயும் அப்படிப்பட்ட அசிங்கமான பசுக்களை நான் பார்த்ததே இல்லை. 20  நோஞ்சானாகவும், அசிங்கமாகவும் இருந்த பசுக்கள், முதலில் நான் பார்த்த புஷ்டியான ஏழு பசுக்களை விழுங்க ஆரம்பித்தன. 21  ஆனால் அவற்றை விழுங்கிய பின்பும், விழுங்கிய அறிகுறியே தெரியவில்லை. அவை முன்பு போலவே எலும்பும் தோலுமாக இருந்தன. அப்போது, நான் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டேன். 22  அதன்பின், நான் மறுபடியும் ஒரு கனவு கண்டேன். ஒரே தாளில் ஏழு கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. 23  அதற்குப்பின் முளைத்த ஏழு கதிர்கள் கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் வாடி வதங்கி தீய்ந்துபோய்ப் பதராக இருந்தன. 24  பதராக இருந்த கதிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்த ஏழு கதிர்களை விழுங்கத் தொடங்கின. இந்தக் கனவை நான் மந்திரவாதிகளிடம் சொன்னேன், ஆனால் யாராலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை” என்று சொன்னான். 25  அதற்கு யோசேப்பு, “பார்வோன் அவர்களே, உங்களுடைய இரண்டு கனவுகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான். உண்மைக் கடவுள், தான் செய்யப்போவதை பார்வோனாகிய உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். 26  புஷ்டியான ஏழு பசுக்கள் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. அதேபோல், செழுமையான ஏழு கதிர்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. இரண்டு கனவுகளுக்கும் ஒரே அர்த்தம்தான். 27  அடுத்து வந்த அசிங்கமான ஏழு நோஞ்சான் பசுக்களும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன. கிழக்கிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் தீய்ந்து பதராகிப்போன ஏழு கதிர்கள் ஏழு வருஷங்களுக்கு வரப்போகும் பஞ்சத்தைக் குறிக்கின்றன. 28  பார்வோனாகிய உங்களுக்கு நான் சொன்னது போலவே உண்மைக் கடவுள், தான் செய்யப்போவதை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். 29  எகிப்து தேசம் முழுக்க ஏழு வருஷங்களுக்கு அமோக விளைச்சல் இருக்கும். 30  ஆனால், அதற்குப்பின் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும். அப்போது, எகிப்து தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்த காலத்தையே ஜனங்கள் மறந்துபோவார்கள். அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். 31  முன்பிருந்த அமோக விளைச்சல் ஜனங்களுடைய ஞாபகத்துக்கு வராது. அந்தளவுக்குப் பஞ்சம் மிகக் கடுமையாக இருக்கும். 32  உண்மைக் கடவுள் இதை உறுதிசெய்திருக்கிறார் என்பதற்கு அறிகுறியாகவே பார்வோனாகிய உங்களுக்கு இந்தக் கனவு இரண்டு தடவை காட்டப்பட்டிருக்கிறது. இதை உண்மைக் கடவுள் சீக்கிரம் நிறைவேற்றுவார். 33  அதனால் பார்வோன் அவர்களே, விவேகமும் ஞானமும் உள்ள ஒருவரை நீங்கள் தேடிக் கண்டுபிடித்து அவரை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக்குங்கள். 34  பார்வோனாகிய நீங்கள் தேசம் முழுவதும் கண்காணிகளை ஏற்படுத்துங்கள். எகிப்து தேசத்தில் ஏழு வருஷங்கள் அமோக விளைச்சல் கிடைக்கும்போது ஐந்திலொரு பாகத்தை அவர்கள் பத்திரமாக எடுத்து வைக்கட்டும். 35  வளமான அந்த வருஷங்களில் விளையும் எல்லா உணவுப் பொருள்களையும் நகரங்களில் உள்ள பார்வோனின் கிடங்குகளில் அவர்கள் பாதுகாத்து வைக்கட்டும். 36  எகிப்தில் ஏழு வருஷங்களுக்குப் பஞ்சம் வரும்போது இந்த உணவுப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போதுதான், தேசம் பஞ்சத்தால் அழிந்துபோகாது” என்று சொன்னார். 37  அவர் சொன்னது பார்வோனுக்கும் அவனுடைய ஊழியர்களுக்கும் நல்லதாகத் தெரிந்தது. 38  அதனால் பார்வோன் தன்னுடைய ஊழியர்களிடம், “இவனைப் போல தெய்வசக்தி உள்ளவன் யாருமே இல்லை!” என்றான். 39  பின்பு யோசேப்பிடம், “இதையெல்லாம் கடவுள்தான் உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதனால், உன்னைப் போல விவேகமும் ஞானமும் உள்ளவன் யாருமே கிடையாது. 40  நீ என்னுடைய அரண்மனைக்கு அதிகாரியாக இருப்பாய். என்னுடைய ஜனங்கள் எல்லாரும் மறுபேச்சில்லாமல் உனக்குக் கீழ்ப்படிவார்கள். ராஜாவான நான் மட்டும்தான் உன்னைவிட உயர்ந்தவனாக இருப்பேன்” என்று சொன்னான். 