ஆதியாகமம் 6:1-22

  • தேவதூதர்கள் பூமியிலுள்ள பெண்களை மனைவிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள் (1-3)

  • ராட்சதர்கள் பிறக்கிறார்கள் (4)

  • மனிதர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார் (5-8)

  • பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொல்கிறார் (9-16)

  • பெரிய வெள்ளம் வரப்போவதைப் பற்றிக் கடவுள் சொல்கிறார் (17-22)

6  மனிதர்கள் பூமியில் ஏராளமாகப் பெருக ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் பிறந்தார்கள்.  பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள்* கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள்.  அப்போது யெகோவா, “மனுஷனை நான் காலமெல்லாம் இப்படியே பொறுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், அவன் பாவமுள்ளவன்.* அவன் வாழப்போவது இன்னும் 120 வருஷங்கள்தான்” என்று சொன்னார்.  கடவுள் அதைச் சொன்னபோது, பூமியில் ராட்சதர்கள்* இருந்தார்கள். அந்தக் காலத்தில், பூமியிலிருந்த பெண்களோடு தேவதூதர்கள் தொடர்ந்து உறவுகொண்டார்கள். அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். இந்த மகன்கள்தான் பெரிய பலசாலிகளாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்தார்கள்.  பூமியில் வாழ்ந்த மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதையும், அவர்களுடைய உள்ளத்தின் எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் மோசமாகவே இருந்ததையும்* யெகோவா கவனித்தார்.  யெகோவா பூமியில் படைத்த மனிதர்களை நினைத்து வருத்தப்பட்டார், உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.  அதனால் யெகோவா, “நான் படைத்த மனுஷர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்போகிறேன். வீட்டு விலங்குகள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரினங்கள் எல்லாவற்றோடும் சேர்த்து அவர்களை அழிக்கப்போகிறேன்” என்றார்.  ஆனால், நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார்.  நோவாவின் வரலாறு இதுதான். நோவா நீதிமானாக இருந்தார். அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.* 10  சேம், காம், யாப்பேத் என்ற மூன்று மகன்கள் அவருக்குப் பிறந்தார்கள். 11  பூமி சீரழிந்து கிடந்ததை உண்மைக் கடவுள் பார்த்தார். பூமியெங்கும் வன்முறை நடந்தது. 12  கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது சீரழிந்து கிடந்தது. பூமியில் மனிதர்கள் எல்லாருடைய நடத்தையும் படுமோசமாக இருந்தது. 13  அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன். 14  கொப்பேர்* மரத்தால் நீ ஒரு பேழையை* கட்டு. அதில் அறைகளை அமைத்து, அதன் உள்ளேயும் வெளியேயும் தார் பூசு. 15  பேழையின் நீளம் 300 முழமும், அகலம் 50 முழமும், உயரம் 30 முழமுமாக* இருக்க வேண்டும். 16  வெளிச்சம் வருவதற்காக பேழையின் கூரைக்குக் கீழே ஒரு முழம் விட்டு ஜன்னல்* வைக்க வேண்டும். பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவு வைக்க வேண்டும். கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களையும் அமைக்க வேண்டும். 17  வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும்* அழிப்பதற்கு பூமியின் மேல் நான் பெரிய வெள்ளத்தைக் கொண்டுவரப்போகிறேன். அப்போது, பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும். 18  ஆனால், நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். நீயும், உன் மனைவியும், உன் மகன்களும், உன் மருமகள்களும் பேழைக்குள் போக வேண்டும். 19  உன்னோடு சேர்த்து மற்ற உயிர்களையும் காப்பாற்றப்போகிறேன். அதனால், ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என ஒரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ. 20  பறக்கும் உயிரினங்களிலும் வீட்டு விலங்குகளிலும் ஊரும் பிராணிகளிலும் அந்தந்த இனத்தில்* ஒவ்வொரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ. அவற்றின் உயிரையும் நான் காப்பாற்றப்போகிறேன். 21  நீயும் மற்ற உயிரினங்களும் சாப்பிடுவதற்குத் தேவைப்படும் எல்லா வகையான உணவையும் சேர்த்து வைத்து, அவற்றைப் பேழைக்குள் கொண்டுபோ” என்று சொன்னார். 22  கடவுள் சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார். அவர் அப்படியே செய்தார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உண்மைக் கடவுளின் மகன்கள்.”
அல்லது, “பாவ இயல்பின்படி நடந்துகொள்கிறான்.”
எபிரெயுவில், “நெபிலிம்கள்.” ஒருவேளை இந்தப் பெயரின் அர்த்தம், “வீழ்த்துபவர்கள்.” அதாவது, “மற்றவர்களை விழச் செய்கிறவர்கள்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “உள்ளம் எப்போதும் கெட்ட எண்ணங்களின் பக்கமாகவே சாய்ந்திருந்ததையும்.”
நே.மொ., “அவர் கடவுளோடு நடந்தார்.”
இது ஒரு பிசின் மரம், ஒருவேளை ஊசியிலை மரம்.
இது கப்பலைப் போல் பெரிதாக இருந்தது, ஆனால் நீளமான ஒரு பெட்டிபோல் இருந்தது.
அதாவது, “நீளம் சுமார் 438 அடியும், அகலம் சுமார் 73 அடியும், உயரம் சுமார் 44 அடியுமாக.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
எபிரெயுவில், “சோஹார்.” இது வெளிச்சத்துக்கான ஜன்னலாகவோ திறப்பாகவோ இல்லாமல், கூரையிலிருந்து ஒரு முழத்துக்கு நீட்டிக்கொண்டிருந்த ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து.
நே.மொ., “உயிர்சக்தியுள்ள எல்லாவற்றையும்.”
அதாவது, “வகையில்.”