41  அதோடு, “நான் உன்னை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக நியமிக்கிறேன்” என்று சொன்னான். 42  பின்பு, அவனுடைய முத்திரை மோதிரத்தைக் கழற்றி யோசேப்பின் கையில் போட்டுவிட்டான். அவருக்கு விலை உயர்ந்த உடைகளை உடுத்தி, கழுத்தில் தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டான். 43  அதுமட்டுமல்ல, அவரைத் தன்னுடைய இரண்டாம் ரதத்தில் ஊர்வலம் போக வைத்துக் கௌரவித்தான். அவருக்கு முன்னால், “அவ்ரேக்!”* என்று கத்திக்கொண்டே ஆட்கள் போனார்கள். இப்படி, பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக்கினான். 44  அதுமட்டுமல்ல, அவன் யோசேப்பிடம், “பார்வோனாகிய நான் சொல்கிறேன், எகிப்து தேசம் முழுவதிலும் உன்னுடைய உத்தரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது” என்றான். 45  அதன்பின், யோசேப்புக்கு சாப்நாத்-பன்னேயா என்று பெயர் வைத்தான். ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத்தை அவருக்குக் கல்யாணம் செய்து வைத்தான். பின்பு, எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்க* யோசேப்பு புறப்பட்டார். 46  எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு வேலை செய்ய ஆரம்பித்தபோது யோசேப்புக்கு 30 வயது. யோசேப்பு பார்வோனிடமிருந்து புறப்பட்டு எகிப்து தேசம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். 47  வளமான ஏழு வருஷங்களின்போது அந்தத் தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்தது. 48  அந்த ஏழு வருஷங்கள் முழுக்க எகிப்து தேசத்தில் விளைந்த உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் அவர் சேகரித்து, நகரங்களில் இருந்த கிடங்குகளில் சேமித்து வந்தார். சுற்றியிருந்த வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களை எல்லா நகரத்திலும் சேமித்து வைத்தார். 49  கடற்கரை மணலைப் போல் தானியங்களை ஏராளமாகக் குவித்து வைத்துக்கொண்டே இருந்தார். கடைசியில், அளக்க முடியாத அளவுக்குத் தானியங்கள் குவிந்ததால் அவர்கள் அதை அளப்பதையே நிறுத்திவிட்டார்கள். 50  பஞ்ச காலம் ஆரம்பிப்பதற்கு முன்பு யோசேப்புக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அவர்களை ஓன்* நகரத்துப் பூசாரியான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் பெற்றெடுத்தாள். 51  மூத்த மகன் பிறந்தபோது யோசேப்பு, “என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் என் அப்பாவின் குடும்பத்தையும் நான் மறக்கும்படி கடவுள் செய்தார்” என்று சொல்லி அவனுக்கு மனாசே* என்று பெயர் வைத்தார். 52  இரண்டாவது மகன் பிறந்தபோது, “நான் கஷ்டங்கள் அனுபவித்த இந்தத் தேசத்தில் கடவுள் என் வம்சத்தைத் தழைக்க வைத்தார்” என்று சொல்லி அவனுக்கு எப்பிராயீம்* என்று பெயர் வைத்தார். 53  பின்பு, எகிப்து தேசத்தில் அமோக விளைச்சல் கிடைத்த ஏழு வருஷங்கள் முடிவுக்கு வந்தன. 54  யோசேப்பு சொன்னபடியே, ஏழு வருஷ பஞ்ச காலம் தொடங்கியது. எல்லா தேசத்திலும் பஞ்சம் பரவியது. ஆனால், எகிப்து தேசம் முழுக்க உணவுப் பொருள்கள் இருந்தன. 55  கடைசியில், எகிப்து தேசத்திலும் பஞ்சம் வாட்டியெடுத்தது. அப்போது, ஜனங்கள் உணவுப் பொருள்களைக் கேட்டு பார்வோனிடம் கெஞ்சிக் கதறினார்கள். பார்வோன் அந்த ஜனங்களிடம், “யோசேப்பிடம் போங்கள், அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே செய்யுங்கள்” என்றான். 56  உலகம் முழுவதும் பஞ்சம் வாட்டியது. எகிப்து தேசத்திலும் பஞ்சம் ஆட்டிப்படைத்ததால், யோசேப்பு அங்கிருந்த தானியக் கிடங்குகள் எல்லாவற்றையும் திறந்து எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்க ஆரம்பித்தார். 57  முழு உலகத்தையும் பஞ்சம் ஆட்டிப்படைத்ததால் யோசேப்பிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்க எல்லா தேசத்து ஜனங்களும் எகிப்துக்கு வந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

இதற்கான எபிரெய வார்த்தை, முகத்தையும் தலையையும் சவரம் செய்வதைக் குறிக்கலாம்.
மரியாதையும் கௌரவமும் கொடுக்க வேண்டும் என்பதை இந்த வார்த்தை அர்த்தப்படுத்தியிருக்கலாம்.
அதாவது, “ஹெலியோபாலிஸ்.”
வே.வா., “கண்காணிக்க.”
அதாவது, “ஹெலியோபாலிஸ்.”
அர்த்தம், “மறக்கச் செய்கிறவர்; மறக்கடிக்கிறவர்.”
அர்த்தம், “இரண்டு மடங்கு தழைத்தல்.”